Friday, November 2, 2012

தற்செயலாக சிக்கியது சுரங்கப் பாதை மர்மம்! பல்கலைக்கழக போதைப் பொருள் சப்ளை!!

தற்செயலாக சிக்கியது சுரங்கப் பாதை மர்மம்! பல்கலைக்கழக போதைப் பொருள் சப்ளை!!




பிரேசில் நாட்டு போலீஸ், வேறு எதையோ தேடப்போய், தற்செயலாக சுரங்கப்பாதை ஒன்றை கண்டு பிடித்திருப்பதாக அறிவித்துள்ளது. இந்த சுரங்கப் பாதையில் என்ன விசேஷம் என்றால், இது, பிரேசில் நாட்டின் பெரிய நகரமான சாவோ-போலோவின் பல்கலைக்கழகத்துக்கு செல்கிறது!

சாவோ-போலோ பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்யும் பாதை இது!

இன்று செய்தியாளர் மாநாடு ஒன்றில் இது தொடர்பாக விளக்கமளித்த போலீஸ் கர்னல் சீசர் மொரெலி, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட குழு ஒன்றில் தலைவரின் வீட்டுக்குள் இருந்து சுரங்கப் பாதை ஆரம்பிக்கிறது என்றார்.

“கடத்தல் குழுவின் தலைவரின் வீட்டில் தொடங்கும் பாதை, போதைப் பொருள் வைக்கப்பட்டுள்ள மறைவிடம் ஒன்றுக்கு சென்று, இங்கிருந்து தரையடியே, சாவோ-போலோ பல்கலைக்கழக காம்பவுண்ட் வரை செல்கிறது. இந்த காம்பவுண்ட், பல்கலைக்கழகத்தையும், அருகிலுள்ள ஸ்லம் பகுதியையும் பிரிக்கிறது.

இந்த இடத்தில் இருந்து சில மீட்டர்கள் பல்கலைக்கழகத்துக்கு உள்ளே செல்லும் சுரங்கப்பாதை, பல்கலைக்கழக பில்டிங் சுவர் ஒன்றின் கீழ்ப்பகுதியில் முடிவடைகிறது. அதில் துவாரம் ஒன்று உண்டு. துவாரத்தின் ஊடாக பணத்தை கொடுத்தால், சுரங்கப் பாதைக்குள் இருப்பவர் போதைப் பொருளைக் கொடுப்பார். வாங்கும் மாணவர் அல்லது மாணவியும், விற்கும் நபரும், ஆளை ஆள் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை” என்கிறார், கர்னல் சீசர் மொரெலி.

பிரேசில் நாட்டு போலீஸ், தற்செயலாகவே இந்த சுரங்கப்பாதையை கண்டுபிடித்தது. கடந்த செப்டெம்பரில் கொல்லப்பட்ட சக போலீஸ்காரர் ஒருவருடைய மரணத்தில் சந்தேக நபரை தேட ஒரு வீட்டை ரெயிடு செய்த இடத்தில், இப்படியாரு பாதை இருப்பது தெரியவந்தது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!