Friday, November 29, 2013

சூரியனை நெருங்கி மாயமான ஐசான்.. சிதறுண்டு போனது - சிறு துண்டு தப்பியதாகவும் தகவல்

சூரியனை நெருங்கி மாயமான ஐசான்.. சிதறுண்டு போனது - சிறு துண்டு தப்பியதாகவும் தகவல்




சூரியனை நோக்கி படு வேகமாக பாய்ந்து சென்ற ஐசான் வால் நட்சத்திரம், சூரியனை சுற்றிச் சென்ற பின்னர் மாயமாகி விட்டது. அனேகமாக அது சிதறுண்டு ஆவியாகிப் போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், விறுவிறுப்பான எதிர்பார்ப்பையம் ஏற்படுத்திய ஐசான் வால் நட்சத்திரம், சூரியனை நெருங்கிய அடுத்த சில நிமிடங்களில் காணப்படவில்லை.

ஐசானை மீண்டும் பார்க்கவில்லை என்று நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே ஐசான் சிதறுண்டு சூரியனின் வெப்ப அலையில் சிக்கி பொசுங்கி ஆவியாகிப் போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அதேசமயம், சூரியனை நெருங்கி மாயமான பின்னர் ஐசானின் சிதறல் தப்பிப் பிழைத்துள்ளதாக புதிய செய்தி வெளியாகியுள்ளது. இதனால் ஐசான் முழுமையாக பொசுங்கிப் போய் விட்டதா அல்லது அதன் சிதறலில் சில தப்பிப் பிழைத்ததா என்ற விவாதம் எழுந்துள்ளது.

சூரியனை நெருக்கத்தில் சுற்றிய ஐசான்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஐசான் வால் நட்சத்திரம் சூரியனுக்கு வெகு அருகே போய் அதைக் கடந்து செல்ல முற்பட்டது.


கடந்த வேகத்தில் மாயமானது

ஆனால் சூரியனை கடந்த சில நிமிடங்களிலேயே அதைக் காணவில்லை. மாயமாகி விட்டது.

சிதறுண்டதாக விஞ்ஞானிகள் கருத்து

சூரியனைக் கடந்த அடுத்த சில விநாடிகளிலேயே ஐசான் சிதறுண்டு போனதாக பெரும்பாலான விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


மீண்டும் பார்க்கவில்லை - நாசா

நாசா விஞ்ஞானிகள் இதுகுறித்துக் கூறுகையில், ஐசான் வால் நட்சத்திரம் சூரியனைக் கடந்த பின்னர் மீண்டும் காணப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். அனேகமாக அது சிதறுண்டு ஆவியாகியிருக்கலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


சிதறல் தப்பியதாக புதிய தகவல்

ஆனால் ஐசான் வால்நட்சத்திரம் முழுமையாக அழிந்து போகவில்லை. அதன் சிதறலின் ஒரு பகுதி தப்பிப் பிழைத்துள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளதால், ஐசான் முழுமையாக அழியவில்லையோ என்ற விவாதம் எழுந்துள்ளது.


மீண்டும் பார்க்கலாம்?

தப்பிப் பிழைத்த ஐசானின் பகுதியை மீண்டும் காண முடியும் என்ற நம்பிக்கையிலும் இவர்கள் உள்ளனர். இந்த சிதறல் தப்பிப் பிழைத்தது உண்மை என்றால் டிசம்பர் மாதத்திலும் ஐசானின் ஒரு பகுதியைக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும் என்பது இவர்களின் கருத்தாகும்.

இன்னொரு நாசா விஞ்ஞானியின் கருத்து என்னவென்றால்...

நாசாவின் ஐசான் வால் நட்சத்திரத்தைக் கண்காணிக்கும் குழுவில் இடம் பெற்றிருந்த கார்ல் பாட்டம்ஸ் என்ற விஞ்ஞானியின் புதிய கருத்தும் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், பெரிஹீலியனில் நுழைந்து மாயமான ஐசான் முழுமையாக அழியவில்லை. அதன் ஒரு பகுதி தப்பிப் பிழைத்துள்ளது....


மிக மிகச் சிறிய துண்டு தப்பியது...

கார்ல் மேலும் கூறுகையில், நாசாவின் சோஹோ தொலைநோக்கியின் லாஸ்கோ சி2 கேமராவின் பதிவின்படி ஐசானின் மிக மிக சிறிய தூசி மண்டலத் துண்டு தப்பியுள்ளதாக நம்புகிறேன்.

மீண்டும் ஒளிர்கிறது

மேலும், லாஸ்கோ சி3 அனுப்பியுள்ள படங்களைப் பார்க்கும்போது மீண்டும் ஒளிப் பிரகாசமான பகுதியைக் காண முடிந்துள்ளது. இது ஐசானின் தப்பிப் பிழைத்த பகுதியாக இருக்கலாம் என்று நம்புகிறேன். நிச்சயம் இது ஐசானின் ஒரு பகுதியாகவே இருக்க முடியும்.

என்ன நடந்தது தெரியுமா...

சூரியனை நோக்கி வேகமாக பாய்ந்து வந்த ஐசான், சூரியனின் சுற்று வட்டத்தை நெருங்கியதும் மாயமாகிப் போனது. அதன் மிகப் பெரிய வால் பகுதியைக் காண முடியவில்லை. அது சுருங்கிப் பொசுங்கிப் போயிருக்கக் கூடிய வாய்ப்புகளை மறுக்க முடியாது.

ஆனால்..

ஆனால் சிறிது நேரத்திற்குள்ளாகவே அதன் ஒரு பகுதியானது மீண்டும் வெளிப்பட்டதை லாஸ்கோ சி2 படம் காட்டுகிறது. எனவே ஐசானின் ஒரு பகுதி தப்பிப் பிழைத்திருக்கிறது. அதாவது, ஐசானின் வால் மற்றும் கோமா பகுதி அழிந்து போயிருக்கலாம். ஆனால் அதன் ஒரு பகுதி தப்பிப் பிழைத்திருக்கலாம்.


தப்பிப் பிழைத்தும் ஒளிரும் ஐசான்

தப்பி்ப் பிழைத்த ஐசானின் குதியிலிருந்து தொடர்ந்து தூசு வெளிப்பட்டு வருகிறது. மேலும் அது ஒளிரவும் செய்கிறது. வாயுக்களும் வெளிப்பட்டுள்ளது.

அரை குறை உயிருடன்...

தப்பிப் பிழைத்த பகுதி குறித்து நமக்கு உறுதியாகத் தெரியாவிட்டாலும் கூட அரை குறை உயிருடன் ஐசான் இன்னும் இருப்பதாக நாம் சொல்ல முடியும். அதன் நியூக்ளியஸ் பகுதி எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரியவில்லை. அதைப் பொறுத்துத்தான் அது தொடர்ந்து உயிர் பிழைத்திருக்குமா என்பதை கணிக்க முடியும். எவ்வளவு காலம் அது நீடித்திருக்கும் என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. மீண்டும் அதைப் பார்க்க முடியுமா என்பதும் தெரியவில்லை.

இருக்கு.. ஆனா இல்லை..

ஆனால் ஒன்றுமே இல்லை என்று கூறுவதற்குப் பதில், ஏதோ கொஞ்சம் இருக்கிறது என்றுதான் இப்போதைக்கு சொல்ல முடியும்.. என்று கூறியுள்ளார் கார்ல்.

76 படங்களை அனுப்பிய சோஹோ

நாசாவின் சோஹோ லாஸ்கோ சி2 மற்றும் சி3 தொலைநோக்கியானது மொத்தம் 76 படங்களை அனுப்பியுள்ளது.

பொதுவான கருத்து என்னவென்றால்...

ஐசான் குறித்த உலகளாவிய பொதுவான கருத்து என்னவென்றால், கடும் வெப்பம் அதாவது கிட்டத்தட்ட 2600 டிகிரி சென்டிகிரேட் மற்றும் சூரியனின் ஈர்ப்பு சக்தி ஆகியவற்றின் காரணமாக ஐசான் வால்நட்சத்திரம் சிதறுண்டு போயிருக்கவே அதிகம் வாய்ப்புகள் உள்ளன.

பொறுத்திருந்து பார்க்கலாம்.. ஐஸ் துகள்கள் நிரம்பிய ஐசான் மீண்டிருக்குமா.. அல்லது மாண்டிருக்குமா என்பதை.

மகாத்மாவுக்கு "தேசத் தந்தை' பட்டத்தை அளிக்க சட்டத்தில் இடமில்லை': உள்துறை அமைச்சகம்

மகாத்மாவுக்கு "தேசத் தந்தை' பட்டத்தை அளிக்க சட்டத்தில் இடமில்லை': உள்துறை அமைச்சகம்



மகாத்மா காந்திக்கு தேசத் தந்தை என்ற பட்டத்தை அளிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா பராஷார், காந்தியைப் பற்றியும், அவரை தேசத் தந்தை என அழைக்கப்படுவதற்கான காரணம் குறித்தும் விவரங்களைத் தருமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்தார்.

அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில், "மகாத்மா காந்திக்கு அதுபோன்ற பட்டம் எதுவும் வழங்கப்படவில்லை' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து "மகாத்மாவை தேசத் தந்தை என்று முறைப்படி அறிவிக்க வேண்டும்' என்று வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் ஐஸ்வர்யா கடிதம் எழுதினார்.

பின்னர் தனது கோரிக்கை மனுவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மனு அளித்தார். அந்த மனு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

மகாத்மா காந்தியை தேசத் தந்தை என குடியரசுத் தலைவர் அறிவிப்பது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனெனில், அரசியல் சாசன சட்டம் பிரிவு 18(1)-ன்படி யாருக்கும் எந்தவிதமான பட்டத்தையும் அளிக்க இயலாது. கல்வித் துறை மற்றும் ராணுவத்தைச் சார்ந்தோருக்கு மட்டுமே பட்டங்களை அளிக்க முடியும்'' என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், மீண்டும் விற்பனைக்கு வரும் 6000 ஆண்டு பழமையான ரிக் வேத மதுபானம் ‘மீட்’

இந்தியாவில், மீண்டும் விற்பனைக்கு வரும் 6000 ஆண்டு பழமையான ரிக் வேத மதுபானம் ‘மீட்’


சுமார் 6000 ஆண்டுகள் பழமையான ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உலகின் பழமையான மதுபானம் இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்திய வேத நூல்களில் ஒன்றான ‘ரிக்' வேதத்தில் தேன் மது எனப்படும் பழமையான ஆயுர்வேத மதுபானம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. காலஓட்டத்தில் காணாமல் போன இந்த மதுபானம் தற்போது மீண்டும், அதன் தாயகமான இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
அதன் முதல்கட்டமாக, அடுத்தமாதம் டெல்லியில் நடைபெற உள்ள உணவுக் கண்காட்சியில் இந்த மதுபானம் இடம்பெற உள்ளது.

மீட் பானம்....

சுமார் 6,000 ஆண்டுகள் பழமையான இப்பானம், தற்போதும் ‘மீட்' என்ற பெயரில் லிதுவேனியா நாட்டில் பாரம்பரிய பானமாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. லிதுவேனியாவில் இப்பானத்திற்கு ரசிகர்கள் அதிகம்.

உணவுக் கண்காட்சி....

இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உணவுக் கண்காட்சி ஒன்று நடைபெற உள்ளது. இந்திய சமையல் காலண்டரின் ஆண்டுவிழா நிகழ்ச்சியான இதில் இந்தியாவில் செயல்பட்டு வரும் பால்டிக் வர்த்தக மையம் இந்தப் பழமையான மதுபானத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

ஆயுர்வேத மதுபானம்...

தேன், தண்ணீர், ஈஸ்ட், மூலிகைகள் மற்றும் காய்கறிகளின் சுவை ஆகியவற்றின் கலவை தான் இந்த ஆயுர்வேத மீட் பானம். இதனை வரும் 2014 ஆம் ஆண்டில் இந்தியாவிலும் விற்பனைக்குக் கொண்டுவர வர்த்தக மையம் திட்டமிட்டுள்ளது.

காப்புரிமை...

கடந்த 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி ராணி இரண்டாம் எலிசபெத் லிதுவேனியா நிறுவனத்திற்கு காப்புரிமை அளித்துள்ளதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைட்டமின் சத்துக்கள்....

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19 ஆம் நூற்றாண்டிலும் குறைந்திருந்த இதன் தயாரிப்பு 20 ஆம் நூற்றாண்டில் மீண்டும் உயரத் தொடங்கியது. இந்நிலையில், தற்போது வெளிவரும் இந்த பானம் வைட்டமின் சி சத்துகள் கலந்து தயாரிக்கப்படுகின்றது.

தேன் மது....

பல நூறு ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட இந்த ஆயுர்வேத மது பானத்தின் சூத்திரங்கள் தற்போது மறைந்து போனபோதிலும், இப்பானத்திற்கான அடிப்படைப் பொருள் இயற்கையில் கிடைக்கும் தேன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 4எஸ்-ல் சார்ஜ் செய்தபடி பேசிக் கொண்டிருந்த வாலிபர் ஷாக் அடித்து பலி!

ஐபோன் 4எஸ்-ல் சார்ஜ் செய்தபடி பேசிக் கொண்டிருந்த வாலிபர் ஷாக் அடித்து பலி!


தாய்லாந்தில் ஐபோன் 4எஸ்ஸை சார்ஜில் போட்விட்டு அதில் பேசிக் கொண்டிருந்த நபர் மின்சாரம் தாக்கி பலியானார்.

தாய்லாந்தின் சந்தாபுர் மாகாணத்தைச் சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் ஆப்பிள் ஐபோன் 4எஸ்-ஐ பயன்படுத்தி வந்தார். அவர் தனது போனை சார்ஜ் போட்டுக் கொண்டே பயன்படுத்தினார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் பலியானார். அவர் பயன்படுத்தியது ஒரிஜினல் ஆப்பிள் சார்ஜர் இல்லையாம்.

அந்த நபர் செல்போனை சார்ஜில் போட்டுக் கொண்டே அதில் பேசிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜூலை மாதம் சீனாவில் ஒரு பெண் ஆப்பிள் ஐபோன் 5-ஐ சார்ஜில் போட்டுக் கொண்டே பேசியபோது மின்சாரம் தாக்கி பலியானார். இதையடுத்து அந்த பெண்ணின் மரணம் குறித்து ஆப்பிள் நிறுவனம் விசாரணைக்கு உத்தரவிட்டது.

அதற்கும் முன்பு தாய்லாந்தில் ஆப்பிள் ஐபோன் 5- போனை பயன்படுத்தியபோது அது வெடித்துச் சிதறியது என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை

முதன்முறையாக எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை



பிரான்சில் முதன்முறையாக எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புகைப்பிடிப்பதால் உடல் நலத்திற்கு கேடு என்று எவ்வளவோ கூறியும் மக்கள் கேட்டபாடில்லை.

இதனை புகைப்பவர்களை விட அருகில் இருப்பவர்களுக்குத் தான் பாதிப்பு அதிகம்.

இந்நிலையில் சிகரெட்டுக்கு பதிலாக, எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதற்கும் எதிர்ப்புகள் எழுந்ததால், வடக்கு பிரான்சில் உள்ள Saint-Lo என்ற நகரத்தில் முதன் முறையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஹொட்டல், பூங்காக்கள் உட்பட பொது இடங்களில் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 18 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கு விற்கக்கூடாது என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை உபயோகிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புகையிலை பழக்கத்திலிருந்து விடுபட்டு, மருத்துவர்களின் ஆலோசனைப்படியே இதனை உபயோகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இந்த தடையை நாடு முழுவதும் அமுல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகெங்கும் உள்ள தமிழாசிரியர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு

உலகெங்கும் உள்ள தமிழாசிரியர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு


உலகெங்கும் உள்ள பல நாடுகளில் தமிழ் மொழியை கற்பித்து வரும் தமிழாசிரியர்களின் நலன் கருதி உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் ஒரு டிப்ளோமா கற்கை நெறியை தமிழ் நாட்டின் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தோடு இணைந்து ஆரம்பித்துள்ளது.

உலகெங்கும் தமிழ் கற்பித்தலில் ஆர்வமுடைய ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் ஆகியோர் மேற்படி கற்கை நெறியில் உடனடியாக இணைந்து எதிர்காலத்தில் ஒரு தகுதி வாய்ந்த தமிழாசிரியராகும் வாய்ப்பை பெற்றுக் கொள்ளுமாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில், சென்னைக்கு அருகில் உள்ள மிகவும் பிரபலமான எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தோடு இணைந்தது முன்னெடுக்கும் அரிய வாய்ப்பு இது.முழுக்க முழுக்க புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்ச்சிறார்கள், தமிழ்க் கல்வியை இலகுவாக பயிலவும், தமிழைப் பிழையின்றி பேசவும், படிக்கவும், எழுதவும் இப்பாடநெறி உதவும்.

அடிப்படை தமிழ் இலக்கணம், மட்டுப்படுத்தப்பட்ட தமிழ் இலக்கிய வரலாறு அத்துடன் கணனித் தமிழும், இணைய வழிக் கல்வியும் முக்கிய விடயமாகும்.

மேற்படி டிப்ளோமா கற்கை நெறியில் இணைந்து கொள்ளுவதற்கு தேவையான தகைமைகள் பின்வருமாறு அமைகின்றன.

இலங்கையில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 6 பாடங்களில் சித்தி பெற்றிருந்தால் இந்தப் பாடத்திட்டத்தில் நீங்கள் இணையலாம்.

முழுக்க முழுக்க புதிதாக எழுதப்பட்ட பாடத்திட்டம். புலம் பெயர் சமூகத்தில் வாழும் தமிழ்ச் சிறார்கள் இரண்டாவது, மூன்றாவது மொழியாக தமிழ் மொழியை படிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள். அவர்கள் இலகுவாக படிப்பதற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்ட முதலாவது பாடத்திட்டம்.

இந்த கற்கை நெறியை படித்து முடிப்பவர்கள் புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். தற்போது இலங்கை, இந்தியாவில் இருப்பவர்களும் இப்பயிற்சி நெறியை ஆரம்பிக்கத் தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த டிப்ளோமா கற்கை நெறியில் சேர ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை 1ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை விண்ணப்பிக்குமாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒரு நொடிக்கு எவ்வளவு சம்பாதிக்கின்றன என்று தெரியுமா?

முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒரு நொடிக்கு எவ்வளவு சம்பாதிக்கின்றன என்று தெரியுமா?


உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆண்டு வருமானம் பற்றி பலருக்கு தெரியும். காலாண்டு வருமானம் பற்றி கணக்கு வைத்திருப்பவர்களும் உண்டு.

இந்நிலையில் அந்த நிறுவனங்கள் ஒரு நொடிக்கு எவ்வளவு சம்பாதிக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா?. இல்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்.


பிளாக்பெர்ரி நிறுவனம் நொடிக்கு ரூ.12,797 வருமானம் ஈட்டுகிறது.


சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவர் மத்தியிலும் பிரபலமாக உள்ள ஃபேஸ்புக் நிறுவனம் விநாடிக்கு ரூ.14,360 சம்பாதிக்கிறது.


செல்போன் தயாரிப்பாளரான நோக்கியா விநாடிக்கு ரூ. 58,754 வருவாய் பெறுகிறது.


ஐடி ஜாம்பவானான ஆரக்கிள் நிறுவனத்தின் ஒரு நொடிக்கான வருவாய் ரூ.66,685 ஆகும்.


தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ நொடிக்கு ரூ. 99,528 சம்பாதிக்கிறது.


இன்டெல் நிறுவனத்தின் ஒரு விநாடி வருவாய் ரூ. 1 லட்சத்து ஆயிரத்து 649 ஆகும்.


பிரபல லேப்டாப், கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான டெல் நொடிக்கு ரூ. 1 லட்சத்து 16 ஆயிரத்து 447 வருவாய் ஈட்டுகிறது.


எதற்கெடுத்தாலும் மக்கள் கூகுள் கூகுள் செய்து பார்க்கிறார்கள். அந்த கூகுள் நிறுவனம் ஒரு நொடிக்கு ரூ. 1 லட்சத்து 16 ஆயிரத்து 941 சம்பாதிக்கிறது.


ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நொடிக்கு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 663 வருவாய் பெறுகிறது.



மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனம் என்றாலும் அந்த பெயரைக் கேட்டதும் நம் நினைவுக்கு வருபவர் என்னவோ அதன் நிறுவனர் பில் கேட்ஸ் தான். மைக்ரோசாப்ட் நொடிக்கு ரூ. 1 லட்சத்து 45 ஆயிரத்து 589 வருவாய் ஈட்டுகிறது.



பிரபல ஐடி நிறுவனமான ஐபிஎம் நொடிக்கு ரூ. 1 லட்சத்து 97 ஆயிரத்து 751 சம்பாதிக்கிறது.


ஹ்யூலெட் பேக்கார்ட் நிறுவனத்தின் ஒரு நொடி வருவாய் ரூ. 2 லட்சத்து 16 ஆயிரத்து 52 ஆகும்.


ஆப்பிள் நிறுவனம் மக்களிடையே பிரபலமான ஒன்று. அதன் ஒரு நொடி வருமானம் ரூ. 2 லட்சத்து 83 ஆயிரத்து 572 ஆகும்.


ஆப்பிள் என்றால் சாம்சங் பெயரை கூறாமல் இருக்க முடியுமா. சாம்சங் நிறுவனம் ஒரு நொடிக்கு ரூ. 4 லட்சத்து 5 ஆயிரத்து 158 சம்பாதிக்கிறது.



இன்று நள்ளிரவு 12.15 மணிக்கு சூரியனை நோக்கி பாயும் ஐசான்.. காணத் தவறாதீர்கள்...!

இன்று நள்ளிரவு 12.15 மணிக்கு சூரியனை நோக்கி பாயும் ஐசான்.. காணத் தவறாதீர்கள்...!



உலகெங்கும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் விரித்த கண்களுடன் வானை நோக்கி காத்திருக்கின்றனர். இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.15 மணிக்கு ஐசான் வால்நட்சத்திரம் சூரியனுக்கு வெகு அருகில் போகிறது.

உலகத்தில் உள்ள அத்தனை தொலைநோக்கிகளும், விண்ணியல் ஆர்வலர்களின் கண்களும் ஐசான் வால்நட்சத்திரத்தை நோக்கி திரும்பியுள்ளன. ஐசான் என்னாகப் போகிறது, சூரியனுக்கு அருகே அது போகும்போது என்ன நடக்கும் என்ற பேரார்வம் அத்தனை பேர் மனதிலும் அப்பிக் கிடக்கிறது.

படு வேகமாக சூரியனை நோக்கி போய்க் கொண்டிருக்கும் ஐசான் இன்று நள்ளிரவு சூரியனை மிக மிக அருகே நெருங்கப் போகிறது. அது தப்பிப் பிழைக்க வாய்ப்பில்லை, பொசுங்கிப் போய் விடும் என்று பொதுவான கருத்து இருந்தாலும் தப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் சிலர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்

நேரடியாக ஒளிபரப்பு

ஐசான் வால்நட்சத்திரம் சூரியனுக்கு மிக மிக அருகே இன்று போகும் காட்சியை நேரடியாக தொலைநோக்கிகள் மூலம் காண பல்வேறு நாடுகளில் உள்ள விண்வெளி அமைப்புகள், கோளரங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளன..

அமெரிக்காவின் நன்றி கூறும் தினத்தில்...

அமெரிக்காவில் நன்றி கூறும் தினம் தொடங்கும் நாளில் ஐசான் வால் நட்சத்திர் சூரியனைத் தொடவுள்ளது. அதாவது இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.15 மணியளவில்.

டைரக்டாக பார்க்காதீர்கள்

ஐசான் வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கும் காட்சியை பகலில் பார்ப்பது நல்லதல்ல. அதாவது நேரடியாக பார்ப்பது நல்லதல்ல. அதிலும் சூரியனை நேராக பார்த்தால் கண் பார்வை பறிபோகும் வாய்ப்புள்ளதாம்.


சோஹோ விண்கலம் தரும் நேரடி ஒளிபரப்பு

விணணில் நிலை கொண்டுள்ள சோஹோ என்று அழைக்கப்படும் சோலார் அன்ட் ஹீலியோஸ்பெரிக் அப்சர்வேட்டரி என்ற விண்வெளி தொலைநோக்கி மூலமும், ஐசான் சூரியனை நெருங்கும் காட்சியை நேரடியாக காட்ட நாசா ஏற்பாடு செய்துள்ளது.

வீடியோ காட்சிகளைக் காணலாம்

சோஹோ மூலம் கிடைக்கும் வீடியோ காட்சிகளை நாம் காணவும் நாசா ஏற்பாடு செய்துள்ளது. http://sohowww.nascom.nasa.gov/home.html இங்கே போனால் அதைப் பார்க்கலாம்.


சூரியனை நோக்கி பல கேமராக்கள்

சோஹாவில் பல்வேறு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்தனையும் சூரியனை ஆய்வு செய்வதற்காக பொருத்தப்பட்டவையாகும். இந்த சோஹா, 1995ம் ஆண்டு ஏவப்பட்டதாகும். இன்னும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது பாவமோ குற்றமோ அல்ல.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது பாவமோ குற்றமோ அல்ல.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!


திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல என்று உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு அளித்துள்ளது.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து பிரிந்துவிட்ட ஒரு பெண், அந்த ஆணிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்த மனு மீது நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் நேற்று விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:

திருமணம் செய்து கொள்வதோ, செய்து கொள்ளாமல் இருப்பதோ ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, இந்தியாவில் சமூகத்தாலோ, சட்டத்தாலோ அங்கீகரிக்கப்படவில்லை

பாவம் அல்லவே...
இருப்பினும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல. இந்த உறவு, திருமண உறவு போன்றது அல்ல. இத்தகைய உறவை பல நாடுகள் அங்கீகரிக்கத் தொடங்கி உள்ளன.


பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது

இத்தகைய உறவில், பாதிப்புகள் இருப்பதை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. இந்த உறவு முறிவடைந்தால், பெண்களும், இந்த உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளும்தான் பாதிக்கப்படுகிறார்கள்.

சட்டம் அவசியம்..

இதனால் இத்தகைய உறவில் இணையும் பெண்களையும், அவர்களது குழந்தைகளையும் பாதிப்பில் இருந்து பாதுகாக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் அல்லது, சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டும்.

திருமண உறவைப் போல அங்கீகரியுங்கள்

அத்துடன் வழக்கமான திருமண உறவை அங்கீகரித்தது போல இத்தகைய உறவையும் நாம் அங்கீகரிக்க வேண்டும்.

திருமணத்துக்கு முன் உடலுறவு?

ஆனால் திருமணத்துக்கு முந்தைய உடலுறவை நாடாளுமன்றம் ஊக்குவிக்க முடியாது. இதனால் பொதுமக்கள் இதற்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ கருத்து தெரிவிக்கலாம்.

அதுவேற இதுவேற..

கள்ளத்தொடர்பு, பலதார மணம் ஆகியவை 'திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல்' எனும் உறவில் சேர்க்க முடியாது. அவை குற்றச்செயல்களாகும்
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.


Please we welcome your comments.....


மரத்தால் ஆன புத்த விஹாரை கண்டுபிடிப்பு: புத்தரின் காலம் கி.மு 6ம் நூற்றாண்டு எனத் தகவல்

மரத்தால் ஆன புத்த விஹாரை கண்டுபிடிப்பு: புத்தரின் காலம் கி.மு 6ம் நூற்றாண்டு எனத் தகவல்



நேபாளத்தில் புதிய புத்த விஹாரை ஒன்றை தொல்லியல் துறையினர் கண்டு பிடித்துள்ளனர். அதன் மூலம் புத்தரின் காலம் கி.மு. 6ம் நூற்றாண்டாக இருக்கலாம் என அவர்கள் உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.

இதுவரை புத்தர் வாழ்ந்த காலம் 3அல்லது 4ம் நூற்றாண்டாக இருக்கலாம் என ஆய்வாளார்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், புத்தரின் பிறப்பிடமான நேபாளத்தில் மிகப் பழமையான புத்த விஹாரை ஒன்றை தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.

கி.மு.6ம் நூற்றாண்டு....

விஹாரை என்பது கோவில் ஆகும்,. தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ள இந்த கோவிலில் உள்ள தொல்லியல் படிமங்களை ஆய்வு செய்ததில் புத்தர் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிதுள்ளனர்.

புத்தரின் பிறப்பிடம்....

யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய இடமாக அறிவிக்கப் பட்ட நேபாளம் லும்பினியில் உள்ள மாயாதேவி கோவில் இடம் தான் புத்தரின் பிறந்த இடமாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மர விஹாரை....

அதன் பலனாக, செங்கற்களால் கட்டப்பட்ட தொடர் புத்த விஹாரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் கி.மு. 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மரத்தால் ஆன விஹாரை இருந்ததை, அகழாய்வு செய்து தொல்லியல் துறையினர் வெளிக்கொணர்ந்துள்ளனர்.

பழமையான கோவில்....

இதுவரை கண்டறியப்பட்ட புத்த விஹாரைகளிலேயே இதுதான் மிகப் பழமையான கோவில் என தெரிவித்துள்ள தொல்லியல் துறையினர், புத்தரின் வாழ்வில் நேரடியாகத் தொடர்புடைய பொருள்களில் தொல்லியல் துறைக்குக் கிடைத்த முதல் பொருள், இக்கோவிலே எனத் தெரிவித்துள்ளனர்.

ராணியின் பிரசவம்...

மரத்தாலான இந்த மிகப் பழமையான புத்த விஹாரையின் மையப்பகுதியில் வெற்று இடம் உள்ளது. லும்பினி தோட்டத்தில் மரத்தின் கிளையைப் பிடித்தபடி ராணி மாயாதேவி புத்தரைப் பிரசவித்த கதையுடன் இதற்கு தொடர்பு உள்ளது.

பழமையான மரத்தின் வேர்கள்...

இந்த வெற்றிடத்தின் மையத்தில் மரம் இருந்திருக்க வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மிகப் பழமையான அந்த மரத்தின் வேர்களும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அசோகர் காலத்து சான்றுகள்....

இதன் மூலம், புத்தமதம் இங்குதான் மலர்ந்திருக்க வேண்டும் என்ற கருத்து மேலோங்கியுள்ளது. மேலும், இதுவரை கிடைத்த தொல்லியல் ஆய்வுகளில், அசோகர் காலத்துச் சான்றுகள் தவிர கி.மு. 3- ம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை எதுவும் கிடைக்கவில்லை.

80 வயது வரை வாழ்ந்தாரா..?

பிரிட்டனின் துர்ஹாம் பல்கலைக்கழக பேராசிரியர் ராபின் கன்னிங்ஹம் தலைமையிலான தொல்லியல் குழு மேற்கொண்டது. இந்த ஆய்வு குறித்து பேராசிரியர் கன்னிங்ஹம் கூறுகையில், ‘கல்வெட்டு உள்ளிட்ட எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் மற்றும் கர்ணபரம்பரைக் கதைகள் மூலம் புத்தரின் வாழ்க்கை குறித்து மிகச் சில தகவல்களே தெரியவந்துள்ளன. சில ஆய்வாளர்கள் புத்தர் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பிறந்ததாகக் கூறி வருகின்றனர். இதில் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் உலவுகின்றன. அவர் கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் என்றும் 80 வயது வரை வாழ்ந்தவர் என்றும் கருத்துகள் உள்ளன. தற்போது, முதன்முறையாக, கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட (புத்தர் சார்ந்த) தொல்லியல் படிமங்கள் கிடைத்துள்ளன' எனத் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டு...

ஆனால், நேபாள அரசு இந்த அரிய இடத்தைப் பாதுகாப்பாதில் போதிய முயற்சி எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளது இந்த அறிக்கை.

தொடரும் ஆய்வுகள்....

தொடர்ந்து அந்த இடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், புத்தர் தொடர்புடைய மேலும் பல அரிய தகவல்கள் கிடைக்கப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஜெட்-ஏர்வேஸை அமெரிக்காவில் சிக்கலில் மாட்டிய ஒரு ‘வல்லவனுக்கு வல்லவன்’

ஜெட்-ஏர்வேஸை அமெரிக்காவில் சிக்கலில் மாட்டிய ஒரு ‘வல்லவனுக்கு வல்லவன்’


இந்திய தனியார் விமான நிறுவனம் ஜெட்-ஏர்வேஸ், அமெரிக்க விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அலுவலகத்தால் எடுக்கப்படவிருந்த கடும் நடவடிக்கை ஒன்றில் இருந்து ஒருவழியாக தப்பித்துக் கொண்டது.

“தலைக்கு வந்தது, தலைப்பாகையுடன் போனது” என்பதுபோல, 10,000 அமெரிக்க டாலர் ‘சிவில் அபராதம்’ செலுத்தி, சுமார் 2 வருடங்களாக தலைவலி கொடுத்துவந்த கேஸை முடித்துக் கொண்டது.

கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம் போல இனியும் நடக்காது என்ற உத்தரவாதம், ஜெட்-ஏர்வேஸினால் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த தடவை அதுபோன்ற சம்பவம் நடந்தால், ஜெட்-ஏர்வேஸின் அமெரிக்க ரூட்களுக்கு சிக்கல் ஏற்படலாம்.

அப்படி என்னதான் ஜெட்-ஏர்வேஸ் செய்துவிட்டது? கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம் என்ன?

2011-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை மோசமான பனிப்புயல் தாக்கியது. மாலையில் சுமார் 30 நிமிட காரிடோர் நேரத்தில், விமானங்களை தரையிறக்குவதே சிக்கல் என்ற அளவுக்கு விசிபிளிட்டி மோசமாகி, ரன்வேயே கண்ணுக்கு தெரியாத நிலை ஏற்பட்டது (zero visibility).

இதையடுத்து அந்த 30 நிமிட காரிடோரில் நியீயார்க்கு மேல் பறந்துகொண்டு, தரையிறங்க தயாராக இருந்த விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. அருகிலுள்ள வெவ்வேறு விமான நிலையங்களுக்கு வானில் வைத்தே திசைதிருப்பி விடப்பட்டன. 28 விமானங்கள், பிராட்லி விமான நிலையத்துக்கு (Bradley Airport) திசைதிருப்பப்பட்டன.

அந்த 28 விமானங்களில் ஒன்று, இந்தியாவில் இருந்து வந்த ஜெட்-ஏர்வேஸ் விமானம்.

ஜெட்-ஏர்வேஸ் விமானம் தடம் இலக்கம் 9W 228, இந்தியாவில் இருந்து புறப்பட்டு, பெல்ஜியத்தில் டச் பண்ணிவிட்டு, நியூஜெர்சி நுவார்க் ஏர்போர்ட்டில் தரையிறங்க வந்துகொண்டிருந்தது. இதில் அன்று 217 பயணிகள் இருந்தனர். நியூயார்க் ஏர்-ட்ராபிக் கன்ட்ரோல் அறிவுறுத்தலின்படி, இந்த விமானம் திசை திரும்பி, பிராட்லி விமான நிலையம் சென்று பத்திரமாக தரையிறங்கியது.

பிராட்லியிலும், காலநிலை மோசமாகத்தான் இருந்தது. ஆனால், நியூயார்க் அளவுக்கு மோசமில்லை. எதிர்பாராத விதமாக 28 விமானங்கள் சடசடவென அங்கு வந்து இறங்கியதில், அவ்வளவு விமானங்களையும் ஹேன்டில் பண்ண முடியாதவாறு அந்த விமான நிலையம் திணறியது.

தரையிறக்கப்பட்ட விமானங்களை, விமான நிலைய டெர்மினலுக்கு கொண்டுவராமல், ஒதுக்குப்புறமாக ஆங்காங்கே நிறுத்தி விட்டார்கள். பயணிகளை தரையிறக்க வழியில்லை. தொடர்ந்து ஸ்னோ அடித்துக் கொண்டிருந்தது. விமான நிலைய டெர்மினலில் கேட் காலியாக, காலியாக, அமெரிக்கன் ஏர்லைன்ஸ், யுனைட்டட் ஏர்வேஸ் போன்ற பெரிய விமானங்களுக்கு இடம் கொடுக்கப்பட்டு, பயணிகள் டெர்மினலில் இறக்கப்பட்டனர்.

சில விமானங்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜெட்-ஏர்வேஸூம் ஒரு ஓரமாக ‘அம்போ’ என்று நின்றிருந்தது. அதற்கு ஒரு காரணமும் இருந்தது.

இந்த இடத்தில் ஒரு ஏர்போர்ட் ஹேன்டிலிங் நடைமுறை பற்றி சொல்ல வேண்டும். பொதுவாகவே விமானங்கள் திசை திருப்பப்பட்டு எதிர்பாராத விமான நிலையத்தில் இறக்கப்பட்டால், அதற்கான ஹேன்டிலிங் கட்டணங்கள் உண்டு.

தரையிறக்க ஒரு கட்டணம், குறிப்பிட்ட நேரத்துக்குமேல் (பெரிய விமானங்களுக்கு 90 நிமிடங்கள்) நிறுத்தி வைக்க ஒரு கட்டணம், மேலதிக எரிபொருள் நிரப்ப ஒரு கட்டணம் என விமான நிலையம் சார்ஜ் செய்யும் கட்டணங்கள் உள்ளன. மோசமான காலநிலை காரணமாக திசைதிருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டால், இந்த கட்டணங்களை உடனே செலுத்த வேண்டியதில்லை. சாவகாசமாக விமான நிறுவனத்துக்கு ‘பில்’, அனுப்பி விடுவார்கள்.

இவை விமானங்களின் சேவைகளுக்கான நடைமுறை. ஆனால், மற்றொரு விவகாரமும் உள்ளது. பயணிகளின் சேவைகளுக்கான நடைமுறை. இவற்றை விமான நிலையம் கவனிப்பதில்லை. அங்குள்ள ஏர்லைன்ஸ்கள், அல்லது ஹேன்டிலிங் ஏஜென்ட்டுகள் கவனிப்பார்கள். அதாவது, பயணிகளை இறக்கி, ஏற்றல், லவுஞ்ச் ஏற்பாடுகள், உணவு வசதிகள், தேவை ஏற்படின் ஹோட்டல் ஏற்பாடுகள் அனைத்தும் இந்த வகையில் வரும்.

நம்ம ஜெட்-ஏர்வேஸோ, பிராட்லி ஏர்போர்ட்டுக்கு பறப்பதில்லை. இதனால், ஜெட்-ஏர்வேஸ் ஊழியர்கள் அங்கே கிடையாது.

அப்படியான சமயங்களில், அந்த ஏர்போர்ட்டில் சேவையில் ஈடுபடும் மற்றொரு ஏர்லைன்ஸூடன் ஒப்பந்தம் இருக்க வேண்டும். அப்போதுதான், இப்படியான அசாதாரண நேரங்களில் அந்த ஏர்லைன்ஸ், இவர்களது பயணிகளை கவனிப்பார்கள்.

ஜெட்-ஏர்வேஸ் தாம் வாழ்க்கையில் பிராட்லி ஏர்போர்ட்டில் தரையிறங்குவோம் என்று நினைத்திராத காரணத்தால், அந்த ஏர்போர்ட்டில் உள்ள எந்த விமான நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்திருக்கவில்லை. இதனால்தான் ஜெட்-ஏர்வேஸ் 217 பயணிகளுடன் ஒரு ஓரமாக ‘அம்போ’ என்று நின்றிருந்தது.

இதற்கிடையே நியூயார்க்கில் உள்ள ஜெட்-ஏர்வேஸ் ஸ்டேஷன் மேனேஜர், பிராட்லி ஏர்போர்ட்டில் உள்ள மற்றைய விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு ஹேன்டிலிங் செய்ய முடியுமா என விசாரித்துக் கொண்டிருந்தார். “சும்மா வெளாடாதிங்க மாப்ளை.. நம்ம பயணிகளை கவனிக்கவே ததிங்கிணத்தோம் போடுகிறோம். இதில், மேலும் 217 பயணிகளை கவனிப்பதா? தமாசு பண்ணாதிங்க” 

இப்படியான இழுபறியில் ஜெட்-ஏர்வேஸ் விமானம், பிராட்லியில் இருந்து புறப்பட்டு நியூஜெர்சி செல்ல அனுமதி கோரப்பட்டது. அனுமதி கிடைத்தது. பயணிகளுடன் 5 மணி நேரம், 47 நிமிடங்கள் காத்திருந்த நிலையில், ஒருவழியாக புறப்பட்டு சென்றது.

இதுதான் நடந்த சம்பவம். ஆனால், கதை அத்துடன் முடியவில்லை. அமெரிக்க விமான நடைமுறை சட்டப்படி, சர்வதேச விமானம் ஒன்று, எதிர்பாராத காரணங்களுக்காக திசை திருப்பப்பட்டால், தரையிறங்கிய நேரத்தில் இருந்து அதிகபட்சம் 4 மணி நேரம்தான் பயணிகளை விமானத்துக்குள் வைத்திருக்கலாம். அதற்குள் அவர்களை ஏர்போர்ட் டெர்மினலில் இறக்கிவிட வேண்டும்.

நம்ம வண்டியோ, 5:47 மணிநேரம் பயணிகளுடன் தரையில் நின்றிருக்கிறது. சிக்கல்தான்.

இதற்குள் ஜெட்-ஏர்வேஸில் உள்ள யாரோ ஒரு ‘சட்டத்தில் உள்ள ஓட்டை தெரிந்த’ நபர், TDR (Tarmac Delay Report) அறிக்கை தாக்கல் செய்தபோது, “ஜெட்-ஏர்வேஸ் விமானம் தடம் இலக்கம் 9W 228, பிராட்லி ஏர்போர்ட்டில் 4:47 மணிநேரம் பயணிகளுடன் தரையில் நின்றிருந்தது என தாக்கல் செய்துவிட்டார்.

அதாவது, ‘சட்டத்தில் உள்ள ஓட்டை தெரிந்த’ நபர், தரையில் நின்றிருந்த நேரத்தில் 1 மணி நேரத்தை சுட்டு விட்டார்.

‘சட்டத்தில் உள்ள ஓட்டை’ என்னவென்றால், அமெரிக்க 4 மணி நேர சட்டத்தில், ஒரு விதிவிலக்கு உண்டு. குறிப்பிட்ட விமான நிறுவனம், அமெரிக்க விமான நிறுவனமாக இல்லாது வெளிநாட்டு நிறுவனமாக இருந்து, அவர்கள் குறிப்பிட்ட விமான நிலையத்தில் இதற்குமுன் ஒரு தடவைகூட தரையிறங்காது இருந்தால், மேலும் 1 மணி நேரம் விதிவிலக்கு அனுமதி கோர முடியும்.

விமானம் 9W 228, பிராட்லி ஏர்போர்ட்டில் 4:47 மணிநேரம் பயணிகளுடன் தரையில் நின்றிருந்தது என TDR அறிக்கையில் குறிப்பிட்டு, இந்த விதிவிலக்கை பெற்றுவிட்டது ஜெட்-ஏர்வெஸ்.

அத்துடன், ‘யாவரும் நலம்’ என ஜெட்-ஏர்வேஸ் நினைத்திருக்க, கதையில் ஏற்பட்டது மற்றொரு திருப்பம்.

ஜெட்-ஏர்வேஸ் நிறுவனத்தில் சட்டத்தில் உள்ள ஓட்டை தெரிந்த ‘வல்லவன்’ ஒருவர் இருக்க, அந்த ‘வல்லவனுக்கு வல்லவன்’ ஒருவர், அதே ஜெட்-ஏர்வேஸ் விமானத்தில் பயணியாக இருந்திருக்கிறார்!

அவர் என்ன செய்தாரென்றால், மற்றொரு அறிக்கையை கையில் எடுத்தார். இதை ATCR என்பார்கள். விரிவாக்கம், Air Travel Consumer Report.

இந்த ரிப்போர்ட்டில், பிராட்லி விமான நிலையத்தில் ஜெட்-ஏர்வேஸ் எத்தனை மணிக்கு தரையை தொட்டது (actual touchdown time), எத்தனை மணிக்கு மீண்டும் சக்கரம் மேலேறியது (wheels up time) என்ற விபரங்கள் உள்ளன. அதை இணைத்து, US regulatorக்கு ஒரு புகாரை தட்டிவிட்டார்.

சிக்கிக் கொண்டது ஜெட்-ஏர்வேஸ்.

விமான நிறுவன அனுபவத்தில் சொல்கிறேன். பொதுவாக இப்படியான விஷயமறிந்த ‘வல்லவனுக்கு வல்லவன்கள்’ புகார் செய்வதற்கு முன், முதலில் விமான நிறுவனத்திடமே வருவார்கள். அவர்களை தட்டிக் கொடுத்து, இலவச பிசினெஸ் கிளாஸ் டிக்கெட் ஒன்றைக் கொடுத்து, குஷிப்படுத்தி விடுவார்கள் விமான நிறுவனங்கள்.

ஆனால் இவரோ, அண்ணா சொன்ன ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ கொள்கை உடையவர் போலிருக்கிறது. நேரே புகாருக்கு போய்விட்டார்.

விவகாரம் தெரிந்தவுடன் ஜெட்-ஏர்வேஸ், தாம் தாக்கல் செய்திருந்த TDR அறிக்கையை மாற்றப்போக, அது சிக்கலை ஏற்படுத்த, விசாரணை தொடங்க… என்ற பெரிய லீகல் கதையின் சுருக்கம்தான், நாம் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட, “தலைக்கு வந்தது, தலைப்பாகையுடன் போனது என்பதுபோல, 10,000 அமெரிக்க டாலர் ‘சிவில் அபராதம்’ செலுத்தி தப்பித்துக் கொண்டது”.

ஜெட்-ஏர்வேஸ், “இனிமேல் இப்படியான காரியம் எதையும் செய்வதில்லை” என உத்தரவாதம் கொடுத்ததில், “compromise civil penalty” என்ற வகையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சரி. இந்த நீதிக் கதையில் உள்ள ‘நீதி’ என்ன சொல்லுங்க பார்க்கலாம்?

Tuesday, November 26, 2013

ஆப்பிளை பழிவாங்கியது சாம்சங் 100 கோடி டாலர் நஷ்டஈடை சில்லரையாக கொடுத்தது

ஆப்பிளை பழிவாங்கியது சாம்சங் 100 கோடி டாலர் நஷ்டஈடை சில்லரையாக கொடுத்தது


அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் அபராதம் விதித்தது அமெரிக்க கோர்ட். இந்த தொகை முழுவதையும் 30 லாரிகளில் சில்லரை காசுகளாக அனுப்பி பழி வாங்கியுள்ளது கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம்.சாம்சங் நிறுவனம் தனது ஆன்ட்ராய்டு போன்களில், ஆப்பிள் போனின் தொழில்நுட்பத்தை காப்பியடித்து விற்பனை செய்து வருவதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பதிலுக்கு ஆப்பிள் நிறுவனம்தான் தங்கள் தொழில்நுட்பத்தை திருடி பயன்படுத்தி வருவதாக சாம்சங் நிறுவனம் வாதாடியது. கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், சாம்சங் நிறுவனம் காப்புரிமை விதிமுறைகளை மீறி விட்டதாகவும் அதனால் ஆப்பிள் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் (6,200 கோடி) அபராதமாக அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பானது. 

சாம்சங் நிறுவனத்தின் 26 வகையான ஸ்மார்ட் போன்களில் ஆப்பிள் நிறுவன தொழில்நுட்பம் காப்பியடிக்கப்பட்டு இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.இந்த நிலையில், கடந்த புதன்கிழமை கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்துக்கு 30 லாரிகள் வந்தன. அங்கிருந்த செக்யூரிட்டி, அட்ரஸ் மாறி வந்து விட்டதாக கூறியிருக்கிறார். தங்களிடம் இந்த அட்ரஸ்தான் கொடுக்கப்பட்டுள்ளதாக லாரி டிரைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போதுதான் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்குக்கு ஒரு போன் வந்துள் ளது. சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ குவான் கியூன் பேசினார். உங்களுக்கு தர வேண்டிய நஷ்ட ஈட்டைத்தான் அனுப்பியிருக்கிறோம். 

பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறியிருக்கிறார்.அத்தனை லாரிகளிலும் சில்லரை காசுகள். 5 சென்ட் நாணயங்கள். மொத்தம் 2 ஆயிரம் கோடி காசுகள். ஆப்பிள் நிறுவனத்தின் குடோன்களில் 30 டிப்பர் லாரிகளில் இருந்தும் நாணயங்கள் கொட்டப்பட்டுள்ளன. 100 கோடி டாலருக்கும் சில்லரை. இதை எப்படி எண்ணுவது, எங்கே பாதுகாப்பாக வைப்பது எனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆப்பிள் நிறுவன அதிகாரிகள். வங்கிகளில் இவ்வளவு சில்லரைகளை ஏற்க மாட்டார்கள். ஒரே நேரத்தில் இவற்றை நோட்டாக மாற்றுவதும் கடினம் என்பதால் விழி பிதுங்கி நிற்கிறார்கள். 

நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என முடிவான போது, அதை எப்படி கொடுப்பது என்பது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. அதனால் சில்லரைகளை அனுப்பி பழி வாங்கியுள்ளது சாம்சங்.எங்கள் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. எல்லா ஸ்மார்ட் போனும் செவ்வக வடிவத்தில்தான் இருக்கும். செவ்வக வடிவத்துக்கு எல்லாம் காப்புரிமை வாங்கி வைத்துக் கொண்டு, யாரும் அந்த சைசில் போன் தயாரிக்கக் கூடாது என்கிறார்கள். எங்களிடமே காப்புரிமை விளையாட்டு விளையாடுகிறார்கள். எங்களுக்கும் விளையாடத் தெரியும். எப்புடி... என பேட்டி கொடுத்திருக்கிறார் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் லீ குன் ஹீ.

Monday, November 25, 2013

பூமியில் பெய்த அமில மழையால் 90 வீத உயிரினங்கள் அழிவு

பூமியில் பெய்த அமில மழையால் 90 வீத உயிரினங்கள் அழிவு




25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் பொழிந்த அமில மழை மற்றும் ஓசோன் குறைவு காரணமாக மிகப்பெரிய அளவிலான அழிவு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.

பெர்மியான் காலத்தின் முடிவில் ஏற்பட்ட இந்த பேரழிவின் போது கடலில் வாழ்ந்த 90 சதவிகித உயிர்களும், நிலத்தில் வசித்த 70 சதவிகித உயிர்களும் இறந்துவிட்டன என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. இதில் மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய மிக கொடிய மிருகங்கள் என அறியப்பட்டனவும் இறந்துவிட்டன என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் சைபீரியாவில் மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதறியபோது பீச்சியடிக்கப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் சல்பர் டை ஆக்ஸைடு வாயுக்களால் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றமே இந்த அமில மழை அழிவிற்கு காரணம் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த மிகப்பெரிய அழிவிற்கு பிறகு பூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு எந்த உயிர்களும் தோன்றவில்லை என்றும் கிடைத்த படிமங்கள் அடிப்படையில் கருதப்படுகிறது என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமி தோன்றி சுமார் 500 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டதாக விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.