Friday, November 8, 2013

பிலிப்பைன்ஸை தாக்கியது 'ஹயான் சூறாவளி' : மணிக்கு 275 கி.மீட்டர் வேகத்தில் வீசும் அசுர காற்று

பிலிப்பைன்ஸை தாக்கியது 'ஹயான் சூறாவளி' : மணிக்கு 275 கி.மீட்டர் வேகத்தில் வீசும் அசுர காற்று


பிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த சூறாவளி தாக்க துவங்கியிருப்பதால் அந்நாட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டை ஹயான் என்னும் சக்தி வாய்ந்த சூறாவளி தாக்குமென்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. இதனையடுத்து இன்று மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியை சக்தி வாய்ந்த சூறாவளி தாக்க துவங்கியது. மணிக்கு 275 கி.மீட்டர் வேகத்தில் வீசும் பலத்த சூறாவளி காற்று காரணமாக வீடுகளின் மேற்கூரைகள் பறந்து சென்றன. பலத்த சூறாவளி காரணமாக கடல் அலைகளும் 4 முதல் 5 மீட்டர் உயரத்திற்கு சீற்றத்துடன் காணப்படுகின்றன. பலத்த காற்று காரணமாக மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. 

சூறாவளியால் அதிக பாதிப்புகளை சந்திக்கும் என எச்சரிக்கைவிடப்பட்டுள்ள நகரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடலோரங்கள் மற்றும் ஆற்றுப்படுகையில் வசிப்பவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்நாட்டு அதிபர் பெனிக்நோ அக்னோ ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். இதனால் 20க்கும் மேற்பட மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ள, பாதுகாப்பு முகாம்களில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

வேகமாய் வருது ஐரோப்பிய செயற்கைக்கோள் கடலில் விழுமோ? பூமியை தாக்குமோ?

வேகமாய் வருது ஐரோப்பிய செயற்கைக்கோள் கடலில் விழுமோ? பூமியை தாக்குமோ?




காலாவதி ஆகி, காயலான் கடை பொருளாகி விட்ட ஐரோப்பிய செயற்கைக்கோள் ஒன்றின் ராட்சத பாகங்கள், பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை கடலில் விழ வைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். விஞ்ஞானிகள் அச்சத்தால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகள் கூட்டாக செயற்கைக்கோள் விடுவது வழக்கம். 2007ல் கோசே என்ற பெயரில் ஒரு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. அதன் செயலாக்கம் இப்போது போதுமான எரிபொருள் இல்லாததால் முடங்கி விட்டது. விண்ணில் இன்ஜின் இல்லாத விமானம் போல தடுமாறி, விண்வெளி சுற்றுப்பாதையில் தடுமாறியபடி உள்ளது.   

88 நிமிடத்துக்கு ஒரு முறை புவிவட்டப்பாதையை சுற்றியபடி, அதே சமயம் நிமிடத்துக்கு 2.5 மைல் கீழே சரிந்தபடி உள்ளது. இப்போதும் அது 113 மைல் தூரத்தில் மேலே தடுமாறி வருகிறது. ஒவ்வொரு 88 நிமிடத்துக்கும் புவி வட்டப்பாதையை சுற்றி வருவதால் அது கடலிலும் சரி, பூமி பகுதிகளிலும் சரி வலம் வந்தபடி உள்ளது. அதனால் அதன் பாகங்கள் 45, 50 ராட்சத துண்டுகளாக சிதறி விழும் அபாயம் உள்ளது. 

அப்படி விழும் போது, அவை, கடலில் விழ வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதன் இன்ஜின் இயக்கம் அறவே இல்லாமல் இருந்தாலும், அதை ஓரளவு இயக்க முயற்சித்து, கடல் பகுதியில் வலம் வரும் போது இன்னும் வேகமாக விழ வைக்க முடியுமா என்று விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர்.  

அவர்கள் கூறுகையில், ‘இந்த செயற்கைக்கோளின் நூறு டன்னுக்கு மேல் எடை கொண்ட பாகங்கள் பூமியில் விழும் அபாயம் உள்ளது.  அது எங்கு, எப்போது விழும், எப்படி சேதம் ஏற்படுத்தும் என்பது மதிப்பிட முடியாது’ என்று கூறினர். 2 ஆண்டுக்கு முன், அமெரிக்காவின் நாசா விண்வெளி கழகம், புவிஈர்ப்பு பகுதி ஆய்வு செயற்கைக்கோள் காலாவதி ஆனபோது, அதை செயலிழக்க செய்தது. அப்போது துல்லியமாக பசிபிக் கடலில் அதன் பாகங்களை விழ செய்து வெற்றி கண்டது. 

கடந்த 2011ம் ஆண்டு, செவ்வாயை ஆராய அனுப்பப்பட்ட ரஷ்ய விண்கலம் போபஸ்கிரன்ட், பாதி வழியில் நிலை தடுமாறி பசிபிக் கடலில் விழுந்தது. இதுபோல, ஐரோப்பிய செயற்கைக்கோளையும் கடலில் விழச்செய்ய முடியுமா என்று பல விஞ்ஞானிகளும் ஆலோசனை செய்து வருகின்றனர். இது பூமியில் விழுந்தாலும் பெரிய  அளவில் சேதம் உண்டாக்காது என்பது தான் இவர்கள தரும் நம்பிக்கை. 

விண்கல்லும் விழ தயார்

ஒரு பக்கம் செயற்கைக்கோள் துண்டுகள் என்றால், இன்னொரு பக்கம் விண்கல் விழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த பிப்ரவரியில் ரஷ்ய நகரான செல்யபின்ஸ்க் என்ற பகுதியில் நூறு மைல் பரப்புக்கு கட்டடங்களில் அதிர்வை ஏற்படுத்தியது ஒரு விண்கல். இது விழுந்த நேரத்தில் ஏற்பட்ட அதிர்வில் கட்டட ஜன்னல் கண்ணாடிகள் சிதறின. ராட்சத பாறை போன்ற எரிகல் பாகங்கள் ஆங்காங்கு சிதறி ஆயிரம் பேர் காயமடைந்தனர். 

அப்பாடா, 200 ஆண்டுக்கு ஒரு முறை தானே இப்படி நடக்கும் என்று ஆறுதல் பட்டால், பத்தாண்டுக்கு ஒரு முறை இப்படி ராட்சத விண்கல் விழும் அபாயம் இருக்கிறது  என்று நாசா உட்பட விஞ்ஞானிகள் அமைப்பு அபாய சங்கு ஊதுகிறது. 

ரஷ்யாவில் பிப்ரவரில் விழுந்த விண்கல் 60 அடி நீளம் , அகலம் கொண்டது. மணிக்கு 40 ஆயிரம் மைல் வேகத்தில் வந்த இந்த விண்கல்லில் இருந்து 5 லட்சம் டன் டிஎன்டி என்ற வெடிபொருள் அளவுக்கு வெளிப்பட்டது. பெரும் சேதம் ஏற்பட்டது. இதுபோல, பூமிக்கு அருகே விழ தயார் நிலையில் உள்ள 95 சதவீத விண்கல்கள் பெரும்பாலும் ஒரு கி.மீ. சுற்றளவு கொண்டதாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். விண்கல்கள் விழுந்தால் ஒரு நகரத்தையே அழிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாம்.

எக்ஸ்ட்ரா தகவல்

ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்த சைபீரியாவின் ஆற்றில் 1908ல் முதன் முதலில் 200 அடி நீளம், அகலம் கொண்ட எரிகல் விழுந்தது. அந்த ஆற்றையே தீப்பிழம்பாக்கி 10 லட்சம்  மரங்களை பொசுக்கியது எரிகல். 

16 அடி உயரம் வளர்ந்த கத்திரிக்காய் மரங்கள்

16 அடி உயரம் வளர்ந்த கத்திரிக்காய் மரங்கள்



கர்நாடகாவில் கத்திரிக்காய் மரத்தில் காய்க்கும் அதிசயம் நடக்கிறது.கத்திரிக்காய் செடிகள் 2 அடி முதல் 3 அடி வரை செடியாக வளர்ந்து காய்கள் காய்க்கும். குறிப்பிட்ட காலத்துக்குள் கத்திரிக்காய் பறிக்கப்பட்டு பின்னர், செடிகளை வேரோடு அகற்றிவிடுவதுதான் வழக்கம். ஆனால், வடகர்நாடகா மாவட்டம், சிரசி தாலுகாவில் வழக்கத்துக்கு மாறான அதிசயம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள முண்டகூடா கிராமத்தை சேர்ந்தவர் சசி. இவர் தனது நண்பரின் நிலத்தில் விதைத்திருந்த கத்திரிக்காய் செடிகளை 8 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்து தனது வீட்டு தோட்டத்தில் பயிரிட்டார். 

வழக்கமான உயரம் வளர்ந்த இந்த செடிகளில் எப்போதும் போல் கத்திரிக்காய் காய்த்தது. பின்னர், இந்த செடிகள் மரம் போல் வளர்ந்தன. தற்போது, இந்த செடிகள் 16 அடிக்குமேல் வளர்ந்து மரமாக காட்சி அளிக்கின்றன. செடியாக இருந்து காய்க்க வேண்டிய கத்திரி செடிகள், மரமாக மாறியிருப்பது முண்டகூடா கிராமத்தில் உள்ள மக்களை மட்டுமின்றி சுற்று வட்டார கிராம மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Wednesday, November 6, 2013

WWII-ன் போது பயன்படுத்தப்பட்ட குண்டை செயலழிக்க வைக்க முயற்சி

WWII-ன் போது பயன்படுத்தப்பட்ட குண்டை செயலழிக்க வைக்க முயற்சி




ஜேர்மனியில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் அவ்வப்போது கிடைத்து வருகின்றன.
இரண்டாம் உலகப்போர்(1939 - 1945) காலத்தில் பயன்படுத்தப்பட்ட மற்றும் பதுக்கி வைக்கப்பட்ட குண்டுகள் ஜேர்மன் நாட்டின் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றது.

சிலவேளைகளில் அதிக எடை கொண்ட ராட்சத குண்டுகளும் கிடைப்பதுண்டு. இவ்வாறு எடுக்கப்படும் குண்டுகள் உடனடியாக செயலிழக்க செய்யப்படுவதுண்டு.

இதேபோன்று முக்கிய தொழில் பிரதேசமான ருர் மாகாணத்தில் 4 ஆயிரம் பவுண்ட் எடை கொண்ட குண்டு ஒன்று கிடைத்தது.

இந்த குண்டை செயலிழக்க வைக்கும் முயற்சியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக அருகில் வசிக்கும் 20 ஆயிரம் மக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அரிய வகை வண்ணத்துப்பூச்சிகள்

முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அரிய வகை வண்ணத்துப்பூச்சிகள் 


களக்காடு அருகே முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அரியவகை வண்ணத்துப்பூச்சிகள், அந்து பூச்சிகள் உள்ளிட்டவை இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் 895 சதுர பரப்பளவில் களக்காடு-முண்டதுறை புலிகள் காப்பகம் உள்ளது. 

இங்கு புலி, கரடி, அரிய வகை உயிரினங்கள் உள்ளன. இது தவிர பல வகை பூச்சிகளும் உள்ளன. இந்நிலையில் டாக்டர் கீதா ஐயர் என்பவர் இது தொடர்பாக ஆராய்ச்சில் ஈடுபட்டு வந்தார். இதில் களக்காடு முண்டந்துறை பகுதியில் பல்வேறு அரிய வகை வண்ணத்துபூச்சிகள் மற்றும் அந்து பூச்சிகள் இருப்பதும் தெரியவந்தது. 

ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணத்து பூச்சிகள், அந்து பூச்சிகளின் வண்ண படங்கள் அடங்கிய ஒரு தகவல் தொகுப்பு வெளியிட முடிவு செய்யப்பட்டது. இந்த தகவல் தொகுப்பை தலைமை வன காவலர் ராகேஷ் குமார் டோக்ரா வெளியிட்டார். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், களக்காடு புலிகள் காப்பகத்தில் தாவரங்கள் மற்றும் வன வளத்தை மேம்படுத்துவதிலும், பாதுகாப்பதிலும் பல தரப்பட்ட சிற்றினங்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது. 

ஆனால் இவற்றில் பலவற்றை பற்றி பொதுமக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே மாணவர்கள், பொதுமக்கள், வன ஆய்வாளர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு இந்த தகவல் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளன. அந்து பூச்சிகள் பொதுவாக இரவில் மட்டுமே நடமாடும். அவற்றை அப்போதுதான் பார்க்க முடியும். அவைகளின் பெருக்கம் குறைந்து வருவதால் இவற்றை பாதுகாப்பது பொதுமக்களின் கடைமை என்றனர்.


Tuesday, November 5, 2013

நல்ல ஆரோக்கியமான வாழ்விற்கான 10 சூப்பர் உணவுகள்!!!

நல்ல ஆரோக்கியமான வாழ்விற்கான 10 சூப்பர் உணவுகள்!!! 


உடலுக்கு மிகவும் அவசியமானது சத்துக்கள். எவ்வளவு தான் நாக்குக்கு சுவை முக்கியமாக இருந்தாலும், உடலுக்கு சத்து தான் தேவை. நாக்குக்கு சுவை வேண்டுமென்று கண்ட கண்ட உணவை உண்டால், உடலானது ஆரோக்கியத்தை இழந்துவிடும். நல்ல சத்தான உணவை சுவையுடன் சமைத்து சாப்பிட்டால், சுவை, சத்து என இரண்டும் கிடைக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். 

அதுமட்டுமின்றி இக்காலத்தில் அவசர வேலை என்று உணவில் பலர் கவனம் செலுத்துவதில்லை. இதனால் குழந்தைகள் பெரும்பான்மையாக பாதிக்கப்படுகின்றனர். வயதானவர்களும், போதிய சத்து இல்லாததால், இதய நோய்க்கு ஆளாகின்றனர். ஆகவே இதனை போக்குவது அனைவருடைய கடமையாகும். அதற்கு காலை வேளைகளில் அவசரமாக சமைத்தாலும், சத்தான உணவை சமைப்பது மிகவும் முக்கியமாகும். 

கொழுப்பு கலந்த உணவு சுவையை கொடுக்குமே தவிர, அதில் ஆரோக்கியம் என்பது துளியும் இருக்காது. இதனால் பலவித நோய்களுக்கு ஆளாகி அவதி கொள்வதை தவிர்த்து, எண்ண செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து செய்தல் மிகவும் நல்லது. அதற்கு சத்துமிக்க உணவை சாலட், சூப் போன்ற வகையில் சமைத்து சாப்பிட வேண்டும். ஒவ்வொன்றையும் தயாரிக்கும் பக்குவத்தில் தயாரித்து உண்டால் மிகவும் நல்லது. 

இதோ இங்கே நோயெதிர்ப்பு சக்தி, ஆரோக்கியம், நல்ல கொழுப்பு போன்ற நல்ல உணவுகளை காண்போம்.


அவகேடா 

அவகேடாவில் MuFAs அமிலத்தின் சத்து மட்டும் தான் உள்ளது என்று நினைக்கின்றோம். ஆனால் அதில் பலவித மற்ற வைட்டமின்களும், இதயத்திற்கு நன்மை சேர்க்கும் சத்துக்களும் உள்ளன. மேலும் இதில் கரையக்கூடிய நார்சத்து, வைட்டமின் ஈ, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. 

எப்படி சாப்பிடுவது? இதனை சாலட், சல்சாஸ் போன்ற விதங்களில் உணவில் சேர்த்து கொள்ளலாம். குறிப்பாக அப்போது இதனுடன் சீஸ் அல்லது மாயோனைஸ் போன்றவற்றை சேர்க்க வேண்டாம்.  


ப்ராக்கோலி 

உயிர் கொல்லி நோய்கள் பலவற்றிலிருந்து ப்ராக்கோலி நம்மை காக்கும் என அறிவியல் மேதைகள் கூறுகின்றனர். அதிலும் இந்த பச்சை நிறக் காய்கறி புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து காக்கும். இதை எப்படி சாப்பிடுவது? இதன் இலைகளை வேக வைத்து வதக்கிய உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.


முட்டை 

முட்டை, கேடு என்று யார் கூறியது? முட்டையில் அரிய சத்துக்கள் உள்ளன. இதன் மஞ்சள் கருவில் இதயத்தை பாதிக்கும் கொழுப்பு தன்மை இருப்பதால், வாரத்தில் மூன்று முட்டைக்கு மேல் எடுத்து கொள்ள வேண்டாம். ஆனால் வெள்ளை கருவை தினமும் எடுத்து கொள்ளலாம். சொல்லப்போனால் உணவுகளிலேயே மிகவும் நல்ல ஆகாரம் முட்டை. 

இதை எப்படி சாப்பிடுவது? முட்டையை பொரித்தோ, ஆம்லெட் செய்தோ சாப்பிடுங்கள். அதுவும் ஒரு மஞ்சள் கருவுடன், இரண்டு வெள்ளை கருவை சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும்.  


பால் 

கொழுப்பு இல்லாத ஒரு கப் பாலை தினமும் எடுத்து கொண்டால் மிகவும் நல்லது. இதில் உள்ள கால்சியம், எலும்புகளுக்கு மட்டும் சத்து கொடுக்காமல், கொழுப்பை நீக்கவும் உதவுகின்றது. 

இதை எப்படி சாப்பிடுவது? ஓட்ஸ் செய்யும் போது, கொழுப்பு நீக்கப்பட்ட பாலை சேர்த்து உண்ண வேண்டும். இரவு தூங்க செல்லும் முன், மிதமான சூட்டுடன் இருக்கும் பாலை சிறிது சாக்லெட் சேர்த்து சாப்பிடுவது நல்லது.  


பருப்பு 

பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் உடலுக்கு மிகவும் நல்லது. இவை ஆரோக்கியத்துக்கு மட்டும் இல்லாமல் கூந்தலுக்கும், சருமத்திற்கும் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் பல சத்துக்கள் உள்ளன. எனவே தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால், உடலுக்கு பலம் சேர்க்க முடியும். மேலும் இவற்றில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் ஆரோக்கியமான எண்ணெய் உள்ளது. 

இதை எப்படி சாப்பிடுவது? பாதாம், முந்திரி போன்ற பருப்பை சிறிதாக நறுக்கி, காலை உணவுடன் சேர்த்து உண்டால் ஆரோக்கியம் பெற முடியும். இடைப்பட்ட நேரத்திலும், இதை ஸ்நாக்காக உண்ணலாம்.  


சால்மன் 

மீன் உணவையையும், எண்ணெயையும் எடுத்து கொண்டால், ஆரோக்கியமான உடல், கூந்தல் மற்றும் சருமம் போன்றவற்றை அடைய முடியும் என்று தோல் நிபுணர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆம், கடல் உணவான சால்மனில் வைட்டமின் டி, ஒமேகா- 3 ஃபேட்டி ஆசிட் போன்ற சத்து அதிகம் இருப்பதால், இதை அதிக அளவில் உணவில் சேர்த்தால் மிகவும் நல்லது. 

இதை எப்படி சாப்பிடுவது? சால்மனை சுத்தம் செய்து, அதில் உப்பு, எலுமிச்சை சாறு, சிறிது நறுக்கிய பூண்டு, மிளகு தூள் போட்டு சிறிது நேரம் கழித்து சமைத்து, அதனை வேக வைத்த காயுடன் சேர்த்து உண்ண வேண்டும்.  


டோஃபு / பனீர் 

கொழுப்பு மிகுந்த உணவுக்கு பதிலாக டோஃபுவை எடுத்து கொண்டால், உடலுக்கு மிகவும் நல்லது. சோயா உணவில் இதயத்திற்கு பலம் சேர்க்கும் நல்ல கொழுப்பு உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்தும், பல முக்கியமான வைட்டமின்களும் உள்ளன. அதிலும் இது மார்பக புற்றுநோயை குணப்படுத்தும். 

இதை எப்படி சாப்பிடுவது? சாலட்டுடன் இதை சேர்த்து சாப்பிடலாம். சோயா பீன்ஸ், கொண்டைக்கடலை, ராஜ்மா போன்றவற்றை சமைப்பது போன்றும் சமைத்து சாப்பிடலாம்.


ஓட்ஸ் 

ஓட்ஸை அன்றாட உணவில் சேர்த்து கொண்டால், பலன் அடைவது நிச்சயம். ஏனெனில் இதில் இருக்கும் நார்ச்சத்து இதய நோயை போக்குவதுடன் கெட்ட கொழுப்பை நீக்கும். மேலும் இரண்டாம் ரக சர்க்கரை நோயை எதிர்க்கும் ஓட்ஸை தினமும் உண்டால், உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் கிடைக்கும். 

இதை எப்படி சாப்பிடுவது? ஓட்ஸை பால் அல்லது தயிருடன் சேர்த்து உண்ணலாம். சால்மனை பொரிக்கும் முன்பு, சிறிது நேரம் ஓட்ஸில் ஊர வைத்து பொரிக்கலாம்.


ஆலிவ் 

ஆயில் ஆலிவ் ஆயில் கெட்ட கொழுப்பை நீக்கி, நல்ல கொழுப்பை கொடுக்கும் குணம் கொண்டது. இதய நோய், புற்றுநோய் போன்றவற்றை எதிர்க்கும் வல்லமை கொண்ட ஆலிவ் எண்ணெயில் MUFA உள்ளது. 

இதை எப்படி சாப்பிடுவது? பொரித்த மற்றும் சாலட்களில் ஆலிவ் எண்ணெயை சேர்த்து உண்டால், ஆரோக்கிய வாழ்வை பெற முடியும்.  


தயிர் 

உலகத்தில் உள்ள எல்லா இடங்களிலும் தயிரை பிராதான உணவாக எடுத்து கொள்வதை பார்த்திருப்போம். அதிலும் கொழுப்பு குறைவாக இருக்கும் தயிரை உணவில் சேர்த்து கொண்டால் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் பாக்டீரியா மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. 

இதை எப்படி சாப்பிடுவது? தயிருடன் சுவைமிக்க பழங்களால் செய்யப்படும் ஸ்மூத்தி செய்து உண்ணலாம். அதிலும் அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களை தயிருடன் சேர்த்து உண்டால் நல்லது. அதுவும் தயிரும் மாம்பழமும் சுவையோ சுவை.  


இந்தியாவின் செவ்வாய் கிரக முயற்சி சாதனை படைக்குமா?

இந்தியாவின் செவ்வாய் கிரக முயற்சி சாதனை படைக்குமா? 




செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது. இத்திட்டத்துக்காக ரூ450 கோடி செலவிடப்பட்டுள்ளது. 

இந்தியாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சியை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்த விண்கலம் ஏவுவதற்கான கவுண்ட்டவுன் நேற்று முன்தினம் தொடங்கின. 

செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்ய அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் ஏற்கனவே விண்கலத்தை அனுப்பி உள்ளன. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமும் ஒரு விண்கலத்தை அனுப்பி இருக்கிறது. 

4வது நாடு 

இந்த விண்கலம் வெற்றிகரமாக ஏவப்படும் நிலையில் செவ்வாய் கிரகத்தை எட்டிய நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்ததாக இந்தியா இடம்பெறும்.

என்ன ஆராய்ச்சி? 

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் அங்குள்ள கனிம வளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றை ஆராய்வதற்காகவும் இந்த விண்கலம் செலுத்தப்படுகிறது.

என்ன உபகரணங்கள்? 

மங்கள்யான் செவ்வாயின் சுற்றுப்பாதையில் மிதந்தபடி இதுவரை அறியப்படாத செவ்வாய் கிரகத் தகவல்களைச் சேகரிக்கும். 15 கிலோ எடையுள்ள மங்கள்யான், லைமன் ஆல்பா போட்டோமீட்டர் உள்பட 5 உபகரணங்களைக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று மீத்தேன் வாயுவைக் கண்டறியும். மற்றொன்று ஹைட்ரஜன் மூலம் செவ்வாயின் மேல்மண்டல வெளியேற்ற முறைகளை ஆய்வு செய்யும். செவ்வாய் கிரகத்திலுள்ள தாது வளத்தை தெர்மல் இமேஜிங் ஸ்பெக்ட்ரோ மீட்டர் ஆய்வு செய்யும். செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் இருப்பதைக் கண்டறிவதுதான் மங்கள்யானின் முக்கிய நோக்கமாக இருக்கும். ஏனெனில் கரியமில வாயு சார்ந்த மீத்தேனின் இருப்பு, உயிரின இருப்புக்கான ஆதாரம்

1,340 கிலோ எடை 

இந்த மங்கள்யான் விண்கலம் 1,340 கிலோ எடை கொண்டது.

ரூ450 கோடி 

இத்திட்டத்துக்காக மொத்தம் ரூ.450 கோடி செலவிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 1-ல் செவ்வாய் நோக்கி பாயும் 

பூமியின் சுற்றுப்பாதையில் 20 முதல் 25 நாட்களுக்கு சுற்றியபின் டிசம்பர் 1-ந் தேதி நள்ளிரவு செவ்வாய் கிரகத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கும். தொடர்ந்து 280 முதல் 300 நாள்கள் பயணித்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை விண்கலம் அடையும்.

40-ல் 23தான் வெற்றி 

செவ்வாய் கிரகத்தை ஆராயும் எந்த ஒருநாட்டின் முயற்சியும் முதல் கட்டத்திலேயே வெற்றி பெற்றது இல்லை. இதுவரை 40 முறை மேற்கொள்ளப்பட்ட செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பும் முயற்சிகளில் 23 தான் வெற்றி பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.