Friday, February 22, 2013

அஸ்ட்ரோயிட்டுக்களை அழிப்பதற்கு விஞ்ஞானிகள் புதிய திட்டம்

அஸ்ட்ரோயிட்டுக்களை அழிப்பதற்கு விஞ்ஞானிகள் புதிய திட்டம்



அஸ்ட்ரோயிட்டுக்கள் எனப்படும் விண்ணிலிருந்து பூமியை நோக்கிவரும் எரிகற்களை அழிப்பதற்கு சூரியக்கதிர்ளால் வலுவூட்டப்பட்ட லேசர் கதிர்களை பயன்படுத்தும் புதிய திட்டம் ஒன்றினை முன்மொழிந்துள்ளனர்.
இத்திட்டமானது அமெரிக்காவில் அமைந்துள்ள Polytechnic பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வகையான 10 தொன் எடைகொண்ட அஸ்ட்ரோயிட் அண்மையில் ரஷ்யாவை தாக்கி பலத்த சேதத்தை விளைவித்ததைத்தொடர்ந்து இப்புதிய பாதுகாப்பு பொறிமுறை விஞ்ஞானிகளால் முன்மொழியப்பட்டுள்ளதுடன் இப்பொறிமுறை மூலம் பூமியிலிருந்து 27,700 கிலோமீட்டர்கள் தொலைவில் வைத்தே குறித்த அஸ்ட்ரோயிட்டுக்களை அழிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Thursday, February 21, 2013

அடேங்கப்பா... ஒரு நாளைக்கு 20,000 வார்த்தைகளைப் பேசுகிறார்களாம் பெண்கள்!

அடேங்கப்பா... ஒரு நாளைக்கு 20,000 வார்த்தைகளைப் பேசுகிறார்களாம் பெண்கள்!

பெண்கள்தான் அதிகம் பேசுபவர்கள் என்று கூறுவார்கள். அது உண்மைதானாம். ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பேசுகிறார்களாம். அதாவது ஒரு நாளைக்கு அவர்கள் 20,000 வார்த்தைகளைப் பேசுகிறார்களாம்.

அறிவியல்பூர்வமான தகவல் ஒன்று இதைத் தெரிவிக்கிறது. இதுவரை பெண்கள் அதிகம் பேசுவார்கள் என்று சொல்லி வந்த நிலையில் அறிவியல்பூர்வமாகவே அதை உண்மை என்று சொல்லியுள்ளனர்.

ஆனால் பெண்கள் இப்படி அதிகம் பேசுவதற்கு அவர்களது வாய் மட்டும் காரணம் இல்லையாம். மாறாக பாக்ஸ்பி 2 என்ற புரதம்தான் காரணமாம்.

ஒரு நாளைக்கு 20,000 வார்த்தையாம் 


பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 20,000 வார்த்தைகளைப் பேசுகிறார்களாம். ஆண்களை விட இது அதிகமாகும்.

ஆண்களை விட 13,000 அதிகம் 


ஆண்களை விட பெண்கள் ஒரு நாளைக்கு 13,000 வார்த்தைகள் அதிகமாக பேசுகிறார்களாம்.

பாக்ஸ்பி 2 தான் காரணம் 


பெண்கள் இவ்வாறு அதிக அளவில் பேச அவர்களது மூளையில் உற்பத்தியாகும் பாக்ஸ்பி 2 புரதம்தான் காரணமாம். இது பெண்களின் மூளையில் அதிகமாக சுரக்கிறதாம்.


எலிகளில் ஆண்கள்தான் 


வாயாடி மனிதர்களைப் பொறுத்தவரை பெண்களின் மூளையில் இந்த புரதம் அதிகம் சுரக்கிறது. எலிகளில், ஆண் எலிகளின் மூளையில் இது அதிகம் சுரப்பதால் ஆண் எலிகளிடம்தான் சவுண்டு அதிகம் இருக்கிறதாம்.

மொழி புரதம் 


இந்த பாக்ஸ்பி 2 புரதத்திற்கு அமெரிக்க ஆய்வாளர்கள் மொழிப் புரதம் என்று பெயரிட்டுள்ளனர். காரணம் இதுதான் பேச்சுக்களுக்கும் வார்த்தைப் பிரயோகத்திற்கும் முக்கியக் காரணம் என்பதால். எனவே ஆண்களே, இனியும் பெண்களை பொத்தாம் பொதுவாக வாயாடி என்று சொல்லாதீர்கள்,வாங்கிக் கட்டிக் கொள்ளாதீர்கள்...


மின் கட்டண உயர்வு எதிரொலி- பல்கேரியாவில் அரசு கவிழ்ந்தது!


மின் கட்டண உயர்வு எதிரொலி- பல்கேரியாவில் அரசு கவிழ்ந்தது!


வெங்காய விலை உயர்வால் இந்தியாவில் அரசுகள் கவிழ்ந்த வரலாறுகள் உண்டு.. இதே போல்தான் கடுமையான மின் கட்டண உயர்வால் பல்கேரியா நாட்டு அரசாங்கமும் கவிழ்ந்து போயிருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பல்கேரியாவில் அண்மையில் கடுமையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இது அந்நாட்டு மக்களிடத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. பல இடங்களில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதலும் வெடித்தது. இதைத் தொடர்ந்து பல்கேரியாவின் பிரதமர் போரிசாவ் நேற்று ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து பல்கேரியாவில் பார்லிமெண்ட் தேர்தல் வரும் ஜூலை மாதம் நடத்தப்படுமா? அல்லது அதற்கு முன்பே நடத்தப்படுமா? என்பது ஓரிரு நாளில் தெரியவரும்.

கழிவறைகளை விட கிச்சன் தான் ரொம்ப மோசம்... ஆய்வில் அதிரடி

கழிவறைகளை  விட கிச்சன் தான் ரொம்ப மோசம்... ஆய்வில் அதிரடி

நம் வீட்டில் உள்ள கழிவறைகளை விட சமையலறைகளில்தான் அதிக அளவில் கிருமிகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

மனிதனின் உடல் ஆரோக்கியத்தில் உண்ணும் உணவிற்கு மட்டுமல்லாது, அவை சமைக்கப்படும் சமையலறைக்கும் பங்குண்டு. இதனை வலியுறுத்தும் வகையில் இந்திய மருத்துவ அகாடமி சுகாதாரமான சமையலறை குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது.

இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய 6 நகரங்கள் இந்த கருத்துக் கணிப்பில் இடம் பெற்றன. சுகாதாரமான சமைலறையை வைத்திருப்பதில் சென்னை பின்தங்கிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

1400 இல்லத்தரசிகள் 

இந்த கருத்துக்கணிப்பில் 1400 இல்லத்தரசிகள், 500 மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் இன்று சென்னையில் வெளியிடப்பட்டன.


பார்வைக்கு சுத்தம் போதும் 

அதில் சமையலறையை துடைத்தாலே போதும் என 87 விழுக்காட்டினரும், பார்வைக்கு சுத்தமாக இருந்தால் போதும் என்று 95 விழுக்காட்டினரும் நினைப்பதாக தெரியவந்துள்ளது.


கிருமிகளை கொல்லவேண்டும் 

மேலும், வெறும் 13 விழுக்காட்டினர் மட்டுமே கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் நீ்க்குவதே சுகாதாரம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் கழிவறையை விட சமையலறை மிகவும் சுகாதாரமற்ற நிலைக்கு மாறி வருவதாக அந்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


ஃப்ரிட்ஜை கொஞ்சம் கவனிங்க 

அதே போல் குளிர் சாதனப் பெட்டிகளில், காற்று கூட புகாத அளவிற்கு பொருட்களை அடுக்கி வைப்பதைத் தடுக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இவ்வாறு அடுக்கி வைப்பதால், வெப்பநிலையை சீராக பராமரிக்க முடியாமல் நோய்க்கிருமிகள் வளர ஏதுவாகி விடும் என்றும் கூறுகின்றனர்.


கிச்சன் சிங்க் சுத்த மோசம் 

கழிவறைகளில் சீட்டில் இருக்கும் பாக்டீரியாக்களை விட வீட்டின் சமையலறை கிச்சன் சிங்க்கில்தான் அதிக அளவில் பாக்டீரியா கிருமிகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.


சென்னையில் எப்படி? 

குறிப்பாக சென்னையில் மட்டும் 34 விழுக்காட்டினர் படுக்கை அறையையும், 32 விழுக்காட்டினர் வரவேற்பறையை மட்டுமே சுத்தமாக வைக்க நினைப்பதாகவும், அதுவும் வாரத்தில் சில நாட்கள் மட்டுமே என்கிறது மருத்துவ அகாடமியின் புள்ளி விபரம்.





பிள்ளைகளை வாயில் வைத்து வளர்க்கும் ஆண் மீன் !

பிள்ளைகளை வாயில் வைத்து வளர்க்கும் ஆண் மீன் !



மிருகங்கள் ஆனாலும் சரி, பாலூட்டிகள் என்றாலும் சரி, பொதுவாக பெண் இனம் தாம் பிள்ளைகளை வளர்ப்பதும் பாதுகாப்பதும் வழக்கமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் இங்கே பார்க்கும் ஒருவகையான மீன் இனம் சற்று வித்தியாசமானது. பெண் முட்டை இட்டவுடன் தொடக்கமே, ஆண் மீன் அது பொரிக்கும்வரை பாதுகாக்கிறது. அதில் இருந்து வெளிப்படுக் குஞ்சுகள் உடனடியாகவே ஆண் மீன்(அப்பா) வாயுக்குள் சென்றுவிடுகிறது. அப்படி அது செல்ல மறுத்தால் கூட அப்பா மீன் அதன் குஞ்சுகள் அனைத்தையும் வாயுக்குள் எடுத்துவிடுகிறது. பல நாட்களாக இக் குஞ்சுகளை அது பாதுகாக்கிறது. அப்பாவின் வாயுக்குள் இருப்பதையே இயற்கையாக இக் குஞ்சு மீன்களும் விரும்புகிறது. அவை ஒரு பருவத்துக்கு வரும் வரை ஆண் மீன் தான் தனது வாயுக்குள் வைத்து தனது குஞ்சுகளைப் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்கிறது என்றால் பாருங்களேன்.

சிலவேளைகள் மட்டும், அவற்றை வெளியே நீந்த விடுகிறது அப்பா மீன். ஆனால் பின்னர் சிறிது நேரத்தில் அவை அனைத்தையும் தனது வாயுக்குள் எடுத்துவிடுகிறது. இதேபோல தற்சமயம் இந்த மீன் குஞ்சுகள் வெளியே நீந்தினாலும், ஒரு ஆபத்து என்றால் உடனே ஓடி வந்து அப்பாவின் வாயுக்குள் புகுந்துவிடுகிறது. யார் சொன்னது அம்மாவால் தான் பிள்ளைகளை வளர்க்க முடியும் என்று ? இம் மீன் சவால் விடுகிறது.

ஒரே பிரசவத்தில் அமெரிக்க பெண்ணுக்கு 2 இரட்டை குழந்தைகள்

ஒரே பிரசவத்தில் அமெரிக்க பெண்ணுக்கு 2 இரட்டை குழந்தைகள்



அமெரிக்க பெண் ஒருவர், ஒரே பிரசவத்தில் 2 இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். 7 கோடி பேரில் ஒருவருக்குதான் இதுபோல குழந்தை பிறப்பு ஏற்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் பகுதியைச் சேர்ந்த திரெசா மாண்டெல்வோ (36) என்ற பெண்ணுக்கு ஒரே மாதிரியான உருவம் கொண்ட 2 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. அவற்றுக்கு ஏ,பி,சி,டி வரிசைப்படி ஏஸ், பிளய்னி, காஷ், டைலன் என்று பெயரிட்டுள்ளனர்.

முதலில் ஏஸ், பிளய்னி என்ற இரட்டை குழந்தைகளை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர். அதற்கு பிறகும் அந்த பெண்ணின் வயிற்றிலிருந்து மேலும் இதய துடிப்பு கேட்பதை டாக்டர்கள் அறிந்தனர். அப்போது, மேலும் ஒரு ஜோடி குழந்தைகள் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். அந்த குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலம் பாதுகாப்பாக எடுக்கப்பட்டன.

தொப்புள் கொடி மூலம் தாயிடமிருந்து குழந்தைக்கு உணவு செல்லும். பொதுவாக ஒரு குழந்தைக்கு ஒரு தொப்புள் கொடி இருக்கும். ஆனால், திரேசாவின் முதல் தொப்புள் கொடியில் ஒரு ஜோடி குழந்தைகளுக்கும், மற்றொரு தொப்புள் கொடியில் மேலும் ஒரு ஜோடிக்கும் உணவு சென்றுள்ளன. இதுகுறித்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஆலன் பென்சியாஸ் கூறுகையில், ''மொத்த குழந்தை பிறப்பில் 2 சதவீதத்தினர் இரட்டையர்களாக பிறப்பர்.

 அதில் 30 சதவீதத்தினர் ஒரே மாதிரியான உருவ அமைப்பு கொண்டிருப்பர். அதிலும் ஒரே மாதிரி உருவ அமைப்பு கொண்ட 2 இரட்டை குழந்தைகள் பிறப்பது 7 கோடியில் ஒருவருக்குதான் நிகழும்'' என்றார். குழந்தைகள் 31 வார காலம் தாயின் வயிற்றில் இருந்தாலும் அவற்றுக்கு உடல் நல அபாயங்கள் உள்ளன. இந்த குழந்தைகளின் நோய் எதிர்ப்பு திறன் முழுமையாக இல்லை.

எனவே இவை மேலும் சிறிது காலம் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
குழந்தைகளின் தந்தை மானுவேல் கூறுகையில், ''எங்கள் 2 வயது ஆண் குழந்தைக்கு ஒரு தங்கை அல்லது தம்பியை கொடுக்க நினைத்தோம். ஆனால் கடவுள் 4 குழந்தைகளை கொடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை'' என்றார்.

Wednesday, February 20, 2013

கூகுள்ல சூரியனை ஏன் 6 கோள்கள் மட்டும் சுத்துது?


கூகுள்ல சூரியனை ஏன் 6 கோள்கள் மட்டும் சுத்துது?


இன்றும் நீங்கள் கூகுள் சர்ச் பக்கத்துக்குப் போயிருப்பீர்கள். இன்னும் அந்தப் பக்கத்துக்குப் போயிருக்காவிட்டால் கொஞ்சம் எட்டிப் பார்க்கவும். அ

ங்கே சூரியனை பூமி உள்ளிட்ட 6 கோள்கள் சுற்றிக் கொண்டிருக்கும் அனிமேஷனைக் காணலாம். அதில் பூமியை அதன் துணைக் கோளான நிலாவும் சுற்றிக் கொண்டிருக்கும். சூரியனை கோள்கள் எப்பவும் தானே சுத்திக்கிட்டு இருக்கு, இன்னிக்கு என்ன புதுசா அனிமேஷன்? என்று ஒரு 'நச்' கேள்வியை நீங்கள் கேட்கலாம். அதே போல என்னய்யா சூரியனை 9 கோள்கள் அல்லவா சுற்ற வேண்டும் என்ற அடுத்த கேள்வியையும் கேட்கலாம்.

இதற்கு பதில் அந்த அனிமேஷனை க்ளிக் செய்தாலே கிடைக்கும். இருந்தாலும் நாமும் அதை உங்களுக்குச் சொல்வதில் தப்பில்லையே...




கோபர்நிக்கஸ்: 

பள்ளிக் கூடத்தில் நாம் படித்த நிக்கோலஸ் கோபநிக்கசின் 540வது பிறந்த நாள் இன்றாகும். போலந்து நாட்டைச் சேர்ந்த ஜெர்மனிய கணிதவியலாரான இவர் பின்னாளில் வானியலிலும் கலக்கியவர். இவர் தான் முதன் முதலில் சூரியனைத்தான் கோள்கள் சுற்றி வருகின்றன என்று அறிவித்தவர். அதுவரையில், பூமியைத் தான் சூரியனும் பிற கோள்களும் சுற்றி வருவதாகக் கருதப்பட்டு வந்தது.


உலக அறிவியலின் மிக முக்கிய மைல்:
இவர் வெளியிட்ட De revolutionibus orbium coelestium (On the Revolutions of the Celestial Spheres) என்ற ஆய்வுக் கட்டுரை உலக அறிவியலின் மிக முக்கிய மைல் கல்லாகக் கருதப்படுகிறது.


ஏன் 6 கோள்கள் மட்டும்?:
இன்றைய கூகுள் அனிமேசனில் சூரியன் தவிர, மெர்க்குரி (புதன் கிரகம்), வீணஸ் (சுக்கிரன்), பூமி அண்ட் நிலா, மார்ஸ் (செவ்வாய்), ஜூபிடர் (வியாழன்), சாட்டர்ன் (சனி கிரகம்) ஆகிய 6 கிரகங்கள் மட்டுமே இருக்கும். காரணம், 15ம் நூற்றாண்டில் யுரானஸ், நெப்டியூன் மற்றும் புளூட்டோ ஆகியவை கண்டுபிடிக்கப்படவில்லை. (அதிலும் புளூட்டோ கிரகமா அல்லது சிறு கோளா என்ற சந்தேகம் வேறு இப்போது கிளப்பப்பட்டுவிட்டது)


இறக்கும்போது வெளியான ஆய்வறிக்கை: 

நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் சூரியனை மையமாக வைத்து கோள்கள் சுழல்வதைக் கண்டுபிடித்தாலும் அதை அவர் 1543ம் ஆண்டு வரை வெளியில் சொல்லவில்லை. காரணம், தனது கருத்து அன்றைய மத நம்பிக்கைகளுக்கு எதிரானதாக இருந்ததால், அவர் அதை வெளியில் சொல்ல யோசித்தார். ஆனாலும் தான் இறப்பதற்கு சில காலம் முன்னதாக தனது அறிக்கையை வெளியிட்டு உலகையே திக்குமுக்காட வைத்தார். கோபர்நிக்கசின் இந்த அறிக்கையைத் தான் பின்னால் வந்த மாபெரும் வானியல் அறிஞர்களான கலிலியோவும் கெப்ளரும் அடிப்படையாக வைத்து ஆய்வுகளைத் தொடர்ந்து வானியல் ரகசியங்களை ஒவ்வொன்றால் அவிழ்த்தனர்.

வறண்டு கிடந்த பூமி குளிர்ந்தது தென்மாவட்டங்களில் பலத்த மழை

வறண்டு கிடந்த பூமி குளிர்ந்தது தென்மாவட்டங்களில் பலத்த மழை



தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக மழை ஏமாற்றி வந்தது. பெருமளவு மழை பெய்யும் காலமான வடகிழக்கு பருவமழை காலம் மட்டுமல்லாது, புயல் காலங்களில் கூட பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் விவசாய நிலங்கள் வறண்டு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களையும் தமிழக அரசு வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்தது.இந்நிலையில் தென்மாவட்டங்களிலும், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் வறண்டு கிடந்த பூமி குளிர்ந்துள்ளது. விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தென்காசி:தற்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வரலாற்றில் இல்லாத அளவிற்கு பிப்ரவரி மாதத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகல் முழுவதும் தென்காசி, குற்றாலம் பகுதியில் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில் மழை பெய்யாமல் கண்ணாமூச்சி காண்பித்தது.நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் நீடித்த மழையால் வறண்டு கிடந்த குற்றாலம் அருவிகளில் காலை முதல் தண்ணீர் விழத்துவங்கியது. மெயினருவியில் தண்ணீர் பரந்து பாதுகாப்பு வளைவை தொட்டுக்கொண்டு விழுந்தது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. பல மாதங்களாக தண்ணீரின்றி வெறும் பாறை மட்டுமே தெரிந்த பழையகுற்றாலம், புலியருவியில் கூட தண்ணீர் நன்றாக விழுகிறது.நெல்லை மாவட்டத்தில் பரவலாக நேற்று முன்தினம் நள்ளிரவு துவங்கி நேற்று முழுவதும் பலத்த மழை பெய்தது.

மணிமுத¢தாறு அணைப் பகுதியில் அதிகபட்சமாக 21 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பாபநாசம் அணைப்பகுதியில் 96 மிமீ மழை பதிவாகியுள்ளது. சேர்வலாறு அணைப்பகுதியில் 10 மிமீ மழை பதிவாகியுள்ளது.நெல்லையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 11 மணிக்கு  பலத்த மழை பெய்தது. நெல்லை சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை, தச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுகிறது. பிசான பருவ சாகுபடி செய்துள்ள விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக அணை பகுதிகளிலும் பலத்த மழை இருந்ததால் நீர்வரத்து அதிகரித்தது. விவசாயத்தின் உயிர் நாடியாக விளங்கும் பேச்சிப்பாறை அணையின் நீர் மட் டம் 3.40 அடியில் இருந்து 4.30 அடியாக உயர்ந்தது.நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு முதல் விடிய விடிய சாரல் இருந்தது. நாகர்கோவில் நகரில் நேற்று காலையில் இருந்து மழைக்கான அறிகுறியாகவே இருந்தது. பகல் 1.10க்கு மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் மழை நீடித்தது.மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சையி லும் நேற்று கனமழை பெய்தது. அதிகாலையில் இருந்து மழை தூறியபடி இருந்தது.

அம்மா மெஸ்: இட்லி வாங்க சர்ரென்று வந்து நின்றது புத்தம் புதிய இன்னோவா கார்!

அம்மா மெஸ்: இட்லி வாங்க சர்ரென்று வந்து நின்றது புத்தம் புதிய இன்னோவா கார்!




முதல்வர் ஜெயலலிதாவால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட மலிவு விலை உணவகங்கள், ஏழை மக்களுக்காக என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இந்த மலிவு விலை உணவகங்களில் உண்பதற்காக வந்தவர்கள் பெரும்பாலானோர், கார்களில் வந்திருந்தனர்.

சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் உணவுகளை மலிவு விலையில் வழங்குவதற்காக இந்த உணவகங்கள் தொடங்க  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

நேற்று சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில் மலிவு விலை உணவகத்தை, முதலமைச்சர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தவுடன், மலிவு விலை உணவகத்தின் வாடிக்கையாளர்கள் என 3 பேர் அழைத்து வரப்பட்டனர்.

வாடிக்கையாளர்களாக வந்த அன்னபூரணி, சரோஜா, தாமரைக்கண்ணன் ஆகிய மூன்று பேருக்கும் முதல்வர் ஜெயலலிதாவே  உணவினை வழங்கி விற்பனையை தொடக்கி வைத்தார். மற்றைய வாடிக்கையாளர்களுக்கு இட்லி வழங்குமாறு முதல்வர் கட்டளையிட்டார்.

அதையடுத்து, 1 ரூபா இட்லியை பெற்றுக்கொள்ள ஏராளமான ஏழைகள் வரிசையாக வந்தனர்.

நேற்று சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில் மலிவு விலை உணவகத்தில் இட்லி வாங்க வந்த ஏழைகளின் பெயர்கள் வருமாறு:

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், பா.வளர்மதி, ப.மோகன், கோகுல இந்திரா, பி.வி.ரமணா,  முன்னாள் பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார், துணை மேயர் பெஞ்சமின், அ.தி.முக. தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன், தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள், ஜி.செந்தமிழன், ராஜலட்சுமி, அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், சி.ஆர்.சரஸ்வதி, தென் சென்னை வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் சரஸ்வதி ரங்கசாமி, தளவாய்சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அ.தி.மு.க தொழிற்சங்கப் பேரவை தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஏ.ஏ.அர்ஜூன் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், கவுன்சிலர் டி.சிவராஜ், சுகாதார பணிக்குழு தலைவர் பழனி, பெசசண்ட்நகர் நடராஜ்.

இந்த ஏழைகள் இட்லி வாங்கியதை அடுத்து, அடுத்த செட் ஏழைகளாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் வந்து இட்லி வாங்கினர்.

அத்துடன் அம்மா மெஸ்ஸில் இட்லி காலி!

அதன் பின் வந்த ‘ரியல்’ ஏழைகளை, மதியம் தயிர்சாதம் உண்ண வருமாறு கூறி அனுப்பி விட்டனர்.

சாந்தோம் மலிவு விலை உணவகத்துக்கு வெளியே புத்தம்புது இன்னோவா கார் ஒன்று பார்க் பண்ணப்பட்டு இருந்தது. ‘அவருக்கு’ இட்லி கிடைத்ததா, அல்லது தயிர்சாதம்தானா என்று தெரியவில்லை.

ரீடர்ஸ் டைஜஸ்ட் 'திவால்': ரூ.1,900 கோடி காண்ட்ராக்டை இழக்கும் எச்.சி.எல்!

ரீடர்ஸ் டைஜஸ்ட் 'திவால்': ரூ.1,900 கோடி காண்ட்ராக்டை இழக்கும் எச்.சி.எல்!



ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கை நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக அறிவித்துள்ளதால் அந்த நிறுவனத்துடனான ரூ. 1,900 கோடி (350 மில்லியன் டாலர்) காண்ட்ராக்டை இந்தியாவின் எச்.சி.எஸ் நிறுவனம் இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் 4வது மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனமான எச்சிஎல் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரீடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனத்துடன் ரூ. 1,900 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. அந்த நிறுவனத்தின் அனைத்துப் பிரிவுகளையும் கம்ப்யூட்டர் மயமாக்கும் 7 ஆண்டு காண்ட்ராக்ட் அது.

இந்த இதழை அமெரிக்காவின் ஆர்டிஏ ஹோல்டிங் கம்பெனி என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. ஆனால், இதழின் விற்பனை சரிந்ததாலும் விளம்பரங்கள் குறைந்துவிட்டதாலும் பெரும் நஷ்டத்தை ரீடர்ஸ் டைஜஸ்ட் சந்தித்து வருகிறது.

இதையடுத்து திவால் ஆகிவிட்டதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்க திவால் நீதிமன்றத்தில் இந்த அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளதால், அதற்கு சில நிதியுதவிகள் கிடைப்பதோடு, இந்த கடன்கள் மீதான வட்டி நெருக்கடியும் குறையும். மேலும் இந்த நிறுவனம் பிறருக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளும் ரத்தாகும்.

இப்போது சுமார் ரூ. 5,400 கோடியளவுக்கு கடன் நெருக்கடியில் இந்த நிறுவனம் உள்ளது. திவால் ஆகிவிட்டதாக அறிவித்துள்ளதால், இந்த நிறுவனம் எச்சிஎல் இதுவரை செய்து தந்த பணிகளுக்கான கட்டணமான ரூ. 23 கோடியைக் கூட தருமா என்பது சந்தேகமாகியுள்ளது.

அதே போல விப்ரோ நிறுவனத்துக்கும் சுமார் ரூ. 5 கோடியை இந்த நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது. அதுவும் வருமா என்பது தெரியவில்லை.

அமெரிக்க நீதிமன்றத்தில் சாப்டர் 11வது பிரிவின் கீழ் திவால் ஆகிவிட்டதாக ரீடர்ஸ் டைஜஸ்ட் அறிவித்துள்ளது. இதன்மூலம் அதன் 464.4 மில்லியன் டாலர் அளவுக்கான கடன்கள் பங்குகளாக மாற்றப்பட்டுவிடும். இதன்மூலம் அதன் கடன் அளவு 70 மில்லியன் டாலர் அளவாகக் குறையும். இதன்மூலம் 4 மாதங்களில் கடன்களில் இருந்து வெளியே வந்து நிறுவனமும் தப்பிவிட வாய்ப்புண்டு.

ஆனால், நிலைமை மோசமாகி சாப்டர் 7வது பிரிவின் கீழ் திவால் நோட்டீஸை இந்த நிறுவனம் தந்துவிட்டால், யாருக்கும் எந்தப் பணத்தையும் இந்த நிறுவனம் செட்டில் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. அப்படிப்பட்ட நிலையில் எச்சிஎல், விப்ரோவுக்கு தர வேண்டிய பணத்தையும் தர வேண்டியதில்லை. மேலும் அப்படிப்பட்ட நிலைமை வந்தால் எச்சிஎல் செய்து கொண்ட ரூ. 1,900 கோடி ஒப்பந்தமும் ரத்தாகிவிடும். இது எச்சிஎல் நிறுவனத்துக்கு நீண்டகால அடிப்படையில் பெரும் இழப்பாக அமையும்.

கடந்த 4 ஆண்டுகளில் ரீடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக அறிவிப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2009ம் ஆண்டும் இதே போன்ற திவால் நிலைமை இந்த நிறுவனம் சந்தித்தது. ஆனால், 2010ம் ஆண்டில் நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வந்தது. இந் நிலையில் மீண்டும் திவால் ஆகியுள்ளது.

இந்த முறையும் மீண்டு எழுந்துவிட்டால் எச்சிஎல்லுக்கு சிக்கல் குறையும்.

உலகில் உள்ள 9 மிகப்பெரிய சாதனைகள்!!!


உலகில் உள்ள 9 மிகப்பெரிய சாதனைகள்!!!


இந்த உலகில் பிறந்த அனைவருமே ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவ்வாறு ஆசைப்படுபவர்கள் அனைத்தும் அவ்வளவு எளிதில் எதையும் சாதிப்பதில்லை. அதற்கு பின்னால் நிறைய முயற்சிகள் நிச்சயம் இருக்கும். மேலும் சாதனையாளர்களின் பெயர்களை பதியும் ஒரு அழியாத புத்தகம் தான் கின்னஸ் புத்தகம். சாதிக்க அனைவருக்கும், இந்த புத்தகத்தில் தனது பெயர் வர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவ்வாறு முயற்சித்ததில், சிலர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவார்கள்.

இத்தகைய சாதனைகள் ஒருவருக்கு மட்டுமின்றி, ஒரு நாட்டிற்கும் சேரும். மேலும் சாதனை புரிய நினைப்பவர்கள், இந்த உலகிலேயே தான் செய்ததை யாரும் மறக்கக் கூடாது என்று நினைத்து தான் சாதனையைத் தொடங்குவர். அத்தகைய உலக சாதனைகளில் ஒருசில சாதனைகளை மறக்கவே முடியாது. ஏனெனில் இந்த அளவு சாதனையானது அற்புதமாக, மறக்க முடியாத அளவில், அவரது சாதனையை முறியடிப்பதற்கு சரியான போட்டி தரும் வகையில் இருக்கும். மேலும் ஒவ்வொரு சாதனைகளும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும்.

இப்போது அத்தகைய சாதனைகளில் வித்தியாசமான சாதனைகளான உலகிலேயே மிகப் பெரிய கட்டிடம், சிலை, விமானம், பாலம், அரண்மனை, பேருந்து போன்றவை அடங்கும். ஆகவே இப்போது அந்த சாதனைகளுள் ஒருசிலவற்றை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம்.



உலகின் உயரமான கட்டிடம் 

துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா என்னும் கட்டிடம் தான் உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடம் ஆகும். 163 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடம் 828 மீட்டர் உயரமுள்ளது.


மிகப்பெரிய விமானம் 

உலகிலேயே மிகவும் பெரிய விமானிகள் ஏற்றிச் செல்லும் விமானம் என்றால் அது ஏர்பஸ் ஏ380 தான். இந்த விமானத்தில் ஒரே சமயம் 555 பயணிகள் பயணிக்கலாம்.

மிகப்பெரிய பயணிகள்-கப்பல் 

ஓயாசிஸ் கப்பல் தான் உலகிலேயே மிகப்பெரிய பயணிகள் கப்பல் ஆகும். இந்த கப்பலில் ஒரே சமயத்தில் 6,300 பேர் பயணம் செய்ய முடியும். இந்த கப்பலின் நீளம் 360 மீட்டரும், 16 அடுக்கு மாடிகளையும், 2700 அறைகளையும் கொண்டது.


மிகவும் நீளமான பாலம் 

சீனாவில் உள்ள டொன்கி பாலம் 32.5 கி.மீ நீளமுடையது. இது கடலுக்கு மேலே கட்டப்பட்ட உலகின் அதி நீளமான பாலம் ஆகும்.

Read more at: http://tamil.boldsky.com/insync/2013/9-biggest-world-records-002715.html#slide78069

மிகப்பெரிய ஹோட்டல் 

லாஸ் வேகாஸில் உள்ள எம்.ஜி.எம் கிராண்ட் ஹோட்டல் தான் உலகிலேயே மிகவும் பெரிய ஹோட்டல். இந்த ஹோட்டலில் 6,276 அறைகள் உள்ளன.


மிகப்பெரிய அரண்மனை 

உலகின் மிகப்பெரிய அரண்மனை ரோமானியா நாட்டில் உள்ளது. இந்த அரண்மனையில் 500-க்கும் மேற்பட்ட படுக்கை அறைகளும், 55 சமையலறைகளும் மற்றும் 120 ஹாலும் உள்ளன.


 மிகப்பெரிய பேருந்து 

உலகிலேயே நியோப்ளான் ஜம்போ-க்ரூசியர் (Neoplan Jumbo - cruiser)என்னும் பேருந்து தான் மிகவும் பெரியது. இது ஒரு 2-இன்-1 பஸ். டபுள் டக் பஸ். இந்த பேருந்தில் சுமார் 170 பயணிகள் பயணிக்க முடியும்.


மிகப்பெரிய சிலை
பிரேசில் நாட்டில் உள்ள இயேசு கிறிஸ்துவ சிலை (Christ the Redeemer) தான், உலகிலேயே மிகவும் பெரியது.


மிகவும் அகலமான பாலம் 

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ஹார்பர் பாலம் தான், உலகிலேயே மிகவும் அகலமான பாலம்.

முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க...

முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க...



இந்த உலகில் காதல் செய்தவர்கள் அனைவருமே சந்தோஷமாக வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருப்பதில்லை. பெரும்பாலான காதல் தோல்வியில் தான் முடிகிறது. அவ்வாறு காதல் தோல்வி அடைவதற்கு முதல் காரணம் சரியான புரிதல் இல்லாததும், நம்பிக்கையின்மையும் தான். இதனால் காதல் செய்து பிரிந்த இருவரும் நினைப்பது மீண்டும் சந்திக்கக்கூடாது என்பது தான். ஆனால் இந்த உலகில் அவ்வாறு நினைப்பது எல்லாம் நடக்கிறதா என்ன? இல்லை அல்லவா.

ஏனெனில் யாரைப் பார்க்கக்கூடாது என்று நினைக்கிறோமோ, அவர்களை சூழ்நிலையானது சந்திக்க வைத்துவிடும். அதுவும் எதிர்பார்க்காத வகையில் நண்பர்களின் பிறந்தநாள் விழா, சினிமா, ஹோட்டல், பெரிய மால், நண்பர்களின் திருமணம் போன்ற இடங்களில் சந்திக்க நேரிடும். அவ்வாறு சந்திக்கும் வேளையில், பதட்டப்படாமலும், உணர்ச்சிவசப்படாமலும் இருப்பதற்கு ஒருசில டிப்ஸ்களை அனுபவசாலிகள் சொல்கின்றனர். இதற்கெல்லாம் டிப்ஸ் எதற்கு என்று கேட்கலாம். ஆனால் ஒரு உறவு நீண்ட நாட்கள் பிரிகிறது என்றால், அது நிச்சயம் இருவருக்கும் இடையில் போதிய புரிந்து கொள்ளுதலும், நம்பிக்கையும் இல்லாததே ஆகும்.


அந்த நிலைமையில் மீண்டும் இருவரும் சேர்ந்தால், பிற்காலத்தில் நிச்சயம் சொல்லிக் காண்பிக்க வேண்டி வரும். எனவே அத்தகையவற்றை தவிர்க்கவே சில டிப்ஸ்களை கூறுகின்றனர். வேண்டுமென்பவர்கள் அது என்னவென்று படித்து தெரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்.

* காதல் தோல்வி அடைந்த நிறைய பேர் எதிர்ப்பாராத வகையில் சந்திப்பர். அவ்வாறு சந்திக்கும் போது, பதட்டப்படாமல், அமைதியாக, மனதை ரிலாக்ஸ் செய்வதற்கு கண்களை மூடிக் கொண்டு, பெருமூச்சு விட்டு மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் அவர்களைப் பார்த்ததும் ஏற்படும் இரத்த அழுத்தம், டென்சன் போன்றவை தடுக்கப்படும்.

* பொதுவாக முன்னால் காதலரை சந்தித்ததும், முதலில் மனதில் எதிர்மறை எண்ணங்கள் தான் தோன்றும். உதாரணமாக, எங்கு அவன்/அவள் அவர்களது புதிய காதலன்/காதலியை அறிமுகம் செய்து வைப்பாரோ அல்லது திருமணம் நடக்கப் போகும் தேதியை சொல்வாரோ போன்றவை. பிரிந்த பின்னர் அவர்கள் எது சொன்னால் என்ன? அப்போது அதனைப் பற்றியெல்லாம் மனதில் நினைக்காமல், எது சொன்னாலும் அதை சந்தோஷத்துடன் ஏற்பது போல் நடக்க வேண்டும்.

* உறவு முறிந்த பின்னர் எதற்கு தேவையில்லாமல் பேச்சை வளர்க்க வேண்டும். எனவே எங்கு பார்த்தாலும், உடனே சென்று பேசுவதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை அவர்கள் வந்து பேசினால், பேசலாம். அதுவும் அளவாக பேசிவிட்டு விலகுவது நல்லது.

* எப்போதும் அவர்களை சந்திக்கும் தருவாயில், அவர்கள் முன்பு நடிக்காமல், நீங்களாக இருப்பது மிகவும் சிறந்தது. அதைவிட்டு நடித்தால், பின் அவர்கள் உங்களுக்கு அவர்களுடன் மீண்டும் சேர வேண்டிய ஆசை உள்ளது என்பதை புரிந்து கொண்டு, மீண்டும் வந்து பேசுவார்கள். எனவே போலியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம்.

* சந்தித்து பேச பிடிக்கவில்லை என்றால், அப்போது அவர்கள் என்ன கேட்டாலும், சுருக்கமாக விடையளித்து சென்றால், உங்களுக்கு பேச பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து, அவர்களே விலகி சென்றுவிடுவர்.

ஆகவே இவ்வாறு முன்னால் காதலரை சந்திக்கும் தருவாயில் வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரிகிறதோ, அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பிரான்ஸ்-ஜெர்மனியில் சாப்ட்வேர் நிறுவனங்களை வாங்க திட்டம்

பிரான்ஸ்-ஜெர்மனியில் சாப்ட்வேர் நிறுவனங்களை வாங்க இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ், எச்சிஎல் திட்டம்



பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் சிறிய நிறுவனங்களை வாங்க இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ், எச்சிஎல் ஆகியவை பேச்சு நடத்தி வருகின்றன.

ஐரோப்பாவில் இங்கிலாந்தில் மட்டுமே இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். பிரான்ஸ், ஜெர்மனியில் பெரிய அளவில் கிளையன்டுகள் இல்லை.

இந் நிலையில் இந்த நாடுகள் மீது குறி வைத்துள்ள இந்தியாவின் மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனங்கள் முதல் கட்டமாக அந்த நாடுகளில் உள்ள சிறிய ஐடி நிறுவனங்களை விலைக்கு வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இதன்மூலம் பிரான்ஸ், ஜெர்மனியில் கால் ஊன்ற திட்டமிட்டுள்ளன.

இந்த நாடுகளையும் சேர்ந்த 3 நிறுவனங்களை இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் விலைபேசி வருகின்றன. இவற்றின் விலை ரூ. 300 கோடியில் இருந்து ரூ. 500 கோடி வரை இருக்கும் என்று தெரிகிறது.

ஐரோப்பாவின் ஒட்டுமொத்த சாப்ட்வேர் சந்தையில் பாதி பிரான்சிலும் ஜெர்மனியிலும் தான் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் சந்தை மதிப்பு ரூ. 10 லட்சம் கோடியாகும்.

இப்போது இந்த நாடுகளில் ஜெர்மனியைச் சேர்ந்த டி-சிஸ்டம்ஸ், பிரான்சின் கேப்ஜெமினி, அடோஸ், பின்லாந்தின் டியேடா ஒயிஜ் (Tieto Oyj) ஆகிய சாப்ட்வேர் நிறுவனங்களும், ஐபிஎம், எச்பி, அக்சென்சர் போன்ற அமெரிக்க நிறுவனங்களும் தான் பெரும்பாலான ஆர்டர்களைப் பெற்று வருகின்றன.

இந்த சந்தையைத் தான் இப்போது இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ், எச்சிஎல் ஆகிய இந்திய நிறுவனங்கள் குறி வைத்து களமிறங்கியுள்ளன. ஜெர்மன், பிரான்ஸ் நிறுவனங்களை வாங்குவதால் அந்த மொழிகள் தெரிந்த ஊழியர்கள் கிடைப்பதோடு, கிளையன்டுகளைப் பிடிப்பதும் எளிது என இந்திய நிறுவனங்கள் கருதுகின்றன.

சமீபத்தில் மும்பைச் சேர்ந்த ஜியோமெட்ரிக் சாப்ட்வேர் நிறுவனம் ஜெர்மனியின் 3கேப் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை 15 மில்லியன் டாலருக்கு வாங்கியது. கடந்த மாதம் கேப்ஜெமினி நிறுவனம் ஜெர்மனியின் சி1 குரூப்பைச் சேர்ந்த 6 சாப்ட்வேர், பிபிஓ, கால்சென்டர் நிறுவனங்களை ஒட்டுமொத்தமாக வாங்கியது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/20/india-it-s-european-links-infosys-wipro-tcs-hcl-acquisition-170129.html

Tuesday, February 19, 2013

மூன்று வயது குழந்தையின் அபார சாதனை...

மூன்று வயது குழந்தையின் அபார சாதனை... இயக்குநர் பிரபு சாலமன் பாராட்டு!



ஒரே நிமிடத்தில் 83 அறிவியல் கண்டுபிடிப்பாளர் பெயரைச் சொல்லியும், 3.20 நிமிடங்களில் உலக வரைபடப் புதிருக்கு விடைகண்டும், புதிய சாதனை படைத்துள்ளான் 3 வயது சிறுவன்.

சென்னை கேகே நகரைச் சேர்ந்த கல்யாண் குமார் - லீலா வந்தினி தம்பதியின் மகன் கேஎல் தீரஜ். வயது 3 ஆண்டுகள் 7 மாதம்தான் ஆகிறது. ஆனால் அபார நினைவாற்றல்.

அந்த நினைவாற்றலை சாதனையாக்கும் முயற்சியில் இறங்கினர் பெற்றோர். இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸ் அமைப்பு தீரஜ்ஜின் நினைவாற்றலை பரிசோதிக்கும் விதத்தில், மேடை அமைத்துக் கொடுத்தது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு சாதனைகளை நிகழ்த்தினான் தீரஜ். ஒரே நிமிடத்தில் 83 அறிவியல் கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களை ஒப்பித்து முதல் சாதனையை நிகழ்த்தினார்.

அடுத்து 3 நிமிடங்கள் 20 நொடியில் உலக வரைபட புதிருக்கு விடை கண்டுபிடித்தான். இதற்கு முன் இந்தப் புதிரை 4.39 நிமிடங்களில் அவிழ்த்ததே சாதனையாக இருந்தது. இதன் மூலம் உலக வரைபடப் புதிருக்கு மிக மிகக் குறைந்த நேரத்தில் விடைகண்ட சாதனை தீரஜ்ஜுக்கு கிடைத்துள்ளது.

ஏற்கெனவே கடந்த ஆண்டு, 2.9 வயதிலிருந்தபோது, மிகக் குறைந்த (2.19 நிமிடங்களில்) நேரத்தில் 215 நாடுகளின் கொடிகளை ஒப்பித்து சாதனை படைத்திருக்கிறான் சிறுவன் தீரஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவன் தீரஜ் சாதனையை இயக்குநர் பிரபு சாலமன், நடிகர் ராஜன், ஓய்வு பெற்ற நீதிபதி மோகன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.



ஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்!!!


ஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்!!!


இன்றைய காலத்தில் நவீன தொழில்நுட்பங்கள் நிறைய வந்துள்ளன. அத்தகைய தொழில்நுட்பங்களை கையாள்வதற்கு பெரியோர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ சிறிய குழந்தைகளுக்கு நிறைய தெரியும். இவை அனைத்திற்கு அறிவுத்திறன் தான் காரணம். தற்போதுள்ள குழந்தைகள் அனைவரும் மிகுந்த புத்திக்கூர்மையுடன் இருக்கின்றனர். அவர்களிடம் எந்த ஒரு விஷயத்தை சொன்னாலும், அதை அவர்கள் மறக்காமல் ஞாபகத்துடன் வைத்திருப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு கொடுக்கும் ஒவ்வொரு உணவையும் பெற்றோர்கள் பார்த்து ஆரோக்கியமானதாக கொடுக்கின்றனர். மேலும் குழந்தைகளுக்கு எந்த ஒரு மனஅழுத்தமும் இல்லை.

ஆனால் பெரியோர்களுக்கு வேலைப்பளுவின் காரணமாக மனதில் அழுத்தம் அதிகரித்து, அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எந்த ஒரு முக்கியமான வேலையை செய்ய நினைத்தாலும், அதனை உடனே மறந்துவிடுவர். இவை அனைத்திற்கும் சரியான உணவுகளை சாப்பிடாததும் ஒரு காரணம். எனவே ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளையை சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை சரியாக சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தியை அதிகரிக்கலாம்.

அதிலும் அத்தகைய உணவுகளை தினமும் சாப்பிடுவது போர் தான். இருப்பினும் அவற்றை சாப்பிட்டால், நிச்சயம் மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதோடு, உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். சரி. இப்போது அத்தகைய ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளைப் பார்ப்போமா!!!










மீன் 

மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இந்த ஃபேட்டி ஆசிட் இதயத்திற்கு மட்டுமின்றி, மூளையின் செயல்பாட்டிற்கும் சிறந்தது. ஏனெனில் மூளையின் செயல்பாட்டிற்கு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மிகவும் முக்கியமானது. மேலும இது மூளைச் செல்களின் இயக்கத்தை அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக ஹெர்ரிங், சால்மன், சூரை (Tuna), கானாங்கெளுத்தி, பொத்தல், நெத்தலி, மற்றும் மத்தி போன்றவை மிகவும் சிறந்தது.


பெர்ரிஸ் 

பெர்ரிப் பழங்களில் குவர்செடின் என்னும் மூளைச் செல்களில் இயக்கத்தை அதிகரிக்கும் பொருள் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஆந்தோசையனின் என்னும் ஃபோட்டோ கெமிக்கல், அல்சீமியர் என்னும் ஞாபக மறதி நோயை தடுக்கும். அதிலும் சில பெர்ரிப் பழங்களான ராஸ்ப்பெர்ரி, ப்ளூபெர்ரி போன்றவை மிகவும் சிறந்தது.


க்ரீன் டீ 

க்ரீன் டீயில் மூளைச் செல்கள் பாதிப்படையாமல் தடுக்கும், ஃபாலிபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை குடிப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சோர்வான மனநிலை மாறும்.


பச்சை இலைக் காய்கறிகள் 

பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அவர்கள் சொன்னது பொய்யல்ல உண்மை தான். அதிலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.


பால் பொருட்கள் 

பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே இந்த பொருட்களை சாப்பிட்டால், மூளைச் செல்கள் நன்கு செயல்படும். முக்கியமாக தயிரில் அமினோ ஆசிட் தைரோசின் என்னும் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் உள்ளது.


தேன் 

தேனில் அளவற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அவற்றில் ஞாபக சக்தியை அதிகரிப்பதும் ஒன்று. எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.


நட்ஸ் 

நட்ஸில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ மற்றும் பி6 இருக்கிறது. எனவே தினமும் ஒரு கை பாதாம், பிஸ்தா போன்றவற்றை சாப்பிடுவது, ஞாபக சக்திக்கு மட்டுமின்றி, முழு உடலுக்கும் நல்லது


ரோஸ்மேரி 

ரோஸ்மேரி சாலட் மற்றும் டாப்பிங்கில் அலங்கரிப்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை. அவை மூளையின் இயக்கத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த ரோஸ்மேரியில் மூளையின் வளர்ச்சியை அதிகரிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன.


ஒயின் 

நிறைய பேர் ஆல்கஹால் பருவதற்கு தடை சொல்வார்கள். ஆனால் ஆல்கஹால் குடிப்பதால், மூளையின் செயல்பாடு அதிகரிக்கும். அதிலும் ரெட் ஒயின் தான் மிகவும் சிறந்தது. ஆகவே இதனை குடிப்பதால், மூளைக்கு இரத்த ஓட்டம் சீராக இருந்து, அல்சீமியர் நோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் ரெட் ஒயின் மூளைக்கு மட்டுமின்றி, இதயத்திற்கும் நல்லது.


தண்ணீர் 

மூளையில் நான்கில் மூன்று பங்கு தண்ணீர் தான் உள்ளது. எனவே தண்ணீர் குறைவானால் மூளையில் செயல்பாடும் குறைந்து, மூளையில் வறட்சி ஏற்பட்டு ஞாபக சக்தியும் குறைந்துவிடும். எனவே அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால், மூளையில் வறட்சி ஏற்படாமல், மூளைச் செல்கள் சுறுசுறுப்போடு செயல்படும்.

6 மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை இவ்வளவு குறைந்தது ஏன்?

6 மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை இவ்வளவு குறைந்தது ஏன்?



கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு முதன்முறையாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு முழுவதுமே தொடர்ந்து விலை உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இப்போது திடீரென்று அதே இடத்தில் நிற்கிறது.

சர்வதேச சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஒரு அவுன்ஸ் (ஒரு அவுன்ஸ் என்பது 28.34 கிராம்) தங்கத்தின் விலை ரூ. 86,400 ஆக இருந்தது.

கடந்த 2011ம் ஆண்டு இதே அளவு தங்கத்தின் விலை ரூ. 1,03,734 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் குறைய ஆரம்பித்த தங்கத்தின் விலை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து இப்போது கிராம் ரூ. 2,811க்கு விற்பனையாகி வருகிறது.

இந்தியாவும் சீனாவும் தான் மிக அதிக அளவிலான தங்கத்தை இறக்குமதி செய்து வருகின்றன. ஆனால், விலை ஓரளவுக்கு மேல் மிகவும் உயர்ந்துவிட்டதால், அதை வாங்குவதையும் இந்தியாவும் சீனாவும் குறைத்துவிட்டன.

மேலும் தங்கத்தில் போடப்படும் முதலீடுகளால் நாட்டுக்கு எந்த லாபமும் இல்லை என்பதாலும், மக்களின் இந்த முதலீடுகளை வங்கிகளின் சேமிப்பிலும், பங்குகளிலும், பத்திரங்களிலும் போடச் செய்வதற்காகவும் மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்திவிட்டது. இதனாலும் விலை மிகக் கடுமையாக உயர்ந்தது.

வங்கிகள், பங்குகள், பத்திரங்களில் உள்ள பணத்தை மத்திய அரசு தனது புதிய கட்டமைப்புப் பணிகளுக்கு பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த வரி அதிகரிப்பால் தங்கத்தை இறக்குமதி செய்வதை இந்திய இறக்குமதியாளர்கள் 12 சதவீதம் அளவுக்கு கடந்த ஆண்டு குறைத்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

அதே போல சீன பொருளாதாரமும் முதல் முறையாக மூச்சு முட்டி வருவதால் அங்கும் தங்கம் இறக்குமதி குறைந்துவிட்டது. உலகின் மிகப் பெரிய தங்க சந்தைகளான இந்தியாவும் சீனாவிலும் டிமாண்ட் குறைந்துவிட்டதையடுத்து, தங்கத்தின் விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. இது தான் தங்கத்தின் விலை குறைந்ததற்கு முக்கியக் காரணமாகும்.

உலகின் முன்னணி தங்கச் சுரங்க உரிமையாளான பாரிக் கோல்ட் கார்ப்பரேசன் தனது தங்கம் வெட்டி எடுக்கும் பணியை 10 சதவீதம் அளவுக்குக் குறைத்தே விட்டதும் குறிப்பிடத்தக்கது.

பதவி விலகும் போப் பெனடிக்டுக்கு மாதாமாதம் ரூ.1.81 லட்சம் பென்ஷன்

பதவி விலகும் போப் பெனடிக்டுக்கு மாதாமாதம் ரூ.1.81 லட்சம் பென்ஷன்



உடல் நலக்குறைவு காரணமாக இந்த மாத இறுதியில் பதவி விலகும் போப் 16ம் பெனடிக்டுக்கு மாதாமாதம் ரூ. 181,236 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

உடல் நலக்குறைவு காரணமாக 16ம் பெனடிக்ட் போப் ஆண்டவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதன்படி அவர் வரும் 28ம் தேதி பதவி விலகுகிறார். வரும் மார்ச் மாத இறுதிக்குள் புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

இந்நிலையில் பதவி விலகிய பிறகு 16ம் பெனடிக்டுக்கு மாதாமாதம் ரூ.181,236 ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் சில இத்தாலிய இணையதளங்களில் பெனடிக்ட் குறித்து பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது பெனடிக்டின் தேவைகளுக்கு ஆட்களை வாடிகன் நிர்வாகமே அளிக்கும் நிலையில் அவர் இவ்வளவு பணத்தை எப்படி செலவு செய்யப் போகிறார் என்று இணையதளங்களில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கிடையே வாடிகனில் உள்ள பிரச்சனைகள், தீர்க்கப்படாத ஊழல்கள் குறித்து புதிய போப் ஆண்டவர் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தியானம் எப்படி செய்ய வேண்டும்?

தியானம் எப்படி செய்ய வேண்டும்?



1. உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள் குலதெய்வமாகவோ, உங்களுக்கு பிடித்த வேறு தெய்வமாகவோ இருக்கலாம்.

2. தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக காலை 5 மணி, மாலை 7 மணி. முடிந்தவரை இதே நேரத்தில் தினமும் தியானத்தில் அமர வேண்டும்.

3. வீட்டின் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது பூஜை அறையாகவோ, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். பூஜை அறை இல்லையென்றால், இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.

4. அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து, மற்றும் முதுகெழும்பு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்.

5. சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இது உங்கள் உடலையும், உள்ளத்தையும் தளர்த்தி அமைதிப்படுத்தும்.

6. இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லவும். பன்னிரண்டு இதழ்கள் கொண்ட சிவப்புத் தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அங்கு அமர்ந்திருப்பதாக எண்ணவும்.

7. இப்போது இஷ்ட தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும். நல்ல உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், பற்றின்மை ஆகியவற்றுக்காக பிரார்த்திக்கவும்.

8. ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்தவும்.

9. பின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜபம் செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் ராமராக இருந்தால் 'ராம,ராம' என்று தொடர்ந்து ஜபம் செய்யவும். குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும்பினால் அது 108 ன் மடங்காக இருக்கட்டும்.

10. இப்போது மானசீக பூஜை செய்யலாம். சந்தனம், பூ, ஊதுபத்தி, தீபம், நைவேத்தியம் ஆகிய ஐந்து பூஜை பொருட்களால் செய்யப்படுகின்ற பூஜையாக அது இருக்கட்டும்.

11. முடிவாக தியானத்தின் பலன்களை இஷ்ட தெய்வத்தின் திருவடிகளில் சமர்ப்பிக்கவும்.

தியானத்தின் பலன்
மனக்கட்டுப்பாட்டையும், மன ஒருமைப்பாட்டையும், மன அமைதியையும் பெற தியானமும், ஜபமும் பெற உதவுகின்றன. பொதுவாக இவை இரண்டும் சேர்ந்தே செல்கின்றன. இருந்தாலும் தியானம் ஆழ்ந்து செல்லும் போது ஜபம் தானாகவே நின்று விடும். மன ஒருமைப்பாடு இல்லாமல் இருந்தால் ஜபம் அதிக எண்ணிக்கையில் செய்யப்படும் போது அது அமைதியையும், மன ஒருமைப்பாட்டையும் பெற உதவும் என்று அன்னை ஸ்ரீசாரதா தேவி கூறியுள்ளார்.

பணம் மட்டுமே குறிக்கோள் தங்கும் விடுதிகளாக மாறி வரும் வீடுகள்

பணம் மட்டுமே குறிக்கோள் தங்கும் விடுதிகளாக மாறி வரும் வீடுகள்





சென்னையில் வந்திறங்குபவர்களுக்கு இரு கைகளை நீட்டி அடைக்கலம் அளிப்பவை தங்கும் விடுதிகள். வசதி படைத்தவர்கள், நகரின் முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் அனைத்து வசதிகளும் உள்ள லாட்ஜ்களில் தங்கி கொள்கின்றனர். இதற்கு கட்டணமாக தினமும் ஆயிரக்கணக்கில் வசூலிக்கப்படுகிறது.
நட்சத்திர ஓட்டல்களில் அறை வாடகை நாளொன்றுக்கு ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரை (வரிகள் உள்பட) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓரளவு வசதியுள்ள ஓட்டல்களிலும், அனுமதி பெற்ற லாட்ஜ்களிலும் தங்க ஒரு நாளைக்கு ஆயிரம் முதல் ரூ.2,000 வரை ரூம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் லாட்ஜ்களையும், மேன்ஷன்களையும் தேடி செல்கின்றனர். கோழி கூடு போல அமைந்துள்ள இந்த லாட்ஜ்களில் எந்த வசதியும் இருப்பதில்லை. இருப்பினும், குறைந்த வாடகை என்பதால் ஏராளமானோர் தங்குகின்றனர். இதன் மூலம் நல்ல வருவாய் கிடைப்பதால் சென்னையில் முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளை தங்கும் விடுதிகளாக மாற்றி வருகின்றனர்.

ஆயிரம்விளக்கு, திருவல்லிக்கேணி, பாரிமுனை, சவுகார்பேட்டை, கொண்டித்தோப்பு, தி.நகர், பூக்கடை உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள் தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. ஆயிரம் விளக்கு பகுதியில் போலீஸ் நிலையம் அருகில் உள்ள குடியிருப்புகளில் பல வீடுகள், அனுமதியின்றி தங்கும் விடுதிகளாக செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த பகுதியில் உள்ள வீட்டில் செயல்பட்ட தங்கும் விடுதி சீல் வைத்த பிறகும் பின்பக்கம் வழியாக லாட்ஜ் நடத்தப்படுகிறது. இது தொடர்பான புகார் சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் நடவடிக்கை எடுக்க போலீஸ் துணை கமிஷனருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அடிப்படை வசதிகள் பெயரளவிற்கு உள்ள விடுதிகளில் நாளொன்றுக்கு ரூ.500 முதல் ஆயிரம் வரை ரூம் வாடகை வசூலிக்கப்படுகிறது. இங்கு அறை எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி கிடையாது. அங்கு சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவுவதால் தொற்று நோய் ஏற்படும் நிலை உள்ளது. சென்னை நகரில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன.

இதில் 500க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் அனுமதியில்லாமல் செயல்படுகின்றன. இதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டிய காவல்துறையும், தீயணைப்பு துறையும் எதையும் கண்டுக்கொள்வதில்லை. சென்னையில் அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகளை சீல் வைக்கும் அதிகாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் தயக்கம் காட்டுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி வட்டாரங்கள் கூறுகையில், ‘மாநகராட்சி, காவல்துறை, தீயணைப்பு துறை ஆகியவற்றின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே அனுமதியின்றி செயல்படும் தங்கும் விடுதிகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். வீடுகள் என வரி செலுத்தி விட்டு தங்கும் விடுதிகளை நடத்துவதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. குடிநீரை மோட்டார் மூலம் அதிகளவில் எடுப்பதால் மற்ற குடியிருப்புகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதோடு சுகாதார சீர்கேட்டிற்கும் வழிவகை ஏற்படுத்துகின்றனர்Õ என்றனர்.

பாதுகாப்பு கேள்விக்குறி

அனுமதியில்லாமல் மற்றும் விதிமுறை மீறி செயல்படும் தங்கும் விடுதிகளில் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது. தீயணைப்பு கருவிகள் கூட பொருத்தப்படுவதில்லை. இதனால் தீ விபத்து ஏற்பட்டால் கூட அதிலிருந்து தப்பிக்க அவசர வழிகள் இருப்பதில்லை. குறுகிய சந்தில் தங்கும் விடுதிகள் செயல்படுவதால் மீட்பு பணியிலும் எளிதில் ஈடுபட முடிவதில்லை.

‘வீட்டு’ விடுதிகளால் வரி ஏய்ப்பு

விடுதிகளுக்கு சில விதிமுறைகள் உள்ளது. தங்க வருபவர்களை அடையாளம் காணும் வகையில் ஏதாவது அடையாள அட்டை நகல் பெற வேண்டும். இதில் சந்தேகம் ஏற்பட்டால் தங்க வருபவர்களுக்கு யாராவது முன்மொழிய வேண்டும். விடுதிகளில் தங்குபவர்களின் பதிவேடு கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தங்குபவர்களுக்கு தேவையான சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விடுதி நடத்துபவர்கள் செய்து கொடுக்க வேண்டும்.

ஆனால் இத்தகைய விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுவதில்லை. அறைகளை தவிர மற்ற பகுதிகளில் கேமரா பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். மேலும், தங்கும் விடுதிகளுக்கான கட்டிடங்களுக்கு அனுமதி தனியாக வழங்கப்படுகிறது. இதற்கு வரி அதிகம் என்பதால் மாநகராட்சியை ஏமாற்றி வீடுகளில் பல தங்கும் விடுதிகள் நடத்தப்படுகின்றன.

பாலியல் தொழிலுக்கு புகலிடம்

லாட்ஜ் தொல்லை என்பதால், அனுமதியின்றி தங்கும் விடுதிகளாக மாறியுள்ள குடியிருப்புகளை பாலியல் தொழிலாளர்கள் தேர்வு செய்கின்றனர். இதன்காரணமாக இந்த விடுதிகளில் குடும்பத்தோடு வருபவர்கள் தங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

லேடீஸ் ஹாஸ்டல்ஸ்

சென்னையில் மேன்ஷன், பேயிங் கெஸ்ட் ரூம்கள், லேடீஸ் ஹாஸ்டல்ஸ் என்ற பெயரில் விடுதிகள் செயல்படுகின்றன. இதில் லேடீஸ் ஹாஸ்டல்களை நடத்துபவர்கள் பாதுகாப்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். இங்கு ரயில் பெட்டிகளில் இருப்பதை போல லோயர், மிடில், அப்பர் பெர்த் போன்று படுக்கை வசதிகள் உள்ளன. இதனால் இரண்டு அல்லது மூன்று பேர் தங்க வேண்டிய 10க்கு 10 அளவு அறையில் 5க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு தரப்படும் உணவும் தரமானதாக இல்லை என கூறப்படுகிறது.

IT வேலை ? அடுத்த வேலை?

IT வேலை ? அடுத்த வேலை?


'IT வேலை' பெரும்பாலானோர் விரும்பும் வேலை. சிலர் தங்களது வாழ்க்கையே IT வேலையை நம்பியே இருக்கிறார்கள். ஒருவேளை IT மீண்டும் வலுவிழந்து, வேலைவைப்புகள் கானாமல்போனால்? நண்பா என்செய்வாய்?

சில வருடங்களுக்கு முன், IT துறையில் 'ரெசெசன்' என்ற நிலைவந்து பலரது வாழ்க்கையை நிலைகுலைய வைத்தது நினைவிருக்கிறதா? அந்த நிலை மீண்டும்வந்தால்?

 எனவே ஒரே வேலையை நம்பியிருக்காமல், பல வேலைகளையும், வேலையில் அப்டேட்டுடனும் இருக்கவேண்டியது அவசியமாகிறது.

IT துறையில் உள்ளவர்களின் வேலை பறிக்கபட்டால், வேறு என்னென்ன வேலைகளை செய்யலாம் என்ற ஒரு பொதுவான கருத்தை முன்மொழிகிறோம். நண்பர்களுடன் பகிரவும்.


சாப்ட்வேர் டெவெலப்பர்:

இந்த வேலையை பெரும்பாலானோர் செய்கிறார்கள். இருந்தாலும், இதன் அடிப்படையான ஜாவா, .நெட், மொபைல் அப்ளிகேசன், ஷேர் பாயிண்ட், வெப் அப்ளிகேசன் என பல்வேறு துறைகள் இதில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏதாவதொன்றை குறிப்பிட்டு தேர்ந்தெடுத்து, அதில் சிறப்பாக செயல்பட்டாலே போதும்.

IT அனலிஸ்ட்:

சிலர் இம்மாதிரியான வேலைவாய்ப்பு இருப்பதையே மறந்திருப்பார்கள். அல்லது தெரியாமலே இருக்கும். இதும் ஒரு ம்=நல்ல வேலைவாய்ப்புதான். சம்பளங்களும் நன்றாகவே இருக்கும்.

இந்த வேலையைப்பொருத்தவரை பெரிய தரவுகளுடன் நாள்தோறும் போராடவேண்டியிருக்கும். மற்றபடி அருமையான வேலை.


டெக்னிகல் சப்போர்ட்:

எப்பொழுதும் அதிகஅளவு வேலைவாய்ப்புகள் இருப்பது இந்தத்துறையில் தான். இதை உதாசீனப்படுத்தாமல் இருப்பது நலம்தரும். தக்க சமயங்களில் இம்மாதிரியான வேலைகள் கைகொடுக்கும்.


சாப்ட்வேர் குவாலிட்டி அசூரன்ஸ்:

சில நேரங்களில் இதை டெஸ்டிங் எனவும் சொல்கிறார்கள். குறைந்த அளவு வேலைவாய்ப்புகள் இருப்பினும், இதில் சற்றே அறிவுள்ளவராக இருந்தால் சம்பளங்கள் லட்சங்களில் என்பதும் வேலை பறிக்கப்பட வாய்ப்புகள் குறைவென்பதும் மறுக்க முடியாத உண்மை.