Friday, August 10, 2012

பலத்த புயல் மழையில் உலக அதிசயங்களில் ஒன்றான சீன பெருஞ்சுவர் சரிந்தது


பலத்த புயல் மழையில் உலக அதிசயங்களில் ஒன்றான சீன பெருஞ்சுவர் சரிந்தது




உலக அதிசயங்களில் ஒன்றான சீன பெருஞ்சுவரின் ஒரு பகுதி, பலத்த மழையில் சரிந்து விட்டது. சீனாவில் கடந்த மாதம் பலத்த மழை பெய்ததில், தலைநகர் பீஜிங் கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் 79 பேர் பலியாயினர். தொடர்ந்து பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அணைகளில் நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டி வழிந்தோடுகிறது. பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில், ஹெபேய் மாகாணம் வழியாக செல்லும் சீன பெருஞ்சுவர், பலத்த மழை காரணமாக சரிந்து விழுந்துள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான சீன பெருஞ்சுவரில் உள்ள கற்களை பல கிராம மக்கள் வீடு கட்ட பெயர்த்து எடுத்து சென்றனர். இதனால் ஏற்கனவே பெருஞ்சுவர் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க பெருஞ்சுவர் மழையால் சேதம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேதம் அடைந்த பகுதியில் உடனடியாக சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

செவ்வாய் கிரகத்தின் கலர் புகைப்படத்தை அனுப்பியது கியூரியாசிட்டி


 செவ்வாய் கிரகத்தின் கலர் புகைப்படத்தை அனுப்பியது கியூரியாசிட்டி


 



 


செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ள அமெரிக்காவின் கியூரியாசிட்டி விண்கலம் அக்கிரகத்தின் கலர் புகைப்படங்களை எடுத்து அனுப்பத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் நாசாவின் ஏற்பாடான கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது.

கடந்த 5ம் திகதி செவ்வாயில் தரையிறங்கிய கியூரியாசிட்டி கருப்பு- வெள்ளை புகைப்படங்களையே அனுப்பியிருந்தது.

இந்நிலையில் தற்போது அனுப்பியிருப்பது கலர் படமொன்றை அனுப்பியுள்ளது. இது குறித்து விஞ்ஞானிகள், இந்த கலர் படமும் இரண்டரை நிமிட வீடியோ படமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோவை பார்க்கும் போது செவ்வாய் கிரகத்தில் தரைதளம் மிகவும் இளகி உள்ளதாகத் தெரிகிறது என்றும் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் தடம் பதித்துள்ள கியூரியாசிட்டி விண்கலம் இன்னும் இரண்டு வருடங்கள் செவ்வாய் கிரகத்தில் தனது ஆய்வைத் தொடரும் என்று தெரிகிறது. இந்த ஆய்வின் முடிவில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது தெரிந்துவிடும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.





நீல் ஆம்ஸ்ட்ராங்குக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சை வெற்றி


நீல் ஆம்ஸ்ட்ராங்குக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சை வெற்றி



நிலவில் முதன்முதலாக கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்குக்கு இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றிய ஆம்ஸ்ட்ராங், 1969ம் ஆண்டு சந்திரனுக்கு சென்றார்.

இக்குழுவில் 3 பேர் இருந்தாலும் முதன் முதலில் ஆம்ஸ்ட்ராங்கே சந்திரனில் கால் பதித்தார்.

பின்னர் சில வருடங்களாக நாசாவில் பணியாற்றிய இவர், தற்போது ஓய்வில் உள்ளார். சமீபகாலமாக இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டிருந்த இவரது உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டு தற்போது உடல் நலம் முன்னேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங்கை அவரது மனைவி கரோல் கவனித்து வருகின்றார்.

இது குறித்து நாசா நிர்வாகி சார்லஸ் போல்டன், ஆம்ஸ்ட்ராங் அமெரிக்காவின் ஹீரோ. சிரமமான காலத்திலும் கூட மிகவும் துடிப்புடன் செயற்பட்டவர் என்று தெரிவித்தார்.


அதிநவீன முக்கோண பயணிகள் விமானங்கள்


அதிநவீன முக்கோண  பயணிகள்  விமானங்கள்


எதிர்காலத்தில் முக்கோண வடிவத்தில் பயணிகள் விமானத்தை நாசா அறிமுகம் செய்ய உள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, போயிங் நிறுவனத்துடன் இணைந்து “எக்ஸ்-48சி” என்ற மொடல் முக்கோண வடிவ விமானத்தை தயாரித்துள்ளது.

இந்த விமானம் எதிர்காலத்தில் விமான போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாகவும், இந்த விமானங்களின் மொடல்களே அடுத்த 20 ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்தும் என்றும் நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.



உளவு விமானத்தைப் போன்று உள்ள இந்த விமானத்தில் ஜன்னலோர இருக்கைகளே இருக்காது என்றும், மாறாக அதிக இருக்கைகள் மற்றும் அதிக எரிபொருள் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன் அதிக சரக்குகளையும் இதில் ஏற்றிச் செல்லவும் முடியும். முக்கோண வடிவில் இருப்பதால், வேகமாகவும் செல்ல முடியும்.



எனவே இந்த விமானம் அடுத்த 15- 20 ஆண்டுகளில் மிகச்சிறந்த பயணிகள் விமானங்களாக மாறுவதுடன், இராணுவ பயன்பாடுகளுக்காகவும் பயன்படுத்தலாம் என்றும் நாசா கூறியுள்ளது.



செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலத்தில் இலங்கை விஞ்ஞானியின் பங்களிப்பு



செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலத்தில் இலங்கை விஞ்ஞானியின் பங்களிப்பு



 



அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவால் செவ்வாய்க் கிரகத்துக்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது கியூரியாசிட்டி ரோவர் விண்கலம்.

இதன் மூலம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை அமெரிக்கா நிலை நாட்டி உள்ளது.

அமெரிக்காவின் இந்த வெற்றியில் இலங்கை விஞ்ஞானி ஒருவருக்கும் மிக காத்திரமான பங்கு உள்ளது.

நாசாவில் சிரேஷ்ட ஆய்வுகள் விஞ்ஞானியாக பணியாற்றி வருகின்றார் கலாநிதி சரத் குணபால.

ரோவர் விண்கலத்தில் ஆறு பிரதான உபகரணங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றுள் முக்கியமான ஒன்று டீ. எல். எப் என்கிற லேசர் உபகரணம்.

செவ்வாய்க் கிரகத்தில் மீதேன் வாயு காணப்படுகின்றதா? என்பதை ஆராய இவ்வுபகரணம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. செவ்வாயில் கடந்த காலங்களில் உயிரினங்கள் வாழ்ந்தனவா? என்பதை மீதேன் வாயு தொடர்பான ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்த வாய்ப்புக்கள் உள்ளன.

இந்நிலையில் இவ்வுபகரணத்தை இலங்கை விஞ்ஞானி கலாநிதி சரத் குணபால தலைமையிலான நிபுணர்கள் குழுதான் வடிவமைத்துக் கொடுத்து உள்ளது.

Thursday, August 9, 2012


அமெரிக்க துப்பாக்கி சூடு: அரைக் கம்பத்தில் தேசியக் கொடியை பறக்க விட உத்தரவு





அமெரிக்காவின் குருத்வாராவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தேசியக் கொடி வரும் 10ஆம் திகதி வரை அரைக் கம்பத்தில் பறக்கவிட உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் விஸ்கோஸ் நகரில் உள்ள சீக்கிய வழிபாட்டு தலமான, குருத்வாராவில் இனவெறியோடு நிகழ்த்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.





உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமெரிக்காவின் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது.

அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த சம்பவத்தில் உயிரிழந்த சீக்கியர்களுக்காக மட்டுமின்றி, மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற உயிர் நீத்த காவல்துறையினருக்கும் அஞ்சலி செலுத்துகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலும் அமெரிக்க கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.




Gurdwara Temple Information

இரவு நேர பணிகள் மாரடைப்புக்கு வழிவகுக்கும்: எச்சரிக்கை தகவல்


இரவு நேர பணிகள் மாரடைப்புக்கு வழிவகுக்கும்: எச்சரிக்கை தகவல் 


 

இன்றைய உலகில் பெரும்பாலும் இரவு நேரப் பணிகள் தான் அமைகின்றன.

மாலை நான்கு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பும் இளைய தலைமுறையினர். அதிகாலையிலோ, அல்லது மறுநாள் காலை 8 மணிக்கோ வீடு திரும்புகின்றனர். பின்னர் பகலில் தூக்கம். இரவில் விழிப்பு என மாறி மாறி வேலை செய்யவேண்டியிருக்கிறது.

சரியான தூக்கமின்மை, நேரத்திற்கு சாப்பிடாமல் இரவுப் பொழுதுகளில் பர்கர், பீட்ஸா என சாப்பிடுவதனால் உடலில் கொழுப்புச்சத்து அதிகமாகி நோய்களின் கூடாரமாகி விடுகிறது. இதனால் 20 வயதிலேயே மாரடைப்பு, நீரிழிவு, உடல்பருமன், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாகி விடுகின்றனர்.

இது தொடர்பாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் சரியாக தூங்காமல் இரவில் கண்விழித்து வேலை பார்ப்பவர்களில் 23 சதவிகிதம் பேர் மாரடைப்பினால் பாதிக்கப்படுகின்றனர்.

 

5 சதவிகிதம் பேருக்கு பக்கவாதம் வர வாய்ப்புள்ளது. 41 சதவிகிதம் பேருக்கு ரத்த அழுத்தம், நரம்பு தொடர்பான நோய்கள் வரக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். 2 மில்லியன் நபர்களிடம் பல்வேறு கட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது.

இப்போதைய இயந்திர வாழ்வில், சமச்சீரான உணவுகளை தவிர்த்து விட்டு, துரித உணவு, உடல் பயிற்சியின்மை காரணத்தால் சிறுவயதிலேயே இதய பாதிப்பு ஏற்படுகிறது. இவை 2 மட்டுமே முக்கிய காரணம் என்று சொல்ல முடியாது.

சரியான தூக்கமின்மை, ஓய்வு இல்லாமல் உழைப்பது, மனஉளைச்சல், நீரழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களாலும் மாரடைப்பு ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் பிரபல இதயநோய் நிபுணர்கள்.

இப்போதுள்ள ஐ.டி மற்றும் பி.பீ.ஓ நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களின் பணி நேரம் இரவில் என்பதால் தூங்காமல் முழித்து இருக்க டீ, காபி, சிகரெட் மற்றும் துரித உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இது உடலில் கொழுப்பு சத்து அதிகரித்து உடலில் தேங்குகிறது. இதனால் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

எனவே, குழந்தை பருவத்தில் இருந்தே அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை கொடுக்காமல் புரதம், விட்டமின் மற்றும் தாது உப்புக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிட கொடுக்க வேண்டும்.

உணவில் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் அரிசி சாதத்தை குறைத்து கோதுமை சார்ந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

குறிப்பாக நீரழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சரியான அளவு தூக்கம், மன அழுத்தம் இல்லாத நிம்மதியான செயல்பாடு போன்றவைகளே உடலை நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

குழந்தைகள் ஓடியாடி விளையாட்ட வேண்டும். . நாள்தோறும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் உடலில் கொழுப்பு குறைந்து தசைகள் வலுவடைந்து, ரத்த ஓட்டம் சீராகும்.

அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், மாடி ஏற படிகளை பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

விற்பனையில் புதிய சாதனைகளை படைக்கும் சாம்சங் காலக்ஸி எஸ் 3 போன்கள்


விற்பனையில் புதிய சாதனைகளை படைக்கும் சாம்சங் காலக்ஸி எஸ் 3 போன்கள்


 



மற்ற ஸ்மார்ட் போன்களை காட்டிலும் சாம்சங் காலக்ஸி எஸ் 3 போன்கள் விற்பனையில் சாதனை படைத்து வருகின்றன.

சாம்சங் நிறுவனத்திற்கு எதிரான ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கு, ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த புதிய ஐபோன் வர இருப்பது குறித்த தகவல் என எத்தனை இடைஞ்சல்கள் இருந்தாலும், சாம்சங் காலக்ஸி எஸ் 3 தன் விற்பனையில் புதிய இலக்குகளை எட்டியுள்ளது.

நாளொன்றுக்கு ஏறத்தாழ ஒரு லட்சத்து 90 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் காலக்ஸி எஸ் 3 விற்பனையாகிறது.

மே மாதம் 29ஆம் திகதி அறிமுகமாகி, பன்னாட்டளவில் இரண்டே மாதங்களில், ஒரு கோடி என்ற இலக்கினை எளிதாக அடைந்து தொடர்ந்து இதன் விற்பனை உயர்ந்து வருகிறது.

அடுத்த ஆப்பிள் ஐ போன் வர குறைந்தது ஒரு மாதம் ஆகும் என்பதால், இதன் விற்பனை பல புதிய இலக்குகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எண்ணிக்கையை அடைய சாம்சங் கேலக்ஸி எஸ் 2 ஸ்மார்ட் போனுக்கு ஐந்து மாதங்கள் ஆயின என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய ராக்கெட் நடுவானில் தோல்வி

ரஷ்ய ராக்கெட் நடுவானில் தோல்வி





ரஷ்யா நேற்று விண்ணில் செலுத்திய புரோட்டான் எம் ராக்கெட் புவி வட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த இயலாமல் நடுவானில் தோல்வியடைந்தது.
ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கிய புரோட்டான்-எம் ராக்கெட், கஜகஸ்தானில் உள்ள பைகானூர் ஏவுதளத்தில் இருந்து நேற்று அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்டது.

அதில் இந்தோனேசியாவின் டெல்காம்-3 செயற்கைக்கோளும், ரஷ்யாவின் எக்ஸ்பிரஸ் எம்.டி.-2 செயற்கைக்கோளும் வைக்கப்பட்டிருந்தன.




எனினும் ராக்கெட்டில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக அதனால் இந்த 2 செயற்கைக் கோள்களையும் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்த இயலவில்லை.

இந்த ராக்கெட் பயணம் தோல்வியில் முடிந்ததாகவும், அதில் வைத்து அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் காணாமல் போனதாகக் கருதப்படுவதாகவும் ரஷ்ய விண்வெளி ஆய்வு அமைப்பான ராஸ்காஸ்மாஸ் தெரிவித்துள்ளது.



Fore More Information



அதிக எடையுடன் அவதியுறும் கோவில் யானைகள்


அதிக எடையுடன் அவதியுறும் கோவில் யானைகள்


 


தமிழகத்தின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கள்ளழகர் கோவில் உட்பட பல கோவில்களில் இருக்கும் யானைகளின் உடல் எடை அளவுக்கு கூடுதலாக உள்ளமை பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது.

இதன் காரணமாக அந்த இரு கோவிலகளில் இருக்கும் யானைகளுக்கு கூடுதல் உடற்பயிற்சி மற்றும் உணவுக் காட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்திலுள்ள கோவில் யானைகளுக்காக அரசால் முதுமலையில் நடத்தப்படும் புத்துணர்ச்சி மற்றும் மருத்துவ முகாம்களிலும் இந்த இரு கோவில்களின் யானைகளும் பங்குபெற்றன.

புத்துணர்வு முகாமிலிருந்து வந்த யானைகள் கூடுதலாக உணவை உட்கொண்ட நிலையில் அவற்றின் எடை கூடியதை கால்நடை மருத்துவர்கள் கண்டறிந்தனர் என்று கூறுகிறார் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் செயல்அதிகாரி பொன் ஜெயராமன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

மருத்துவர்களின் பரிந்துரையை அடுத்து, 15 வயதாகும் கோவில் யானை பார்வதிக்கு இப்போது கூடுதலாக நடைபயிற்சியும், உணவுக் கட்டுப்பாடும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

கோவில் நிர்வாகம் தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் காரணமாக, ஆலயத்தின் திருவிழா மற்றும் இதர நிகழ்வுகளில் பார்வதி பங்குபெறுவது எந்த வகையிலும் தடைப்படவில்லை எனவும் மீனாட்சி அம்மன் கோவிலியின் செயலதிகாரி தெரிவித்தார்.

பார்வதியின் உடல் எடையை 500 கிலோ குறைக்க தற்போது முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறும் பொன்.ஜெயராமன், அதில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் கூறுகிறார்.

தமிழகத்தின் பல கோவிலகளில் உள்ள யானைகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்கும் அவர், அரசின் உத்தரவின்படி இப்போது மேம்பட்ட சூழலில் கோவில் யானைகள் வைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.



நியூசிலாந்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து சிதறவுள்ள எரிமலை: விஞ்ஞானிகள் எச்சரிக்கை


நியூசிலாந்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து சிதறவுள்ள எரிமலை: விஞ்ஞானிகள் எச்சரிக்கை




நியூசிலாந்தில் கடந்த 100 ஆண்டுகளாக எந்தவித அசைவும் இல்லாமல் இருந்த தொன்காரிரோ எரிமலை மீண்டும் வெடித்து சிதற வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

நியூசிலாந்தில் வடக்கு தீவில் நேற்றிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3ஆக பதிவானது. இதனைத் தொடர்ந்து அங்குள்ள தொன்காரிரோ என்ற எரிமலை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் அந்த எரிமலையில் இருந்து இரைச்சலும், சீற்றமும் ஏற்பட்டதுடன், உள்ளே இருந்து புகையும், சாம்பலும் வெளியேறுகிறது.



எனவே அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே அந்த எரிமலையை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். இன்று அந்த எரிமலையை ஆய்வு செய்த போது, ஒரு வீட்டின் அளவுக்கு 3 துளைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே எரிமலை எந்த நேரத்திலும் வெடித்து சிதறும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது புகையும், சாம்பலும் வெளியேறுவதால் அப்பகுதியில் உள்நாட்டு விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


இந்த எரிமலை கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு வெடித்தது குறிப்பிடத்தக்கது

.

Wednesday, August 8, 2012

அமெரிக்கா அனுப்பிய விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இறங்கியது


அமெரிக்கா அனுப்பிய விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இறங்கியது




கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்கா அனுப்பிய விண்கலம் ஏறத்தாழ 57 கோடி கிலோமீட்டர் பறந்து சென்று செவ்வாய் கிரகத்தில் நேற்று வெற்றிகரமாக தரையில் இறங்கியது. கியூரியாசிடி என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம் உலகிலேயே மிகவும் நவீனமான ஆராய்ச்சிக்கூடம் என்று சொல்லலாம். ஒரு டன் எடையுள்ள கியூரியாசிடி மேல்கூடு இல்லாத கார் போன்று காட்சியளிக்கிறது.



இது அடுத்த இரண்டு ஆண்டுகள் செவ்வாய் கிரகத்தின் தரையில் நகர்ந்து சென்று அங்குள்ள நிலவரத்தை ஆராய்ந்து பூமிக்கு தகவல் அனுப்பும். நேற்று தரையிறங்கிய அடுத்த வினாடியில் இருந்தே கியூரியாசிடி அபூர்வமான படங்கள் மற்றும் தகவல்களை அனுப்ப ஆரம்பித்துவிட்டது. இந்த விண்கலம் 13,000 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏழாயிரம் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் எட்டு ஆண்டுகள் இடைவிடாமல் உழைத்து இதனை உருவாக்கினர்.

செவ்வாயில் மனிதனை போன்ற அல்லது வேறு வகையிலான உயிரினங்கள் இருக்கிறதா, மனிதன் உயிர்வாழ தேவையான சூழல் இருக்கிறதா என்பதை கியூரியாசிடி ஆராயும். நிலவில் நீல் ஆம்ஸ்டிராங் கால் பதித்ததை அடுத்து விண்வெளி ஆராய்ச்சியில் மனிதன் படைத்துள்ள மாபெரும் சாதனையாக கியூரியாசிடியின் தரையிறங்கலை விஞ்ஞானிகள் வர்ணிக்கின்றனர்.

எட்டு மாதங்களாக சரியான பாதையில் பயணம் செய்த கியூரியாசிடி, இந்திய நேரப்படி நேற்று காலை 11 மணிக்கு செவ்வாயில் தரையிறங்கியது. லாஸ்ஏஞ்சலஸ் அருகே உள்ள ஆய்வுக்கூடத்தில் 1,400 விஞ்ஞானிகள் அதை பதற்றத்துடன் கண்காணித்து கொண்டிருந்தனர். கலம் தரையை தொட்டதும் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் ஒருவரையொருவர் தழுவி பாராட்டு தெரிவித்துக் கொண்டனர்.


அதற்கு முந்தைய 7 நிமிடங்கள் விஞ்ஞானிகள் மிகவும் பதற்றமாக இருந்தனர். மணிக்கு 20,920 கி.மீ வேகத்தில் கலம் செவ்வாயின் தரையை நோக்கி பாய்ந்தது. ஈர்ப்பு சக்தி இல்லாத நிலையில் அது கடினமான பாறையில் மோதிவிட்டால், இத்தனை ஆண்டுகள் முயற்சியும் நொடியில் வீணாகி விடும். 41 அடி விட்டமுள்ள மிகப்பெரிய பாராசூட் உதவியுடன் கலம் பத்திரமாக இறங்கியதும் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

கியூரியாசிடியில் உள்ள நவீன கருவிகள், கேமராக்கள் மூலம் எடுத்த படங்கள் உடனே பூமிக்கு வர தொடங்கின. செவ்வாயை சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள் மூலமாக தொடர் ஓட்டம் போன்ற முறையில் இவை பூமிக்கு வந்து சேர்கின்றன.


வானில் இன்று அதிசயம் சூரியனை சுற்றி வட்டம் பூமிக்கு பாதிப்பு இல்லை


வானில் இன்று அதிசயம் சூரியனை சுற்றி வட்டம் பூமிக்கு பாதிப்பு இல்லை




வானில் சூரியனை சுற்றி ஒளி வட்டம் நேற்று ஏற்பட்டது. இதனால் பூமிக்கு பாதிப்பு இல்லை என்று பிர்லா கோளரங்க இயக்குனர் அய்யம்பெருமாள் தெரிவித்தார்.

வானில் நேற்று திடீரென்று சூரியனை சுற்றி ஒரு விதமான ஒளி வட்டம் காணப்பட்டது. இதன் வெளிப்பகுதி இளம் பழுப்பு நிறத்திலும், உட்பகுதி சிவப்பு கலந்த பல வண்ணங்களிலும் இருந்தது.

கோவை, திருப்பூர், மதுரை, வேலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வானில் நிகழ்ந்த, இந்த அதிசயத்தை பார்த்து ரசித்தனர். பள்ளிகளில் படித்து கொண்டிருந்த மாணவ, மாணவிகளை வெளியே அழைத்து வந்த ஆசிரியர்கள், சூரியனை சுற்றி காணப்பட்ட ஒளி வட்டத்தை காண்பித்தனர். சென்னையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. அதனால், சென்னை மக்களால் வானில் நிகழ்ந்த அதிசயத்தை காண முடியவில்லை. வானில் திடீரென்று ஏற்பட்ட சூரிய ஒளி வட்டத்தால், பூமிக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

இதுகுறித்து பிர்லா கோளரங்கம் இயக்குனர் அய்யம்பெருமாள் கூறியதாவது: சூரியனுக்கும் பூமிக்கும் இடையே 15 ஆயிரம் கோடி கிமீ தூரம் உள்ளது. தற்போது மழை காலம் ஆரம்பமாகிவிட்டது. ஆங்காங்கே பல்வேறு பகுதி களில் மழையும் பெய்து வருகிறது. அதனால், காற்றில் ஈரப்பதமும் அதிகரித்துள்ளது. சூரியனிடம் இருந்து வெளியேறும் வெப்பம், காற்றின் ஈரப்பதத்தில் உள்ள நீர் துளிகள் மீது பட்டு பிரதிபலிக்கிறது.

இதனால், காற்றில் உள்ள நீர் துளிகள் வட்ட வடிவில் சூரியனை சுற்றி காணப்படுகிறது. இதனை சூரிய ஒளி வட்டம் (சன் ஹாலோ) என்கிறோம். இது இயற்கையாகவே அவ்வப்பொழுது நிகழக்கூடியது. இதனால், பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை. மழைக் காலங்களில் வானில் அடிக்கடி வானவில் தோன் றும். இதற்கும் காற்றில் உள்ள ஈரப்பதமே காரணம். இவ்வாறு அய்யம்பெருமாள் தெரிவித்தார்.

பூமியின் மீது மோதிய கிரகத்தின் சிதறல் தான் சந்திரன் : ஆய்வின் தகவல்


பூமியின் மீது மோதிய கிரகத்தின் சிதறல் தான் சந்திரன் : ஆய்வின் தகவல்



பூமியின் மீது மோதிய கிரகத்தின் சிதறல் தான் சந்திரன் என்பது தற்போது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் வாழும் கிரகமான பூமியின் துணைக்கோள் சந்திரன் எப்படி உருவானது என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகின்றது. பூமியின் சிதறலே சந்திரன் என முந்தைய ஆய்வு தெரிவித்தது. அந்த சிதறல் எப்படி உருவானது என்பது குறித்து விஞ்ஞானிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காக சந்திரன் மற்றும் பூமியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

அதில் சந்திரனில் உள்ள மாதிரியில் பூமியில் இருப்பது போன்றே இரும்பு தாதுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் இவைகள் ஒரே அளவில் இல்லை. சற்று வித்தியாசத்துடன் காணப்பட்டது. இவைகள் தியா என்ற கிரகத்தின் மாதிரியுடன் தொடர்புடையதாக உள்ளன. எனவே, பூமி அதிவேகமாக சுற்றிய போது தியா என்ற பெரிய கிரகம் மோதியதில் விபத்து ஏற்பட்டிருக்கலாம். அதில் இருந்து விழுந்த சிதறலே சந்திரனாக மாறி இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எச்.ஐ.வியை முழுமையாக குணமாக்குவது சாத்தியம்மு : ஆராய்ச்சியில் தகவல்


எச்.ஐ.வியை முழுமையாக குணமாக்குவது சாத்தியம்மு : ஆராய்ச்சியில் தகவல்



எச்.ஐ.வி வைரஸை முழுமையாக குணப்படுத்தக்கூடிய சாத்தியப்பாட்டிற்கான முதல் படியை தாங்கள் எட்டியிருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள். எச்.ஐ.வி வைரஸானது மனித உடலுக்குள் புகுந்ததும் உடனடியாக தாக்குவதில்லை. மனித உடலில் சில செல்களுக்குள் புகுந்துகொண்டு செயற்படாமல் மறைந்து ஒளிந்துகொள்கிறது. இப்படியான நிலையில் இந்த எச் ஐ வி வைரஸானது பல ஆண்டுகள் மறைவாக இருக்க முடியும்.

இப்படி செல்களுக்குள் புகுந்துகொண்ட நிலையில் இருக்கும் எச்.ஐ.வி வைரஸை கண்டுபிடிக்கவே முடியாது.

குறிப்பாக மனித உடலின் நோய் எதிர்ப்பு செல்களாலோ, எச்.ஐ.வி தொற்றுக்கு எதிரான ஆண்டி ரெட்ரோ வைரல் மருந்துகளாலோ இப்படியான வைரஸை கண்டுபிடித்து தாக்கமுடியாது. மேலும், இப்படி மறைந்திருக்கும் எச்.ஐ.வி வைரஸ்கள் திடீரென்று ஒருநாள் தான் ஒளிந்துகொண்டிருக்கும் செல்லிலிருந்து வெளியே வந்து மனிதனை தாக்கத்துவங்கும் நிலை இருப்பதால் தான் இன்றுவரை எச்.ஐ.வி தொற்றை முழுமையாக குணப்படுத்த முடியாத நிலை நிலவுகிறது. இந்த நிலைமையை மாற்ற முடியும் என்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்.

மறைந்திருக்கும் எச்.ஐ.வி வைரஸை பலவந்தமாக வெளியே கொண்டுவந்து, அதை தாக்கி அழிக்கமுடியும் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் நேச்சர் என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் தெரிவித்திருக்கிறார்கள். புற்றுநோய்க்கான மருந்தாக பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்று ஒரினோஸ்டாட். இந்த மருந்தை எச் ஐ வி தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு கொடுப்பதன்மூலம், செல்களுக்குள் மறைந்திருக்கும் எச் ஐ வி வைரஸ் பலவந்தமாக அந்த செல்களில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இப்படி வெளியே வந்த செல்களை ஆண்டி ரெட்ரோ வைரல் மருந்துகள் தாக்கி அழித்துவிடுகின்றன.

மறைந்திருக்கும் எச்.ஐ.வி வைரஸை குறிவைத்து தாக்கவும், காலப்போக்கில் அழிக்கவும் கூடிய வழிகளை நாம் கண்டறியத் துவங்கியிருக்கிறோம். இப்படி ஒரு மனிதனின் உடலில் மறைந்திருக்கும் எச் ஐ வி வைரஸ்கள் அனைத்தையும் நாம் அழித்துவிட்டோமானால், நாம் அந்த நபரை எச்.ஐ.வி வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணப்படுத்திவிட்டோம் என்று கூறமுடியும் என்கிறார் டேவிட் மார்கோலிஸ். உலகம் முழுவதும் எச் ஐ வி வைரஸால் பாதிக்கப்பட்ட லட்சக் கணக்கானவர்களுக்கு இது மிகப்பெரிய நம்பிக்கையளிக்கும் செய்தியாக இருக்கும் என தெரிகிறது.

அமெரிக்க கண்காணிப்பில் ஸ்டாண்சார்ட் வங்கி பணிகள் தீவிரவாத நிதியுதவி, ஹவாலா புகார்


அமெரிக்க கண்காணிப்பில் ஸ்டாண்சார்ட் வங்கி பணிகள்  தீவிரவாத நிதியுதவி, ஹவாலா புகார்



 


தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி மற்றும் ஹவாலா நிதி மோசடி புகாரில் சிக்கிய எச்.எஸ்.பி.சி வங்கியை தொடர்ந்து, ஸ்டாண்சார்ட் வங்கியும் புகாரில் சிக்கியது. இந்த வங்கியின் இந்திய அவுட்சோர்சிங் பணிகளை அமெரிக்கா கண்காணிக்கிறது. தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வரும் வழிகள் குறித்து அமெரிக்க செனட் கமிட்டி ஆராய்ந்தது. அதில் எஸ்.எச்.பி.சி. வங்கியின் சர்வதேச கிளைகள் வழியாக பெறப்பட்ட பல முதலீடுகள் தீவிரவாத செயல்களுக்கு திருப்பி விடப்பட்டதாக கமிட்டியின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, அந்த வங்கியின் இந்திய கிளைகள் செயல்பாடு உட்பட பல்வேறு கணக்குகள் பற்றி அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் ஆராய்ந்து வருகின்றன.

இந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த மற்றொரு முன்னணி சர்வதேச வங்கியான ஸ்டாண்சார்ட் சார்ட்டர்டு வங்கியின் இந்திய அவுட்சோர்சிங் பணிகள் பற்றி நியூயார்க் மாநில வங்கி ஆணையம், நிதி சேவை துறை ஆகியவை ஆராய்ந்தன. ஸ்டாண்சார்ட் வங்கியின் இந்திய அவுட்சோர்சிங் பணிகளிலும் கணக்கில் வராத தொகைகள் மூலம் ஹவாலா மோசடி நடந்திருக்கலாம் என்று விசாரணை அமைப்புகள் சந்தேகிக்கின்றன.

25,000 கோடி டாலர் மதிப்புள்ள நிதி நடவடிக்கைகளை அந்த வங்கி மறைத்ததாக அமெரிக்க நிதி சேவை துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிதி பல்வேறு வழிகள் மூலம் தீவிரவாதிகள், ஆயுத வியாபாரிகள், போதை கடத்தல்காரர்கள், கருப்பு பண பதுக்கல்காரர்கள் எளிதாக பெறும் வகையில் இருப்பதாக அது அச்சம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஸ்டாண்சார்ட் வங்கியின் இந்திய அவுட்சோர்சிங் பணிகள் குறித்து விரிவான விசாரணை நடைபெறும் என தெரிகிறது.


Monday, August 6, 2012

சிறுநீரகக் கற்களை கரைக்கும் உணவுகள்


சிறுநீரகக் கற்களை கரைக்கும் உணவுகள்


இன்றைய காலத்தில் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

அதிலும் அந்த சிறுநீரகக் கல் ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்ய வேண்டும். அதிலும் கற்களின் அளவு 5 மிமி குறைவாக இருந்தால் அதனை கண்டிப்பாக வீட்டில் இருக்கும் ஒரு சில உணவுகளின் மூலமே சரிசெய்துவிடலாம். இல்லையென்றால் லாப்ரோஸ்கோப்பி என்ற சிகிச்சையின் மூலமே நீக்க முடியும். மேலும் சிலருக்கு அந்த கற்களின் காரணமாக வயிற்றில் அடிக்கடி வலியானது ஏற்படும்.

அவ்வாறு ஏற்பட்டால் உடனடியாக அதனை கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு அதனை ஈஸியாக வீட்டில் இருக்கும் ஒருசில உணவுகளை வைத்து கரைக்கலாம்.

தண்ணீர்: அனைவருக்குமே சிறுநீரகக்கல் போதிய தண்ணீரானது உடலில் இல்லாத காரணத்தினாலே வருகிறதென்று நன்கு தெரியும். ஆகவே எப்போது கற்கள் உடலில் இருக்கிறதென்று தெரிககிறதோ, அன்றிலிருந்து ஒரு நாளைக்கு 5-6 லிட்டர் தண்ணீரை குடிக்க ஆரம்பிக்க வேண்டும். இதுவே ஒரு சிறந்த எளிதான வழியாகும்.

வெந்தய தண்ணீர்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் படுக்கும் முன் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் சிறுநீரகக்கற்கள் கரைவதோடு மட்டுமல்லாமல், உடலில் இருக்கும் டாக்ஸின்களும் வெளியேறுகின்றன.

டால் மிஸ்ரி: இது ஒரு புதுவிதமான படிகமாக்கப்பட்ட சர்க்கரை கட்டிகள். இந்த சர்க்கரைக் கட்டிகள் பனை மரத்திலிருந்து செய்யப்படுகிறது. இந்த பொருள் கிடைப்பது சற்று கடினம் தான். ஆனால் அதன் பலன் மிகவும் உயர்ந்தது. இது சிறுநீரகக்கற்களை கரைக்கும் ஒரு சிறந்த பொருள். ஆகவே அதனை இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை குடிக்க வேண்டும். முக்கியமாக அந்த கட்டிகள் தண்ணீரில் நன்கு கரைந்திருக்க வேண்டும்.

வாழைத்தண்டு: சமையலில் பயன்படும் வாழைத்தண்டுகளை வாரத்திற்கு ஒரு முறை சமைத்து உண்டால், சிறுநீரகக்கற்கள் வராமல் இருக்கும். அதுவே கற்கள் இருப்பவர்கள், அதனை தினமும் ஜூஸ் போட்டு குடித்தால், கற்கள் விரைவில் கரைந்துவிடும். ஏனெனில் அதில் அதிகமான அளவு நார்ச்சத்தானது இருக்கிறது. மேலும் அதில் நீர்ச்சத்தும் அதிகம் உள்ளது.

கொத்தமல்லி இலைகள்: கொத்தமல்லி ஒரு சிறந்த மூலிகைப் செடி. இதில் பல வித நன்மைகள் அடங்கியுள்ளன. அதிலும் அந்த கொத்தமல்லியை நீரில் போட்டு, கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும். இதனால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

எனவே சிறுநீரகக்கற்களை நீண்ட நாட்கள் வைத்து, அதனால் அறுவை சிகிச்சை செய்யுமளவு கொண்டு செல்லாமல், வீட்டிலேயே தினமும் அதற்கான உணவுகளை சரியாக உண்டு வந்தாலே, கற்கள் கரைந்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


வறட்சியை நோக்கி இந்தியா

வறட்சியை நோக்கி இந்தியா




பருவ மழை போதாத காரணத்தால் மூன்று வருடங்களில் இந்தியா முதல் தடவையாக வறட்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பசுபிக் சமுத்திரத்தின் ''எல்லினோ தாக்கம்'' காரணமாக செப்டம்பர் மாதத்தில் மழை வீழ்ச்சி சராசரியைவிட மிகவும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை துறைத் தலைவரான ஜெனரல் லக்ஷ்மன் சிங் ராத்தோர் கூறியுள்ளார்.

இந்த எல்லினோ தாக்கந்தான் உலகமெங்கிலும் காலநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த மழை வீழ்ச்சிக் குறைவு, ஆசியாவின் மூன்றாவது பெரிய இந்திய பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகிறார்கள்.
அதனால் பொருளாதார வளர்ச்சி குறைவதுடன், உணவு விலைகளின் விலையும் அதிகரிக்கலாம்.

மனிதனைத் தின்னும் சுறா மீன்கள்


மனிதனைத் தின்னும் சுறா மீன்கள்



பிரான்சிற்கு சொந்தமான இந்தியப் பெருங்கடலில் ரியூனியன் தீவுக்கு அருகே மனிதர்கள் தொடர்ந்து சுறாமீன்களால் தாக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் 22 வயது இளைஞன் ஒருவனின் கால்களை சுறாமீனின் கூரிய பற்கள் பதம் பார்த்து விட்டன.

 


 

மருத்துவமனையில் அனுமதித்த பின்னும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்து போனார்.

தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடந்து வருவதால் சுறா மீன்களை பிடித்துக் கொல்ல அரசு அனுமதி வழங்க வேண்டும் என கோரி, 300 பேர் கூடி போராட்டம் நடத்தினர்.

 


மாகாணத் தலைவர் தியரி ராபர்ட் இப்போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து இனிமேல் சுறாமீனை பிடிக்கும் மீனவர் ஒவ்வொருவருக்கும் பணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ஆனால் கடல்சார்ந்த பகுதிகளுக்கான பிரெஞ்சு அமைச்சர் விக்டோரின் லூரெல் கூறுகையில், சுறாமீன் பாதுகாக்கப்படும் கடல் உயிரினம் என்பதால் அதனைப் பிடிப்பதும் கொல்வதும் குற்றமாகக் கருதப்படும் என்றார்.

சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களும், விஞ்ஞானிகளும் மீன் மனிதரைத் திடீரென்று தாக்குவதன் காரணத்தை ஆராய வேண்டும் என்றனர்.

மேலும் எஸ்ஸெம்லாலி என்பவர், Bull Shark எனப்படும் இந்த வகை சுறா மீன்கள் ஆழ்கடலுக்குள் போகாது. கரையோரத்தில் மட்டுமே இருக்கும். எனவே தான் கரையோரமாக ஆழமில்லாத கடலில் மீன் பிடிப்பவர்களையும், நீந்திக் குளிப்பவர்களையும் தாக்குகின்றன என்றார்.

கடலின் சூழலமைப்புக்கு இந்த வகை சுறாக்கள் மிகவும் இன்றியமையாத ஒன்று. இதனைக் கொல்வதால், கடலின் மொத்த சூழலும் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு மட்டும் இந்த சுறாவின் தாக்குதலுக்கு மூன்று பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


A large bull shark attacked and injured a woman as she stood in less than 2 feet of water at a South Carolina beach.