Friday, November 16, 2012

சுனிதா தலைமையிலான குழுவினர் 19ம் திகதி பூமி வருகை

சுனிதா தலைமையிலான குழுவினர் 19ம் திகதி பூமி வருகை





அமெரிக்காவின் நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 47) தலைமையிலான குழுவினர் வருகிற 18ம் திகதி சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்திலிருந்து பூமிக்கு திரும்புகின்றனர்.
இக்குழுவினர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு புறப்பட்டு சென்றார்.

சுனிதா தலைமையிலான இக்குழுவில் அவருடன் அகி ஹோசிடே (ஜப்பான்), யூரி மலென் சென்கோ (ரஷியா) ஆகிய விண்வெளி வீரர்களும் சென்றனர்.

இவர்கள் கஜகஸ்தானில் இருந்து ரஷ்யாவின் சோயுஷ் டி.எம்.ஏ.05.எம் என்ற விண்கலத்தில் சென்றனர்.

இவர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வுகூடம் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விண்வெளியில் நடந்து எந்திரங்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு அவர்களின் பணி முடிந்தது.

எனவே, சுனிதா வில்லியம்ஸ் தலைமையிலான குழுவினர் வருகிற 18ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடத்திலிருந்து சோயுஷ் விண்கலம் மூலம் புறப்படுகின்றனர்.

பின்னர், இவர்களது விண்கலம் மறுநாள் திங்கட்கிழமை (19ம் திகதி) கஜகஸ்தானில் உள்ள விண்வெளி தளத்தில் தரையிறங்குகிறது.

எனவே அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கியிருந்த பெண் விண்வெளி வீரர் என்ற உலக சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மொனராகலை மாவட்டத்தை அடுத்து பொலநறுவையிலும் சிவப்பு மழை

இலங்கையில் மொனராகலை மாவட்டத்தை அடுத்து பொலநறுவையிலும் சிவப்பு மழை 




பொலன்நறுவை மாவட்டத்தில் மனம்பிட்டிய பிரதேசத்தில் இன்று காலை 8:00 மணியளவில் சிவப்பு மழை பெய்துள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சிவப்பு மழை தொடர்ந்து ஒரு மணிநேரத்திற்கு பெய்துள்ளது.

இந்நிலையில் நேற்று மொனராகல மாவட்டத்தில் செவனகல பிரதேசத்தில், இந்திகொலபெலஸ்ஸ பகுதியிலும் சிவப்பு மழை பெய்ததாக அக்கிராமத்து மக்கள் தெரிவித்தனர்.

நேற்றும், இன்றும் இவ்வாறு சிவப்பு மழை பெய்ததால் குறிப்பிட்ட கிராமத்து மக்கள் பீதியடைந்து ஏன் இவ்வாறு சிவப்பு மழை பெய்கின்றது என ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்து இதனால் கிராமத்திற்கு ஏதாவது அழிவு ஏற்படுமா என அச்சமடைந்துள்ளனர்.

இவ் அச்சம் தற்போது குறிப்பிட்ட இரு மாவட்ட மக்களுக்கும் பரவியுள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சில வருடங்களுக்கு முன் இந்தியா கேரளாப் பகுதியிலும் இவ்வாறு சிவப்பு மழை பெய்ததாக அறியமுடிகின்றது.

இந்நிலையில் இது தொடர்பில் இலங்கை காலநிலை அவதான நிலைய பணிப்பாளர் எஸ்.ஆர் ஜெயசேகர கருத்து தெரிவிக்கையில்,

சாதாரணமாக மீன்மழை ஏற்படுவதைப் போல, மேகத்துக்கு நீர் உறிஞ்சப்படும் போது, சில நிற திரவியங்களும் கலந்து உறிஞ்சப்படுவதால் இவ்வாறான மழை வீழ்ச்சி ஏற்படலாம் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறு ஏற்பட வேறு காரணங்கள் உள்ளதா? என்பது தொடர்பில் மழைவீழ்ச்சி குறித்து முழுமையான பரிசோதனையை மேற்கொண்டதன் பின்னரே மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே இவ்வாறான பல நிறங்களிலான மழை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் அவர் கூறினார்.

Thursday, November 15, 2012

குடியேற்ற விதிகளில் மாற்றம் கொண்டு வரப்போவதாக ஒபாமா அறிவிப்பு

குடியேற்ற விதிகளில் மாற்றம் கொண்டு வரப்போவதாக ஒபாமா அறிவிப்பு





அமெரிக்காவில் குடியேறுவோர் தொடர்பான விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார்.
இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஒபாமா தலைநகர் வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, குடியேற்ற விதிகளில் கண்டிப்பாக மாற்றம் செய்யப்படும் என்றும் இதற்கான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவிப்பு செய்தார்.

இந்த மாற்றங்களின் போது நாட்டின் பாதுகாப்பு அம்சங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மேலும் அமெரிக்காவின் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.

முறையாக ஆவணங்களை வைத்திருக்காத தொழிலாளர்களை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கக் கூடிய வகையில் இம்மசோதா இருக்கும் என்றார்.

இந்தியா போன்ற வெளிநாட்டவரின் திறமையை ஈர்க்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் நன்கு கல்வி கற்ற ஒருவர் இங்கேயே தொழில் தொடங்க ஊக்கப்படுத்துவோம் என தெரிவித்தார்.

தீவிரவாதி என்று அவதூறு பரப்பியதால் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம்

தீவிரவாதி என்று அவதூறு பரப்பியதால் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம்  



தீவிரவாதி என்று அவதூறாக செய்தி வெளியிட்டதால் அவுஸ்திரேலிய வாலிபருக்கு 'கூகுள்' நிறுவனம் ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் மிலோரத் டிரிகுல்ஜா. இவர் கேளிக்கை மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

இவருக்கு மெல்போர்ன் நகரில் உள்ள தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த 2004ம் ஆண்டு 'கூகுள்' இணைய தள நிறுவனம் செய்தி வெளியிட்டது. இதனால் அவரது தொழில் முடங்கியது.

இதை எதிர்த்து அவர் விக்டோரியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடைபெற்றபோது, ஏதோ தவறுதலாக இது போன்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இது வெளியிடப்படவில்லை என்று கூகுள் நிறுவனம் தெரிவித்தது.

ஆனால் அதை ஏற்க உச்ச நீதிமன்ற நீதிபதி மறுத்து விட்டார். அவதூறு செய்தி வெளியிட்டதற்காக மிலோரட் டிரிகுல் ஜாவுக்கு கூகுள் நிறுவனம் ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டார்.

சிரியா அகதிகளுக்கு ரூ.150 கோடி நிதியுதவி: ஹிலாரி கிளிண்டன்

சிரியா அகதிகளுக்கு ரூ.150 கோடி நிதியுதவி: ஹிலாரி கிளிண்டன்




சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக கடந்த 22 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடந்து வருகின்றது.
இதனால் நடந்து வரும் உள்நாட்டு போரில் அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகி வருவதுடன், அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர்.

இவர்கள் துருக்கி, ஜோர்டான், லிபியா மற்றும் ஈராக் நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த மக்களுக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் நிதி உதவி அளித்து வருகின்றன.

இதற்கிடையில் அவுஸ்திரேலியா சென்றுள்ள அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், இராணுவ அமைச்சர் லியான் பெனட்டா ஆகியோர் நேற்று அவுஸ்திரேலிய அமைச்சர்களை சந்தித்து பேச்சு நடத்தினர்.

இதுகுறித்து ஹிலாரி கிளிண்டன் கூறுகையில், சிரியா உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டு அகதிகளாகிய மக்களுக்காக ரூ.150 கோடி நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது சிரியா மட்டுமின்றி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்

16.9 மில்லியன் யூரோவுக்கு ஏலம் விடப்பட்டு உலக சாதனை படைத்த வைரம்

16.9 மில்லியன் யூரோவுக்கு ஏலம் விடப்பட்டு உலக சாதனை படைத்த வைரம்


உலகில் உள்ள அரிய வகை மற்றும் மிகவும் புகழ்பெற்ற வைரங்கங்களில் ஆர்ச்டியூக் ஜோசப் வைரமும் ஒன்று.
இந்தியாவின் கோல்கொண்டா சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்பட்ட 76 கேரட் வைரமான ஆர்ச்டியூக் ஜோசப், சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் நேற்று இரவு ஏலம் விடப்பட்டது. அப்போது இந்த வைரம் 16.9 மில்லியன் யூரோவுக்கு (ரூ.118 கோடி) ஏலம் போனது.

வைர வர்த்தகத்தில் கோல்கொண்டா வைரம் உலக சாதனை படைத்திருக்கிறது. இதன் தரம் கோஹினூர் வைரத்துடன் ஒப்பிடத்தக்க அளவிக்கு சிறப்பாக உள்ளது என்று ஏல நிறுவனத்தின் அதிகாரி பிரான்சியஸ் குரியல் தெரிவித்தார்.

இந்த சாதனை வைரம், முதலில் ஹங்கேரி மன்னர் ஆர்ச்டியூக் ஜோசபிடம் இருந்தது. இதனால் அவரது பெயரே இந்த வைரத்துக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FINALLY, தமிழக அரசு புரிந்தது சாதனை! தீபாவளி சோமபான விற்பனை ரூ.480 கோடி!

FINALLY, தமிழக அரசு புரிந்தது சாதனை! தீபாவளி சோமபான விற்பனை ரூ.480 கோடி!




தமிழக அரசு மந்தகதியில் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை, அடித்து நொறுக்கியுள்ளது தற்போதைய அ.தி.மு.க. அரசு.

இந்த தீபாவளியின்போது, முன் எப்போதும் இல்லாத சாதனையை புரிந்துள்ளது. மக்களுக்கு தாராள மது சப்ளை இருக்கும்படி பார்த்துக் கொண்டதில், தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது.

மின்வெட்டு இருந்தபோதிலும், சரக்கு தட்டுப்பாடு இருந்ததாக யாரும் புகார் சொல்லாமல் பார்த்துக்கொண்டது நமது சாதனை அரசு.

தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாளில் மட்டும் ரூ.270 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த தீபாவளியன்று ரூ.20 கோடி அதிகமாக விற்பனையாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் 6,823 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடைக்கும் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை சரக்குகள் கூடுதலாக அனுப்பப்பட்டன. இந்த கடைகள் மூலம் கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக ரூ.80 கோடி முதல் ரூ.100 கோடி வரை மதுபான விற்பனை நடந்துள்ளது.

இதன் காரணமாக தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன்பே விற்பனை ரூ.100 கோடியை தாண்டியது. நவம்பர் 10ம் தேதி ரூ.110 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. நவம்பர் 11ம் தேதி ரூ.100 கோடிக்கு விற்பனையானது.

உச்சகட்டமாக தீபாவளிக்கு முதல் நாளான 12ம் தேதி ரூ.150 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. தீபாவளியன்று ரூ.120 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தீபாவளி முதல் நாள் மற்றும் தீபாவளியன்று என 2 நாளில் மட்டும் ரூ.270 கோடி வசூலானது. கடந்த தீபாவளியன்று ரூ.100 கோடிதான் வசூலானது.

தீபாவளியையொட்டி ரூ.480 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன. இலக்கை அடைந்ததற்கு மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதும் ஒரு காரணம். டாஸ்மாக் கடைகளில் மது விலை 3 முறை ஏற்றப்பட்டது. பீர் விலை ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகமானது. அதேபோல பிராந்தி, விஸ்கி போன்றவை ரூ.5 முதல் ரூ.40 வரை விலை உயர்த்தப்பட்டது.

விலை உயர்வு குறித்து யாரும் போராட்டம் நடத்தவில்லை, விஜயகாந்த் உட்பட!




Wednesday, November 14, 2012

மூளைத்திறன்: முக்கிய கண்டுபிடிப்பு

மூளைத்திறன்: முக்கிய கண்டுபிடிப்பு




கோமா நிலை எனப்படும் நடைபிண நிலையிலும் மனித மூளை சிந்தித்து செயற்படும் திறனுடன் இருப்பதாகவும், தான் இருக்கும் சூழலை அதனால் உணரமுடியும் என்றும், தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அது நினைவில் பதிந்துகொள்கிறது என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் வெஜிடேடிவ் ஸ்டேட் என்றழைக்கப்படும் ஒரு நிலை இருக்கிறது. அதாவது ஒரு மனிதரின் மூளைச்செயற்பாடுகள் முற்றாக செயலிழந்த ஒரு நிலை. அவருக்கு தன்னைப்பற்றியோ தனது சூழல் பற்றியோ எந்த பிரக்ஞையும் இல்லாத ஒரு நிலை. அவரால் மற்றவர்களிடம் பேசவோ மற்றவர்கள் பேசுவதை கேட்டுப் புரிந்துகொள்ளவோ முடியாத ஒரு நிலை. அவரது உடல் உறுப்புக்களை அவரால் இயக்கமுடியாத நிலை. சில நேரங்களில் அவரது கண்கள் திறந்திருந்தாலும் அவரால் பார்த்து புரிந்துகொள்ளமுடியாத நிலை.

தமிழில் சொல்வதானால், நடைபிணம் போன்றதொரு நிலை. அதாவது உடலில் உயிர் இருக்கிறது என்பதைத்தவிர வேறு எந்த உணர்வும், உடற்செயற்பாடும் இல்லாத ஒரு நிலை.

இந்த நிலையில் இருப்பவர்களின் மூளை சிந்திக்கும் திறனற்றது என்று தான் இதுவரை மருத்துவ உலகம் நம்பி வந்தது. ஆனால் அப்படிப்பட்டவர்களின் மூளை சிந்திக்கிறது, செயற்படுகிறது என்பதுடன், தான் இருக்கும் சூழலை அந்த மூளை புரிந்துகொள்கிறது, தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அது பதிலும் அளிக்கிறது என்கிற அதிசய கண்டுபிடிப்பு ஒன்றை பிரிட்டனைச்சேர்ந்த நரம்பியல் துறை மருத்துவ பேராசிரியர் அட்ரியன் ஓவென் நிரூபித்திருக்கிறார்.

நரம்பியல் துறையில் மைல்கல்

மருத்துவ உலகில், குறிப்பாக நரம்பியல் துறையில் இது ஒரு மைல் கல் என்று வர்ணிக்கப்படுகிறது. நரம்பியல் துறையின் மருத்துவ புத்தகங்கள் மாற்றி எழுதப்படவேண்டிய அளவுக்கு இது முக்கிய கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.
ஸ்காட் ரட்லி என்கிற கேனடா நாட்டைச்சேர்ந்தவர் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கியபோது அவரது மூளை கடுமையாக பாதிக்கப்பட்டது. சிலகாலம் கோமா நிலையில் இருந்தார். பின்னர் அவர் கோமா நிலையிலிருந்து மீண்டாலும், அவர் நடைபிணமாகவே வாழ்ந்து வந்தார். அவரது கண்ணிமைகள் திறந்திருந்தாலும் அவரால் பார்க்கமுடிந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. அவ்வப்போது அவரது விரல்கள் அசைவதாகவும், அவர் தனது கண்களை அசைத்து தம்மிடம் பேச முயல்வதாகவும் அவரது பெற்றோர் கூறினாலும் மருத்துவர்கள் அதை நம்பவில்லை. மருத்துவ பரிசோதனைகளிலும் அவரது மூளை சிந்திப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமலிருந்தது.

இந்த பின்னணியில் பிரிட்டனைச்சேர்ந்த நரம்பியல் மருத்துவ பேராசிரியர் ஆட்ரியன் ஓவென் இவரை பரிசோதித்தார். அவர் நடத்திய மேம்பட்ட ஸ்கேன் பரிசோதனைகளில் ஸ்காட் ரட்லியின் மூளை செயலற்றதல்ல என்றும், சிந்திக்கும் திறன் கொண்ட, கேட்கும் கேள்விகளை உள்வாங்கி அதற்கு பதிலளிக்கும் திறன்கொண்டது என்றும் பேராசிரியர் நிரூபித்திருக்கிறார்.
இந்த பரிசோதனையின் ஒருபகுதியாக, ரட்லியிடம் அவருக்கு தற்போது உடலில் வலி இருக்கிறதா என்று கேட்டபோது இல்லை என்று பதில் கூறும் அவரது மூளைச்செயற்பாட்டை ஸ்கேன் காட்டியது. இது மிக முக்கிய கண்டுபிடிப்பு என்று வர்ணிக்கும் பேராசிரியர் ஓவன், இனிமேல் இந்த நிலையில் இருக்கும் நோயாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப உணவு கொடுப்பது, உடை மாற்றுவது, அவர்களை குளிப்பாட்டுவது என்று அவர்களின் அன்றாட தேவைகளை அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப செய்ய முடியும் என்று தெரிவிக்கிறார்.

நினைவாற்றலும் தொடர்கிறது
இதே போல இத்தகையவர்களுக்கு சிந்திக்கும் திறன் மட்டுமல்ல, சேதமடைந்த மூளையின் நினைவாற்றலும் தொடர்வதையும் இன்னொரு நோயாளியின் பரிசோதனைகள் நிரூபித்திருக்கின்றன.

கேனடாவைச் சேர்ந்த ஸ்டீவன் கிரஹாம் என்கிற நோயாளியின் மூளை பாதிக்கப்பட்டு அவர் நடைபிணமான பிறகு அவரது சகோதரிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த செய்தியை அவரது மூளை நினைவில் வைத்திருந்தது என்பதையும் அவரிடம் செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஸ்கேன் பரிசோதனைகள் நிரூபித்திருக்கின்றன.

இந்த பரிசோதனைகள் எல்லாமே, வெஜிடேடிவ் ஸ்டேடஸ் என்கிற நடைபிண நிலையில் இருக்கும் மனிதர்களின் மூளை சிந்திக்கும் திறனுடன் இருப்பதை நிரூபிப்பதாக தெரிவித்திருக்கும் பேராசிரியர் ஓவென், இந்த பரிசோதனை முடிவுகள் இத்தகைய நிலையில் இருக்க நேரும் நோயாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் என்பதுடன் அவர்களை பராமரிக்க நேரும் அவர்களின் குடும்பத்தவர்களுக்கும் பயனுடையதாக இருக்கும் என்றும் நம்புகிறார்.

உடல் நடைபிணமாக இருக்க நேர்ந்தாலும் அவர்களின் மூளையின் சிந்திக்கும் செயற்படும் திறன் அவர்களையும் வாழ வைக்க உதவும் என்பதே அவரது நம்பிக்கை.

தென் கொரியாவில் அணுஉலைகள் மூடல்: மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

தென் கொரியாவில் அணுஉலைகள் மூடல்: மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு





தென் கொரியாவில் பாதுகாப்பு கருதி இரண்டு அணுஉலைகள் மூடப்பட்டதையடுத்து, அங்கு கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தென்கொரியாவில் மொத்தமுள்ள 23 அணு உலைகளில், 1000 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இரண்டு அணு உலைகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டன.

இதனிடையே, அணு உலைகள் அமைப்பதற்கான உதிரி பாகங்களை வழங்கிய சில நிறுவனங்கள், பாதுகாப்பு தொடர்பாக போலி ஆவணங்களை அரசிடம் சமர்ப்பித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதனால், தென்கொரிய மக்கள் மத்தியில் அணுஉலைகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்துள்ளது.

இதையடுத்து, நாட்டில் உள்ள 23 அணுஉலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளுமாறு தென்கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதயம் துடிக்கவும் மின்சாரம்.

இதயம் துடிக்கவும் மின்சாரம்.




தாயின் கருவறையில் மூன்று வாரக் குழந்தையாக இருக்கும்போதே, இதயம் துடிக்க ஆரம்பித்துவிடுகிறது. அது தானாகத் துடிப்பது இல்லை. இதயம் இயங்கவும் ஓர் ஆற்றல் தேவைப்படுகிறது. இதயத்தை இயங்கவைக்கும் அந்த மின் உற்பத்தி நிலையம் இதயத்தின் மேல் பகுதியில் வலது அறையில் இருக்கிறது. இதற்குப் பெயர் 'சைனஸ் நோட்'.
மின் விநியோகம் சரியா இருக்கா?

‘சைனஸ் நோட்' பகுதியில் இருந்து இயற்கையான மின் இணைப்புகள் வழியாக இதயத்தின் மற்ற அறைகளுக்கும் மின்சாரம் பாய்கிறது. இந்த மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகத்தில் எங்கேனும் பாதிப்பு ஏற்பட்டால், இதயம் அதிவேகமாகத் துடிக்கும், அல்லது மெதுவாகத் துடிக்கும். இதயம் இப்படிச் சீரற்றுத் துடிப்பதைத்தான் சீரற்ற இதயத் துடிப்பு நோய் என்கிறார்கள்.
ஓவர் கரண்ட் உடம்புக்கு ஆகாது

ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (Atrial fibrillation) என்று சொல்லக்கூடிய இதயத்தின் மேல் அறையில் இருந்து வரும் சீரற்ற அதிவேக மின் உற்பத்திதான் வேகத் துடிப்புப் பிரச்னைக்கு முக்கிய காரணம். 40 வயதுக்கு மேல் நான்கில் ஒருவருக்கு இந்தப் பிரச்னை வர வாய்ப்பு உள்ளது.
ரத்தம் உறைந்து விடும்

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்பு, புகைப் பழக்கம், அதிக மது அருந்துதல், தைராய்டு, நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் காரணமாக வேகத் துடிப்புப் பிரச்னை ஏற்படும். அதிவேகமாக இதயம் துடிக்கும்போது, இதயத்தில் இருந்து ரத்தம் பம்ப் செய்து வெளியேற்றப்படுவதில் ஏற்படும் சிக்கல் காரணமாக ரத்தம் உறைந்துவிடும்.
பக்கவாதம் ஜாக்கிரதை

உறைந்து போன கெட்டியான ரத்தம் மூளைக்குச் செல்லும்போது அடைப்பு ஏற்படுவதால், பக்கவாதம் வரலாம். எனவே, இதனை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெறுவது முக்கியம். இதயத்தின் மேல் அறையில் தோன்றும் வேகத் துடிப்பால் உயிருக்கு ஆபத்து எதுவும் கிடையாது. அதுவே, கீழ் அறையில் இருந்து தோன்றினால், உயிருக்கு ஆபத்து நேரலாம்.
அறிகுறிகள் என்னென்ன?

படபடப்பு, சோர்வு, மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி போன்றவை இதன் அறிகுறிகள். இந்தப் பிரச்னைக்கான அறிகுறிகள் தோன்றும்போது, ஈ.சி.ஜி. பரிசோதனை மூலம் கண்டறிந்துவிடலாம். முடியாதபட்சத்தில், 24 மணி நேரக் கண்காணிப்பு கருவி மூலம் கண்டறியலாம்.

இந்தப் பிரச்னைக்கு மாத்திரை - மருந்துகளின் மூலமும் ரேடியோ ஃப்ரீக்வெவன்ஸி அபலேஷன் என்ற முறையின் மூலமாகவும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அதிவேக இதயத் துடிப்பு உள்ளவர்களில் 50 சதவீதம் பேருக்குத்தான் மருந்து - மாத்திரைகளால், பிரச்னையைக் கட்டுப்படுத்த முடியும். எனினும் வாழ்நாள் முழுக்க மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மெதுவா துடிக்குதா?

இதயம் சிலருக்கு மெதுவாக துடிக்கும். நினைவு இழந்து மயக்கம்போட்டு விழுவது, மூளைக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்காததால் ஏற்படும் கிறுகிறுப்பான மயக்கம், சோர்வு, மூச்சுவாங்குதல் போன்றவை இதன் அறிகுறிகள். இதற்கு மருந்து மாத்திரையால் பலன் இல்லை. 'பேஸ்மேக்கர்'தான் ஒரே தீர்வு என்கின்றனர் மருத்துவர்கள்.
உடற்பயிற்சி செய்றீங்களா?

அதிகமாக உடற்பயிற்சி செய்வது இதயத்திற்கு ஆபத்து என்கின்றனர் நிபுணர்கள். எனவே பெரியவர்கள் வாரத்திற்கு 5 முறை அரைமணிநேரமும், சிறியவர்கள் ஒருமணிநேரமும் வாக்கிங், ஜாக்கிங் செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஓவராக இதயத்தை வருத்தி உடற்பயிற்சி செய்வதை விட வீட்டு வேலைகளை அன்றாடம் செய்வதே சரியான உடற்பயிற்சியாக அமையும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அபூர்வ இன்று சூரிய கிரகணம்: மக்கள் குவிந்தனர்

அபூர்வ இன்று சூரிய கிரகணம்: மக்கள் குவிந்தனர்




பல ஆண்டுகளுக்கு பிறகு அபூர்வமாக காட்சியளிக்கும் சூரிய கிரகணம் இன்று விண்ணில் தோன்றுகிறது.
பசிபிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் தோன்றும் இந்த சூரிய கிரகணம், அவுஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் முழு அளவில் காட்சியளிக்கும்.

இதனை காண்பதற்காக உலகம் முழுவதும் உள்ள வானியல் நிபுணர்களும், சுற்றுலா பயணிகள் அவுஸ்திரேலியாவுக்கு வந்துள்ளனர்.

மேலும் நியூசிலாந்து, இந்தோனேஷியா, சிலி மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகளுக்கு ஓரளவு காட்சியளிக்கும்.

உலக நீரிழிவு தினம்!!! நீரிழிவு நோய் , சில அடிப்படை உண்மைகள்

உலக நீரிழிவு தினம்!!!  நீரிழிவு நோய் , சில அடிப்படை உண்மைகள்



உலக நீரிழிவு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நீரிழிவு நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த 1991ம் ஆண்டில் சர்வதேச நீரிழிவு மையம் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் இந்த விழிப்புணர்வு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
நாளை இந்த தினம் கடைப்பிடிக்கும் வேளையில், இந்நோய் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்...

இன்சுலின் என்ற முக்கிய ஹார்மோன் உற்பத்தியாவதிலும், அதன் செயல்பாடுகளில் குறை நேர்வதாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதை மருந்துகளின் மூலமும், உடற்பயிற்சிகள் மூலமும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்றாலும், இதனால் பலவித நோய்கள் வர வாய்ப்புள்ளதால் குறைந்த வயதில் மரணம் ஏற்பட வழி வகுக்கிறது.

நீரிழிவு நோயில் இரண்டு வகை உண்டு. முதலாம் வகை, இன்சுலினை நம்பியுள்ள நீரிழிவு நோய் என அழைக்கபடுகிறது. இது குழந்தையாக இருக்கும் போதே ஏற்படக்கூடியது ஆகும். 2ம் வகை வயதான பின் வரும் நோய். இதை பெரும்பாலும் மருந்துகள் மற்றும் உடற்பயிற்சி மூலம் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
முதலாம் வகை, சில உடல் எதிர்ப்பு சக்தியால் பாங்கிரியாஸின் பீட்டா செல்கள் அழிக்கப்படுவதால் இன்சுலின் அளவு குறைந்தும்,

 இன்னும் சிலருக்கு இன்சுலினை வீரியம் உள்ளதாக வைக்கும் சக்தி குறைவதாலும் உண்டாகிறது. இதற்கு சர்க்கரை அளவை அவ்வப்போது சரி பார்த்து இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். இது குழந்தைகளையும் இளம் வயதினரையும் தாக்கும். மரபணு குறைபாடு, சுற்றுப்புறம் மற்றும் உடலின் சுய எதிர்ப்பு தன்மை இவற்றால் வரும் இவ்வகை நீரிழிவு நோய்க்கு எந்தவித தடுப்பும் உபயோகப்படாது. நீரிழிவில் பாதிக்கப்பட்டவர்களில் 5ல் இருந்து 10% பேர் இந்த வகை நோயை கொண்டிருக்கிறார்கள்.

நீரிழிவு நோய் உள்ளவர்களில் 90% பேருக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் கொண்டிருக்கிறார்கள். இன்சுலினுக்கு எதிர்ப்பு சக்தி உண்டாவதால் இந்நோய் வருகிறது. இன்சுலினுக்கு தேவை அதிகரிக்க அதிகரிக்க பாங்கிரியாஸ் உற்பத்தியை நிறுத்துகிறது. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், சர்க்கரை செரிமான குறைவு, குடும்பத்தில் ஏற்கனவே சர்க்கரை நோய் இருத்தல், அதிக உடல் இயக்கம் இல்லாதது போன்றவை இதற்கு காரணம்.

மூன்றாவது வகை நீரிழிவு நோய் கருத்தரிக்கும் போது வரும். சில பெண்கள் உடல் எடை அதிகமாக இருந்தால், அவர்களின் குடும்ப வரலாறை பொறுத்து இந்த நீழிவு நோய் வர வாய்ப்புண்டு. குழந்தை பிறந்த பின் இதில் 5% பெண்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் வரக்கூடும்.

நீரிழிவு நோய்க்கான மருந்து

முதலாம் வகை, நீரிழிவு நோய் உள்ளவர்கள் இன்சுலின் ஊசி அல்லது ஒரு பம்ப் கொண்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டாம் வகை நோய் உள்ளவர்கள் உடற்பயிற்சி மூலம் எடையை குறைப்பதோடு சில மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இதை தவிர்த்து கொழுப்புச் சத்தை குறைக்கவும் மாத்திரை எடுத்து கொள்ளவேண்டும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் 16% பேர் இன்சுலின் உபயோகிக்கிறார்கள். மற்றவர்களில் 54% பேர் மாத்திரைகளும் 17% பேர் இரண்டும் உபயோகிக்கிறார்கள். நீரிழிவு நோய் முதலாம் நிலையில் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு சாதாரணமானவர்களை விட அதிகமாக இருக்கும். ஆனால், அதே சமயம் இவர்களை நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்றும் சொல்ல முடியாது.

இவர்களுக்கு உணவு உண்பதற்கு முன் சர்க்கரை அளவு பாதிக்கப்பட்டிருக்கும். அதேபோல, இவர்களுக்கு முன் இரவு முழுவதும் சாப்பிடாமல் இருந்து மறுநாள் காலை அளவு பார்க்கப்படும் போது சர்க்கரை அளவு 100,120 மில்லிகிராம்/ டெசிலிட்டர் இருக்கும். இது சாதாரணமானவர்களின் அளவை விட அதிகம்.
அமெரிக்காவில் பலரின் சர்க்கரை அளவை சரிபார்த்ததில் 4.1 கோடிக்கும் அதிகமானோருக்கு நீரிழிவு நோய்க்கான முதல் நிலை பாதிப்பு உள்ளது தெரியவந்திருக்கிறது. 2005ம் ஆண்டு மட்டும் 20 வயதுக்கும் மேலானவர்களில் 15 லட்சம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

இதய நோய், பக்கவாதம்

நீரிழிவு நோய் இருந்தால் இன்னும் பல நோய்கள் வரக்கூடும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றவர்களை விட 4 மடங்கு அதிகமாக இதய நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு பெறுகிறார்கள். இதில் இதய நோய், பக்கவாதம் வந்தபின் 65% பேர் இறக்கிறார்கள். நீரிழிவு நோய் உள்ளவர்களில் 75% பேருக்கு 130/90க்கு மேல் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மருந்து உட்கொள்கிறார்கள்.

 20 வயதிலிருந்து 74 வயதுக்குள்ளான நீரிழிவு நோயாளிகள் கண் பார்வையை இழக்கிறார்கள். ஆண்டுக்கு 24,000 பேர் புதிதாக கண் பார்வை இழப்பதாக சொல்லப்படுகிறது. சிறுநீரக கோளாறு வரவும் நீரிழிவு நோய் முதல் காரணம் ஆகிறது. ஆண்டுக்கு 44% புதிய சிறுநீரக கோளாறு உள்ள நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள்.  2002ம் ஆண்டில் நீரிழிவு நோய் உள்ளவர்களில் 1,50,000க்கும் அதிகமானோர் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு டயாலிசிஸ் செய்து கொள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

 60 முதல் 70% வரையான நீரிழிவு நோய் உள்ளவர்கள் நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாகிறார்கள். கை கால் விரல்களில் உணர்ச்சி அற்றுப்போதல், உணவு செரிக்கும் சக்தி குறைவது போன்றவை ஏற்படுகின்றன. சிலருக்கு கால்கள் நீக்கபட வேண்டிய நிலைகூட வருகிறது. பற்களும் அதிகளவு பாதிக்கப்படுகிறது.  பெரும்பாலோருக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோயே அதிகம் ஏற்படுகிறது என்பதால் சீரான உடற்பயிற்சி, உணவு கட்டுபாடு மூலம் நீரிழிவு நோயை தடுக்க முயற்சி செய்யலாம்.

''பிளாக் டீ'' குடித்தால்  நோய் கட்டுப்படுமாம்

''நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'' என்ற கூற்றை நாம் பலமுறை நினைவுகூர்ந்தாலும், அந்த குறைவற்ற செல்வத்தை பெறுவதில் நம்மில் பலர் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம். நாள்தோறும் நிகழ்ந்து வரும் விஞ்ஞான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப, நோய்களும் பல்வேறு நிலைகளில், வெவ்வேறு தன்மைகளில் மாற்றமடைந்து வருகின்றன.

 மனிதகுலத்தில் எண்ணற்ற நோய்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் தலையாயதும், மனிதனின் உடலை சிறிது சிறிதாக அழிவுக்கு இட்டுச்செல்வதும் நீரிழிவு நோய்தான். அதனையொட்டி, பல ஆய்வுகள் உலக அளவில் நடத்தப்பட்டு, அன்றாடம் புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அந்தவகையில், லண்டன் நகரில் நீரிழிவு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பிளாக் டீ அருந்தினால் நீரிழிவு ஒரளவு கட்டுப்படும் என்ற புதிய தகவல் வெளியாகிவுள்ளது.
“பிளாக் டீ‘ யில் இருக்கும் வேதியியல் பொருளுக்கு நீரிழிவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதனையும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் சாப்பிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அதற்கு மேல் சென்றால் அதுவும் ஆபத்தில் முடியும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். ஆகவே, நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இதனை ஓர் வழிமுறையாக எடுத்துக் கொண்டாலும், அதனை வராமல் தடுப்பதே நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அம்சமாகும்.

நீரிழிவுக்கு தீர்வு

சென்னை ராயபுரத்தில் அமைந்திருக்கும் எம்.வி. நீரிழிவு மருத்துவமனை மறைந்த பேரா. எம்.விஸ்வநாதன், 1954 ஆம் ஆண்டு இந்தியாவின் மூத்த நீரிழிவு நிபுணராக விளங்கியவரால் நிறுவப்பட்டது. 1971,ல், இது நீரிழிவு மருத்துவத்துக்கான சிறந்த மருத்துவமனையாகி விட்டது. எம்.வி. நீரிழிவு மருத்துவமனை மற்றும் நீரிழிவு ஆராய்ச்சி மையமானது நீரிழிவு ஆராய்ச்சி, கல்வி மற்றும் பயிற்சிக்கான உலக சுகாதார நிறுவன கூட்டு மையமாக ஜெனிவா, உலக சுகாதார நிறுவனத்தால் நியமிக்கப்பட்டுள்ளது. எம்.வி. நீரிழிவு மருத்துவமனை தென்சென்னை பகுதியில் மயிலாப்பூர்/பெருங்குடியில் 2 மையங்களை ஆரம்பித்துள்ளது

மயிலாப்பூர்/பெருங்குடியில் அமைந்துள்ள எம்.வி. நீரிழிவு மருத்துவமனையானது பல்வேறு வசதிகள் மற்றும் பல்வேறு நீரிழிவு பரிசோதனைத் திட்டங்கள் மூலம் நீரிழிவு மக்களுக்கு தேவையானவற்றை வழங்கி வருகிறது. எங்கள் மயிலாப்பூர், பெருங்குடியில் மையம் அமைந்துள்ளது என்று மருத்துவமனையின் தலைவர் , தலைமை நீரிழிவு நிபுணர் டாக்டர் விஜய் விஸ்வநாதன், விஞி., றிலீ.ஞி., திஸிசிறி (லண்டன் , கிளாஸ்கோ) தெரிவித்தார்.

தென்இந்தியாவில் புகழ்பெற்ற
டாக்டர் மோகன்தாஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையங்கள்

தென்னிந்தியாவில் டாக்டர் மோகன்தாஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மருத்துவமனை 13 இடங்களில் உள்ளன. சென்னை கோபாலபுரத்தில் தலைமை மையமும், பிற 5 இடங்களில் கிளைகள் செயல்படுகிறது. சென்னையில் 75 படுக்கை வசதி உள்ள மருத்துவமனை உள்ளது. இதில் உணவியல் ஆலோசனை, உடற்தகுதி ஆலோசனை, நீரிழிவு விழிப்புணர்வு சேவை, மன அழுத்தத்திற்கான ஆலோசனை, பிசியோதெரபி, பல் சிகிச்சை என நீரிழிவு கோளாறுகள் அனைத்திற்கும சிகிச்சை வசதிகள் உள்ளன.

டாக்டர் வி.மோகன்தாஸ் கூறியதாவது:, 2,ம் வகை நீரிழிவு நோய் குழந்தைகளை தாக்குவதில்லை. 10 வயதுக்கு குறைவான குழந்தை அதிக உடல் பருமன், பார்வை மங்கல், அடிக்கடி நோய் தொற்று மற்றும் தீடீரென எடை குறைதல் இதன் அறிகுறியாகும். கழுத்து, அக்குள் பகுதிகளில் கறுப்பு வெல்வெட் நிற தோல் மாறுதல் இருந்தால் உடல் பருமனானவர்களுக்கு 2,ம் வகை நீரிழீவு முன்னதாகவே வரக்கூடும். டாக்டர்கள் அடங்கிய மருத்துவக்குழு மூலம் சமீபத்தில் அரிசி பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பிரௌன் அரிசியின் குணங்கள் நீரிழிவுக் கட்டுப்பாட்டில் பங்காற்றும் விதம் பற்றி கண்டுபிடிக்கப்பட்டது.

மின்னல் அப்படியே நிலத்தில் வீழுமா?

மின்னல் அப்படியே நிலத்தில் வீழுமா? 




 மின்னல் வானில் இருந்து நிலத்தைத் தாக்கும். அதனை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் மின்னல் அப்படியே நிலத்தில் வீழ்ந்தால் எப்படி இருக்கும் ? இதனை எவராவது படம் பிடித்துள்ளார்களா ? இல்லையே ... அப்படி மின்னல் என்ன நிலத்தில், இல்லையேல் மலையில் படார் என வீழ்ந்துவிடுமா என்ன ? அப்படி நடக்க சான்ஸே இல்ல. பிரித்தானியாவின் பிரபல புகைப்பட நிபுணர் ஒருவர் அப்படி ஒரு கற்பனையை மனதில் வளர்த்துள்ளார். இதனைப் புகைப்படமாக்க விரும்பியுள்ளார். ஆனால் அதனை கிராபிக்கில் எடுக்க அவர் விரும்பவில்லை. தத்துரூபமாக இருக்கவேண்டும் என்று நினைத்தார்.

புகைப்படம் எடுக்கும்போது சில மில்லி செக்கனில் படம் பதிவாகிவிடும். அப்படி செய்யாமல் 10 அல்லது 15 நிமிடங்களுக்குப் பின்னர் படம் வதிவாவது போல(ஆனால் 10 நிமிடமாக படம் எடுக்கும் வண்ணத்தில்) அவர் எடுத்துள்ளார். எனவே டாச் லைட் ஒன்றை ஒருவர் எடுத்துக்கொண்டு ஒரு இடத்தில் இருந்து மற்றுமொரு இடத்துக்கு 10 நிமிடம் ஓடினால், அந்த 10 நிமிடத்தையும் அப்படியே போடோவாக எடுக்க அவர் முற்பட்டுள்ளார். அதன் பிரதிபலிப்பே இதுவாகும். பிரமிக்க வைக்கும் இப் புகைப்படங்கள் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆங்கில ஊடகங்கள் இப் புகைப்படங்களைப் பிரசுரித்துள்ளது.

உண்மையாகவே மின்னல் நிலத்தில் வீழ்வது போல உள்ளது ஆனால் இது உண்மையில்லை.





யாழில் இளம் பிச்சைக்காரி ஒருவரின் மர்மம்

யாழில் இளம் பிச்சைக்காரி ஒருவரின் மர்மம்





யாழில் உள்ள திருநெல்வேலிச் சந்தையில் காலை முதல் மாலைவரை பிச்சை எடுக்கும் ஒரு இளம் பிச்சைக்காரி இருக்கிறார். இவரைப் பார்த்து வியக்காதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். காரணம நல்ல இளமையாக இருக்கும் இவருக்கு வயது 20 இருக்கலாம். நல்ல உடை அணிந்திருப்பார். கையில் 2 வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்றும் இருக்கும். ஆனால் அக்குழந்தை எப்போதும் தூங்கிக்கொண்டுதான் இருக்கும். இதனால் இக் குழந்தை ஒரு பொம்மை என்று எல்லாம் நீங்கள் கற்பனையில் மிதக்கவேண்டாம். அது உயிருள்ள ஒரு குழந்தை தான். அனால் அங்கே நடக்கும் சம்பவம் தான் பெரும் அதிர்சியாக உள்ளது. குறிப்பிட்ட இப் பெண் அருகில் உள்ள கடை ஒன்றுக்குச் சென்று அங்கே குழந்தைக்கு பிரிட்டோன் ஷிறம் என்னும் மருந்தை அடிக்கடி கொடுப்பதாக முறைப்பாடு எழுந்துள்ளது. இந்த மருந்தைக் குடித்தால் குழந்தை உறங்கிவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆனால் பாரிய பின்விளைவுகளை இம் மருந்து ஏற்படுத்தும் என்றும் சொல்கிறார்கள். இந் நிலையில் காலை முதல் இரவு வரை இக் குழந்தை தூங்கிய வண்ணமே இருப்பதாக, இதனை அவதானித்த பலர் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை குறிப்பிட்ட பெண் தனக்குச் சேரும் பணத்தை மாலையில் வரும் ஆண் ஒருவரிடம் கையளிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இக் குழந்தை இவருடையது தானா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது. இதன் காரணமாகத்தான் குழந்தை சற்று விழித்துக்கொண்டால், உடனடியாகச் சென்று பிரிட்டோன் மருந்தைக் கொடுக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. குறிப்பிட்ட இளம்பெண்ணுக்கு கோப்பாய் பொலிசாரிடம் செல்வாக்கு வேறு உள்ளதாம்,

இது தொடர்பாக கோப்பாய் பொலிசாரிடம் முறையிடச் சென்றவர்களை, பொலிசார் திருப்பி அனுப்பியும் உள்ளார்கள் என்றால் பாருங்களே. யாழில் என்ன தாம் நடக்கிறதோ தெரியவில்லை என்று புலம்புகிறார்கள் தமிழர்கள்.

லண்டன் புறநகர்ப்பகுதியில் இந்திய சினிமா பாணியில் திருட்டு !

லண்டன் புறநகர்ப்பகுதியில் இந்திய சினிமா பாணியில் திருட்டு !





லண்டனில் உள்ள புறநகர்ப் பகுதியான ஈஸ்ட்காம் பகுதியில் சில வினோதமான திருட்டுகள் நடக்க ஆரம்பித்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. காரை உடைத்து டாம் டாம்மை களவாடுவது, வீட்டை உடைத்து நகைகளைக் கொள்ளையடிப்பது என்பது வழமையாக நடக்கும் விடையம். ஆனால் வீட்டிற்கு முன்னால் நிற்க்கும் காரில் இருந்து பெற்றோலைத் திருடும் செயல்களை நாம் இந்திய சினிமாவில் தான் பார்த்திருக்கிறோம். இது தற்போது லண்டனில் நிஜமாகவே நடக்க ஆரம்பித்துள்ளது என்றால் நம்புவீர்களா ? நம்பித் தான் ஆகவேண்டும் ! நேற்றைய தினம் தமிழர் ஒருவர் வழமைபோல காலை எழுந்து வேலைக்குச் செல்ல காரை ஸ்டாட் செய்துள்ளார். கார் ஸ்டாட் ஆகவில்லை, ஆனால் பெற்றோல் முடிவடைந்துவிட்டதாக முள்ளுக்கம்பி காண்பித்துள்ளது. இவர் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார். காரணம், வார இறுதியில் தான் இவர் முழு டாங் பெற்றோல் அடித்திருந்தார்.

தனது காரில் ஏறுவதற்கு முன்னதாக, வீதியில் சற்று பெற்றோல் வாசனை வருவதை ஏற்கனவே உணர்ந்திருந்த அவர், காரின் பின்புறத்தை பார்வையிட்டுள்ளார். பின்னர் அதனை அருகில் உள்ள திருத்தும் நிலையத்துக்கு கொண்டு சென்ற பின்னரே, பெற்றோல் டாங்கில் 3 துளைபோட்டு அதில் இருந்த முழுப் பெற்றோலையும் யாரோ திருடிய விடையம் தெரிந்துள்ளது. சரி இது எப்படி பெற்றோல் திருட்டு என்று கூறமுடியும் ? யாரவது வேண்டும் என்று செய்திருக்கலாம் தானே என்ற வாதங்களும் இங்கே எழக்கூடும். ஆனால் குறிப்பிட்ட அதே இடத்தில் உள்ள வாகனத் திருத்த நிலையத்திடம் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இவ்வாறு வந்துள்ளது.

அவை அனைத்திலும் இவ்வாரு துளைகள் போட்டு பெற்றோல் திருடப்பட்டுள்ளது பின்னர் தெரியவந்துள்ளது. இருக்காதா பின்ன ? தங்கம் விக்கிற விலைமாதிரி பெற்றோல் விலையும் லண்டனில் அபரிவிதமாக அதிகரிச்சிருக்கே ! பின்னர் அதனைத் திருடாமல் விடுவார்களா திருடர்கள் என்று மனம் நொந்துகொள்கிறார்கள் தமிழர்கள். காரை உடைத்தால் தான் எலாம் சத்தம் போடும். ஆனால் மெல்லியதாக துளைபோட்டு பெற்றோலை எடுத்தால் அது என்ன சத்தம் போடவா போகுது ? நாளை காலை நீங்கள் வேலைக்கு போகும்போது, உங்கள் காருக்கும் இது நடக்கலாம் ! எனவே மக்களே ஜாக்கிரதை !

Monday, November 12, 2012

தரை தட்டிய 12 நாட்களுக்கு பிறகு கடலுக்குள் இழுக்கப்பட்டது பிரதிபா சரக்கு கப்பல்

தரை தட்டிய 12 நாட்களுக்கு பிறகு கடலுக்குள் இழுக்கப்பட்டது பிரதிபா சரக்கு கப்பல்






பட்டினப்பாக்கம் அருகே தரைதட்டிய கப்பல் 12 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை வெற்றிகரமாக கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டது.
கடந்த மாதம் 31ம் தேதி வீசிய நிலம் புயலில் சிக்கிய பிரதிபா காவேரி சரக்கு கப்பல் எலியட்ஸ் கடற்கரை அருகே ஊரூர்குப்பம் பகுதியில் கரை ஒதுங்கியது. பின்னர் அலையின் சீற்றத்தால் நகர்ந்து பட்டினப்பாக்கம் அருகே தரை தட்டி நின்றது. அதை மீட்கும் பணி கடந்த 5ம் தேதி தொடங்கியது.

 கப்பலை கடலுக்குள் இழுக்க மாளவியா, ரத்னா என்ற இழுவைக் கப்பல்கள் சென்னை வந்தன. மீட்பு பணியில் ஈடுபட ஒரு கப்பலுக்கு மட்டுமே வாடகை தரமுடியும் என கப்பல் நிர்வாகம் கூறியதால் மாளவியா என்ற இழுவைக் கப்பல் மட்டும், தரை தட்டிய கப்பலை இழுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.

முதலில் நைலான் கயிறு கட்டி கப்பலை இழுத்தனர். கயிறு அறுந்து விழுந்ததால் மீட்பு பணி தோல்வி அடைந்தது. மேலும் கப்பல் 10 அடி ஆழத்துக்கு மண்ணில் புதைந்திருந்தது. இதனால் கப்பலை நகர்ந்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து கப்பலின் எடையை குறைக்க முடிவு செய்தனர். அதில் இருந்த 5500 டன் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து, இரும்பு கயிறு மூலம் இழுக்கும் முயற்சி தொடர்ந்தது.

இதனால் தரை தட்டிய கப்பல் 120 டிகிரி கடல்நோக்கி நகர்ந்தது. நேற்று மதியம் முதல் பிரதிபா காவேரி தரை தட்டியப்பகுதியில் கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. மாலை 5 மணியளவில் அலையின் வேகம் மேலும் அதிகரிக்க தொடங்கியது. அலையின் காரணமாக நீர் மட்டம் உயர்ந்தால் எளிதில் கப்பலை கடலுக்குள் இழுத்து சென்று விடலாம் என்று மீட்பு குழுவினர் கருதினர். அப்போது, முதன்மை இன்ஜினியர் ஆலன்ப்ளூ மாலை 6.20 மணியிலிருந்து 6.45 மணிக்குள் ராட்சத அலை வரும் என தெரிவித்தனர். அந்த நேரத்திற்காக மீட்பு குழுவினர் காத்திருந்தனர்.

சரியாக மாலை 6.20 மணிக்கு வந்த ராட்சத அலை மீட்பு பணிக்கு சாதகமாக இருந்ததால், கப்பல் எளிதாக இழுக்கப்பட்டு கடலுக்குள் நகர்ந்தது. இதை பார்த்ததும் அங்கு திரண்டு இருந்த லட்சக்கணக்கான மக்கள் கையை அசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சரக்கு கப்பல் மறையும் வரை காத்திருந்துவிட்டு பின்னர் புறப்பட்டு சென்றனர்.

செல்போனும் கேர்ள் பிரண்டும் விபத்துகள் அதிகரிக்க காரணம்

செல்போனும் கேர்ள் பிரண்டும் விபத்துகள் அதிகரிக்க காரணம்






ராய்ப்பூர்: ‘கேர்ள்பிரண்ட், பைக், செல்போன்தான் விபத்துகள் அதிகரிக்க காரணம் என சட்டீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் பேசினார். அவரது பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டம் தெரிவித்துள்ளன.சட்டீஸ்கர் முதல்வர் ராமன்சிங், ராய்ப்பூரில் உள்ள ஒரு மருத்துவ  கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியதாவது:மாநிலத்தில் நடக்கும் விபத்துகளில் இறப்பவர்களில் 55 முதல் 60 சதவீதம் பேர் இளைஞர்களாவே உள்ளனர். ஒரு நல்ல பைக், நல்ல மொபைல், நல்ல கேர்ள்பிரண்ட். இந்த மூன்றும் இருந்தால் விபத்துகள் அதிகரிக்கத்தான் செய்யும். இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது இளைஞர்கள் செல்போன் பேசிக் கொண்டு பைக் ஓட்டி விபத்துக்கு ஆளாகிறார்கள். அல்லது காதலிகளை பைக்கில் வைத்துக் கொண்டு வேகமாக பறக்கிறார்கள். அதிக வேகம் ஆளைக் கொல்லும் என்பது தெரியாமல் இருக்கிறார்கள். அந்த பழக்கத்தையும் இளைஞர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு ராமன் சிங் பேசினார்.அவரது பேச்சுக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரவீந்திர சவுபே கூறுகையில், மாநிலத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுக்க முடியாமல் மாநில அரசு தோல்வியை தழுவி விட்டது. மோசமான சாலைகள் மற்றும் போக்குவரத்து துறையில் நடைபெற்றுள்ள ஊழல் ஆகியவையே விபத்துகளுக்கு முக்கிய காரணங்கள். ஆனால் மக்களை திசை திருப்பும் விதமாக ராமன் சிங் பேசியுள்ளார் என்றார்.

மைசூர் ராஜாவின் 200 ஆண்டு பழமையான சாரட் விரைவில் ஏலம்

மைசூர் ராஜாவின் 200 ஆண்டு பழமையான சாரட் விரைவில் ஏலம்






மைசூர் மகாராஜாவுக்கு சொந்தமான 200 ஆண்டுகள் பழமையான சாரட் வண்டி பிரிட்டனில் இந்த மாதம் 24ம் தேதி ஏலத்துக்கு வர உள்ளது. நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த இந்த சாரட் வண்டியை பிரிட்டன் மன்னர் குடும்பத்தினர் வரும் போது அவர்களுக்காக பயன்படுத்தப் பட்டுள்ளது. 1974ம் ஆண்டில் மகாராஜாவால் வழங்கப்பட்ட இந்த சாரட் வாகனம், ஆஸ்திரேலியாவில் அந்த ஆண்டே ஏலம் விடப்பட்டது. தற்போது இது ரூ.87 லட்சம் வரை விலை போகும் என தெரிகிறது.