Wednesday, August 6, 2014

உலக நாடுகளை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்

உலக நாடுகளை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்


ஆப்ரிக்க நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது எபோலா வைரஸ். இந்த வைரசின் தாக்குதலால் இந்த ஆண்டில் மட்டும் கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா லியோன் ஆகிய ஆப்பிரிக்கா நாடுகளில் 1,201 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 672 பேர் பலியாகியுள்ளனர்.

பரவிய விதம்

விலங்கிலிருந்து இந்த வைரஸ் மனிதர்களை தாக்கியுள்ளது. குறிப்பாக பழம் தின்னி வவ்வாலிலிருந்து பரவியுள்ளது.

இவ்வைரஸ் தாக்கியுள்ள மனிதர்களிலிலிருந்து மற்ற மனிதர்களுக்கு ரத்தத்தின் மூலம் பரவுகிறது.

எபோலா வைரஸ் தாக்கினால் குடும்ப உறுப்பினர்களும், சிகிச்சை அளிப்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.

இல்லையென்றால் அவர்களுக்கும் எளிதில் பரவும் அபாயம் உள்ளது.காங்கோ நாட்டின் எபோலா நதிக்கரையில் முதன்முதலில் பரவியதால் இதற்கு "எபோலா வைரஸ்" என பெயரிடப்பட்டது.

அறிகுறிகள்

அறிகுறி 1: காய்ச்சல், பலவீனம், தலை, தசை, தொண்டை வலி. 
அறிகுறி 2: மத்திய நரம்பு மண்டலத்தை தாக்குகிறது. 
அறிகுறி 3: நோய் முற்றிய நிலையில் ரத்தவாந்தி, கண், மூக்கு, வாயில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது.

உலக நாடுகள் தீவிரம்

இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

பாதிப்பிற்கு தீர்வு காண்பது எளிதல்ல என்பதால் மேற்கு நாடுகளில் இருந்து இங்கிலாந்திற்கு வைரஸ் பாதிப்பு தொற்று பரவுவதை தடுக்க அந்நாட்டின் சுகாதார துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நிதியுதவி

எபோலா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மருத்துவம் அளித்து, நோய் பாதிப்பை தடுக்கும் வகையில் அந்நாடுகளுக்கு நிதி உதவி அளிப்பது குறித்து உலக வங்கியின் கூட்டம் வாஷிங்டனில் நடந்தது.

இதில் 35 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு, எபோலா நோய் பாதித்த 3 மேற்கு ஆப்ரிக்க நாடுகளுக்கு ரூ.1,200 கோடி நிதி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனை உலக வங்கி அறிவித்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

நோய் தாக்கியவரிடமிருந்து தள்ளி இருக்க வேண்டும்.

மருத்துவர்களும், குடும்ப உறுப்பினர்களும் தகுந்த பாதுகாப்பு கவசங்கள் அணிந்த பிறகே அருகே, அவர்களின் அருகே செல்ல வேண்டும்.

நோய் தாக்குதலால் பலியான உடலை, மருத்துவரின் அறிவுரையுடன் கவனமாக அப்புறப்படுத்த வேண்டும்.

மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்போகும் கோழி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்போகும் கோழி: ஆய்வில் அதிர்ச்சி தகவல் 




கறிக்கோழி சாப்பிடுவோருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் வேலை செய்யாது, இது மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும் என்று எச்சரிக்கிறது இந்திய விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) நடத்திய ஆய்வு. இதற்கு காரணம் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பதுதானாம்.

இயற்கை விவசாயம் எங்கே? 
இயற்கைக்கு முரணாக மனிதன் எதை செய்தாலும் அது மனிதனுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கு பல உதாரணங்கள் கொட்டி கிடக்கின்றன. இயற்கை விவசாயத்தை விடுத்து, பூச்சிக்கொல்லி, உரம் என செயற்கையை திணிக்க தொடங்கியதால்தான் புற்றுநோய் பெருகியது என ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன.

வாரந்தோறும் சிக்கன் அவசியமா? 
அதேபோலத்தான் கறிக்கோழியும். முன்பெல்லாம் கிராமங்களில் கோயில் கொடை விழாக்களிலும், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற அந்தந்த மதத்தாரின் கொண்டாட்ட தினங்களில்தான் மட்டன், சிக்கன் சாப்பிடுவார்கள். ஆனால் நகரமயமாதல், விளம்பரமயமாதல் தாக்கத்தால் வாரம்தோறும் வீட்டில் சிக்கன் சாப்பிடுவதை வழக்கமாக்கியதன் விளைவு, நாட்டு கோழிகள் பற்றாக்குறையானது. இதனால், கோழியின் உற்பத்தியை பெருக்க பிராய்லருக்கு நகர்ந்தது சமூகம்.

ஆன்ட்டி பயாட்டிக் ஆபத்து 
பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த  முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மனிதர்களுக்கு மருந்து வேலை செய்யாது 
கறிக்கோழிக்கு அதிகம் ஆன்ட்டி பயாடிக் செலுத்தப்படுவதால், அதனை உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஆன்ட்டி பயாடிக் உடலில் கலந்துவிடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பலவற்றுக்கு பல்வேறு ஆன்ட்டி பயாடிக்குகள் மருத்துவர்களால் அளிக்கப்படுகின்றன. ஆனால் பிராய்லர் கோழி சாப்பிடுவோருக்கு டாக்டர்கள் அளிக்கும் சாதாரண ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வேலை செய்யாது. இதனால் டாக்டர்கள் மருந்தின் வீரியத்தை அதிகப்படுத்துவார்கள். மருந்தின் வீரியம் அதிகமானால் உடல் சோர்வுறும், பல பக்க விளைவுகள் ஏற்படும்.

பரிசோதனை கூடத்தில் ஆய்வு 
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தம் 70 கோழிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன. விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மாசுக் கண்காணிப்பு பரிசோதனைச் சாலையில் அவை ஆய்வு செய்யப்பட்டன. அந்த கோழிகளினர் ஈரல், தசை, கிட்னி ஆகியவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 40 சதவீத கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்டி பயாட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அளவுக்கு அதிகம் 
விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மாசுக் கண்காணிப்பு பரிசோதனைச் சாலையின் தலைமை இயக்குனர் சுனிதா நரைன் கூறும்போது, "ஆன்ட்டி பயாடிக் பயன்பாடுகள் மனித, மருத்துவப் பயன்பாடுகளையும் மீறிச் சென்றுள்ளது, கால்நடை வளர்ப்பு தொழிற்துறையினர் கோழிகள் எடை கூடுவதற்கும், வேகமாக வளர்வதற்கும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அதிகம் பயனபடுத்துகின்றனர். இது தவறான அணுகுமுறை" என்றார்.

கோழி உடலில் பல வகை மருந்துகள் 
பொதுவாக கோழிவளர்ப்பில் 6 ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது: ஆக்சிடெட்ரா சைக்ளின், குளோர்டெட்ராசைக்ளின், டெட்ராசைகிளின் வகையறாவான டாக்சிசைக்ளின், என்ரோபிளாக்சசின், சிப்ரோபிளாக்சசின், நியோமைசின் ஆகியவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் 5 வகை மருந்துகள் சோதனைக்கு எடுக்கப்பட்டன அனைத்து கோழிகளிலும் காணப்பட்டன. அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் முறையற்று பயன்படுத்தப்படுகிறது இதன் மூலம் உறுதியாகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மனிதன் மாறிவிட்டான் 
சிக்கனால், மனிதர்கள் பாதிக்கப்படுவதை சிஎஸ்இ ஆய்வாளர்கள் ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். 2002ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டுவரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பெரும்பாலான நோயாளிகளுக்கு சிப்ரோபிளாக்சசின், ஆக்சிடெட்ரா சைக்ளின், டாக்சிசைக்ளின் போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் வேலை செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டது.

டைபாய்டு ஏற்பட வாய்ப்பு 
சிப்ரோபிளாக்சசின் என்ற ஆன்ட்டி பயாடிக் மூக்கு முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களையும் எதிர்க்கும் மருந்தாகும். இதன் பலனை மனித உடல் இழக்கும்போது டைபாய்டு உள்ளிட்ட பிற கிருமித் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக மாறிவிடும், உண்மையில் இந்தியாவில் இது அதிகரித்திருப்பதாக சிஎஸ்இ எச்சரித்துள்ளது. இறைச்சி உற்பத்தித் தொழிற்துறையில் அதிகமாக ஆன்ட்டி பயாடிக் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அரசு கடும் சட்டங்களையும் கண்காணிப்பு முறையையும் கொண்டு வரவேண்டும் என்று சி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. இனியாவது இயற்கைக்கு எதிராக மனித குலம் திரும்பாமல் இருக்க வேண்டும்.