Friday, January 4, 2013

உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிடக் கூடாத உணவுகள்!!!

உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிடக் கூடாத உணவுகள்!!!


எவ்வளவு தான் உடற்பயிற்சியை சரியாக செய்தாலும், சாப்பிடுவதில் தவறு செய்கிறோம். அதாவது நாம் உணவை சாப்பிடுகிறோம் என்றால் அதற்கென்று நேரம் உள்ளது. அந்த நேரத்தை சரியாக பின்பற்றி சாப்பிடாமல் இருந்தால், அதற்கான விளைவுகளை நேரிடக் கூடும். அதிலும் மற்ற நேரங்களில் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகளை விட, உடற்பயிற்சி செய்து முடித்த உடனேயே, கண்ட கண்ட உணவுகளைச் சாப்பிட்டால் தான் மிகவும் ஆபத்தானது.அதுமட்டுமின்றி நிபுணர்கள் பலர், உடற்பயிற்சி செய்த பின்னர் சாப்பிடக்கூடிய உணவுகள் என்றால் அது காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், தண்ணீர் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகள் தான் என்று கூறுகின்றனர். ஏனெனில் உடற்பயிற்சியின் போது உடலில் உள்ள குளுக்கோஸானது எரிபொருளாக மாறுகிறது. எனவே இந்த நேரம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடாமல் இருக்க வேண்டும். இப்போது அவ்வாறு உடற்பயிற்சிக்குப் பிறகு சாப்பிடக் கூடாத உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

பழ ஜூஸ்

எவ்வளவு தான் பழங்கள் உடலுக்கு நல்லதாக இருந்தாலும், உடற்பயிற்சிப் பின்னர் உடனே சாப்பிடக் கூடாது. இதனால் அதில் உள்ள சர்க்கரை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும். ஒருவேளை ஏதாவது குடிக்க வேண்டுமென்று தோன்றினால், தண்ணீர் அல்லது ஐஸ் துண்டுகள் போட்ட மூலிகை டீ அல்லது இளநீரை குடிக்கலாம். இது மிகவும் ஆரோக்கியமானது.

முட்டை

முட்டையானது உடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிடக்கூடிய உணவுப் பொருள் தான். ஏனெனில் அதில் உள்ள புரோட்டீன் மற்றும் கோலைன் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் அவற்றை பொரியல் செய்து சாப்பிட கூடாது. அப்போது அதில் கொழுப்புகள் அதிகமாக இருக்கும். எனவே அதனை வேக வைத்து சாப்பிடுவது தான் நல்லது


மில்க் ஷேக்

பொதுவாக மில்க் ஷேக் உடலுக்கு நல்லது தான். ஆனால் அந்த மில்க் ஷேக்கை பழங்களால் செய்து சாப்பிடும் போது, அதில் சர்க்கரை அதிகமாகிவிடும். எனவே அவ்வாறு சாப்பிடுவதை தவிர்த்து, பழங்களுக்குப் பதிலாக பாதாம் சேர்த்து செய்யலாம் அல்லது சாதாரண பாலாக குடிக்கலாம்.

காய்கறிகள்

காய்கறிகளை வேக வைக்காமல் சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு அப்படியே வரும். ஆனால் அவற்றையே உடற்பயிற்சிக்குப் பின்னர் உடனே சாப்பிட்டால், உடற்பயிற்சி செய்ததே வீணாகிவிடும்.

பிரட்

வெள்ளை பிரட் எனப்படும் மைதாவால் ஆன பிரட் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சிக்குப் பின், இந்த பிரட் சாப்பிட்டால், அவை உடலில் செல்லும் போது மிகவும் எளிதில் சர்க்கரையாக மாறிவிடும். எனவே அப்போது வேண்டுமெனில் நவதானியங்களால் ஆன பிரட்டை(கோதுமை பிரட்) சாப்பிடலாம்.

சீஸ்

 நீண்ட தூரம் ஓடியப் பின்பு, சீஸ் உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் உப்பு அதிகமாக உள்ளது. எனவே இத்தகைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.


பதப்படுத்தப்பட்ட இறைச்சி

உடற்பயிற்சி செய்தப் பின்னர், பதப்படுத்தப்பட்ட இறைச்சியால் செய்யப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் கொழுப்புகள் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும். இதனால் அவை செரிமான மண்டலத்தின் இயக்கத்தை குறைத்துவிடும்.

மோட்டார் பைக் பின் சீட்டில் பெண்கள் அமர தடை! “பெண் போல அடக்கமாக இல்லை”!!

மோட்டார் பைக் பின் சீட்டில் பெண்கள் அமர தடை! “பெண் போல அடக்கமாக இல்லை”!!



இந்தோனேசியாவில் உள்ள ஒரு மாகாண அரசு, பெண்கள் மோட்டார் பைக்கின் பின் சீட்டில் இரண்டு பக்கம் கால் போட்டு அமர்ந்து பயணம் செய்வதை தடை செய்துள்ளது. இஸ்லாமிய ஷாரியா சட்டத்தில், மோட்டார் பைக்கின் பின்சீட்டில் பெண்கள் அமர்ந்து செல்வது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விஷயம் என, மாகாண அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில், ஒரேயொரு மாகாணத்தில்தான் இஸ்லாமிய ஷாரியா சட்டம் அமலில் உள்ளது. ஆச்சே மாகாணத்தில் இந்த உத்தரவு, அனைத்து அரசு அதிகாரிகள், மற்றும் காவல்துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த 30 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் இந்த உத்தரவு, 30 நாட்களின் பின் நிரந்தர சட்டமாக்கப்படும்.

மாகாண மேயர் சுவாய்தி யாஹ்யா, “மோட்டார் பைக்கின் பின்சீட்டில் பெண்கள் அமர்ந்து செல்வது இஸ்லாமிய ஷாரியா சட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை. ஒரு பெண், பெண் போல அமரவேண்டும் என்கிறது ஷாரியா சட்டம். மோட்டார் பைக்கின் பின்சீட்டில் பெண்கள் இரண்டு பக்கம் கால் போட்டு அமர்ந்து செல்லும்போது, ஒரு பெண், ஆண்போல அமர்ந்து செல்கிறார். அடக்க ஒடுக்கமாக இல்லை. அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தச் சட்டம், மற்றைய மாகாணங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய அமைப்புகளே, இந்த உத்தரவை எதிர்த்து குரல் கொடுத்துள்ளனர்.

ஆப்பிள் அறிவிப்பு: “ஐபோன் ஓனர்கள் நள்ளிரவில் துயில் எழுவதை தடுக்க முடியவில்லை!”

ஆப்பிள் அறிவிப்பு: “ஐபோன் ஓனர்கள் நள்ளிரவில் துயில் எழுவதை தடுக்க முடியவில்லை!”




ஆப்பிள் நிறுவனம், லட்சக்கணக்கான ஐபோன் வாடிக்கையாளர்கள் நள்ளிரவில் துயில் எழுப்பப்படுவதை தம்மால் சரி செய்ய முடியவில்லை என இன்று அறிவித்துள்ளது. கடந்த 1-ம் தேதியில் இருந்து இந்த கோளாறு ஐபோன்களில் உள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

ஐபோனில் ‘do not disturb’ செயல்பாடு உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் போன்கள் சைலென்ஸ் மோடுக்கு ஆட்டோமேட்டிக்காகவே செல்லும் பங்ஷன் அது. இரவில் தூங்கும்போது தொந்தரவு செய்யப்படாமல் இருப்பதற்காக அநேகர் இந்த செயல்பாட்டை பயன்படுத்துகின்றனர்.

சரியான முறையில் இயங்கிக் கொண்டிருந்த ‘do not disturb’ செயல்பாடு, புத்தாண்டு தினத்தில் செயலிழந்தது. இது குறித்து ஏராளமான புகார்கள் ஆப்பிள் நிறுவனத்துக்கு செல்லவே, அதை சரிசெய்யும் முயற்சியில் இறங்கினார்கள் அவர்கள். ஆனால், முயற்சி வெற்றியளிக்கவில்லை என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“புது வருடத்துக்கு தேதி மாறியபோது ஏற்பட்ட ஒரு கிளிச் இது. இதை எம்மால் சரிசெய்ய முடியவில்லை. ஆனால் நல்ல செய்தி, ஜனவரி 7-ம் தேதியின் முடிவில் 8-ம் தேதிக்கு மாறும்போது, இது ஆட்டோமெட்டிக்காக சரியாகிவிடும் அதன்பின் ‘do not disturb’ செயல்பாடு இயங்கும். 8-ம் தேதிவரை, மேன்யுவலாக ஸ்லீப் மோடுக்கு கொண்டு செல்வதே ஒரே வழி” என்று அறிவித்துள்ளது ஆப்பிள்.

கருத்தரித்தலை தடுக்கவும் HIV இல் இருந்து பாதுகாக்கவும்

கருத்தரித்தலை தடுக்கவும் HIV இல் இருந்து பாதுகாக்கவும் பெண்களுக்கான நவீன மருத்துவமுறை கண்டுபிடிப்பு


காண்டம் அணிவது கருத்தடைக்காக மட்டுமல்ல அது பாலியல் நோய் எதுவும் தாக்காமல் பாதுகாக்கக் கூடியது. தற்போது பெண்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை காண்டம் ஒன்று நமது உடலுக்குள் நுழையும் எச்ஐவி (HIV) போன்ற நோய்க் கிருமிகளைத் தடுத்து நிறுத்துமாம்.

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பெண்களுக்கான இந்த நவீன கருத்தடை சாதனத்தை உருவாக்கியுள்ளனர். இது மாத்திரை போல சாப்பிடுவது அல்ல, மாறாக நமது உடலுக்குள் செலுத்தும்படியானது. அதாவது நமது உடலுக்குள் செலுத்தி அது நமது ரத்தத்தோடு கலந்து செயல்படும் வகையில் இதை உருவாக்கியுள்னர்.

மிகவும் சிறிய நுன்னிழைகளால் ஆன இந்த கருத்தடை சாதனம் உடலுக்குள் செலுத்தப்பட்ட பின்னர் உள்ளே போய் கண்ணுக்குத் தெரியாத வலையமைப்பை உருவாக்கிக் கொள்கிறது. இந்த வலையமைப்பானது நமது உடலுக்குள் நுழையும் எச்ஐவி போன்ற நோய்க் கிருமிகளைத் தடுத்து நிறுத்துகிறது. அதேபோல விந்தனுவையும் இது தடுத்த நிறுத்தி கர்ப்பம் உருவாவதை தடுக்கிறது. இந்த சாதனத்தை தேவைப்படும் வரை இதை நாம் உடலுக்குள் வைத்திருக்கலாம். தேவையில்லை என்று கருதினால் உடனேஅதற்குரிய மருந்தை செலுத்தி அழித்து விடலாம். இதற்கு சில நிமிடங்களே போதுமானதாம்.

இந்த உடலுக்குள் செலுத்தும் கருத்தடை மருந்தானது, எச்ஐவி எதிர்ப்பு மருந்துகளை தானே உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதுதான் விஷேசம்.

விஷமாகும் உணவு... வீரியம் குறைந்து வரும் ஆண்கள்

விஷமாகும் உணவு... வீரியம் குறைந்து வரும் ஆண்கள்


மாறிவரும் உணவுப்பழக்கத்தால் உலகம் முழுவதிலும் உள்ள ஆண்களின் வீரியம் குறைந்து வருவதாக பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாகவே குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சித் தகவலையும் தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.இன்றைய இளம் தலைமுறைகளில் பெரும்பாலோர் குழந்தை பெற்றுக்கொள்வதில் சிரமப்படுகின்றனர். இதற்குக் காரணம் தெரியாமல் பெரும்பாலோர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். உலகம் முழுவதும் குழந்தையில்லா தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டனர்.கடந்த 20 ஆண்டுகளாக, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களின் உயிரணுக்களை பரிசோதித்தனர். இதுகுறித்து இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலான ஆண்களுக்கு 7.36 கோடி உயிரணுக்கள் இருந்தன.ஆனால் தற்போதுள்ள ஆண்களில் 5 கோடிக்கும் குறைவான அணுக்களே உள்ளன என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, முன்பிருந்ததை விட 32 சதவிகிதத்திற்கும் அதிகமாக குறைந்து விட்டது. இதற்கு சுற்றுச்சூழலும் ஒரு காரணமாக கருதப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பசுமைப் புரட்சி என்ற பெயரில் கண்ட கண்ட பூச்சி மருந்துகளை அடித்து நிலத்தை மலடாக்கி வருவதைப்போல அந்த நிலத்தில் விளையும் சத்து குறைவான உணவுகளை உண்டு இன்றைய இளம் தலைமுறையும் மலடாகி வருகிறது என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் கருத்தை உண்மை என்று நிரூபித்துள்ளது பிரெஞ்ச் விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு.

பெண்களிடம் கேட்க கூடாத அந்த 10 விஷயங்கள்..!

பெண்களிடம் கேட்க கூடாத அந்த 10 விஷயங்கள்..!


பொதுவாக ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி சில விடயத்தை பற்றி கேட்டால் சொல்லவே தேவையில்லை
அவர்களுக்கு வரும் கோபத்திற்கு அளவே இருக்காது பெண்களிடம் கேட்க கூடாத அந்த 10 விஷயங்கள்..!

1. பெண்களிடம் எப்போதுமே முத்தம் ஒன்றைக் கேட்காதீர்கள். முத்தம் கேட்கும் ஆண்களை சிறுவர்களாகவே பெண்கள் நோக்குகின்றனர். இதற்கு அவர்கள் சம்மதித்தாலும் கூட உள்ளூர நல்ல அபிப்பிராயம் ஏற்படாது.

2. உன்னை எங்காவது வெளியில் அழைத்துப் செல்லவா? என்று ஒரு போதும் பெண்களைக் கேட்க வேண்டாம். ஏனெனில் அதை நீங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

3. உங்களுடைய வாகனம் பற்றி அல்லது நீங்கள் வாழும் வீடு பற்றி ஒரு போதும் ஜம்பமாகப் பேச வேண்டாம். ஏனெனில் அவர்களை இலகுவாகக் கவர நீங்கள் எடுக்கும் முயற்சியாக அவர்கள் அதைக் கருதக் கூடும்.

4. இரவில் என்ன செய்யப்போகிறாய் என்று பெண்களைக் கேட்க வேண்டாம். ஏனெனில் அதற்கான திட்டம் ஆணிடம் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

5. என்னை நீ விரும்புகின்றாயா என்றும் பெண்களைக் கேட்டு விடாதீர்கள். இந்த ஒரு கேள்வி ஒட்டுமொத்தக் கதையையே மாற்றிவிடக் கூடும்.

6. நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு பதில் கிடைக்காவிட்டால் அதைப் பற்றியும் பேசாதீர்கள். பதில் வராதது உங்களுக்கு கவலையளிப்பதாக அவர்கள் எண்ணக்கூடும்.

7. நீ இதற்கு முன் எத்தனை பேருடன் உறங்கியிருக்கின்றாய் என்றும் கேட்க வேண்டாம். இது அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையாக அவர்கள் உணரக் கூடும்.

8. ஒரு பெண்ணைச் சந்தித்த முதல் சந்திப்பிலேயே அடுத்த சந்திப்புக்கான திகதியைக் கேட்காதீர்கள். உங்கள் மீதுள்ள ஆர்வம் அதனால் இழக்கப்படக்கூடும்.

9. தொலைபேசியில் உரையாடும் போது நிதானமாகப் பேசுங்கள், அடுத்தக் கட்டத்தை தொலைபேசி மூலமே திட்டமிட முயற்சிக்க வேண்டாம்.

10. ஒரு பெண்ணின் ஆண் நண்பர்கள் பற்றி அவளிடம் தவறாகப் பேச வேண்டாம். ஏனெனில் உங்களைப் பற்றி மிகத் தவறான எண்ணங்களை இது விரைவாக ஏற்படுத்தி விடும்.

அமெரிக்க விண்வெளி ஆராட்சி மையம் விசப் பரிட்ச்சை ஒன்றில் ஈடுபட்டுள்ளது !

அமெரிக்க விண்வெளி ஆராட்சி மையம் விசப் பரிட்ச்சை ஒன்றில் ஈடுபட்டுள்ளது !



அமெரிக்க விண்வெளி ஆராட்சி மையம் விஷப் பரிட்ச்சை ஒன்றில் ஈடுபட்டுள்ளது ! அதாவது வேலியில் போன ஓணானை எடுத்து மடியில் போட்ட கதை என்று தமிழர்கள் அடிக்கடி செல்லுவார்களே ! அதேபோன்றதொரு நிகழ்வு தான் நடைபெறவுள்ளது. இதற்கு 2.5 பில்லியன் டாலர்கள் செலவிடவும் உள்ளது நாசா ! அப்படி என்ன விடையம் என்று யோசிக்கிறீர்களா ?

பூமியில் இருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் மிகவும் வேகம் குறைவாக , பயணித்துக்கொண்டு இருக்கும் விண் கல் ஒன்றை அப்படியே லாவகமாகப் பிடித்து பூமி நோக்கி இழுத்துவர நாசா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த விண் கல்லில் விட்டம் சுமார் 20 மீட்டர் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த விண் கல்லை பிடிக்கும் வேலையை ஒரு ரோ-போ பிடிக்கவுள்ளதாம். இதற்காகவே ஒரு பிரத்தியேக ராக்கெட்டும் அதனுடன் கூடிய ரோ-போ வும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

பூமியில் இருந்து ஏவப்படும், இந்த ராக்கெட் குறிப்பிட்ட இந்த விண் கல்லை நோக்கிச் சென்று, அதனை முதலில் ஆராயும் எனவும் பின்னர், 20 மீட்டர் அகலம் கொண்ட பிளாஸ்டிக் பை ஒன்றால் அதனைப் போர்த்தி, பின்னர் பூமி நோக்கி இழுத்துவரும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. இந்த விண் கல் பூமியை நோக்கி இழுத்துவர, சுமார் 10 ஆண்டுகள் பிடிக்கும் எனவும், இவ்வாறு இழுத்துவரப்படும் கல் சந்திரனை சுற்றி வரும்படி அதன் ஓடுபாதை மாற்றப்படும் எனவும் நாசா மேலும் தெரிவித்துள்ளது. எனவே சந்திரனுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், பின்னர் இக் கலையும் ஆராயலாம். தேவைப்பட்டால் அதன் மீது தரையிறங்கவும் முடியும். குறிப்பிட்ட இந்த விண் கல்லை சுழலவிட்டால், அதில் சிறிய அளவு ஈர்ப்பு சக்தியும் உண்டாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். இந்த விண் கல் ஏன் இவ்வளவு முக்கியமானது ? இல்லை என்றால் குறிப்பிட்ட இந்த விண் கல்லை மட்டும் ஏன் நாசா விஞ்ஞானிகள் குறிவைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை.

இது தனது பாதை மாறி, பூமியோடு மோதினால் என்னவாகும் ? இதில் எவ்வகையான வாயுக்கள் காணப்படுகிறது. இது வெடிக்கும் தன்மையுடையதா என்பது போன்ற விபரங்கள் இதுவரை அறியப்படவில்லை. ஆனால் அதனை கட்டி இழுத்து பூமியின் பக்கம் கொண்டுவரவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறது நாசா ! இனி என்ன நடக்குமோ தெரியவில்லை ! பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் !

பூமி மெல்ல மெல்ல சுருங்கி வருகிறது: அதிர்ச்சி தகவல் வெளியானது - NASA

பூமி மெல்ல மெல்ல சுருங்கி வருகிறது: அதிர்ச்சி தகவல் வெளியானது - NASA



நாம் வாழும் பூமியின் பெரும் பகுதி சுருங்கி வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தால் வடிவமைக்கப்பட்ட லேண்ட்சாட் 5 என்ற விண்கலம், கடந்த 1984ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது.

கடந்த 29 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த விண்கலம், பூமியை 1 லட்சத்து 50 ஆயிரம் முறை சுற்றி வந்துள்ளது.

மேலும் இரண்டரை மில்லியன் புகைப்படங்களையும் எடுத்து அனுப்பியுள்ளது. இதில் உலகம் முழுவதும் உள்ள நிலபரப்பின் நிலை குறித்த புகைப்படங்களும் அடக்கம்.

இந்நிலையில் உலகில் 4வது மிகப்பெரிய ஏரியான ஏரல் சீ தற்போது மெல்ல சுருங்கி, அதனுடைய மொத்த பரப்பளவில் 10 சதவிகிதம் அளவே மிஞ்சியுள்ளது.

இதில் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, பூமியின் பெரும் பகுதி சுருங்கிவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்படங்களில் மிஸ்ஸிசிப்பி ஆற்றின் தற்போதைய தோற்றம், பொலிவியா நாட்டில் குறைந்த வனவளம், செர்னோபில் அணு உலையின் 1975ம் ஆண்டு தோற்றம், உலகின் 6வது பெரிய ஏரியான சட் தற்போது அதன் மொத்த பரப்பளவில் வறட்சி காரணமாக 20ல் ஒரு பங்கு அளவிற்கு சுருங்கிய வடிவம் போன்றவை முக்கியமான ஒன்றாகும்.

இதற்கிடையே இந்த விண்கலத்தின் முக்கிய பாகமான கைரோஸ்கோப் செயலிழந்ததை தொடர்ந்து விண்கல பயன்பாடு முடிவுக்கு வந்துள்ளது.

மருந்துகளுடன் வாழும் இலங்கையர்கள்: ஆய்வில் தகவல்

மருந்துகளுடன் வாழும் இலங்கையர்கள்: ஆய்வில் தகவல்


இலங்கையில் 90 வீதமான மக்கள் நாளாந்தம் ஏதேனும் ஒரு மருந்தை பயன்படுத்தி வருவதாக சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பெரும்பாலான மக்கள் பல்வேறு வகையான மருந்துகளை எந்தவித மருத்துவ ஆலோசனையும் இன்றி கடைகளில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது என்றும், பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் சுகாதார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசாங்க மருத்துவமனைகளில் மாதம் தோறும் 45-50 மில்லியன் ரூபா பெறுமதியான பரசிற்றமோல் வில்லைகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரின் மதிப்பு 11 பில்லியன் டாலர்! பேஸ்புக் பங்குகள் விழுந்ததால் ஜிவ்!!

ட்விட்டரின் மதிப்பு 11 பில்லியன் டாலர்! பேஸ்புக் பங்குகள் விழுந்ததால் ஜிவ்!!


ட்விட்டர் நிறுவனர்கள், Evan Williams, Jack Dorsey, Biz Stone, நிறுவனத்தின் சான்பிரான்சிஸ்கோ தலைமையகத்தில்…


சமூக வலைத்தளம் ட்விட்டர் அடுத்த ஆண்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்போது, அதன் மதிப்பு 11 பில்லியன் டாலராக இருக்கலாம் என்ற கணிப்பு வெளியாகியுள்ளது. நியூயார்க்கில் இருந்து செயல்படும் நிதி ஆய்வு நிறுவனம் கிரீன்கிரெஸ்ட், இந்தக் கணிப்பை நேற்று வெளியிட்டது.

கிரீன்கிரெஸ்ட் நிதி ஆய்வு நிறுவன ஆய்வாளர் மேக்ஸ் வொல்ஃப், “பேஸ்புக் பங்குச் சந்தைக்குள் போனபோது, ட்விட்டரின் மதிப்பு பெறுமதி குறைந்தது. ஆனால், பேஸ்புக் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்த காரணத்தால், ட்விட்டர் மதிப்பு பெறுமதி அதிகரித்துள்ளது” என்றார். ட்விட்டர், அடுத்த ஆண்டு நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என தெரிகிறது.

இந்த பெறுமதி அதிகரிப்புக்கான மற்றொரு காரணம், ஆப்பிள் நிறுவனம் ட்விட்டரை வாங்கப் போகின்றது என்று வர்த்தக வட்டாரங்களில் அடிபட்டுக்கொண்டுள்ள ஒரு வதந்தி. அது வதந்தியல்ல, நிஜமாகவே திரை மறைவில் பேச்சுக்கள் நடக்கின்றன என செய்தி வெளியிட்டிருந்தது, வால்ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகை.

பேஸ்புக் பரபரப்பாக பங்குச் சந்தைக்குள் வந்தபோது இருந்த IPOவை (Initial Public Offering) விட, தற்போது அதன் பங்குகள் 26% சரிந்துள்ளன.

Thursday, January 3, 2013

இந்துக்கள் பண்டிகைகள் 2013


இந்துக்கள் பண்டிகைகள் 2013




திருப்புவனம் அருகே 7அடி உயர முள்படுக்கையில் பெண் சாமியார் அருள்வாக்கு

திருப்புவனம் அருகே 7அடி உயர முள்படுக்கையில் பெண் சாமியார் அருள்வாக்கு



 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே லாடனேந்தலில் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள வீட்டில் பெண் சாமியார் நாகராணி அம்மையார் குடியிருந்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்துவர். இக்கோயிலின் சிறப்பு அம்சமாக ஆண்டுதோறும் மார்கழி 17ம் தேதி நாகராணி அம்மையார் முள்படுக்கையில் 3 மணி நேரம் தவம் இருப்பார். அப்போது பக்தர்கள் கூடி நின்று தரிசனம் செய்வர். இதில் பக்தர்களுக்கு அருள்வாக்கும் கூறுவார். கடந்த 20 ஆண்டாக முள்படுக்கை அருள்வாக்கு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.இதற்காக கார்த்திகை 1ம் தேதி முதல் 48 நாட்கள் நாகராணி அம்மையார் விரதம் இருந்து நேற்று காலை முள்படுக்கையில் ஏற தயாரானார். இவர் தவம் செய்வதற்காக கற்றாழை, காட்டு கருவேலமுள், நாட்டு கருவேல முள், காக்கா முள் ஆகியவை கொண்ட 7 அடி உயரம் கொண்ட முள்படுக்கை வைக்கப்பட்டிருந்தது. இதில் காலை 10 மணிக்கு நாகராணி அம்மையார் ஏறினார். இந்நிகழ்வை காண திருப்புவனம், மதுரை, மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். அவர்கள் நாகராணி அம்மையாரை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். அப்போது 50க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு நாகராணி அம்மையார் அருள்வாக்கு கூறினார். மதியம் 1 மணிக்கு முள்படுக்கையில் இருந்து இறங்கினார்.

சமையலறையில் சிக்கிய குட்டியை மீட்க வீட்டை உடைத்த யானைகள்

சமையலறையில் சிக்கிய குட்டியை மீட்க வீட்டை உடைத்த யானைகள்



வீட்டின் சமையலறையில் நுழைந்த யானை குட்டியை மீட்க 2 யானைகள் வீட்டின் சுவரை  உடைத்ததால்  அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அத்திகுன்னா கன்னடையன்பாடி தனியார் தோட்டத்தில் வசிப்பவர் சிங்கிரி (52). இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று அந்த பகுதிக்கு 2 யானைகளுடன் ஒரு குட்டியும் வந்தது. சிங்கிரி வீட்டின் சமையலறை பகுதியை யானைகள் உடைத்தன. அங்குள்ள அரிசி, பருப்பு மற்றும உணவை சாப்பிடுவதற்காக குட்டியானை உள்ளே புகுந்தது. பிறகு அதனால் வெளியே வர முடியவில்லை. சமையல் அறைக்குள் அங்கும் இங்கும் ஓடியபடி  பிளிறியது. இதை கண்ட மற்ற யானைகள் வீட்டின் சுவற்றை இடித்து தள்ளி உள்ளே சென்றன. வீட்டில் சமையறையில் இருந்த அனைத்து பொருட் களையும் சூறையாடின. அருகே இருந்த மேலும் ஒரு வீட்டையும் சேதப்படுத்தியன. இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் தற்போது அதிகமாக உள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை வனத்துறையினர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

100 மில்லியன் வரதட்சனை ! நீங்க கொடுப்பீங்களா ?

100 மில்லியன் வரதட்சனை ! நீங்க கொடுப்பீங்களா ?




சீனாவில் உள்ள ஒரு செல்வந்தர் தன்னுடைய ஒரே மகளின் திருமணத்தில் வரதட்சணையாக மட்டும் 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள நகைகள்,பங்குகள் மற்றும் விலையுயர்ந்த வீடுகள்,கார்கள் முதலியவற்றை வழங்கி ஆச்சரியபடுத்தியுள்ளார். இது அமெரிக்க டாலரின் மதிப்பின்படி 163 மில்லியன் டாலர் ஆகும். அவர் கொடுத்துள்ள வரதட்சணையில் நான்கு பெரிய பெட்டிகள் நிறைய தங்க நகைகள், 2 மில்லியன் மதிப்புள்ள வங்கி டெபாசிட்டுகள்,மற்றும் நிலங்கள்,கட்டிடங்கள் அடங்கிய சொத்து பத்திரங்கள் அடங்கும். Wu Duanbiao, என்ற ceramics firm Fujian Wanli Group என்ற நிறுவனத்தின் சேர்மன், தன்னுடைய ஒரே மகளுக்காக உலகத்தில் இதுவரை யாருமே கொடுக்காத அளவிற்கு வரதட்சணையாக கொடுத்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், தன்னுடைய நிறுவனத்தின் 500 மில்லியன் மதிப்புள்ள பங்குகளையும், தன்னுடைய வருங்கால மருமகனுக்கு எழுதி வைத்துள்ளார். மேலும் இந்த திருமணத்தை முன்னிட்டு1.5 மில்லியன் பவுண்ட் பணத்தை தன்னுடைய மகளின் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய முன்வந்த ஊடகங்களுக்கு நன்கொடையாக கொடுத்து அசத்தியுள்ளார்.

தொழிலதிபர் Wu Duanbiao என்பவரின் ஒரே மகளின் பெயர் Xu. இவர் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் நண்பன் ஒருவரை காதலித்தார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த காதலர் Xuவை திருமணம் செய்ததால், ஒரே நாளில் உலக பணக்காரர்களின் ஒருவராக மாறிவிட்டார்.

டில்லி அரசின் அடுத்த அதிரடி! தண்ணீர் புடிக்கவும் கட்டணம், குடிக்கவும் கட்டணம்!!

டில்லி அரசின் அடுத்த அதிரடி! தண்ணீர் புடிக்கவும் கட்டணம், குடிக்கவும் கட்டணம்!!


ஏக் கிளாஸ் பானி கித்னா பைசா சாப்?

அதிரடிக்கு பேர்போன மத்திய அரசு, அடுத்த அதிரடிக்கு ரெடி! தண்ணீருக்கு விலை நிர்ணயிக்க வேண்டும். தண்ணீரை வர்த்தகப் பொருளாக கருத வேண்டும்; விவசாயத்துக்கு நிலத்தடி நீரை மானிய விலையில் வழங்கலாம் என்ற அதிரடிகளை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.

தேசிய நீர் வள கவுன்சில் கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் தேசிய நீர் சட்ட வரைவு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட வரைவில் விவசாயிகளுக்கு பாதகமான பல அம்சங்கள் உள்ளன.

எதற்காக இந்த தேசிய நீர் சட்டம்? மத்திய அரசு கூறும் காரணம்:

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. தொழிற்சாலைகள் உபயோகிக்கும் தண்ணீரின் தேவை உயர்ந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் விரைவாக குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க வேண்டியது அரசுகளின் கடமை. அதனால் தேசிய நீர் வளக் கொள்கை, அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த தண்ணீர் கொள்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள்:

-தண்ணீரை பாது காக்கும் வகையில் ஒவ்வொரு மாநில அரசும் தண்ணீர் ஒழுங்கு முறை ஆணையம் என்ற ஆணையத்தை அமைக்க வேண்டும். இந்த ஆணையம் தண்ணீருக்கு கட்டணம் விதிக்க வேண்டும். பயன்பாட்டுக்கு ஏற்ப தண்ணீருக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும்.

-இந்த கட்டண விகிதம் ஆண்டுதோறும் மாற்றப்பட வேண்டும். நிலத்தடியிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப கட்டணங்கள் வசூலிக்கப்படுதல் வேண்டும்.

-அந்தந்த பகுதிகளில் ‘தண்ணீர் பயன்படுத்துவோர் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த அமைப்பினர், பயன்படுத்தப்படும் தண்ணீருக்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும். அவரவர் எல்லைக்குள் தண்ணீர் வழங்கும் முகமையாக இவர்கள் செயல்பட வேண்டும்.

இந்த சட்ட முன் வடிவுகள் சட்டமானால் நாம் பயன்படுத்தும் தண்ணீருக்கும் பணம் கட்ட வேண்டும் என்பது மட்டுமல்ல, தண்ணீர் விநியோகம் தனியார் மயமாகும். இந்த முடிவு விவசாயிகளுக்கு பலத்த அடி என்றும் சொல்லலாம்.

Wednesday, January 2, 2013

தாய்லாந்தில் புத்த மடாலயங்கள் மூடல்

தாய்லாந்தில் புத்த மடாலயங்கள் மூடல்


தாய்லாந்தில் புத்தபிட்சுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டதால், மடாலயங்கள் மூடப்பட்டுள்ளன.
புத்த மதம் தழைத்தோங்கி காணப்பட்ட சயாம் என்றழைக்கப்பட்ட தாய்லாந்து நாட்டில், புத்த துறவிகள் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தனர்.

பிரச்னைகளை தீர்ப்பதில் பஞ்சாயத்து தலைவர் போலவும், திருமணம், மரணம் போன்ற நிகழ்வுகளுக்கு சடங்கு செய்பவர்களாகவும் இவர்கள் வலம் வந்தனர்.

புத்த துறவிகள் மது அருந்துகின்றனர், நீல படங்கள் பார்க்கின்றனர், பெண்களோடு தொடர்பு வைத்து கொள்கின்றனர் என்பது போன்ற தகவல்கள் அடிக்கடி வெளியானதால் புத்த துறவிகள் மீதான மதிப்பு குறைந்து விட்டது.

முன்பெல்லாம் நிறைய பேர் புத்த மடாலயங்களில் சேர்ந்து, பயிற்சி பெற்று புத்த மத குருவாக மாறி விடுவர். இப்போது யாரும் மடாலயங்களுக்கு சென்று பயிற்சி பெற விரும்புவதில்லை.

இளைஞர்கள் யாரும் புத்த மடாலயங்களுக்கு பயிற்சி பெற வராததால் வயதான துறவிகள் தான், இப்போது மடாலயங்களை பராமரித்து வருகின்றனர். இதனால் பல மடாலயங்கள் புத்த பிட்சுகள் இல்லாமல் மூடப்பட்டு விட்டன.

இந்நிலையில் அண்டை நாடான மியான்மரில் புத்த மடாலயங்களில் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். எனவே அங்கிருந்து இளம் புத்த பிட்சுகளை வரவழைக்க தாய்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

செல்களின் பெண் என வர்ணிக்கப்பட்ட விஞ்ஞானி காலமானார்

செல்களின் பெண் என வர்ணிக்கப்பட்ட விஞ்ஞானி காலமானார்



இரத்தத்தில் உள்ள செல்களை ஆராய்ச்சி செய்து புற்றுநோய்க்கான காரணிகளை கண்டறிய வழிவகுத்த இத்தாலிய நாட்டு பெண் விஞ்ஞானி ரீட்டா லெவி மோண்டால்ச்சினி நேற்று காலமானார்.
இத்தாலி நாட்டின் உள்ள வடக்கு தூரின் பகுதியில் 1909ம் ஆண்டு வசதியான யூத குடும்பத்தில் பிறந்தவர் ரீட்டா மெலவி மோண்டால்சினி.

கல்லூரிப்படிப்பை முடித்து மருத்துவ பட்டம் பெற்ற போதும் மருத்துவ ஆராய்ச்சியை தொடரவிடாமல், இத்தாலிய பாசிஸ்ட் அரசு அவருக்கு தடை விதித்தது.

இந்த தடையையும் மீறி ரத்தத்தில் உள்ள செல்களை பற்றி அவர் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

அமெரிக்காவின் உயிரியல் ஆராய்ச்சியாளர் ஸ்டான்லி கோஹன் என்பவருடன் இணைந்து நடத்திய புற்றுநோய் ஆராய்ச்சிக்காக, 1986ம் ஆண்டு உலகின் உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவரது ஆராய்ச்சிக்கள் மருத்துவ உலகுக்கு கொடையாக மாறிய பின்னர், இத்தாலியின் உயர்ந்த ஆராய்ச்சியாளராக கௌரவப்படுத்தப்பட்டார்.

இவர் 100 வயதை கடந்த நிலையிலும் தொடர்ந்து மருத்துவ ஆராய்ச்சியிலேயே தனது கவனத்தை செலுத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று உறங்கிய நிலையிலேயே காலமானார்.

'செல்களின் பெண்' என இத்தாலியர்களால் அழைக்கப்படும் லெவியின் மரணம், மனித குலத்திற்கு மாபெரும் இழப்பாகும் என ரோம் நகரின் மேஜர் கியானி அலெமனோ தெரிவித்துள்ளார்.

'20 வயதிலிருந்ததை விட 100 வயதில் எனது சிந்தனை மிக உச்சமாக இருக்கிறது.

இதற்கு காரணமான அனுபவத்திற்கு நன்றி சொல்கிறேன்' என ஒரு பேட்டியில் லெவி தெரிவித்திருந்தார்.







இங்கிலாந்தில் 17 லட்சம் மனித கருக்கள் அழிப்பு

இங்கிலாந்தில் 17 லட்சம் மனித கருக்கள் அழிப்பு


குழந்தை இல்லாதவர்கள் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்று கொள்கின்றனர்.
இங்கிலாந்தில் சோதனை குழாய் மூலம் குழந்தை பெறுவது அதிகமாக உள்ளது. எனவே அங்கு செயற்கை கரு உருவாக்குவது அதிகரித்துள்ளது.

கடந்த 1991ஆம் ஆண்டு முதல் இதுவரையிலும் 35 லட்சம் மனித கருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மனித கருக்களின் ஆயுட்காலம் முடிவடைந்து வருவதால், அவைகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி தற்போது 17 லட்சம் செயற்கை மனித கருக்கள் வீணாகியதால் மண்ணில் புதைக்கப்பட்டன.

உலகின் அதி உயரமான பெண்ணின் காதல் !

உலகின் அதி உயரமான பெண்ணின் காதல் !


உலகின் மிகவும் உயரமான இளவயது யுவதியாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த எலிஸானி டா குருஸ் சில்வா (17), ஐந்து அடி நான்கு அங்குல உயரம் கொண்ட கர்வல்ஹோ (22) என்ற இளைஞருடன் காதல் வசப்பட்டுள்ளார். பிரேசிலின் சலினோபொலிஸ் நகரில் 8 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த எலிஸானி தனது 11 ஆவது வயதிலிருந்து வேகமாக வளர ஆரம்பித்துள்ளார்.

அவருக்கு 14 வயதானபோது உயரம் 6 அடி 9 அங்குலமானது. இந்த திடீர் வளர்ச்சியினால் கை,கால் மூட்டுகளில் வலி ஏற்பட்டுள்ளது. இந்த அபார வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த அவரது கேடயச் சுரப்பியில் ஏற்பட்ட கட்டி இரு வருடங்களுக்கு முன் அகற்றப்பட்டதையடுத்து அவரது வளர்ச்சி தடைப்பட்டது. அளவுக்கதிகமான வளர்ச்சி காரணமாக பாடசாலைக் கல்வியையும் அவர் இடையில் கைவிட்டார். அதன்பின்னர் காதல் வலையில் விழுந்த எலிஸானி, காவல்ஹோவின் நடவடிக்கைகள் பிடித்ததால் காதலிக்க ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளார்.

சோ ... சோ காதலுக்கு உயரம் ஒரு தடையிலை என்று புரூப் பண்ணுகிறார் இவர் !






ஏழு நாட்களில் உடல் எடையில் மாற்றம் வேண்டுமா?

ஏழு நாட்களில் உடல் எடையில் மாற்றம் வேண்டுமா?


உடல் எடையை குறைப்பதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. அதிலும் சரியான டயட் மற்றும் ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போன்றவை பெரிதும் உதவும். இருப்பினும், உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக சாப்பிடும் உணவுகளை தவிர்த்தால், விரைவில் உடல் எடை குறைந்துவிடும் என்று தவறான வழியை தேர்ந்தெடுக்கக்கூடாது. ஏனெனில் சிலர் பழைய உடையை அணியும் அளவில் எடையை குறைக்க வேண்டும் என்று இந்த மாதிரியான முறையை பின்பற்றுவார்கள். எனவே இந்த மாதிரியான முறையை பின்பற்றினால், நிச்சயம் உடல் ஆரோக்கியமற்றதாகிவிடும். ஆகவே உடல் எடையை குறைக்க வேண்டுமெனில், முதலில் நாம் நினைக்க வேண்டியது, உடல் எடை மெதுவாக குறைந்தால் போதுமானது என்று நினைத்து, உடல் எடையை குறைக்க முறையான படிகளை, சரியாக மேற்கொண்டு வர வேண்டும்.

குறைவான உணவு

உடல் எடையை குறைக்க சாப்பிடும் உணவின் அளவானது குறைவாக இருக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் கொழுப்பின் அளவானது குறையும். இதற்கான உணவை தவிர்க்கவும் கூடாது. உணவில் கட்டுப்பாட்டுடன் இருந்தால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும். உதாரணமாக, தினமும் 2 கப் சாதம் சாப்பிட்டால், உடல் எடையை குறைக்க 1 கப் சாப்பிட வேண்டும்.

காய்கறிகள் மற்றும் பழங்கள்

சாதாரணமான நேரத்தில் வறுத்த மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிட வேண்டும். அதிலும் சாப்பிடும் நேரங்களைத் தவிர்த்து, பசி ஏற்பட்டால், அப்போது வெள்ளரிக்காய், தக்காளி, ப்ராக்கோலி, வெங்காயம் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவது சிறந்தது. பழங்கள என்றால் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

உடற்பயிற்சி

உடலை ஒல்லியாக்குவதற்கு செய்யும் செயல்களில் உடற்பயிற்சியும் ஒன்று. அதிலும் அத்தகைய உடற்பயிற்சியை ஜிம்மிற்கு சென்று செய்யும் போது, உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்து வெளியேறிவிடும். முக்கியமாக அவ்வாறு செய்யும் உடற்பயிற்சியை தினமும் 30-45 நிமிடம் தொடர்ந்து செய்து வந்தால், உடல் நன்கு சிக்கென்று விரைவில் மாறிவிடும்.

சுடு நீருடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன்

இது உடல் எடையை குறைக்க உதவும் ஒரு ஆரோக்கியமான பானம். இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டிருக்கும், எலுமிச்சையில் உள்ள ஆசிட்டானது, உடலில் தங்கியிருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் இதில் இருக்கும் தேன், எடையை குறைக்க பெரிதும் உதவும். ஆகவே இந்த ஜூஸை தினமும் 3-4 முறை, சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டும்.

உப்பு

உப்பை அதிகமாக சாப்பிட்டால், உடலில் தண்ணீர் சத்து குறையும். எனவே உணவை உண்ட பின்பு, அளவுக்கு அதிகமான அளவில் தண்ணீர் குடித்து, பின் தொப்பை பெரிதாக காணப்படும். எனவே உணவில் உப்பை அதிகமாக சேர்க்காமல், அதனை குறைப்பதோடு, செயற்கை முறையிலான இனிப்புகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் செயற்கை இனிப்புகளில் கலோரிகள் அதிகமாக இருக்கும்.

தண்ணீர் உடலில் உள்ள தொப்பையை குறைப்பதற்காக செய்யும் செயல்களில் இறுதியானவை, தண்ணீர் அதிகமாக குடிப்பது தான். இதனால் வயிறு நிறைவதோடு, உடலில் இருக்கும் நச்சுக்களை முழுவதும் வெளியேற்றி, குடல் இயக்கத்தை அதிகரிக்கும்

குறைகிறது தங்கம் இறக்குமதி : நிதிப் பற்றாக்குறையை போக்க மத்திய அரசு நடவடிக்கை

குறைகிறது தங்கம் இறக்குமதி : நிதிப் பற்றாக்குறையை போக்க மத்திய அரசு நடவடிக்கை


மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க தங்க இறக்குமதியை கணிசமாக குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இதனையை தெரிவித்துள்ளார். ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையே இடைவெளி இருப்பதால் நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தற்போது 2225 கோடி டாலருக்கு தங்கம் இறக்குமதி செய்யப்படுவதாக கூறிய ப.சிதம்பரம், இதனையை பாதி அளவாக குறைத்தால் அன்னிய செலாவணி இருப்பு உயர வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்கத்தின் பயன்பாட்டையை ஓரளவுக்கு குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தங்கத்தின் மீதான இறக்குமதிக்கு கூடுதலாக வரி விதிக்க நேரிடும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

புத்தாண்டில் தமிழகம் சாதனை: 12 லட்சம் பாட்டில் பீர்! மொத்த டாஸ்மாக் விற்பனை 95 கோடி!!

புத்தாண்டில் தமிழகம் சாதனை: 12 லட்சம் பாட்டில் பீர்! மொத்த டாஸ்மாக் விற்பனை 95 கோடி!!



தமிழகம் முழுவதும் உள்ள மொத்தம் 6,800 டாஸ்மாக் மதுபான கடைகளில் புத்தாண்டுக்கு முன்தினம், விற்பனை உச்சத்துக்கு சென்றது என தகவல் வெளியாகியுள்ளது. புத்தாண்டுக்கு முன்தினம், டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதனால், மது விற்பனை அமோகமாக நடைபெற்றது.

பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுவகைகள் 180,000 பெட்டிகள் (கேஸ்) விற்பனையாகி உள்ளன. பீர் வகைகள் ஒரு லட்சம் பெட்டிகள் விற்றுள்ளன. ஆக மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரம் மதுபான பாட்டில்கள் கொண்ட பெட்டிகள் விற்பனையாகி இருக்கின்றன. பீர் மட்டும் 12 லட்சம் பாட்டில்கள் விற்று தீர்ந்துள்ளன.

புத்தாண்டுக்கு முன்தினம், ஒரேநாளில் விற்றுத் தீர்ந்த மொத்த மது பாட்டில்களின் மதிப்பு ரூ.95 கோடி. பீர் மட்டும் ரூ.11 கோடிக்கும், மற்ற மதுபானங்கள் ரூ.84 கோடிக்கும் விற்பனையாகின. கடந்த புத்தாண்டு முந்தைய நாளில் ரூ.75 கோடிக்கு மட்டுமே மதுபானம் விற்பனையானது.

புத்தாண்டு அன்று (நேற்று) சுமார் ரூ.80 கோடிக்கு மது விற்பனையாகி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த புத்தாண்டின் முதல் நாள் விற்பனை ரூ.20 கோடி அதிகம் என்று டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறினார்.

அடுத்த ஆண்டு விற்பனை தினத்துக்கு 100 கோடிக்கு மேல் சென்று சரித்திரம் படைக்கும்!

இலங்கையில் உருவான காற்றழுத்த நிலையால் தமிழகத்தில் நாளை மழை!

இலங்கையில் உருவான காற்றழுத்த நிலையால் தமிழகத்தில் நாளை மழை!


நாளை முதல் தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வானிலை மையம் ஏற்கனவே வட கிழக்குப் பருவ மழை முடிந்து விட்டதாக அறிவித்த்திருந்தது. இந்த நிலையில் தற்போது வங்கக் கடலில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தென் தமிழகத்தில் மழை பெய்யும், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழைக்கு குளிர்கால மழை என்றும் வானிலை மையம் பெயரிட்டுள்ளது.

வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன், “இலங்கையில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாளை (வியாழக்கிழமை) முதல் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும். தொடர்ந்து அந்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம். அதுவரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம்” என்றார்.

Tuesday, January 1, 2013

சுவிஸ் கொக்கு மாக்ஸ் காலமானது

சுவிஸ் கொக்கு மாக்ஸ் காலமானது




இரண்டு மாதக் குஞ்சாக இருந்த காலம் முதல் செயற்கைக்கோள் மூலமாகக் கூர்நோக்கு ஆய்வு முறையில் கவனிக்கப்பட்டு வந்த Max என்று பெயரிடப்பட்ட சுவிஸ் கொக்கு ஸ்பெயினுக்கு சென்றிருந்த போது இறந்துவிட்டது.
1950ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் கொக்கு இனம் அழிந்துவிட்ட போது மாக்ஸ் என்பவர் தன் சொந்த முயற்சியால் கொக்கு இனத்தைத் திரும்பவும் பெருகச் செய்தார்.

இதனால் செயற்கைக் கோள் ஆய்வுக்கு தெரிவு செய்யப்பட்ட இந்த கொக்குக்கு Max என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்த மாக்ஸ் கொக்கு மேற்கு சுவிட்சர்லாந்தில் அவெஞ்சஸ் என்ற பகுதியில் பிறந்தது.

இது ஆண்டுதோறும் ஸ்பெயின், அல்ஜீரியா நாடுகளுக்கு வலசை போவதுண்டு.

ஜேர்மனியில் கூடுகட்டி குஞ்சு பொரிக்கும் இதுவரை 31 குஞ்சுகள் பொரிந்துள்ளது.

தன் வாழ்நாளில் மொத்தம் அறுபதினாயிரம் கி.மீ. வரை பறந்திருக்கிறது.

மாக்சுக்கு பத்தாண்டுகள் நிறைவு பெற்ற போது அதன் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது.

ஃபிரிபோர்கில் உள்ள இயற்கை உயிரினங்களுக்கான அருங்காட்சியகத்தின் ஆவணங்களின் படி இந்த மாக்ஸ் கொக்கு தான் மிக நீண்ட காலமாக செயற்கை கோள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது.

விடிய விடிய களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்


விடிய விடிய களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்




தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விடிய விடிய களை கட்டியது. தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பட்டாசுகள் வெடித்தும், ஒருவருக்கு ஒருவர் ஹேப்பி நியூ இயர் சொல்லியும் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். 

2012ம் ஆண்டு முடிந்து இன்று 2013ம் ஆண்டு பிறந்து விட்டது. நேற்று இரவு 8 மணி முதலே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மக்கள் தயாராயினர். சர்ச்கள், கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

சென்னையில் மெரினா கடற்கரை விழாக்கோலம் பூண்டது. இரவு 10 மணிக்குள் காமராஜர் சாலை சிவாஜி சிலையருகே உள்ள மணிக்கூண்டு பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு மணிக்கூண்டில் மணி அடித்ததும் அதிர்வேட்டுகள் முழங்கின. வானில் மத்தாப்புகள் ஜொலித்தன. கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை உரத்த குரலில் தெரிவித்தனர். வண்ணப்பொடிகளை வீசியும், வண்ணப்பொடி கலந்த நீரை ஊற்றியும் புத்தாண்டு பரிமாறிக் கொண்டனர்.

அசம்பாவித சம்பவங்களை தடுக்க மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த பல இடங்களில் போலீசார் தடுப்பு வைத்திருந்தனர். சென்னையில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு மெரினாவில் விடிய விடிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் நல்லவிதமாகவே அமைந்தது.

புத்தாண்டை முன்னிட்டு, வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்காரம் நடந்தது. அதிகாலை 4 மணிக்கு வெள்ளி அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

சென்னை தி.நகர் திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 2 மணியில் இருந்து சாமி தரிசனம் அனுமதிக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 

பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் அதிகாலை 4 மணி முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மயிலாப்பூர் முண்டக கண்ணியம்மன் கோயிலில் 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பூஜைகள், மகாதீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மூலவருக்கு அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

பூங்கா நகர் தங்க சாலை தெரு ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், குன்றத்தூர் முருகன் கோயில்களில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. முருகன், வள்ளி, தெய்வானைக்கு நள்ளிரவு 12 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து புஷ்ப அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. 
சாந்தோம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி சர்ச், பூக்கடை அந்தோணியார் சர்ச், கதீட்ரல், பெரம்பூர் சர்ச், ராயப்பேட்டை சிஎஸ்ஐ சர்ச், லஸ் சர்ச்களில் விடிய விடிய பிரார்த்தனைகள் நடைபெற்றன.