Friday, November 30, 2012

2012 உலகம் அழியுமா? உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு! கட்டாயம் படியுங்கள் - இறுதி பாகம்

2012 உலகம் அழியுமா? உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு! கட்டாயம் படியுங்கள் - இறுதி பாகம்

கடந்த அத்தியாயத்தை படிக்க இங்கே கிளிக் செய்யவும்





மாயன்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, பந்து விளையாட்டு ஒன்றை விளையாடி இருக்கின்றனர். அதனுடன் அவர்கள் உலக அழிவையும் தொடர்பு படுத்தியிருக்கின்றனர் என்று கடந்த பதிவில் சொல்லியிருந்தேன். இந்தப் பந்து விளையாட்டு மாயன்களின் மிக முக்கியமான ஒரு சடங்காக அப்போது இருந்திருக்கின்றது என்பதை அறிந்த ஆராய்ச்சியாளர்கள், அதை ஆராயப் போன சமயத்தில் ஒரு வித்தியாசமான அனுபவம் ஒன்று அவர்களுக்குக் கிடைத்தது. அதாவது, மாயன்களின் பிரதேசங்களில் மட்டும்தான் இந்த விளையாட்டு, விளையாடப்பட்டது என்று நினைத்து ஆராயச் சென்றவர்களுக்கு, அதையும் தாண்டி மத்திய அமெரிக்கா, தென்னமெரிக்கா எனப் பல நாடுகளில் இந்தப் பந்து விளையாட்டு விளையாடப்பட்டு வந்திருக்கிறது தெரிய வந்தது.

மெக்சிக்கோ, குவாத்தமாலா, பெலிசே, ஹொண்டுராஸ், எல் சல்வடோர் மட்டுமில்லாமல், நிகுரகுவா, அரிஸோனா ஆகிய நாடுகளிலும் இது விளையாடப்பட்டு வந்திருக்கிறது. அதிகம் ஏன் கரீபியன் தீவுகளிலும் (Caribbean islands), கியூபாவிலும் கூட இந்தப் பந்து விளையாட்டு, விளையாடப் பட்டிருக்கிறது. அப்படி விளையாடியதற்கான மைதானங்கள் அந்த நாடுகளில் பரவலாகக் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன.

அதைத் தொடர்ந்து, மேலும் ஆராய்ந்தபோது ஆச்சரியங்களும், மர்மங்களும் மாயன்கள் பிரதேசங்களில் மட்டுமல்லாமல், தென்னமெரிக்கப் பிரதேசங்கள் அனைத்திலும் பரவியிருந்தது தெரிய வந்தது. ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இடங்கள், ஒரு பொக்கிசப் புதையலாகவே அதற்கு அப்புறம் அமைந்து விட்டது என்று சொல்லும் அளவிற்கு இருந்தன அந்த நாடுகள். அந்த நாடுகளில் உள்ள மர்மங்கள் எவை என்று நான் இங்கே ஒவ்வொன்றாக உங்களுக்குச் சொல்லப் போனால், இத்தொடர் 2012 டிசம்பர் மாதத்திலும் முடிந்து விடாமல் போய்விடும் ஆபத்து உண்டு. எனவே எனக்குப் பிடித்த ஒன்றை மட்டும் உங்களுக்காகத் தருகிறேன். இதற்கும், இப்பொழுது நான் எழுதும் தொடருக்கும் சம்பந்தம் இல்லாவிடினும் கூட, தகவல் அடிப்படையில் இதை உங்களுக்குத் தர விரும்புகிறேன்.

மாயன்கள், பல இனங்களாக வாழ்ந்திருந்தாலும், அவர்களின் ‘இன்கா’ இனம் தெற்கே பரவலாகப் பிரிந்தே வாழ்ந்திருக்கிறது. நாம் தென்னமெரிக்கா என்னும் பெரிய நிலத்தை, ஏனோ சரியாகக் கவனத்தில் எடுப்பதில்லை. அமெரிக்கா என்றாலே, எமக்குக் கண்ணுக்குத் தெரிவது ‘யுஎஸ்ஏ’ (U.S.A) என்றழைக்கப்படும் ஐக்கிய அமெரிக்க நாடுகளும், கனடாவும் மட்டுமே! இந்த இரு நாடுகளுமே அமெரிக்கா என்னும் பதத்தில் எமக்குள் அடங்கி விடுகின்றன. ஆனால் இவை தாண்டி அதிக நாடுகளைக் கொண்டது தென்னமெரிக்கா.



இப்போ நான் சொல்லப் போவது, சாதாரண வரலாற்றுச் சம்பவம் அல்ல. பெரும் மர்மத்தை தன்னுள்ளடக்கிய சம்பவம் அது. மாயன்களின் பிரதேசத்துக்குச் சற்றுக் கீழே வாழ்ந்த, ‘நாஸ்கா’ என்னும் இனத்தவர் பற்றி முன்னரே உங்களுக்குச் சொல்லியிருந்தேன். அவர்களும் தென்னமெரிக்காவைச் சேர்ந்த பெரு (Peru) நாட்டில் வாழ்ந்தவர்கள்தான். அந்தப் பெரு நாட்டுக்குக் கீழே இருக்கும் நாடுதான் ‘சிலி’ (Chile). ‘சிலி’ நாடு, நீண்டதொரு நேர் கோடு போல, மேலிருந்து கீழ்நோக்கிப் பரவியிருக்கும் ஒரு நாடு. இந்த நாட்டுக்குச் சொந்தமாக, மேற்குப் பகுதிக் கடலில் அமைந்திருக்கும் ஒரு சிறிய தீவின் பெயர் ‘ஈஸ்டர் தீவு’ (Easter Island) என்பதாகும். ஈஸ்டர் தீவு, சிலி நாட்டுக்குச் சொந்தமான தீவுதான் என்றாலும், கடல் நடுவே சிலியிலிருந்து வெகு தூரத்தில் மிகத் தனியாக இருக்கிறது. முக்கோண வடிவத்தில் இருக்கும் அந்தத் தீவில், உலகத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் அதிசயம் ஒன்று இருக்கிறது. அது என்ன என்று இப்போது பார்க்கலாம்.



மனிதர்களே வாழமுடியாத அளவு தூரத்தில், கடலின் நடுவே இருக்கும் இந்தத் தீவைக் கண்டவர்கள் பிரமித்துப் போனார்கள். அத்தீவைச் சுற்றி, வரிசையாக மிகப் பெரிய மனிதர்கள் கடலைப் பார்த்தபடி நின்றதுதான் பிரமிப்பிற்குக் காரணம். ஒவ்வொரு மனிதரும் இராட்சதர்கள் போல, இரண்டு மீற்றர்கள் உயரத்தில் இருந்து, பத்து மீற்றர்கள் உயரம் வரை இருந்தார்கள். என்ன பயந்து விட்டீர்களா….? உண்மையில் அவர்கள் மனிதர்கள் அல்ல. யாரோ செய்த மனிதச் சிலைகள். அந்தத் தீவைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த இந்தச் சிலைகள் ஒவ்வொன்றும் பல தொன்கள் எடையுள்ளவையாக இருந்தன. சில சிலைகள் 80 தொன்கள் வரை எடையுள்ளதாகவும் இருக்கின்றன. யார் செய்தார்கள் இந்தச் சிலைகளை? ஏன் செய்தார்கள்? யாருக்கும் தெரியவில்லை.





இந்தச் சிலைகள் ‘மோவாய்’ (Moai) என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன. கி.பி.300 ஆண்டுகளில் இவை செய்யப் பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியில் கணித்திருந்தாலும், சரியான கணக்குத் தெரியவில்லை. இந்தச் சிலைகளை ஏன் அந்தத் தீவில் வாழ்ந்த மக்கள் உருவாக்கினார்கள்? எதற்காகத் தீவைச் சுற்றி அவற்றை அடுக்கி வைத்திருக்கின்றார்கள்? என்ற கேள்விகளுக்கு இன்று வரை எவரிடமும் பதில் இல்லை. இதற்கும் வேற்றுக்கிரகவாசிகளான ஏலியன்களுக்கும் சம்பந்தம் உண்டா என்றும் தெரியவில்லை.




இந்தச் சிலைகளை எப்படிச் செதுக்கினார்கள்? செதுக்கிய இந்தச் சிலைகளை எப்படித் தீவின் மையப் பகுதியில் இருந்து, பதினாறு கி.மீ. தூரத்தில் இருக்கும் கரைக்கு நகர்த்தி வந்தார்கள்? அப்படி நகர்த்தி வந்ததை எப்படி நிமிர்த்தினார்கள்? என்பவை எல்லாமே ஆச்சரியங்களாகவும், கேள்விகளாகவும் எம்முன்னே நிற்கின்றன. அந்தத் தீவிலுள்ள மரங்களை வெட்டியே இவற்றை க் கடற்கரை வரை நகர்த்தியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ஆனாலும் எந்தக் கருவிகளும் இல்லாமல் இப்படி நகர்த்தி நிமிர்த்தியதும், அவற்றைச் செய்ததும் மனிதனால் முடியாத ஒரு அசாத்தியச் செயல் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.


அந்தத் தீவில், வெட்டப்பட்டுப் பாதியில் விடப்பட்ட சிலை ஒன்றைக் கண்டால் அசந்து விடுவீர்கள். 200 தொன் நிறைக்கு அதிகமாகவும், மிக நீளமாகவும் இருக்கிறது அந்தச் சிலை. ஒரு வேளை அந்தச் சிலை செய்யப்பட்டிருந்தால், அதை எப்படி உயரத் தூக்கியிருப்பார்கள்? எப்படி நகர்த்தியிருப்பார்கள்? எதற்கும் விடையில்லை. எல்லாமே……! எல்லாமே….! ஆச்சரியங்களும் மர்மங்களுமாய் அமைந்து இருக்கின்றன.


மோவாய்’ (Moai) என்று சொல்லப்படும் இந்தச் சிலைகள், தீவைச் சுற்றி நிறுத்தப் பட்டிருப்பதோடு மட்டுமில்லாமல், தீவு முழுக்க நூற்றுக்கணக்கில் பாகங்களாய் சிதறியது போலப் போடப் பட்டிருக்கின்றன. தலைகள், உடல்கள் என எங்கும் மோவாய்கள்தான். அதிகம் ஏன், கடலுக்குள்ளும் மோவாய்கள் கிடக்கின்றன.




இந்தச் சிலைகள் யாருக்கு, என்ன செய்திகளைச் சொல்கின்றன? இதை மனிதர்கள் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இவ்வளவு சிரமப்பட்டு இவற்றைச் செய்ய வேண்டிய காரணம் என்ன? அவசியம் என்ன? மொத்தத்தில் சிந்தித்துப் பார்த்தால், 2012 இல் உலகம் அழிகிறதோ இல்லையோ, எமக்குப் பைத்தியம் மட்டும் பிடிக்காமல் இருந்தால் போதும் என்னும் அளவிற்கு இந்தத் தீவின் மர்மங்கள் இருக்கின்றன.


இது போலவே இன்னுமொரு ஆச்சரியமான இடம் ஒன்றும் தென்னமெரிக்காவில் உண்டு. அந்த இடத்தை ஏற்கனவே தமிழ்நாட்டில் எல்லோரும் அறிந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். ‘மச்சு பிச்சு’ (Machu Picchu) என்றழைக்கப்படும் மலை நகரம் அது. மிக ஆச்சரியமான நகரம். இந்த மச்சு பிச்சுவை நமக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? ‘சூப்பர் ஸ்டார்’ ரஜனிகாந்தும், ஐஸ்வர்யாராயும் ‘எந்திரன்’ திரைப் படத்தில் வரும் ஒரு பாடலை, இந்த இடத்தில்தான் பாடுவார்கள். இந்த மச்சு பிச்சுவும் தென்னமெரிக்காவின் ஆச்சரியங்களில் ஒன்று. ஆனால், இவை பற்றியெல்லாம் விளக்கமாக சொல்லிக் கொண்டு போவதற்கு எமக்குக் காலம் போதாது. நம்மை மாயாவும், டிசம்பர் மாதமும் வருந்தி அழைப்பதால் இவற்றை இங்கேயே விட்டுவிட்டு மாயாவின் பந்து விளையாட்டுக்குப் போகலாம்.

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே மாயன்கள் பந்து விளையாடியிருக்கிறார்கள். அதுவும் நாம் இப்போ விளையாடும் கால்பந்தாட்டத்தில் பாவனைக்கு வைத்திருக்கும் பந்து போலப் பெரிய பந்து. இந்தப் பந்தை வைத்து விளையாடும் விளையாட்டுத்தான், உலக அழிவை அடையாளப் படுத்துகிறது என்று சொல்லியிருந்தேன். “பந்து விளையாட்டுக்கும் உலகம் அழிவதற்கும் என்ன சம்பந்தம்?” என்றும் உங்களுக்கு கேள்வி இப்பொழுது எழலாம். ஆனால் மாயன்களைப் பொருத்தவரை இவை இரண்டுக்குமே நிறையச் சம்பந்தம் உண்டு. மாயன்கள் அவை இரண்டையுமே ஒன்றாகக் கலந்து தங்கள் உலக அழிவு பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.

இன்றைய உலகில் பல விளையாட்டுகளில் பந்து பயன்படுத்தப்படுகிறது. மிகப் பிரபலமாக இருக்கும் விளையாட்டுகள் அனைத்துமே, பந்து விளையாட்டுகளாகத்தான் இருக்கின்றன. குறிப்பாக பாஸ்கெட்பால், பேஸ்பால், உதைபந்தாட்டம், கிரிக்கெட், டென்னிஸ் என அனைத்துமே பந்துகளால் விளையாடப்படும் விளையாட்டுகள்தான். ஆனால், உலகிலேயே மனித இன வரலாற்றிலேயே, விளையாடப்பட்ட முதல் பந்து விளையாட்டு என்றால், அது மாயன்கள் விளையாடிய பந்து விளையாட்டுத்தான்.


கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் பந்து விளையாட்டை, மாயன்கள் விளையாடியதாகப் பதிவுகள் உண்டு. அதுவும், அவர்கள் விளையாடிய பந்து இரப்பரினால் (Rubber) செய்யப்பட்டிருந்தது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். மாயன்கள் அந்தக் காலங்களிலேயே ரப்பர் மரங்களில் பாலெடுத்து, பதப்படுத்தி, அதன் மூலமாக உருண்டையாக பந்தைத் தயார் செய்திருக்கின்றனர். மாயன்கள் வாழ்ந்த இடங்களில் நூற்றுக்கணக்கான ரப்பர் பந்துகளை அகழ்வாராச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

இப்போதும் அவை விளையாடக் கூடிய தரத்தில் இருக்கின்றன. மாயன்களின் பந்து விளையாட்டு, இப்போது விளையாடப்படும் நவீன விளையாட்டுகள் போலச் சட்ட திட்டங்களும், விதிகளும் உள்ள ஒரு விளையாட்டாகவே விளையாடப் பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அந்தப் பந்து விளையாட்டு, விளையாடப்படும் மைதானத்தின் அமைப்பும் எம்மை ஆச்சரியப் படுத்துகிறது. மிக நேர்த்தியாகவும், அளவு கணக்குகளோடும் அமைக்கப்பட்டிருந்தன விளையாட்டு மைதானங்கள். ஆங்கிலக் காப்பிட்டல் ‘I’ என்னும் எழுத்தைப் போல அமைந்த மைதானம், அண்ணளவாக 30 மீற்றர் நீளமும், இரண்டு பக்கம் நீளமான சுவர்களையும் கொண்டது.




மாயன்கள் விளையாடிய பந்து விளையாட்டு, தற்போது விளையாடப்படும் உதை பந்தாட்டத்தையும் (Soccer), பாஸ்கெட் பாலையும் (Basket Ball) கலந்தது போல ஒரு விளையாட்டு ஆகும் அல்லது இப்படியும் சொல்லலாம். நாம் விளையாடும் உதைபந்தாட்டமும், பாஸ்கெட் பாலும் மாயன்களிடமிருந்து நாம் பெற்றதாக இருக்கலாம்.







பந்து விளையாடும் மைதானத்தின் நடுவே, இரண்டு பக்கச் சுவர்களிலும் இரண்டு வளையங்கள் வடிவிலான அமைப்பு உண்டு. விளையாட்டில் பாவிக்கப்படுவது, 25 செ.மீ .அளவுள்ள இரப்பர் பந்து. இந்தப் பந்தைத் தமக்கென இருக்கும் பக்கத்தில் அமைந்திருக்கும் வளையத்தினூடாக அடிப்பதே அந்தப் பந்து விளையாட்டின் வெற்றியைத் தீர்மானிக்கும் விதியாகும்.




தலா ஒவ்வொரு பக்கமும் ஐந்து விளையாட்டு வீரர்கள் விளையாட்டில் பங்கேற்பார்கள். அவர்கள் பந்தை வளையத்தினூடாக அடிக்கும்போதோ அல்லது விளையாட்டின்போதோ, கால்களையோ கைகளையோ தலையையோ பந்தில் படும்படியாகப் பயன்படுத்த முடியாது. “அப்படி என்றால் எப்படிப் பந்தை அடிப்பது?” என்றுதானே கேட்கிறீர்கள்.

இடுப்பினாலும், முழங்கால்களினாலும் மட்டுமே பந்தை அடிக்க முடியும். இது எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்குப் புரிகிறதா? ஆனாலும் மாயன்கள் அப்படித்தான் அந்தப் பந்து விளையாட்டை விளையாடி இருக்கின்றனர். தற்காலப் பந்து விளையாட்டின்போது பாவிக்கும் தலைக் கவசத்தைப் போல, விதவிதமான தலைக் கவசங்களையும் இந்த விளையாட்டின் போது, மாயன்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.



மாயன்கள் விளையாடிய பந்து விளையாட்டை, ‘பிட்ஷி’ (Pitzi) என்று அழைக்கின்றனர். இந்த விளையாட்டின் போது, இரு பக்கமும் விளையாடும் ஐந்து விளையாட்டு வீரர்களுக்கு ஒருவர் அணியின் தலைவராக இருக்கின்றார். இப்போதுள்ள ‘கப்டன்’ (Captain) போல. எந்த அணி தோற்கின்றதோ, அந்த அணியின் தலைவர் பூசை, புனஸ்காரங்களின் பின்னர் அலங்கரிக்கப்பட்டு மகிழ்ச்சியுடனும், ஆரவாரத்துடனும் தலை வெட்டப்படுகிறார்.

“என்னடா இது? விளையாட்டிலும் கொலையா? விளையாட்டு என்பதே பொழுது போக்குவதற்கானதுதானே! இப்படி விளையாடுவதும் ஒரு விளையாட்டா?” என்று நினைப்பீர்கள். உண்மைதான். நீங்கள் நினைப்பது சரியானதுதான். ஆனால் மாயன்களுக்கு இந்தப் பந்து விளையாட்டு, ஒரு பொழுதுபோக்கான விளையாட்டு என்பதோடு நின்றுவிடவில்லை. அதையும் தாண்டிப் புனிதமானது இது. அந்தப் பந்து விளையாட்டு மொத்தமுமே ஒரு தத்துவத்தை வெளிப்படுத்துகிறது என்பதே அவர்கள் நிலைப்பாடு. “அட…! போங்கப்பா….! விளையாட்டில் தத்துவமா? தத்துவத்துடன் கொலையா….?” என்று நீங்கள் சலித்துக் கொள்லலாம். ஆனால் அந்தத் தத்துவமே, எங்கள் உலகம் அழியும் கோட்பாட்டை உள்ளடக்கியது என்று சொன்னால் வாயடைத்துத்தான் போவீர்கள்.

இதை நான் உங்களுக்குப் புரிய வைப்பதற்கு, மாயன்களின் வேதப் புத்தகமான, ‘பொபோல் வூ’ (Popol Vuh) சொல்லும் கதையைச் சொல்ல வேண்டும். ‘பொபோல் வூ’ என்னும் நூல் சொல்லும் கதையில் பூமி, சூரியன், சூரியக் குடும்பம், பால்வெளி மண்டலம் என்று அனைத்தைப் பற்றியும் சொல்லப் பட்டிருக்கிறது, அத்தோடு பால்வெளி மண்டலத்தில் இருக்கும் கருமையான இடம் (Dark Rift) பற்றியும் சொல்லியிருக்கிறது. அந்தக் கருமை இடத்துக்கு அருகே சூரியன் சென்றால், சூரியனும், உலகமும் அழிந்து விடும் என்றும் சொல்லியிருக்கிறது. தாங்கள் விளையாடிய பந்து விளையாட்டுடன் இவற்றை எல்லாம் சம்பந்தப்படுத்தி இருந்தார்கள் மாயன்கள்.


அந்தப் பொபோல் வூ அப்படி என்ன கதை சொன்னது? அது பற்றிப் பார்ப்போமா……? இப்போது பொபோல் வூ சொல்லும் கதைக்கு வரலாம்…….!
மாயன்களைப் பொறுத்தவரை பால்வெளி மண்டலத்தின் (Milky Way) வாசலாக அமைந்த ஒரு இடம் உண்டு. அது ஒரு மிகப் பெரிய கருமையான இடம். குழி போன்றது அது. அந்தக் கருங் குழியில்தான் மரணத்தின் கடவுள் (God of Death) இருக்கின்றார். மரணத்தின் கடவுள் வாழும் இடத்தின் பெயர் ‘ஷிபால்பா’ (Xibalba). ஷிபால்பாவைப் ‘பாதாள உலகம்’ (Under World) என்றும், ‘பயங்கரத்தின் இருப்பிடம்’ (Place of Fear) என்றும் மாயன்கள் சொல்கின்றனர்.




அது போல, மாயன்களுக்கு மூத்தவராக, ‘ஆதி தந்தை’ (First Father) என்னும் ஒருவரும் இருந்தார். அவருக்கு ஒரு இரட்டைச் சகோதரரும் இருந்தார். இவர்கள் இருவரும் மிகத் திறமையான பந்து விளையாட்டுக்காரர்கள். ஒருதரம் இவர்கள் இருவரும் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அந்தச் சத்தம் ஷிபால்பாவில் வாழும் மரணத்தின் கடவுளுக்குக் கேட்டது. அந்தச் சத்தம் அவரது அமைதியைக் குலைத்தது. எனவே ஆதி தந்தையையும், அவரது இரட்டைச் சகோதரனையும் போட்டிக்குப் பந்து விளையாட ஷிபால்பாவுக்கு அழைத்தார் மரணத்தின் கடவுள். பந்து விளையாட்டுக்கு அழைக்கப்பட்டதால், அந்த அழைப்பை அவர்களால் மறுக்க முடியவில்லை. அதனால், அவர்கள் பந்து விளையாடுவதற்குப் பால்வெளி மண்டலத்தின் வாசலில் அமைந்திருக்கும் கரிய இடத்துக்குச் சென்றனர். ஆனால் அங்கு அவர்கள், பந்து விளையாடப் படாமலே ஏமாற்றப்பட்டு, தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர்.


இந்த ஆதி தந்தைக்கு, இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்களும் இரட்டையர்கள்தான். இவர்கள் இருவரும் தந்தையையும், தந்தையின் சகோதரரையும் போல பந்து விளையாட்டில் திறமைசாலிகளாக இருந்தனர். இவர்களின் இருவரின் பெயரும் ‘ஹூன் அப்பு’ (Hun Ahpu), ‘இக்ஸ்பலங்கா’ (Xbalanque) ஆகும். “இந்தப் பெயர்களில் என்ன இருக்கிறது?” என்றுதானே நினைக்கிறீர்கள். அதில்தான் எல்லா விசயங்களுமே அடங்கியிருக்கின்றன. அதற்குப் பின்னர் வரலாம்………! ஆதி தந்தையின் மகன்கள் இருவரும் பந்து விளையாட்டில் சிறந்து விளங்கியதால், அவர்கள் இருவரும் மரணத்தின் கடவுளால், பந்து விளையாட்டு விளையாட அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் தந்தை இப்படியே அழைக்கப்பட்டுப் பின்னர் சதியினால் கொலை செய்யப்பட்டதை அறிந்திருந்தார்கள் இரட்டையர்கள். அதனால் சில தந்திரங்களைக் கையாண்டு, பந்து விளையாடியே தீர வேண்டிய நிர்ப்பந்தத்தை மரணத்தின் கடவுளுக்கு ஏற்படுத்தினர்.

அதன்படி விளையாடப்பட்ட பந்து விளையாட்டில் இரட்டையர்கள், மரணத்தின் கடவுளை வென்றனர். அதனால் அவர்கள் கொல்லப்படாமல் தடுக்கப்பட்டனர். ஆனாலும், பல வருடங்களின் பின்னர் மீண்டும் அவர்கள் பந்து விளையாட்டுக்கு அழைக்கப்படுவார்கள். ‘பொபொல் வூ’ சொல்லும் கதை இதுதான். இவற்றைக் கதையாகப் பார்க்காமல் ஆராய்ந்து பார்த்ததில், இதில் அடங்கியிருக்கும் சம்பவங்கள் எம்மை ஆச்சரியப் படுத்துகின்றன. இனி நான் சொல்லப் போவதைச் சற்று நிதானமாகக் கவனியுங்கள்.

கதையில் வரும் பெயர்களின் அர்த்தம் என்ன தெரியுமா……? ‘ஹூன்’ (Hun) என்றால் மாயன் மொழியில் ‘முதல்’ என்று அர்த்தம். ‘அப்பு’ (Ahpu) என்றால் ‘சூரியன்’ என்று அர்த்தம். அதாவது ஹூன் அப்பு என்றால், முதல் சூரியன் என்று அர்த்தம். அதன் இரட்டைச் சகோதரர்தான் ‘இக்ஸ்பலங்கா’ எனப்படும் சந்திரன். கதையின்படி, ஒவ்வொரு 26000 வருசங்களும் இவர்கள் பந்து விளையாட பால் வெளி மண்டலத்தின் வாசலில் இருக்கும் ஒரு மிகப் பெரிய கருமையான இடத்துக்கு அழைக்கப்படுவார்கள். விளையாட்டில் சூரியன் வென்றால், சூரியனும், பூமியும் பிழைத்துக் கொள்ளும். சூரியன் தோற்றால் இரண்டுக்குமே அழிவுதான். நமது நவீன விஞ்ஞானத்தின் மூலம் இந்தக் கறுப்பு இடத்தை நாம் அவதானித்து இருக்கிறோம். ஒவ்வொரு 26000 வருடங்களுக்கும் நமது பூமியும், சூரியனும், பால்வெளி மண்டலமும் ஒரே நேர் கோட்டில் வரும்போது, இந்த கருமையான இடத்திற்கு மிக அருகில் சூரியன் வந்து விடுகிறது என்பதும் கணிக்கப்பட்டிருக்கிறது.


ஒவ்வொரு 26000 வருசத்துக்கு ஒருதரம் மரணத்தின் கடவுள் பந்து விளையாட அழைப்பார். அதில் சில சமயங்களில் இரட்டைச் சகோதரர்கள் தப்பலாம். ஆனால் அடுத்த பந்து விளையாட்டுக்குப் பின்னர் அழைக்கப்படுவார்கள். அதற்கு 26,000 வருசங்கள் தேவை. ஒவ்வொன்றிலும் தப்ப வேண்டும். 2012 டிசம்பர் 21ம் திகதி தப்பவே முடியாது என்பதுதான் மாயன்களின் கணிப்பு.
இப்போது, மாயன்கள் எப்படித் தாங்கள் விளையாடும் பந்து விளையாட்டில் இந்தக் கதையைக் கொண்டு வந்து பொருத்துகின்றனர் என்று பாருங்கள்.

பந்து விளையாடும் மைதானம்தான் ‘பால் வெளி மண்டலம்’ (Milky Way). அதன் நடுவே உள்ள வளையங்கள்தான் ‘கரும்பள்ளம்’ (Dark Rift). விளையாடப்படும் பந்துதான் எங்கள் சூரியன். அந்தப் பந்தை யார் எந்த வளையத்தினுள் போடுகின்றனரோ, அதைப் பொறுத்து, போட்டவருக்கு வெற்றி என்று கருதப்பட்டு விளையாட்டு முடிவடைகிறது. அதாவது பால்வெளி மண்டலத்தில் இருக்கும் கரும்பள்ளத்தை நோக்கி நகரும் சூரியன், அதனால் அழிந்துவிடுகிறது. அத்துடன் எல்லாமே முடிவடைந்து விடுகிறது. அதன் அடையாளமாக விளையாட்டின் அணித் தலைவரின் தலை வெட்டப்படுகிறது. இந்தக் கதையையும், நான் இந்தத் தொடரில் முன்னர் விவரித்த 26000 வருடக் கணக்குகளினால் எப்படி பூமி அழியலாம் என்று சொன்னவற்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

இவ்வளவு திட்டவட்டமாக மாயன்கள் உலகம் அழியும் என்கிறார்களே, உண்மையில் உலகம் அழியுமா? இல்லை இது வெறும் காரணமே இல்லாத தேவையற்ற பயம்தானா? ஒரு வேளை உலகம் அழிவதென்றால் எப்படி அழியும்? இது போன்ற கேள்விகள் மட்டுமே இப்போது எம்மிடம் எஞ்சியிருப்பவை. அத்துடன் கூடக் கொஞ்ச பயமும்.
உலகம் அழியுமா? அழிந்தால், எப்படி அழியலாம்? அல்லது தப்பலாம்?


உலகம் 2012 டிசம்பர் 21ம் திகதியன்று அழியுமா? அழியாதா? என்ற மிகவும் பெறுமதி வாய்ந்த கேள்வியொன்றுடன் கடந்த பதிவில் விடைபெற்றிருந்தேன். ‘உலகம் நிச்சயம் அழியும்’ என்ற குரல் பலமாகவே இம்முறை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு அடிப்படையாய் அமைந்தவர்கள் என்னும் ரீதியில் மாயன்களையும், மாயன்கள் என்றாலே மாயமும், மர்மமும் என்பதால், உலகத்தில் உள்ள மர்மங்களையும் இதுவரை அலசி ஆராய்ந்து வந்தோம். ஆனால் இந்தத் தொடரின் வேர் என்பதே, 2012 டிசம்பர் 22 இல் உலகம் அழியுமா? இல்லையா? என்பதற்கான விடையறிதல்தான். எனவே, அதற்கான விடையை அலசும் கட்டத்திற்கு நாம் இப்பொழுது வந்துவிட்டோம். அப்பப்போ அழிவு பற்றி ஆங்காங்கே தொட்டுச் சென்றிருந்தாலும், அவற்றை எல்லாம் ஒன்று சேரத் தொகுத்து,இந்தத் தொடரில் மிகவும் விரிவாக நாம் பார்க்கலாம். அவற்றின் சாத்தியங்களையும் ஒன்று விடாமல் நாம் ஆராயலாம்.

அதற்கு முன்னர், கடந்த(27.2.2012) வெளிவந்த ஒரு அசத்தலான செய்தியைச் சொல்கிறேன். இது எந்த வகையான செய்தியென்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இது நடந்ததும் மாயன் பிரதேசத்தில்தான். உண்மையாகவே நான் சொல்லப் போகும் இந்தச் சம்பவம் நடந்தது24.07.2009 அன்றுதான். ஆனால் அது இப்போதுதான் மிகப் பெரிதாக வெளிவந்திருக்கிறது. இது உண்மையா? பொய்யா? என்பதற்கு என்னிடம் எந்தப் பதிலும் இல்லை. ஆனால் நீங்களும் இதை அறிந்திருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ‘என்ன நான் விசயத்தைச் சொல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறேன்’ என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. சரி விசயத்துக்கு வருகிறேன்.

விசயம் இதுதான்……..! எல் சல்வடோரைச் சேர்ந்த ஹெக்டர் சிலிஎஸார் (Hector Siliezar) என்பவர், தனது மனைவியுடனும், இரண்டு மகள்களுடனும்,சிசேன் இட்ஷா (Chichen Itza) என்னும் மாயன்களின் பிரமிட்டைப் பார்ப்பதற்கு உல்லாசப் பிரயாணம் மேற் கொண்டிருந்தார். இந்தப் பிரமிட்டைப் பற்றி முன்னர் பல தடவைகள் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். அந்தப் பிரதேசத்தைக் கண்டுகளித்த சிலிஎஸார்,தனது இரண்டு மகள்களையும் அந்தப் பிரமிட்டைப் பின்புலமாக வைத்துப் போட்டோக்கள் எடுத்தார். அந்த நேரத்தில் சிறிதாக மழை மேகங்கள் மேலே சூழ்ந்து, மெல்லிய இருட்டாக மாறத் தொடங்கி இருந்தது. அவர் மகள்களைப் போட்டோ எடுத்தது தனது ‘ஐபோன்’ மூலமாக. அவர் எடுத்த முதல் இரண்டு போட்டோக்களும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் மூன்றாவதாக எடுக்கப்பட்ட போட்டோவில் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ந்து போனார். சாதாரணக் கண்களுக்குத் தெரியாமல் இருந்த அது, படத்தில் மட்டும் மிகத் தெளிவாகத் தெரிந்தது. அப்படி என்னதான் அந்தப் போட்டோவில் இருந்தது என்பதை நீங்களே பாருங்கள்.




முதல் படத்தில் எதுவுமே இருக்கவில்லை. ஆனால் அதற்கு ஒரு சில செக்கண்டுகளின் பின்னர் எடுத்த படத்தில், அந்தப் பிரமிட்டின் உச்சியிலிருந்து மேல் நோக்கி மெல்லிய, ‘ரோஸ்’ நிற ஒளிவீச்சு காணப்படுகிறது. அடிப்படையில் இந்தப் படத்தைப் பார்க்கும்போது, யாரோ போட்டோஷாப்பில் (Photoshop) செய்த கிராபிக்ஸோ என்ற எண்ணமே தோன்றும். அப்படியொரு செயற்கைத்தனம்தான் அந்தப் படத்திலும் இருக்கிறது. ஆனால் இதை ஆராய்ந்த அனைவரும் இந்தப் படத்தில் கிராபிக்ஸ் வேலை செய்யப்படவில்லை என ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

படத்தை அக்கு வேறு, ஆணி வேறாக ஆராய்ந்த அனைத்துத் தொழில்நுட்ப வல்லுனர்களும் இந்தப் படத்தில் எந்தவித சாகசங்களும், மாற்றங்களும் செய்யப்படவில்லை என்று அடித்துச் சொல்கின்றனர். இந்தப் படத்தின் தாக்கத்தைக் கேள்விப்பட்ட நாஸா (NASA) விஞ்ஞானிகள் கூட படத்தைப் பரிசோதித்து, அதில் கிராபிக்ஸ் வேலை செய்யபடவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் எந்த ஒரு அறிவியலாளர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாத இந்த நிகழ்வு, எப்படி நிகழ்ந்திருக்கலாம் என்பதற்கு, நாஸா விஞ்ஞானிகள் இப்படிப் பதில் சொன்னார்கள். அதாவது, ‘போட்டோ எடுக்கப்பட்ட ஐபோன் கேமராவில் உள்ள லென்ஸின், சென்சரின் (Sensor) ஏற்பட்ட தவறான கணிப்பினால் இப்படி ஏற்பட வாய்ப்பு உள்ளது’என்றார்கள்.

கேமராக்களின் சென்சர்களில் ஏற்படும் தவறுகளால் இப்படிப்பட்ட படங்கள் உருவாவது என்னவோ உண்மைதான். அது மிகச் சரியாக இங்கும் நடந்திருக்குமா என்று யோசிப்பதற்குப் பலர் தயங்குகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், வெறும் 17 செக்கண்டுகளின் முன்னர் எடுத்த படத்தில் இல்லாமல், இந்தப் படத்தில் மட்டும் சென்சர் தவறு செய்யுமா?அத்துடன், படத்தில் வெளிவரும் ஒளிக் கீற்று மிகச் சரியாகப் பிரமிட்டின் உச்சியின் தளத்தில், மில்லி மீட்டர்கள் விலகாமல் ஆரம்பித்து மேலே செல்லுமா? அது மட்டுமல்லாமல் பிரமிட்டின் உச்சியின் சரி நடுவே அது எப்படித் தோன்ற முடியும்? எல்லாமே தற்செயலாக சென்சர் பழுதினால் ஏற்பட்டதா? இவைதான் அவர்களின் சந்தேகம். ஏற்கனவே நாஸா உண்மையைச் சொல்லாது என்னும் பெயர் அதற்கு இருக்கும் போது,இதைச் சொன்னாலும் அவர்கள் நம்பப் போவதில்லை.

மழை பெய்யத் தயாராகும் தருணங்களில், கண்ணுக்குத் தெரியாத ஒரு மின்னல் தாக்கின் மூலமாக, சென்சரின் தவறில் இப்படிப்பட்ட படம் உருவாகியிருக்கலாம் என்று நாஸா விஞ்ஞானிகள் சொல்வதை நம்ப வேண்டும் என்றே எனது மனதும் நினைக்கிறது. இதுவரை, உலகின் மிஸ்டரிகளையும், ஆச்சரியங்களையும் உங்களுக்குப் படிப்படியாகச் சொல்லி வந்த எனக்கு, பலவற்றில் உடன்பாடு இருக்கவில்லை. நான் அவற்றையெல்லாம் சொல்வதால், அவற்றை நம்புகிறேன் என்றும் பலர் என்னைப் பற்றி நினைக்கலாம். நான் உங்களுக்கு இப்படி, இப்படியெல்லாம் மிஸ்டரிகள் இருக்கின்றன என்ற தகவல்களைத் தருவது என்பது வேறு,அதை நம்புவது என்பது வேறு. அதனால் மேற்படி செய்தியையும் நம்புவதற்கு என் மனமும் இடம் தரவில்லை. ஆனால் என்னைத் தடுமாற வைத்த இன்னுமொரு நிகழ்வை அடுத்து நான் கண்டபோது அசந்து போனேன். இதை எந்த வகையில் சேர்ப்பது என்றே என்னால் சொல்ல முடியவில்லை. அதை நீங்களும் பாருங்களேன்.

போஸ்னியா (Bosnia) நாட்டில் விஸிகோ (Visiko) நகரில், தற்செயலாக ஆராய்ச்சியாளர்களால் ஐந்து பிரமிட்டுகள் (Pyramid) கண்டுபிடிக்கப்பட்டன. எகிப்தில் மட்டும்தான் பிரமிட்டுகள் இருக்கின்றன என நினைத்திருக்கும் நமக்கு, மாயன் பிரமிட்கள் தந்த அதிர்ச்சிகள் போதாதென்று, போஸ்னியாவிலும் பிரமிட்டுகள் இருப்பது பேரதிர்ச்சியாக இருக்கும்.

பிரமிட்டுகள் இங்கு மட்டுமல்ல, உலகின் பல இடங்களில் உண்டு. என்ன,நமக்குத்தான் அவற்றை அறிந்திருக்கும் வசதி இல்லாமல் போய்விட்டது. மெக்சிக்கோ, எல் சல்வடோர், குவாத்தமாலா அதிகம் ஏன், எமக்கு அருகில் இருக்கும் சீனா ஆகிய நாடுகளிலும் பிரமிட்டுகள் இருக்கின்றன. போஸ்னியாவில் இருக்கும் ஐந்து பிரமிட்டுகளும், சூரியன், சந்திரன், ட்ராகன் (Dragon), பூமி, அன்பு ஆகிய ஐந்துக்கும் அடையாளமாய் கட்டப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரமிட்டுகளின் வயதைக் கேட்டால் தலை சுற்றி விழுந்து விடுவீர்கள். 12000 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டவை அவை. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பிரமிட்டுகளிலே மிகவும் பழமையானவை அவை.


ஆனால், நான் இப்போது சொல்ல வந்தது இந்தப் பிரமிட்டுகளைப் பற்றியல்ல. இவற்றைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், மீண்டும் இன்னுமொரு தொடர் ஆரம்பிக்க வேண்டும். எனவே பிரமிட்டின் தகவல்களைத் தருவதை விட்டுவிட்டு, சொல்ல வேண்டியதை மட்டும் சொல்கிறேன்.
2010 களில் போஸ்னியாப் பிரமிட்டுகளை ஆராயச் சென்ற பௌதிகவியலாளர்கள், சூரியப் பிரமிட்டிலிருந்து ஒளிவீச்சு ஒன்று மேலே செல்வதைக் கண்டுபிடித்தனர். அந்த ஒளிக் கற்றை ஒன்பது மீட்டர்கள் அகலத்தில் மேல் நோக்கி வெளிவருகின்றது என்பதையும் கண்டுபிடித்தனர். அத்துடன் இந்த ஒளிக் கதிர்வீச்சின் சக்தியையும், அதாவது அதன் அலை நீளத்தையும் கண்டுபிடித்துள்ளனர். அது 28 கிலோ ஹேர்ட்ஸ் (kHz) அளவில் இருப்பதாகக் கணிக்கப்பட்டது. இது பௌதிகவியல் விஞ்ஞானிகளாலேயே கண்டு பிடிக்கப்பட்டதால், எவரும் மறுக்கவில்லை.


இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இது பற்றி என்ன முடிவுக்கு வரலாம் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இந்தப் பிரமிட்டில் இருந்து ஒளிவீச்சு வெளிவரும் என்றால், ஏன், மாயன்களின் பிரமிட்டிலிருந்தும் வெளிவரக் கூடாது? மாயன் பிரமிட்டின் ஒளிவீச்சை மறுப்பவர்கள் இதை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை. அதிர்ச்சி அத்தோடு விட்டுவிடவில்லை. மெக்ஸிக்கோவில் இருக்கும், இதுவரை நாம் கேட்டேயிராத ஒரு பிரமிட்டின் மூலமாக வந்திறங்குகிறது இன்னுமொரு அதிர்ச்சி. மெக்ஸிக்கோவில் இருக்கும் சந்திர பிரமிட்டை, 2000 ஆண்டில் படம் எடுத்தார்கள். அந்தப் படத்தில் என்ன தெரிகிறது என்பதையும் பாருங்கள்.


எல்லாமே போட்டோஷாப் வேலைகள்தானா? எல்லாமே கிராபிக்ஸ்தானா?இல்லை, இவை எடுத்த அனைத்துக் கேமராக்களின் சென்சர்களும் பழுதாகிவிட்டனவா? இப்படி எல்லாம் தற்செயல்கள் இருக்க முடியுமா?இவை உண்மையென்றால், மாயனின் ‘சிசேன் இட்ஷா’ பிரமிட்டில் எடுத்தது மட்டும் ஏன் பொய்யாக இருக்க வேண்டும்? இந்த ‘சிசேன் இட்ஷா’பிரமிட்டின் அதிசயங்களையும், அதன் கட்டட அமைப்புகளைப் பற்றியும் முன்னர் நான் சொல்லியிருக்கிறேன். அத்துடன், அது பற்றி இன்னுமொரு அதிசயமும் உண்டு, அதைப் பின்னர் சொல்கிறேன் என்றும் சொல்லியிருந்தேன். அதை நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால் நான் மறக்காமல் சொல்ல வேண்டுமல்லவா?

சிசேன் இட்ஷா பிரமிட் மாயன்களால், ‘குக்கிள்கான்’ என்னும் அவர்களுடைய கடவுளுக்காகக் கட்டப்பட்டது. இந்தக் குக்ககிள்கான் என்னும் கடவுள்தான், மாயன்களின் அறிவுக்கே அடிப்படைக் காரணமானவர் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உண்மையில் இந்தக் குக்கிள்கான் ஒரு கடவுள் அல்ல, அவர் கிழக்குப் பக்கத்தில் இருந்து கப்பல் மூலம் மாயன்களிடம் வந்து சேர்ந்த ஒருவர் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அப்படிக் கிழக்கில் இருந்து வந்தார் என்றால், எங்கிருந்து வந்திருப்பார் என்று பார்த்ததில், அவர்களுக்கு இரண்டே இரண்டு விடைகளே கிடைத்தன. ஒன்று அவர் சுமேரியாவில் இருந்து வந்திருக்கலாம் அல்லது தமிழர்களின் பிரதேசத்தில் இருந்து வந்திருக்கலாம் என்பவையே அவை.

இந்தக் குக்கிள்கான் என்பவரை பாம்புக் கடவுள் என்று மாயன்கள் வணங்கியிருக்கிறார்கள். பாம்பு என்பது மேற்குலகில் சாத்தானின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட நிலையில், பாம்பைக் கடவுள் அம்சமாகப் பார்க்கும் தன்மை இந்துக்களான நம்மிடம் அதிகம் இருந்ததும், குக்கிள்கான் தமிழ்ப் பிரதேசங்களில் இருந்து வந்திருக்கலாமோ என்னும் வாதத்துக்குப் பலமூட்டுகிறது. இந்தப் பாம்புக் கடவுளான குக்கிள்கானுக்காகவே கட்டப்பட்டது அந்தப் பிரமிட். உலக அதிசயங்களைத் தன்னுள் அடக்கிய ஒரு பிரமிட் அது. மாயன்களின் கணித அறிவையும், வானியல் அறிவையும், கட்டடக்கலை அறிவையும் இன்றும் பறைசாற்றிக் கொண்டு,நிமிர்ந்து நிற்கிறது இந்தப் பிரமிட். இதன் நான்கு பக்கமும், வருடத்தின் நான்கு காலங்களையும், அதில் உள்ள படிகளின் எண்ணிக்கைகள் 365நாட்களையும் குறிப்பது இந்தப் பிரமிட்டின் சிறப்பு. அத்துடன் இந்த நான்கு பக்கமும் உள்ள படிகள் மிகச் சரியாக 45 பாகை கோணத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல், இந்தப் பிரமிட்டின் நான்கு மூலைகளையும் குறுக்காக இணைக்கும் இரண்டு கோடுகளும், மிகச் சரியாக வடக்குத் தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் அமைந்திருக்கின்றன். இவையெல்லாம் மாயன்களின் அறிவுக்கும் கட்டடக் கலைக்கும் முக்கிய சான்றுகளாகும்.

இவற்றை விடவும் மிக ஆச்சரியமான ஒன்று அந்த பிரமிட்டில் உண்டு. இந்தப் பிரமிட்டின் நான்கு பக்கப் படிகளிலும், வடக்குப் பக்கத்தில் உள்ள படிகளில் ஒரு சிறப்பான அம்சம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்தப் படிகளின் அடிப்பக்கம் இரண்டு பக்கமும் இரண்டு பாம்புகள் வாயைத் திறந்து கொண்டிருப்பது போல அமைக்கப்பட்டிருக்கின்றன. வருடத்தில் இரண்டு முறைகள், மிகச் சரியாக மார்ச் 21ம் திகதியும், செப்டம்பர் 22ம் திகதியும் அந்தப் படிகளின் பக்கச் சுவர்களில், சூரியனின் நிழல் படுகின்றது. “அப்படி அந்தச் சூரியனின் நிழலில் என்ன விசேசம்” என்றா கேட்கிறீர்கள்?அதைப் படத்தில் பார்த்தால் உங்களுக்குப் புரியும் பாருங்கள்.


புரிகிறதா? பிரமிட்டின் மூலைகளில் படும் சூரிய ஒளி, அந்தப் பாம்பின் உடல் போல வளைந்து வளைந்து சரியாக அதன் தலையுடன் பொருந்தும். இதில் இன்னுமொரு விசேசம் என்னவென்றால், மாயன்கள் அந்தப் பக்கச் சுவரில் மட்டும் பாம்பின் தோல் போன்ற அமைப்பில் கற்களை வைத்துக் கட்டியிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு வருடமும் சரியாக மார்ச் 21ம் திகதியும், செப்டம்பர் 22ம் திகதியும் மாற்றமே இல்லாமல் இந்த நிழல்கள் தெரியும். “அப்படி என்ன விசேசம் இந்த மார்ச் 21ம் திகதிக்கும், செப்டம்பர்22ம் திகதிக்கும்” என்று யோசிக்கிறீர்களா?

உலகில் எந்த ஒரு இடத்திலும்,வருடத்தில் எப்போதும், இரவும் பகலும் ஒரே அளவு நேரமாக்க் கொண்டிருப்பது இல்லை. வருடத்தில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டும்தான் இரவும், பகலும் ஒரே அளவாக இருக்கும். மாயன் பிரதேசத்தில் இந்த இரவும் பகலும் ஒன்றாக இருக்கும் நாட்கள்தான் மார்ச்21ம் திகதியும், செப்டம்பர் 22ம் திகதியும். தற்கால கட்டட நிபுணர்களே தடுமாறும் இந்த ஆச்சரியமான கட்டட அமைப்பைக் கொண்டு அமைந்த இந்தப் பிரமிட்டில், பல அதிசயங்கள் நடக்கின்றன என்று மக்கள் நம்பும்போது, அதை மறுப்பதற்கு நிமிடம் எதுவும் இல்லாமல் போகிறது.

சரி, இப்பொழுது மீண்டும் நாம் உலக அழிவுக்கு வரலாமா….?
முதலில், உலகம் அழிவது என்றால் என்னவென்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். உலகம் அழிய வேண்டும் என்றால், அது இரண்டு வழிகளில் நடைபெற வேண்டும். 1. சூரியக் குடும்பத்தின் தலைமகனான சூரியன் அழிந்தால், அதனுடன் சேர்ந்து, பூமி உட்பட அனைத்துக் கோள்களும் அழிந்து போவது. 2. சூரியனுக்கு எதுவும் நடைபெறாமல், பூமி மட்டும் அழிவது. இங்கு, பூமி மட்டும் அழிவது என்று பார்த்தாலும், அதிலும் இரண்டு வகைகள் உண்டு. 1. நாம் வாழும் பூமியை ஏதோ ஒன்று மோதி அது சிதறியோ, வெடித்தோ அழிந்துவிடுவது. 2. பூமி அப்படியே இருக்க,பூமியில் உள்ள உயிரினங்கள் உட்பட அனைத்தும், நெருப்பினாலோ,நீரினாலோ, குளிரினாலோ, வெப்பத்தினாலோ அழிந்துவிடுவது.
மேலே கூறியதில் ஒன்றிலிருந்து முதலில் நாம் தெளிவாக வெளிவந்துவிடலாம்.

அதாவது, சூரியன் அழியுமோ என்னும் சந்தேகம் மாயன்களின் கதைகளிலிருந்தே நமக்கு ஏற்பட்டிருந்தது. மாயன்களின்’பொபோல் வூ’ என்னும் புத்தகம் சொன்னபடி, சூரியன் கருமையான இடத்தை நோக்கி ஒவ்வொரு 26000 வருடங்களுக்கும் செல்வதால், அதனால் ஈர்க்கப்பட்டு அழியலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் நவீன விஞ்ஞானத்தின் மூலம் ஆராய்ந்ததில், மாயன்கள் சொல்லியபடி ஒரு கருப்பு இடத்தை நோக்கிச் சூரியன் நகர்வது உண்மைதான் என்றாலும்,அந்தக் கருப்பு இடம் ஒரு திடமான இடமல்ல. அதாவது ஒரு நட்சத்திரம் போலவோ, கோளைப் போலவோ திடமான இடமல்ல. மில்க்கிவேயில் கோள்கள், நட்சத்திரங்கள் என்னும் திடமானவை இருப்பது போல,தூசுக்களும், வாயுக்களும் ஒன்று சேர்ந்து கோடான கோடி கிலோ மீட்டர் பரவி, பல இடங்களில் இருட்டுப் போல இருக்கின்றன.

பார்க்கும்போது மிகப்பெரிய இருண்ட பகுதி போல அவை தோன்றினாலும், அவை வெறும் வாயுக்களும் தூசுக்களும்தான். திடமான நட்சத்திரங்கள், கோள்களுக்கு அவற்றின் மையப் பகுதியில் ஈர்ப்புவிசை மிக அதிகமாக இருக்கும். ஆனால் இப்படிப் பரவி இருக்கும் இந்தக் கருமையான தூசுக்களுக்கும் ஈர்ப்பு விசை இருந்தாலும், அவை மையப் பகுதியைக் கொண்டிருக்காமல் இருப்பதால், பெரிய அளவில் ஈர்ப்பு விசைகளைக் கொண்டிருக்க முடியாது. இப்படி ஒரு கருமையான இடம் எமது சூரியன் பிரயாணம் செய்யும் இடத்துக்கு அருகிலும் உண்டு என்பது உண்மைதான். அதைத்தான் மாயன்கள் ‘ஷிபால்பா’ என்னும் மரணக் கடவுளின் இடம் என்று அழைத்தார்கள்.





மாயன்கள் சொல்லியது போல, சூரியனுக்கு எந்தத் தீங்கும் வரமுடியாது. அதாவது சூரியனைக் கவர்ந்திழுத்து அழிக்கவல்ல ஈர்ப்பு சக்தி அந்த கருப்புப் பள்ளத்துக்குக் கிடையாது. இங்கு பிளாக் ஹோல் (Black hole)என்பதற்கும், இதற்கும் வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிளாக் ஹோல் என்பதுதான் பிரபஞ்சத்திலேயே ஈர்ப்பு விசை அதிகமான ஒன்று. ஆனால் இது அதுவல்ல. மில்க்கிவேயின் மையப் பகுதியில் ஒரு ப்ளாக் ஹோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது எமது பூமியிலிருந்து 50000 ஒளிவருடங்கள் தூரத்தில் இருக்கிறது. மிக மிக மிகத் தூரத்தில். எனவே சூரியன் அழியாது என்பதில் நாம் திடமாக இருக்கலாம்.

அத்துடன் சூரியன் அழியலாம் என்னும் விபரம் கூட, மாயன்களின் பிற்காலப் புத்தகமான பொபோல் வூவில்தான் இருக்கிறது. ஆரம்பகால மாயன் காலண்டர்களிலோ, புத்தகங்களிலோ இல்லை. நமது சூரியன்,என்றாவது ஒருநாள் தன் சக்திகள் அனைத்தும் முடிந்து அழிந்து போகும் நிலை வரும் என்றாலும், அதற்கு பில்லியன் பில்லியன் வருடங்கள் நீங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை யாராவது பிழைத்திருதந்தீர்கள் என்றால்,அது பற்றி எமக்கு அறியத் தரவும். சூரியன் அழியாது என்றதும், எம்முன் எஞ்சி இருப்பது பூமியின் அழிவு மட்டும்தான். பூமியின் அழிவிலும் இரண்டு விதமான அழிவு உண்டு எனச் சொல்லியிருந்தேன். அதில் முதலாவது, பூமியுடன் ஏதாவது மோதுவதால் பூமி அழிவது என்பதாகும். இதைச் சற்றே நாம் பார்க்கலாம்.

இதுவரை நாம் பார்த்ததில், ‘நிபிரு’ அல்லது ‘பிளானெட் எக்ஸ்’ என்று அழைக்கப்படும் ஒரு கோள் பூமிக்கு அருகே வரலாம் என்பது முக்கியமானது. இந்த நிபிரு என்ற ஒன்று இருப்பதை நாஸா மறுக்கிறது. அப்படி ஒரு கோள் இருந்தால், அது இப்போதே விஞ்ஞானிகளின் கண்களுக்கு அகப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள். ஆனால் அந்த நிபிருவின் வேகம் மிக அதிகம் என்பதால், அது பூமியை அண்மிப்பதற்கு மிகச் சிறிய காலம்தான் தேவை எனவும், தற்போது அது எமது கண்ணுக்குத் தென்படாத தூரத்தில் இருப்பதாகவும் நாஸாவை எதிர்ப்பவர்கள் சொல்கிறார்கள். அத்தோடு அது ஒரு கருமையான கோள் என்றும், பிரபஞ்சத்தில் ஒளிபடாத, கருமையான எதுவுமே தெரிவதற்கு சாத்தியம் குறைவு என்றும் சொல்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும், இந்த நிபிரு என்ற ஒன்று இருப்பதற்கு 50க்கு 50 என்ற சாத்தியங்கள்தான் இருப்பதாக நாம் எடுக்க வேண்டும். அப்படி அது உண்மையாகவே இருக்கும் பட்சத்தில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு அப்புறம் அது நிச்சயம் நமக்குத் தெரியத் தொடங்க வேண்டும். எனவே ஆகஸ்ட் மாதம் வரை நாம் காத்திருக்கலாம். அப்போதும் எமக்கு நிபிரு தெரியாத பட்சத்தில் அந்தப் பயத்திலிருந்தும் நாம் விலகிக் கொள்ளலாம். தெரிந்தால், மூட்டையைக் கட்டலாம்.

இதற்கு அடுத்ததாக சொல்லப்படும் பூமியை நோக்கிய மோதல் என்றால் விண்கற்கள்தான். உண்மையில் இது மிகப் பெரிய ஆபத்தான ஒரு விசயமும் கூட. பூமி, விண்கல் தாக்குதலுக்கு உள்ளாகி அழிவதற்கு நூறு விகிதம் சாத்தியங்கள் உண்டு. ஆனால் அது எப்போது என்பதுதான் கேள்வி. பூமியை நோக்கி வந்து தாக்கக் கூடிய விண்கற்கள் எமது சூரியக் குடும்பத்திலேயே, பல்லாயிரக்கணக்காக இருக்கின்றன. அவற்றில் இதுவரை கணித்ததன்படி ஆயிரம் விண்கற்கள் பூமியை ஒட்டுமொத்தமாக அழிக்கும் அளவு பெரியவை. இவை போல ஒன்று தாக்கித்தான் முன்னர் இருந்த டைனசார்கள் எல்லாம் அழிந்தன. அந்த நேரத்திலும் பூமி முழுமையாக அழிந்தது. இப்படிப் பூமியை ஒட்டு மொத்தமாக அழிக்கக் கூடிய ஆயிரம் விண்கற்கள் விண்வெளியில் வலம் வருகின்றன. நூறு மீட்டர் பருமனுள்ள ண்கல் ஒன்றே போதுமானது பூமியை அழிக்க. ஆனால் இவற்றில் பல ஒரு உதை பந்தாட்ட மைதானதை விடப் பெரியன.


 

உலகத்தில் ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும்,ஒரு அட்டவணை போட்டு, இந்த ஆயிரம் விண்கற்களில் ஒவ்வொரு கற்களையும் தனித்தனியே, தினமும் அவதானித்து வருகின்றனர். ஏதாவது ஒரு விண்கல்லின் திசையாவது பூமியை நோக்கித் திரும்பும் பட்சத்தில் அவர்கள் உடன் அறிவிக்கத் தயாராக இருக்கின்றனர். ஆனால் டிசம்பர் 22ம் திகதி அளவில் பூமியை வந்து தாக்கக் கூடியதாக எந்த விண்கல்லும் இல்லை என்றே விஞ்ஞானிகள் சொல்கின்றனர். இதையும் தாண்டி கண்ணுக்குத் தெரியாத ஒரு விண்கல் தாக்கும் என்பதற்குச் சாத்தியம் மிகக் குறைவு. இதில் ஒன்றை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.2012 டிசம்பர் 22 ம் திகதி விண்கல் தாக்காது என்றுதான் வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்களே ஒழிய, விண்கல் என்றுமே தாக்காது என்று சொல்லவில்லை. அவர்களே சொல்லும் ஒன்று எம்மை நடுங்க வைக்கிறது. அதாவது பூமி நிச்சயம் ஒரு விண்கல் தாக்கி எப்போதாவது அழியும் என்பதுதான் அது.எனவே, நிபிரு என்ற ஒன்றினால் ஆபத்து வருமென்றால் நமக்கு ஆகஸ்டில் புரிந்து போய்விடும், விண்கல் பயம் என்பது டிசம்பர் 22 வரை தேவையில்லாதது. என்னைக் கேட்டால் இந்த இரண்டைப் பற்றியும் கவலைப்படத் தேவையே இல்லை என்றே சொல்வேன்.

இப்போது நம்மிடையே எஞ்சியிருக்கும் பூமியின் அழிவு என்பது பின்வரும் நான்கு வகையில்தான் அனேகமாக இருக்கலாம்.

1. சுனாமி,பூகம்பம் போன்ற தொடர்ச்சியான் இயற்கை அழிவுகள் 

2. பூமிக்குள் குமுறிக் கொண்டிருக்கும் ‘சசூப்பர் வோல்கான்’ (Supervolcan) எனப்படும் பாரிய எரிமலைகளின் வெடிப்பு. 

3. பூமியின் வட தென் துருவங்கள் இடம் மாற்றம் (Pole shift)

 4. சூரிய வெப்பக் கதிரின் தாக்குதலும், அதன் மூலம் ஏற்படும் மின்காந்த விளைவுகளும்.


இவை எல்லாவற்றையும் நாம் சரியாக கவனித்துப் பார்த்தால், இவை எல்லாமே ஒரு வகையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட விளைவுகளையே கொடுப்பவை. உதாரணமாக, பூமியின் வட-தென் துருவங்கள் இடம் மாறுவதை நாம் கருத்தில் கொள்வோம். துருவமாகத் தற்போது இருக்கும் இடம் வெப்பப் பிரதேசமாகவும், வெப்பப் பிரதேசம் துருவமாகவும் மாறினால், தற்சமயம் துருவத்தில் இருக்கும் பனிக்கட்டிகள் அனைத்தும் கரைந்து போகும். அவை மட்டும் கரைந்தால் போதும். பூமியின் அத்தனை நிலப்பகுதிகளும் பல நூறு மீற்றர்களுக்கு நீரினால் மூழ்கிவிடும். அதன் ஆரம்பக் கட்டமாக ஏற்படுவது பாரிய சுனாமிகளும்,பூகம்பங்களுமாகத்தான் இருக்கும். மாயன்களிடமிருந்து எமக்குக் கிடைத்த நான்கு புத்தகங்களில், ‘ட்ரெட்னர் கோடெக்ஸ்’ (Dredner Codex) என்பதில்தான்2012 உலக அழிவு பற்றி விளக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. அதன்படி பூமியானது நீரினாலும், நெருப்பினாலும் சூழப்பட்டு அழிவதாகத்தான் உள்ளது.

பூமியின் துருவங்கள் இடம் மாறுவதற்கும், பூமியில் தனித்தனியாக சுனாமிகளும், பூகம்பங்களும் ஏற்பட்டு உலகம் அழியும் என்பதற்கும் சாத்தியங்கள் தற்சமயம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது. சுனாமிகளும், பூகம்பங்களும் தனித்தனியே ஆங்காங்கே ஏற்பட்டாலும்,அவை ஒட்டுமொத்த உலகை அழிவை ஏற்படுத்திவிடாது. அதுவும் டிசம்பர்22க்குள் ஏற்படவே முடியாது. இதனடிப்படையில் கடைசியாக, எம்மிடையே எஞ்சியிருப்பன இரண்டே இரண்டு வியசங்கள் மட்டும்தான். அவை 1.சூரியனின் வெப்பக் கதிர் வீச்சு, 2. சசூப்பர் வோல்கான். இந்த இரண்டினாலும் ஏற்படப் போகும் அழிவை, எந்த ஒரு விஞ்ஞானியும் மறுக்கவில்லை. இவை இரண்டிற்கும் 2012 டிசம்பர் அழிவுக்கும் சம்பந்தம் இருக்கலாமா என்று கேட்டால், உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் இல்லை என்று பதில் சொல்வதே இல்லை. இவற்றிற்கு சாத்தியங்கள் இருக்கலாம் என்று சந்தேகத்துடன் ஒரு சாரார் சொல்ல, இருக்கிறது என்று ஒரு சாரார் அடித்துச் சொல்ல, எஞ்சியவர்கள் அமைதியாகத்தான் இருக்கிறார்களே ஒழிய, இல்லை என்று மறுக்கவில்லை.

“இது என்னப்பா புதுக் கதை? சூப்பர் வோல்கான் என்று ஒரு புதுச் சரடு விடுகிறாரே இவர்” என்று வழமை போல நீங்கள் நினைக்கலாம். ஆனால் பூமியை அழிவை நோக்கி நகர்த்தும் வண்ணம் அமைந்திருக்கின்றன இந்த சூப்பர் வோல்கான்கள் என்று சொன்னால் அதில் பொய் ஏதுமில்லை. நீங்கள் இதுவரை பார்த்திருக்கும் எரிமலை போன்றவை அல்ல இவை. இவை எல்லாமே மலைகள் போல அல்லாமல், சாதாரணமாக நிலத்தின் கீழ் அடங்கியிருப்பவை. மொத்தமாகப் பூமியில் எட்டு சூப்பர் வோல்கான்கள் இருக்கின்றன. அதில் முக்கியமாக 2012 டிசம்பர் உலக அழிவுக்குக் காரணமாக அமையும் என்று நம்பப்படும் சூப்பர் வோல்கான்,அமெரிக்காவில் உள்ள ‘யெல்லோ ஸ்டோன்’ (Yellowstone) என்பதுதான்.


அமெரிக்காவின் Wyoming மாநிலத்தில் அமைந்திருக்கிறது இந்த யெல்லோ ஸ்டோன். 102 கிலோமீட்டர் நீளம், 82 கிலோ மீட்டர் அகலம் கொண்ட பாரிய நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது இந்த எரிமலை. 60 கிலோ மீட்டர் நீளமும், 40 கிலோ மீட்டர் அகலமும், 10 கிலோ மீட்டர் பூமியின் கீழே ஆழமுமாக அமைந்த மிகப்பெரிய எரியும் கூண்டு போல இது இருக்கிறது. உண்மையில் இது எரியும் கூண்டு அல்ல. ஆயிரம் ஆயிரம் அணுகுண்டுகளின் வெடிப்பு சக்தியை உள்ளடக்கிய பாரிய வெடிகுண்டு. இந்த யெல்லோ ஸ்டோன் பிரதேசங்களில் 10000 க்கும் அதிகமான வெந்நீர் ஊற்றுகள் நிலத்தில் இருந்து சீறியபடி இருக்கின்றன. இவற்றைப் பார்ப்பதற்கென்றே சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிகின்றனர்.



கிட்டத்தட்ட ஒரு மிகப் பெரிய நகரம் ஒன்றே பூமிக்குக் கீழே எரிந்தபடி இருக்கின்றது என்று சொல்லக் கூடியதாக உள்ளது. அது எப்போது வெடித்து வெளிவருமோ என்று தெரியாத நிலையில், அதனால் ஏற்படும் சுடு நீர் ஊற்றுகளைப் பார்க்க மக்கள் அங்கே கூடுகிறார்கள். இந்த யெல்லோ ஸ்டோன் மட்டும் வெடிக்குமானால், ஒட்டுமொத்த அமெரிக்காவே சில நிமிடங்களில் காலியாகிவிடும். அது கடற்பகுதியில் ஏற்படுத்தும் தாக்கத்தால் உலகம் எங்குமே, சுனாமி மற்றும் பூகம்ப அழிவு எற்படும். அதுமட்டு மல்லாமல் இந்த வோல்கான் வெடிப்பதனால், அதன் பாதிப்பின் தொடர்ச்சியாக, உலகின் மற்றைய ஏழு சூப்பர் வோல்கான்களும் வெடிக்கும் சாத்தியங்களும் உண்டு. இதனால் ஏற்படுவது ஒட்டுமொத்த உலக அழிவுதான்.

இதற்குச் சாத்தியம் எப்போது உண்டு என்று கேட்டால்,இப்போதே உண்டு என்றுதான் பதில் வருகிறது. அநேகமாக இந்த யெல்லோ ஸ்டோன், டிசம்பர் 22 இல் வெடிக்கலாம் என்ற நம்பிக்கை பலரிடம் உண்டு. அதற்கான சீற்றங்களும் அங்கே காணப்படுகிறது என்பதும் உண்மைதான். இந்த யெல்லோ ஸ்டோன் வெடிப்பின் அழிவைத்தான் மாயன்கள் குறிப்பிட்டார்களோ என்று பலர் இப்போது சந்தேகப்படுகிறார்கள். காரணம், இதனால் ஏற்படும் அழிவுகள் நெருப்பினாலும், நீரினாலும் ஏற்படுவதாகவே இருக்கிறது. நாம் இப்போது கடைசியாக எம்மிடையே எஞ்சியிருக்கும் சூரியனின் வெப்பக் கதிர்த் தாக்குதலுக்கு வரலாம். மேலே சொன்ன அழிவுகளை சிலர் மறுத்துப் பேசினாலும், அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு ஆபத்து உண்டு என்றால், அது இந்தச் சூரியனின் வெப்பக் கதிர்த் தாக்குதல்கள்தான். இதற்குச் சாட்சியாக சமீபகாலங்களாக சூரியன் தனது வெப்பக் கதிர்வீச்சுகளை மிகவும் அதிகமாக்கியிருக்கிறது.



சூரியனின் இந்த கதிர்வீச்சுத் தாக்குதல் ஒரு புயல் போல பூமியைத் தாக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படித் தாக்கும்போது அதனுடன் சேர்ந்து உருவாகும் மின்காந்த அலைகளின் தாக்குதல்கள் பூமியின்,இரண்டு துருவங்களுக்கு ஊடாக பூமியின் உள்நுழைந்து, பூமியில் இருக்கும் அனைத்துவிதமான மின்னியல் சாதனங்களையும் தொழிற்பட முடியாமல் செய்துவிடும். அத்துடன் பூமி நினைக்க முடியாத அளவு வெப்பமாகி எல்லாமே அழியும் நிலைக்கு வந்துவிடும். இதன் மூலம் நாம் எப்படி அழிவோம் என்ற கொடுமைகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிடலாம். ஆனால், இந்த சூரியக் கதிர்த் தாக்கத்தால் பூமி மொத்தமாக அழிவைச் சந்திக்கும். இந்த சூரியத் தாக்குதல் 2012 இல் நடப்பதற்கு நிறையச் சாத்தியங்கள் உண்டு என்பதே பலரின் அனுமானமாக இப்போது இருக்கிறது.






நான் விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் இல்லாத எந்த ஒரு அழிவையும் நம்பப் போவதில்லை. அதையே நம்பிக்கையாகவும் உங்களுக்குத் தரப் போவதும் இல்லை. இந்தத் தொடரை நான் எழுதுவதால், 2012 இல் உலகம் அழியும் என்னும் மூட நம்பிகையைப் பலருக்கு நான் விதைப்பதாக சிலர் எண்ணியிருந்தார்கள். எனது நோக்கம் நிச்சயம் அதுவல்ல. மூடநம்பிக்கைக்கு முற்றிலும் எதிரானவன் நான். எந்த ஒரு விளைவுகளுக்கும் விஞ்ஞான ரீதியான விளக்கம் உண்டு என நம்புபவன் நான்.

அப்படி விளக்கம் கொடுக்க முடியாதவற்றை ‘மிஸ்டரி’ என்னும் ஒரு தொகுதிக்குள் அடைத்து வைத்து படிப்படியாக அதற்கான விடைகளை அறிய விரும்புபவன். அதனால்தான், அறிவியலுடன் சம்பந்தப்பட்ட மாயனின் இந்தத் தொடரை என் கைகளில் எடுத்தேன். என்னைப் பற்றி இங்கு நான் அதிகம் சொல்ல வேண்டியதன் அவசியமே, ‘என்னை யாரும் ஒரு மூடநம்பிக்கையைப் பரப்புபவன்’ என்னும் ஒரு வட்டத்தில் அடைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

மொத்தத்தில் உலகம் அழிவதற்கான சாத்தியங்கள் உண்டா எனக் கேட்டால், ஆம், நூறு சதவீதம் உலகம் அழியக் கூடிய சாத்தியங்கள் உண்டு என்று சொல்லலாம். ஆனால் அது 2012 டிசம்பர் 22 இல் அழியுமா என்று கேட்டால், அதற்குரிய சாத்தியங்களும் இருக்கத்தான் செய்கின்றன என்றே சொல்லக்கூடியதாக இருக்கிறது. தற்காலப் பூமியின் நடைமுறைகளும் அவற்றையே சாட்சிப்படுத்துகின்றன என்றும் சொல்லலாம்.
ஆனால், “2012 டிசம்பர் 22 இல் உலகம் அழியுமா?” என என்னைத் தனிப்பட்ட முறையில் நீங்கள் கேட்பீர்களேயானால், நான், “2012 டிசம்பர் 23ம் திகதி உங்களுடன் தேனீர் அருந்தத் தயாராக இருக்கிறேன்” என்றுதான் சொல்வேன்.
பிற்குறிப்பு: இதுவரை இந்தத் தொடரைத் தவறாமல் வாசித்து வந்த உங்களுக்கு, என் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது எழுத்து உங்களை ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்திருந்தால், அதற்கு இந்தத் தொடரை நான் எழுதத் தூண்டிய, என் அண்ணன் மகள் அருளினிக்குத்தான் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். அத்துடன் முதல் முறையாக இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குக் களம் அமைத்துத் தந்த திரு.மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கும், திரு.மனோ வர்ஷா அவர்களுக்கும், மறைவாக நின்று உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்
-ராஜ்சிவா
நன்றிகள்: திரு.ராஜ்சிவா

முற்றும்


15 comments:

  1. Vinayagamoorthi G
    November 29, 2012 - 12:59 pm
    இந்த பிரபஞ்சம் மற்றும் மனிதர்கள் பற்றி தெரிந்துகொள்ள உபயோகமாக இருந்தது

    ReplyDelete
  2. Jaivanth
    November 29, 2012 - 7:23 am
    Dear Raj Siva,
    Great effort U have put forth. U were telling all the possibilities but missed one important thing.. “The world is not going to end. We r moving into 4th dimensional reality as per quantum theory, earth’s Schumann resonance is raising. Our carbon based lifeforms r transferring to silicon based lifeforms very slowly ” Go through it.. Many researchers r going through it. Alex collier says about Tamil etc etc

    ReplyDelete
  3. சிக்கந்தர்
    November 28, 2012 - 2:01 pm
    உலக அழிவைப் பற்றி சிறப்பாக விளக்கியுள்ளீர்கள் மிகவும் அருமை,கடந்தகால அறிவியல் வரலாறு, தற்போதைய உலகத்தில் நடந்துகொண்டிருப்பவை, எதிர்காலத்தில் நடக்க இருப்பவை,இவையணைத்தையும் விறுவிறுப்புடன் ஆர்வம் குறையாமல் இக்கட்டுரையை படைத்த உங்களுக்கும்,உங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும்,எமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.இருப்பினும் எமக்கு குறையாக இருப்பது சோளச் சித்திரங்களைப் (Crop circles)பற்றிதான்…………………….நன்றி,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. சேவுகமூர்த்தி
    November 28, 2012 - 12:04 pm
    தொடர்ந்து 4 மணிநேரம் படித்தேன்.. விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை. அழகான,அறிவான படைப்பை வழங்கியமைக்கு நன்றி, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. Syaan CEO
    November 28, 2012 - 6:32 am
    ஏன் இப்பிடி இருக்க கூடாது?
    மாயனும் தமிழனும் ஒண்டு எண்டே வச்சு கொள்ளுவம். மாயன் கட்டின ப்ய்ரமிட்டையும் எங்கட கோயிலையும் ரெண்டு விதமா பாக்கலாம்.
    1. மாயனது பிரமிட் காலபோக்கில் கூர்ப்படைந்து சிலைகள் மற்றும் சிற்பங்களுடன் கூடிய எங்கட கோயில் கோபுரங்களாக மாறி இருக்கலாம்
    2. கோயில் கோபுரங்கள் கூர்படைந்து சிலைகள் மற்றும் சிற்பங்கள் அற்ற வெறும் பிரமிட் ஆக மாறி இருக்கலாம்.
    இதுல ரெண்டாவது நடந்து இருக்க சான்ஸ் கூட!
    பிரமிட்டையே கோயிலா கட்டுற ஐடியா தமிழன் கண்டு பிடிச்சதா இருக்கலாம். அத தமிழன் போய் மாயனுக்கு சொல்லி குடுத்து இருக்க சான்ஸ் கூட. ஏனென்டா எப்பவும் ஒரிஜினல் ஐடியா பெஸ்ட் : கோயில்கள் : சிலைகள் மற்றும் சிற்பங்கள் கொண்ட பிரமிடுகள்

    ReplyDelete
  6. வதையன்
    November 27, 2012 - 11:55 pm
    வியக்கத்தக்க ஒரு பயனுள்ள படைப்பு … அனைத்து தகவல்களையும் திரட்டி எமக்கு பெரு விருந்தாக தந்தமைக்கு நன்றி …
    வாசிச்ச எனக்கே இவ்வளவு நேரம் போனது என்றால்…. தகவல் திரட்டி எழுதின உங்களுக்கு எவ்வளவு நேரம் போய் இருக்கும்…….
    வளர்க தமிழ்

    ReplyDelete
  7. Ravi
    November 27, 2012 - 3:14 pm
    ஆசிரியரே, நீண்ட நாட்களுக்கு பின் ஒரு அருமையான கட்டுரையை முழு மூச்சுடன் விரும்பி படித்தேன்…என்னிடம் ஒருவர் கேட்டான் ‘என்ன உலகம் அழியுமா’ என்று நானும் விஞ்ஞான அடிப்படைவாதி என்பதை விட சமூகவாதி என்பதான் கூறினேன் ‘அழியுதோ என்னவோ, பெற்றோல் நிலையங்கள் எல்லாம் வண்டிக்கு இலவசமா எரிபொருளும், வாகனங்கள் எல்லாம் இலவச போகுவரத்தும், வங்கிகள் எல்லாம் கடன் கட்ட தேவையில்லை என்றும் அறிவித்தான் அழிவிற்கு முதல் நாளாவது எல்லா மனிதனும் சந்தோசமாக இருபாங்க’ எண்டு…எது எப்படியோ நிறைய விடயங்களை அறிந்து கொள்ள உதவியமைக்கு நன்றிகள்…

    ReplyDelete
  8. அருமையான விளக்கங்கள் , தெளிவான ஆராய்ச்சி கட்டுரை எனினும் இது நடக்குமா நடக்காத என்கிற குழப்பம் தான் இன்னும் தெளிவாகவில்லை. நமது இந்திய விஞ்ஞானிகள் இது பற்றி ஏதும் செய்திகள் வெளியிடாதது வருத்தம் அளிக்கிறது. நமது இந்திய அரசியல் போகிறதை பார்த்தால் உலகம் அழிவது எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது... நீங்கள் கூறுவது போல் நிபுரு நெருங்குகிறது என்றல் அதை எப்படி அறிவது எந்த செய்தி உண்மை எது வதந்தி என்று எப்படி தெரிந்து கொள்வது எத்தன மூலமாக தெரிந்துகொள்வது... இது பற்றி அறிய மேலும் சில விளக்கங்கள் அல்லது இணையதளங்களின் முகவரிகளை அளித்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக அது அமையும் என நம்புகிறேன். தங்களின் கட்டுரைக்கும், முயற்சிகளுக்கும் நன்றி.

    ReplyDelete
  9. அருமையான கட்டுரை. தெளிவான படங்கள்,சுவாரஸ்யமான எழுத்து,ஆழ்ந்த விளக்கம். அற்புதம் நண்பரே...

    நீங்கள் விரும்பினால் இலவச இணையதளம் தருவதற்கு நாங்கள் உதவி செய்கிறோம்.

    தொடர்பு கொள்க: ramkumaritrvs@gmail.com

    ReplyDelete
  10. Thanks for very nice information. by ramesh... NMC Tirchy

    ReplyDelete
  11. Thanks for your valuable information.......I can not believe this its very interesting.......

    ReplyDelete
  12. மிக அருமையான பதிவு... எந்த ஒரு நேரத்திலும், கருத்தின் நம்பகதிருக்கு எதிராக தோன எத்தனிக்கவில்லை.. சில இடத்தில், மதம், நம்மிக்கை பேரில் இந்த உலகம் தவறான பாதையில் திசை திருபபடிருப்பதை, தாங்கள் சுட்டி கட்டிய பொது மனது வலித்தது....

    தோழருக்கு நன்றி..... மிக சிறப்பான பதிவு.

    ReplyDelete
  13. Its amazing... I admired mayan's history n of course their astronomy.. I m being proud as tamilans r also part of those unbelievable creatures.. Thank u so much for such a awesome illustration... I have goosebumps...

    ReplyDelete
  14. நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete
  15. Its awesome article...u put so much effort to collect these information.Thank u so much. According to mayans lifecycle i believe that the world will end soon but it will be gradual.moreover so many legends in tamilnadu who written prophecy in palmscript which is burried into the earth or lost somewhere or it may hide by somebody. Anyway thank u for this wonderful article.All the best for your future publish

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!