Friday, January 18, 2013

கடுமையான ஒற்றைத் தலைவலியா? இந்த உணவுகளை சாப்பிடுங்க...


கடுமையான ஒற்றைத் தலைவலியா? இந்த உணவுகளை சாப்பிடுங்க...


அனைவருக்கும் பொதுவாக இருக்கும் உடல் பிரச்சனைகளில் தலைவலியும் ஒன்று. அதிலும் ஒற்றைத் தலைவலி தான் மிகவும் கொடியது. நிறைய மக்கள் இந்த ஒற்றை தலைவலியால் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உள்ளாவார்கள். இவ்வாறு தலை வலி வந்தால், உடனே அதனை போக்க பெரும்பாலானோர் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். சில நேரங்களில் இந்த தலைவலியால் மயக்கம், வாந்தி மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். பின் எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாதவாறு உடலானது பலவீனமடைந்துவிடும்.

பொதுவாக இந்த தலைவலி ஏற்படுவதற்கு நரம்பு மண்டலத்திற்கும், வாஸ்குலார் மண்டலத்திற்கும் இடையே உள்ள செயல்பாட்டில் ஏற்படும் ஒருவித மாற்றம் காரணம். அதுமட்டுமின்றி மூளை செல்களில் ஏற்படும் ஒருவித வித்தியாசமும் தலைவலியை உண்டாக்கும். இந்த மாதிரியான தலைவலியை குறைக்க பல வழிகள். ஒன்று மாத்திரை எடுப்பது, மற்றொன்று உணவுகளின் மூலம் சரிசெய்வது.

சொல்லப்போனால், மாத்திரைகளை விட உணவுகள் தான் எப்போதும் சிறந்தது. எனவே இந்த தலைவலியை குறைக்கும் உணவுகளை சாப்பிட்டு, பின் சிறிது நேரம் ஓய்வான நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டால், தலைவலியை சரிசெய்துவிடலாம். இப்போது அந்த ஒற்றைத் தலைவலியை போக்க எந்த உணவுகள் உதவுகிறது என்று பார்ப்போமா!!!


கீரைகள் 

கீரைகளில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. இந்த சத்து கடுமையான ஒற்றைத் தலைவலியை குணப்படுத்தும் தன்மையுடையது. அதுமட்டுமின்றி இந்த சத்துக்கள் நவதானியங்கள், கடல் உணவுகள் போன்றவற்றிலும் அதிகம் நிறைந்துள்ளது.



மீன் 

கடல் உணவுகளில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. இவற்றை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், ஒற்றைத் தலைவலியால் உடலினுள் ஏற்படும் உள்காயங்களை குணப்படுத்தும்.



பால் 

பாலிலும் தலைவலியை குறைக்கும் தன்மை உள்ளது. அதிலும் பாலில் உள்ள வைட்டமின் பி என்னும் ரிபோஃப்ளேவின், உயிரணுவின் ஆற்றலை அதிகரிக்கும். உயிரணுவின் ஆற்றலானது குறைவதால் தான் ஒற்றை தலைவலியே உண்டாகிறது.



ஆளி விதை 

இந்த சிறிய விதையில் ஒற்றைத் தலைவலியை கட்டுப்படுத்தும் சத்துக்களான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது.



காபி 

உண்மையில் தலை வலிக்கும் போது ஒரு கப் காபி குடித்தால், தலைவலியானது குணமாகிவிடும். அதிலும் குறைவான அளவில் மட்டும் காபியை குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் என்னும் பொருள் தலைவலியைக் கட்டுப்படுத்தும்.




ரெட் ஒயின் 

தைரமின் என்னும் ஆன்டி-ஆசிட் ஒயின் மற்றும் பீரில் அதிகம் உள்ளது. எனவே ஒரு டம்ளர் ரெட் ஒயின் அல்லது பீர் குடித்தால், கடுமையான ஒற்றை தலைவலியை சரிசெய்ய முடியும்.



தினை (millet) 

முழு தானியங்களில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே முழு தானியங்கள் மற்றும் தினையை சாப்பிடுவது நல்லது.



ப்ராக்கோலி 

பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான ப்ராக்கோலியில் மக்னீசியம் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே ப்ராக்கோலியை வேக வைத்து, அத்துடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் உப்பை சேர்த்து சாப்பிட வேண்டும்.




இஞ்சி 

ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படும் இஞ்சியானது தலை வலியைக் குணப்படுத்தும் தன்மையுடையது. எனவே தலை வலிக்கும் போது, உண்ணும் உணவில் சிறிது இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால், தலைவலியை குறைக்கலாம்.


இங்கிலாந்தில் 6 லட்சம் பேர் ‘ஃபேஸ் புக்’லிருந்து விலகல்!

இங்கிலாந்தில் 6 லட்சம் பேர் ‘ஃபேஸ் புக்’லிருந்து விலகல்!


ஃபேஸ்புக் பயனாளர்களின் சொந்தத் தகவல்கள் அதிக அளவில் வேறு பயனாளர்களால் திருடப்படுகிறது. தவிர அவை வர்த்தக நோக்கில் விலை பேசப்படுவதும் அதிகரித்துள்ளது. இதனால் தங்களின் ரகசியங்கள் பறிபோவதாக ஃபேஸ்புக் பயனாளர்கள் கருதுவதாலும் அவர்கள் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் போர் அடித்துப் போயும் பலர் விலகியுள்ளனர்.

இங்கிலாந்தில் மட்டும் சுமார் 6 லட்சம் ஃபேஸ்புக் பயனாளர்கள் பேஸ்புக் தளத்தில் இருந்து விலகி வருவதால், பேஸ்புக் தன் பயனாளர்களில் 2.88 சதவீதத்தை இழந்துவிட்டது. சோஷியல் பேங்கர்ஸ் என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இது தவிர நண்பர்கள் எண்ணிக்கை அதிகரிப்பில் கட்டுப்பாடு உள்ளிட்டவையும் ஃபேஸ்புக் தளத்தில் இருந்து பயனர்கள் விலகக் காரணமாக அமைவதாக டெய்லி மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது.


 ஃபேஸ்புக் மறுப்பு 

ஃபேஸ்புக் தளத்தில் இங்கிலாந்து ஊடகத் தொடர்பாளர் இந்த தகவலை மறுத்துள்ளார். ஃபேஸ்புக்கின் வளர்ச்சியில் மக்கள் தங்களை எப்போதும் அதில் இணைத்துக் கொண்டிருப்பதன் மூலம் வெளிப்படுத்துகின்றனர். ஃபேஸ்புக் பயனர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஒவ்வொரு நாளும் ஃபேஸ்புக் தளத்தில் லாக் ஆன் செய்கின்றனர். இங்கிலாந்து உலகின் ஆறாவது அதிகபட்ச ஃபேஸ்புக் பயனாளர்கள் இருக்கும் நாடு. டிசம்பரில் மட்டும் 33 மில்லியன் தனிநபர் பயனர்கள் அதிகரித்துள்ளனர்" என்று அவர் கூறியுள்ளார்

இந்தியாவில் 63 மில்லியன் 

மேலும் அமெரிக்காவில் 169 மில்லியன் பயனர்கள் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகின்றனர். அடுத்ததாக பிரேசிலில் 65 மில்லியன் பேரும், இந்தியாவில் 63 மில்லியன் பேரும் மாதந்தோறும் அதிகரித்து வருகின்றனர். சந்தை பயன்பாட்டில் அமெரிக்காவின் 54 சதத்துக்கு அடுத்து பிரிட்டன் தான் 53 சதமாக உள்ளது என்று ஊடகத் தொடர்பாளர் கூறியுள்ளார்.


அதிக அளவு விளம்பரம் 


ஃபேஸ்புக் தனது பயனாளர்களை மீண்டும் பெற வேண்டுமானால், அது தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும் ஃபேஸ்புக்கில் காணப்படும் விளம்பரங்கள் பலரை எரிச்சல் அடையச் செய்துள்ளன' என்று கூறியுள்ளார் ஸ்டூயர்ட் மைல்ஸ் என்பவர்.

ஆண்களின் அழகைக் கெடுக்கும் 7 விஷயங்கள்!!!

ஆண்களின் அழகைக் கெடுக்கும் 7 விஷயங்கள்!!!


அழகு என்பது பெண்களுக்கு மட்டும் என்பதில்லை ஆண்களுக்கும் தான். ஆனால் என்ன ஆண்களை விட பெண்கள் அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதால், அழகு பெண்களுக்கு மட்டும் என்று நினைக்கின்றோம். ஏனெனில் ஆண்களுக்கு அழகை பராமரிக்க சரியான நேரம் இல்லை. அவர்கள் குடும்பத்தை நன்கு ஒரு நிலைக்கு கொண்டு வர வேண்டுமென்று, ஓயாது உழைத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் பலர் வேலையில் அதிக ஆர்வம், பொறுப்பு காரணமாக, அழகை கண்டு கொள்ளாமல் விடுகின்றனர். அதுமட்டுமின்றி ஸ்டைல் என்பதற்காக சிகரெட் பிடிப்பது, தூங்குகிறேன் என்ற பெயரில் அழகை கெடுக்கும் வகையில் தூங்குவது மற்றும் பல செயல்களாலும், ஆண்களின் அழகானது பாதிக்கப்படுகிறது. இவையே நீண்ட நாட்கள் தொடர்ந்தால், இளமையிலேயே முதுமைத் தோற்றத்தைத் தான் பெற நேரிடும். இதற்காக அடிக்கடி மேக்-கப் போட சொல்லவில்லை. அழகைக் கெடுக்கும் செயல்களை தவிர்த்து, அழகுப் பொருட்களில் சிலவற்றை மட்டும் பயன்படுத்தினாலே போதுமானது. சரி, இப்போது அத்தகைய அழகைக் கெடுக்கும் செயல்கள் என்னவென்று படித்துப் பார்த்து, அவற்றை சரிசெய்து, பெண்களின் முன் அழகாகக் காட்சியளியுங்கள்.


குப்புற தூங்குவது 

தூங்கும் போது பக்கவாட்டிலோ அல்லது குப்புறப் படுத்து தூங்குவதால், முகமானது தலையணையில் அழுத்தப்படுகிறது. இவ்வாறு நீண்ட நேரம் தூங்குவதால், சருமத்துளைகளால் சுவாசிக்க முடியாமல், சுருக்கங்கள் ஏற்படுகின்றது. ஆகவே எப்போதும் முகத்தை அழுத்தும்படியாக தூங்காமல் இருக்க வேண்டும்.

மாய்ச்சுரைசரை தவிர்ப்பது 

மேலும் ஆண்கள் மாய்ச்சுரைசரை பயன்படுத்தாமல் இருப்பார்கள். ஏனெனில் அதைப் பயன்படுத்துவதை சிலர் விரும்பமாட்டார்கள். விருப்பமில்லை என்பதற்காக அதை தவிர்த்தால், பின் சருமம் மென்மையிழந்து, வறட்சியடைந்துவிடும். எனவே தினமும் படுக்கும் முன்னும், குளித்தப் பின்னரும் மாய்ச்சுரைசரை தடவுவது நல்லது


சோப்பு ஆண்கள் 

அழகுப் பொருட்களை பயன்படுத்த மாட்டேன் என்பதற்காக எப்போதும் முகத்திற்கு சோப்பை மட்டுமே பயன்படுத்துவர். இவ்வாறு எப்போதும் சோப்பை பயன்படுத்தினால், சருமம் வறட்சியடைந்துவிடுவதோடு, நாளடைவில் சுருக்கங்களும் வந்துவிடும். ஆகவே சோப்பைத் தவிர்த்து, ஆண்களுக்கென்று கடைகளில் விற்கும் ஃபேஸ் வாஷ்ஷை வாங்கி, பயன்படுத்துவது நல்லது.


புகைப்பிடித்தல் 

 அனைவருக்குமே புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்பது நன்கு தெரியும். அதிலும் இவற்றை பிடிப்பதால், புற்றுநோய் வரும் என்பதும் தெரிந்த விஷயமே. ஆனால் அந்த சிகரெட்டை அதிகம் பிடிப்பதால், உடல் ஆரோக்கியம் கெடுவதோடு, அழகும் தான் பாதிக்கப்படும். அதாவது சருமத்தில் கோடுகள் மற்றும் வாயைச் சுற்றிலும் சுருக்கங்கள் ஏற்படும். ஆகவே அழகாக காணப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டால், இவற்றை தவிர்ப்பது நல்லது.

மொபைல் 

மொபைலானது வீட்டில் இருக்கும் டாய்லெட்டை விட மிகவும் அசுத்தமானது. ஏனெனில் அந்த மொபைலை பாக்டீரியாவின் இருப்பிடம் என்று சொல்லலாம். அந்த அளவு அவற்றை பல இடங்களில் வைப்பதோடு, நிறைய பேரின் கைகளுக்கு சென்று, எண்ணற்ற பாக்டீரியாவை அதில் வைத்திருக்கும். அத்தகைய பாக்டீரியா அதிகம் நிறைந்துள்ள மொபைலை காதுகளில் வைத்து பேசும் போது, அதில் உள்ள பாக்டீரியாக்கள் முகத்திற்கு வந்து, கரும்புள்ளிகள், முகப்பருக்கள் மற்றும் பல தொற்றுநோய்களை சருமத்தில் வரவழைக்கின்றன. ஆகவே மொபைலை எப்போதும் கண்ட இடங்களில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.


பொடுகு 


ஆண்கள் பல இடங்களுக்கு சுற்றுவதால், தலையில் பொடுகு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அவ்வாறு வரும் பொடுகு அரிப்பை மட்டும் உண்டாக்குவதில்லை. சருமத்தையும் பாதிக்கிறது. அதுவும் எப்படியெனில், தலை அரிக்கும் போது கைகளை தலையில் வைக்கிறோம், பின் அதேக் கைகளை முகத்திலும் வைக்கிறோம். இதனால் பல சருமப் பிரச்சனைகள் வருகின்றன. ஆகவே நல்ல ஆன்டி-டான்ட்ரப் ஷாம்புகளை பயன்படுத்தி, தலையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.



சூரியஒளி 

ஆண்கள் ஒரு புல்லட் ப்ரூஃப் இல்லை. எப்படி பெண்களின் மீது சூரிய கதிர்கள் பட்டால் பிரச்சனைகள் வருகிறதோ. அதேப் போல் ஆண்களின் மீது பட்டாலும் பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் அளவுக்கு அதிகமாக வெளியே சுற்றுவது ஆண்கள் தான். அவ்வாறு சுற்றும் போது அளவுக்கு அதிகமான சூரியக்கதிர்கள் சருமத்தில் படுவதால், சரும புற்றுநோய்கள் வருவதோடு, பல தொற்றுநோய்களும் வரும். ஆகவே எப்போதும் வெளியே வெயிலில் செல்லும் போது, அரை மணிநேரத்திற்கு முன்னரே சன் ஸ்கிரீன் லோசனை தடவி, பின்னர் செல்ல வேண்டும். இதனால் சருமமானது பாதுகாக்கப்படுவதோடு, சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுக்கும்.

மதுரை மல்லிக்கு ''புவிசார் குறியீடு''

மதுரை மல்லிக்கு ''புவிசார் குறியீடு''



குண்டு குண்டாக பால் வெண்மை கலந்த தூக்கல் வாசனை கொண்ட மதுரை மல்லிகைப் பூவிற்கு மத்திய அரசின் அறிவுசார் சொத்துரிமைக் கழகம் ''புவிசார் குறியீடு'' அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. ''புவிசார் குறியீடு'' தமிழகத்தில் மலருக்கு என முதல் முறையாக மதுரை மல்லிக்கு தற்போது கிடைத்திருக்கிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மதுரை மல்லி விவசாயிகள் சங்கத்தினர் மதுரை வேளாண்மைக் கல்லூரி, தானம் அறக்கட்டளை உதவியில் கடந்த 2010 ஜூன் 3ல் இதற்கு விண்ணப்பித்தனர்.

மத்திய அரசின் வணிகவியல் துறையின்கீழ் இயங்கும் அறிவுசார் சொத்துரிமைக் கழகம் 27 மாதங் களுக்குப் பிறகு கடந்த செப்டம்பரில் மதுரை மல்லிக்கு இக்குறியீடு வழங்க முடிவு எடுத்தது. தனது 45ம் இதழில் இதற்கான அறிவிப்பை அப்போது வெளியிட்டது. இதற்கு எதிர்கருத்துக்கள் இருப்பின் அது குறித்து தெரிவிக்க 4 மாதம் கால அவகாசமும் வழங்கியது. ஆனால், இந்த 4 மாதங்களில் மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு தருவதற்கு என எந்த ஆட்சேபக் கருத்தும் வரவில்லை. எனவே தற்போது மதுரை மல்லிக்கு ''புவிசார் குறியீடு'' அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த குறியீட்டினை 20 ஆண்டுகளுக்கு மதுரை மல்லி விவசாயிகள் பயன்படுத்தலாம். மதுரை மல்லி விவசாயிகள் சங்கத்தினரிடம் பெறும் மல்லிகையை மட்டுமே உலகளவில் ''மதுரை மல்லி'' என்றழைக்க வேண்டும். ஏற்றுமதிக்கு இக்குறியீடு உதவும். மல்லி விவசாயிகளுக்கு கூடுதல் விலை உள்ளிட்ட பலதரப்பட்ட பலன்கள் கிடைக்கும். மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் இந்த ''மதுரை மல்லி'' பெயரில் மற்ற பகுதி மல்லிகைப் பூவை விற்பதோ அல்லது பிற பூக்களை இதனு டன் கலப்படம் செய்வதோ தண்டனைக்குரிய குற்ற மாகும். இதற்கு 2 லட்சம் அபராதத்துடன், 5 ஆண்டு சிறைத்தண்டனை உண்டு.

மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மண்ணில் கந்தகம், கால்சியம் அதிகம். ராமநாதபுரம் மாவட்டத்தில் பதியன் (செடி)களைப் பெற்று வந்து வளர்த்தாலும் இந்த 5 மாவட்டங்களில் வளரும்போதுதான் அவை ''மதுரை மல்லி''யைத் தருகின்றன. இதே செடியை நட்டு வளர்த்தாலும் கோவை போன்ற ஊர்களில் இவ்வகை ''மதுரை மல்லி'' விளையாது.

மதுரை மல்லி விவசாயிகள் சங்கச் செயலாளர் அரவிந்தன் கூறுகையில், ''மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மதுரை மல்லி வளர்ப்பில் இப்பகுதியில் 20ஆயிரம் விவசாயிகள் இருக்கின்றனர். 50ஆயிரம் ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு 60ஆயிரம் டன் பூக்கள் கிடைக்கின்றன. இந்த புவிசார் குறியீடு அறிவிப்பு தென்மாவட்ட விவசாயிகளுடன், தமிழக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியளித்துள்ளதுÕ என்றார்.

''பதியனுக்கு'' புவிசார் குறியீடு 
ராமநாதபுரம் விவசாயிகள் முடிவு

மதுரை மல்லிக்கான செடிகள் ராமநாதபுரம் மாவட்டத்தின் தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், நொச்சியூரணி, தண்ணீரூற்று, செம்மமடம் எனும் 20க்கும் அதிக கிராமங்களின் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வளர்கின்றன. தாய்ச் செடிகளை 20 ஆண்டுகள் வைத்திருக்கும் இவர்கள், கிளைத்தண்டுகளை ஒடித்தெடுத்து பாத்தி கட்டி நெருக்கமாக நட்டு மூன்றே மாதங்களில் ஒன்றரை அடி உயரம் வளர்த்து விற்பனை செய்கின்றனர்.

அடுத்த 3மாதத்திற்குள் பூக்கள் தரும் இச்செடிகளை தலா நான்கு ரூபாய்க்குள் மதுரை பகுதியினர் வாங்கி வந்து விவசாயம் செய்கின்றனர். எனினும் ராமநாதபுரம் தவிர்த்து மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வளரும் மல்லிகைப்பூக்களுக்கே தற்போது ''புவிசார் குறியீடு'' வழங்கப்பட்டிருக்கிறது. ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் தங்கள் மாவட்டத்தில் விளையும் ''பதியன்(செடி)களுக்கென தனி புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்க முடிவு எடுத்துள்ளனர்.

போடியில் பறக்குது வெள்ளை காக்கா

போடியில் பறக்குது வெள்ளை காக்கா



போடியில் வலம் வரும் வெள்ளை நிற காகத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.  ‘வெள்ளை காக்கா மல்லாக்க பறக்குது... சிவப்பு யானை பல்லாக்கு தூக்குது...’ என்று பழைய பாடல் ஒன்று உண்டு. சினிமா பாடலுக்காக கிண்டலாக எழுதப்பட்டாலும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வெள்ளை நிற காகங்கள் உள்ளதாக இணையதளங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கூட கேரளாவில் சில காகங்கள் வெள்ளை நிறத்தில் திரிவதாக கூறுகின்றனர்.

மனித இனத்தில் அடர்த்தியான வெண்மை நிறத்தில் பிறப்பவர்களை ‘அல்பினோ பேபி’ என்று கூறுகிறோமே, அதைப்போல பறவை, விலங்கினத்திலும் இது போன்ற வெண்மை நிற குறைபாடுகள் உள்ளன. தேனி மாவட்டம் போடி, வஉசி நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெள்ளை நிறத்தில் ஒரு காகம் வலம் வருகிறது. இதனால் வேகமாக பறக்க முடியாத காரணத்தால், பிற காகங்கள் இதற்காக இரை தேடி வந்து தருகின்றன. முழுமையான வெண்மையின்றி ஆங்காங்கே கருப்பு நிறத்துடனும் காணப்படுகிறது.

சற்று மந்தத்தன்மையுடன் காணப்படுவதால், இது குறைபாடுள்ள காகமாக கூட இருக்கலாம். ஒருவேளை அரிய வகை காகமாக இருந்தால், வனத்துறையினர் இதை பாதுகாக்கலாம் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ‘வெள்ளை காக்கா... வெள்ளை காக்கா’ என்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த அதிசய காகத்தை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்.

உலகின் மிகப்பெரிய திருவிழாவான மஹா கும்பமேளா தொடங்கியது

உலகின் மிகப்பெரிய திருவிழாவான மஹா கும்பமேளா தொடங்கியது


உலகின் மிகப்பெரிய மக்கள் ஒன்று கூடல் என்று கருதப்படும் கும்பமேளா நேற்று கங்கையும் யமுனை நதியும் அலகாபாதில் சங்கமிக்கும் இடத்தில் தொடங்கியது.
பல நாட்கள் நடைபெறும் இந்த மத விழாவில் பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் அங்கு புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்திருவிழாவின் முதல் நாளான நேற்று(14.1.13) மட்டும் ஒரு கோடி பேர் அலகாபாத் சங்கமத்தின் நீராடியிருப்பார்கள்.

வட இந்தியாவில் கடும் குளிர் நிலவும் போதிலும், ஆயிரக்கணக்கான சாதுக்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் அப்பகுதியில் நீராட திரண்டிருந்தனர்.

உடல் முழுவதும் திருநீரு பூசியபடி மலர் மாலை மட்டுமே அணிந்த நிர்வாண நாகா சாதுக்கள் இங்கு புனித நீராட வருவது, கும்பமேளாவின் போது மறக்க முடியாத ஒரு நிகழ்வாக கருதப்படும் என செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

வண்ணமயமான ஒரு ஊர்வலத்தில் வந்த நிர்வாண நாகா சாதுக்கள் மந்திர உச்சாடனங்களைச் செய்தவாறே கங்கை யமுனை சங்கமத்தில் குதித்து நீராடினர்.

கும்பமேளா காலத்தில் சங்கமத்தில் குளித்தால் தமது பாவங்கள் கழுவப்பட்டுவிடும் என்று இந்துக்கள் நம்புகிறார்கள்.

இத்திருவிழாவையொட்டி அலகாபாத் நகர் மற்றும் அதை சுற்றியுள்ளப் பகுதிகளில் 30,000க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது தவிர பதினான்கு இடங்களில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களின் தேவைக்காக 40,000 க்கும் அதிகமான கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எனினும் இவ்வகையான திருவிழாக்களின் போது, நதி நீர் கடுமையாக மாசடைவதால் அங்கு வரும் மக்களின் சுகாதாரம் குறித்த கவலைகளும் எழுந்துள்ளன.

அங்கு நீராட வரும் பெரும்பாலான யாத்ரிகர்கள் சிறிதளவு கங்கை நீரை உட்கொண்டு தமது உற்றார் உறவினர்கள் அதைப் பருகும் நோக்கில் சிறிய புட்டிகளில் அடைத்துச் செல்வதும் வழக்கமாக உள்ளது.

ஆனால் சுகாதாரப் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

கும்பமேளா காலத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடை செய்யப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஆறு நாட்கள் கங்கை யமுனை சங்கமத்தில் புனித நீராடும் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், நதிகளுக்கு மேலேயுள்ள அணைகளில் இருந்து கூடுதலாக நன்னீரைத் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது.

கும்பமேளா திருவிழாவுக்காக அரசு 210 மில்லியன் டொலர்கள், அதாவது 1150 கோடி இந்திய ரூபாய்களை செலவு செய்கிறது.

எனினும் கும்பமேளா மூலம் 12,000 கோடி ரூபாய்கள் அளவுக்கு வியாபாரம் இருக்கும் என இந்திய வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது.

இத்திருவிழாவுக்கு இந்தியர்களைத் தவிர வெளிநாட்டிலிருந்து பத்து லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.













மைக்ரோஃசாப்ட் தேர்வில் 9 வயது தமிழக சிறுவன் சாதனை

மைக்ரோஃசாப்ட் தேர்வில் 9 வயது தமிழக சிறுவன் சாதனை



மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் தேர்வில் 9 வயதே ஆன தமிழகத்தைச் சேர்ந்த பிரணவ் கல்யாண் என்ற மாணவர் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஏ.எஸ்.பி. டாட். நெட் பிரிவில் (ASP.NET), அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநருக்கான தேர்வை கடந்த 12ம் திகதி நடத்தியிருந்தது.

கம்ப்யூட்டர் பட்டதாரிகள்தான் பொதுவாக இத்தேர்வை எழுதுவது வழக்கம்.

ஆனால் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 4ம் வகுப்புப் படிக்கக் கூடிய 9 வயதே ஆன பிரணவ் கல்யாணும் தேர்வு எழுத அனுமதி கிடைத்தது.

இத்தேர்வு எழுதியதுடன் மட்டுமின்றி சிறுவன் பிரணவ் வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சாதனை நாயகனான பிரணவ்-ன் தந்தை கல்யாண், தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற பாலமேட்டைச் சேர்ந்தவர்.

இவர் கலிபோர்னியாவில் அமெரிக்க வங்கியில் பணியாற்றி வருகிறார்.

பிரணவ்வின் தாயார் விசாலாட்சியும் அமெரிக்க வங்கியில் நிதி ஆய்வாளராக பணியாற்றுகிறார்.

பிரணவ்வின் இந்த சாதனைக்கு அவரது குடும்ப நண்பர்களான மணிவண்ணன், நதியா, சதீஷ் உள்ளிட்டோர்தான் உந்துசக்தியாக இருந்துள்ளனர் என்று அவரது பெற்றோர் பெருமைப்படுகின்றனர்.



இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்குமிடையே 4000 வருட மரபணு தொடர்பு

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்குமிடையே 4000 வருட மரபணு தொடர்பு


அவுஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களுடைய மரபணுக்கூறுகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலிய கண்டத்துக்கு நாலாயிரம் ஆண்டுகள் முன்னரே குடியேற்றம் நடந்துள்ளது என்பதற்கான அறிகுறிகள் தெரிவதாகக் கூறுகின்றனர்.
அவுஸ்திரேலிய கண்டத்துக்குள் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முதல் மனிதர்கள் சென்ற பிற்பாடு 1800-களில் ஐரோப்பியர்கள் சென்று இறங்கும் வரையில் அக்கண்டத்துக்கு இடையில் வேறு எவருமே சென்றிருக்கவில்லை.

அப்படி ஒரு கண்டம் இருந்தது வெளியுலகுக்கு தெரியாமலேயே இருந்துவந்தது என்றுதான் இதுநாள் வரை கருதப்பட்டுவருகிறது.

ஆனால் ஐரோப்பியர்கள் செல்வதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்னதாகவே இந்தியாவில் இருந்து இக்கண்டத்துக்கு மனித நடமாட்டம் இருந்திருக்க வேண்டும் என்பதாக அவுஸ்திரேலிய பூர்வகுடிகளின் மரபணுக்கள் காட்டுகின்றன.

தவிர டிங்கோ என்ற காட்டு நாய்களை அவுஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தியவர்கள் இந்தியாவிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்களாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

அவுஸ்திரேலிய பூர்வகுடிகளின் மரபணுத் தொகுதியில் இந்திய மரபணுக்கள் கலந்த காலகட்டமும், அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட ஃபாஸ்ஸில் படிமங்களின் அடிப்படையில் டிங்கோ காட்டு நாய்கள் அவுஸ்திரேலியாவில் தென்பட ஆரம்பித்த காலகட்டமும் ஒன்றாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இவர்களுடைய ஆய்வின் முடிவுகள் நேஷனல் அக்காடமி ஒஃப் சயின்ஸஸ் என்ற அறிவியல் மன்றத்தின் பதிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளன.

மைக்ரோலித் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் கற்கருவிகளை அவுஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தியவர்களும் இந்தியாவிலிருந்து வந்த குடியேறிகளாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

ஆபாசப் படம் பார்க்கும் குரங்கு ! உண்மைதான் !

ஆபாசப் படம் பார்க்கும் குரங்கு ! உண்மைதான் !



மனிதர்களுக்கு மட்டும் அல்ல குரங்குகளுக்கும் கூட ஆபாச படம் பார்க்க ஆர்வம் உள்ளது என்பது இப்போது தெரிய வந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் உள்ள செவல்லி நகரில் மிருக காட்சி சாலை ஒன்று உள்ளது. இங்கு சிம்பன்சி வகை குரங்கு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த குரங்கு டி.வி காட்சிகளை பார்க்க வசதியாக குரங்கின் அறையில் டி.வி ஒன்று வைக்கப்பட்டது. டி.வியை குரங்கு உடைத்து விடக்கூடாது என்பதற்காக டி.வி.யை கண்ணாடி அறையில் வைத்து உள்ளனர்.

குரங்கு விரும்பிய சானலை பார்க்க வேண்டும் என்பதற்காக ரிமோட் கண்ட்ரோல் ஒன்றையும் குரங்கிடம் கொடுத்து உள்ளனர். ரிமோட் கண்ட்ரோலை சரியாக இயக்க தெரியா விட்டாலும் எதையாவது பட்டனை குரங்கு அழுத்துகிறது.
அப்போது டி.வியில் ஒவ்வொரு சானலாக மாறும் போது ஆர்வத்துடன் அதை பார்க்கிறது. ஸ்பெயின் நாட்டில் டி.வி.க்களில் ஆபாச சானல்களும் ஒளிபரப்பப்படுகின்றன. சானலை மாற்றும் போது ஆபாச சானல் வந்தால் அதை மட்டும் இந்த குரங்கு ஆர்வமாக பார்க்கிறது. ஆபாச சானல் வந்து விட்டால் மட்டும் அதை மாற்றுவது இல்லை. நீண்ட நேரம் பார்த்து கொண்டே இருக்கிறது.

இதில் இருந்து என்ன தெரிகிறது ? குரங்கில் இருந்து தான் மனிதன் வந்தான் என்று தெரிகிறதா ?

லண்டனில் நாளை கார் ஓடவேண்டாம் ! அபாய எச்சரிக்கை !

லண்டனில் நாளை கார் ஓடவேண்டாம் ! அபாய எச்சரிக்கை !



இன்று நள்ளிரவு முதல் , லண்டனை கடும் குழிர் தாக்கவுள்ளது. பிரித்தானியாவின் ஏனைய பகுதிகளான மிட்லான்ஸ், வேல்ஸ் மற்றும் ஸ்காட்லான் ஆகிய பகுதிகளை ஏற்கனவே கடும் குழிரும் பனியும் தாக்கியுள்ள நிலையில், இந்த அவரச அறிவிப்பு காலநிலை அவதானிப்பு நிலையத்தால் விடுக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் லண்டன் வெப்ப நிலை மயினஸ்(- 5 வரை) செல்லலாம் எனவும், மற்றும் கடும் பனிப் பொழிவு காணப்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனால் சுமார் 8 தொடக்கம் 10 சென்ரி மீட்டர் உயர பனி வீதிகளில் இருக்க கூடும் எனவும் கூறப்படுகிறது. மேலும் பிளக் ஐஸ்( கறுப்பு பனி) என்று சொல்லக்கூடிய பழிங்குபோன்ற ஐஸ் படிமங்கள் வீதிகளில் படரும் என்பதால் வாகனம் ஓட்டுபவர்கள் மிகவும் அவதானமாக இருப்பது நல்லது.

முடிந்தவரை பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது என்றும் அறுவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளி , சனி ஞாயிறு மற்றும் திங்கள் கூட பாரிய பனிப் பொழிவுகள் காணப்படும் என பிரித்தானிய காலநிலை அவதானிப்பு மையம் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பிரித்தானியா வாழ் எமது உறவுகளே, இன்றே வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்தல் நல்லது. மற்றும் டெஸ்கோ சூப்பர் மார்கெட் செல்பவர்கள் மேலும் கவனம் ! பனி தாக்குவதை விட டெஸ்கோ சூப்பர் மார்கெட்டில் குதிரை தாக்குவது தான் கடினமாக உள்ளது. என்னடா குதிரை என்று யோசிக்கிறீர்களா ? ஆம் டெஸ்கோ சூப்பர் மார்கெட் தற்போது தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. ஏன் எனில் அவர்கள் விற்றுவந்த பீஃப் பேர்கர்(மாட்டிறைச்சி) க்குப் பதிலாக, குதிரை இறைச்சியை விற்றுவிட்டார்களாம்.

அதாவது குறிப்பிட்ட சப்பிளையர், மாட்டிறைச்சிக்கு பதிலாக குதிரை இறைச்சியை பேர்கராக்கி அதனை பாக் செய்து டெஸ்கோவுக்கு அனுப்பியுள்ளார். டெஸ்கோவுக்கு போறாத காலம். ஆஸ்டா போன்ற சூப்பர் மார்கெட்டுகள் இச் செய்திகேட்டு புன்னகையோடு இருக்கிறது !

Thursday, January 17, 2013

100க்கு 102 மதிப்பெண்களைப் போட்ட டெல்லி பல்கலைக் கழகம்


100க்கு 102 மதிப்பெண்களைப் போட்ட டெல்லி பல்கலைக் கழகம்


நாட்டின் கல்வித்துறை எப்படி இருக்கிறது என்பதற்கு டெல்லி பல்கலைக் கழகம் வாரி வழங்கியிருக்கும் மதிப்பெண்களே சான்றாக இருக்கிறது... 100 மதிப்பெண்களுக்கு 102, 50 மதிப்பெண்களுக்கு 74 என்ற ரேஞ்சுக்கு மதிப்பெண்கள் கொட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பல்கலைக் கழக மாணவி ஒருவர் பிரெஞ்சு பாடத்தில் 102 மதிப்பெண்களை எடுத்து அதிர்ச்சியில் மூழ்கிப் போயிருக்கிறார். காரணம் என்ன தெரியுமா? மொத்த மதிப்பெண்களே 100 தான்!

இதேபோல் பிஎஸ்சி மாணவர்களுக்கு 50க்கு 65, 50க்கு 74 என்று மதிப்பெண்கள் போடப்பட்டிருக்கின்றன. கணிதத்தில் 55க்கு 57, இயற்பியலில் 38க்கு 58 என்றும் மதிப்பெண்கள் போடப்பட்டிருக்கிறது.

இப்படி நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்களுக்கும் கூடுதலாக மார்க்குகளை அள்ளிவீசியிருப்பதால் மேற்படிப்புக்குப் போக முடியாது என்ற நிலையில் இவர்கள் அனைவரும் மறுமதிப்பீடு செய்யக் கோரி வருகின்றனர்.

இதனால் டெல்லி பல்கலைக் கழகம் மதிப்பெண்களை மறுமதிப்பீடு செய்ய முடிவு செய்திருக்கிறது. அடக்கொடுமையே!

இலங்கையின் வடக்கின் சப்த தீவுகள்

இலங்கையின் வடக்கின்  சப்த தீவுகள்



இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகள் சப்த தீவுகள் எனப்படும். அவ் ஏழு தீவுகளும் பின்வருமாறு:

லைடன் தீவு (வேலணைத்தீவு)
புங்குடுதீவு
நயினாதீவு
நெடுந்தீவு
அனலைதீவு
எழுவைதீவு
ஊர்காவல் துறை

இவற்றுள் லைடன் தீவு புங்குடுதீவு காரைநகர் ஆகியவை கடல்வழிச் சாலைகள் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் இணைக்கப்படுள்ளன.

ஏனைய நான்கு தீவுகளான எழுவைதீவு நெடுந்தீவு நயினாதீவு அனலைதீவு என்பவற்றுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து கடல்வழிப் போக்குவரத்துத் தொடர்பு மட்டுமே உண்டு.



தீவுகளின் பெயர் விபரங்கள்

சப்த தீவுகள் கந்தபுராணத்தில் வேறு பெயர் கொண்டும் ஒல்லாந்தர் காலத்தில் ஒல்லாந்து நாட்டின் முக்கிய நகரங்கள் அல்லது தீவுகள் பெயர் இட்டு அழைத்தனர். அவற்றின் விபரம் பின்வருமாறு:

பெயர்                           ஆங்கிலத்தில்          ஒல்லாந்தர் பெயர்           கந்தபுராண பெயர்

வேலணைத்தீவு     Velanaitivu                        Leiden (லைடன்)                  சூசை
புங்குடுதீவு                Punkudutivu                      Middleburgh                              கிரவுஞ்சம்
நயினாதீவு                Nainativu                           Harlem                                       சம்பு
காரைநகர்                 Karaitivu                           Amsterdam                                 சாகம்
நெடுந்தீவு                 Neduntheevu                      Delft (டெல்ப்ற்)                    புட்கரம்
அனலைதீவு            Analaitivu                           Rotterdam                                  கோமேதகம்
எழுவைதீவு             Eluvaitivu                           Ilha Deserta                                இலவு

வரலாறு

தீவுகளில் மக்களின் ஆரம்ப குடியேற்றம், வாழ்வு முறை ஆட்சி முறைகள் பற்றிய வரலாற்று தகவல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. இடப் பெயர்களை வைத்து நோக்குகையில் இலங்கை மீதான தென் இந்திய கடல் படையெடுப்புகளில் இத்தீவுகளில் படைகளை அல்லது தனைகளை தங்க வைத்திருக்கலாம் என்று தெரிகின்றது. மேலும் ஊர்காவல்துறை போன்ற துறைகளும் முக்கியத்துவம் பெற்று விளங்கின. மேலும் தீவு மக்களின் உணவு மொழி போன்ற சில அம்சங்கள்கேரள மக்களுடன் ஒப்பிடத்தக்கவை.
போர்த்துகேயர் (1505 - 1658), ஒல்லாந்தர் (1656 - 1796) ஆகியோரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் கிறிஸ்தவ குருமார்கள் வந்து போதித்து பலர் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள்.



சமூகம்

யாழ் சமூகத்தை ஒத்த சாதிய படிநிலை அடுக்கமைவே இங்கும் நிலவியது. குறிப்பாக "குடிமைகள்" என்று அழைக்கப்படும் ஒடுக்கப்பட்டோர் வயல்களிலிலும் மேற் சாதி வீடுகளிலும் கூலி வேலைக்குநிர்ப்பந்திக்கப்பட்டு சுரண்டப்பட்டனர். மேலும் சம ஆசனம் சம போசனம் மறுக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டனர். இவர்களை தவிர மீனவ சமூகமும் ஒதுக்கப்பட்ட ஒரு பிரிவினராகவே வாழ்ந்தனர். தற்போது இச் சாதி கட்டமைப்பு தீவு பகுதிகளில் மிதமாக இடம்பெற்ற கிறீஸ்தவ மத மாற்றம் பின்னர் ஏற்பட்ட புலப் பெயர்வு காரணமாக மிகவும் வலுவற்று இருக்கின்றது.

யாழ் சமூகத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு. யாழ் குடாநாடு போலின்றி தீவுகளில் கல்வி வசதி குறைவு அதன் காரணமாக பலர் வியாபாரத்தில் ஈடுபட்டனர். இக் கூற்றை கா.சிவத்தம்பியின் யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை என்ற நூல் பின்வருமாறு விபரிக்கின்றது: "வியாபாரத்தை பொறுத்தமட்டில் (இத்தகைய) கல்வி வசதிகள் பெருமளவில் கிடையாத தீவுப்பகுதியினரே பெரும்பாலும் வெளிப் பிரதேசங்களில் கடைகள் நிறுவினர். இன்றும் இந்நிலைமை ஓரளவு தொடர்ந்து நிலவுவதைக் காணலாம். காரைநகர் புங்குடு தீவு முதலிய தீவுகளை சேர்ந்தவர்கள் இத்துறையில் முன்னோடிகளாக விளங்கினார்".

இலங்கையின் வட மாகாணத்துக்கு உள்ளேயும் கிளிநொச்சி மற்றும் வன்னிப் பகுதிகளில்விவசாயக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டபோது அங்கே இடம்பெயர்ந்து குடியேறியோரில் பெரும்பகுதியினர் தீவுப்பகுதிகளைச் சேர்ந்த மக்களே. "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்பதற்க்கமைய ஈழப் போர் காலத்தில் தீவுப் பகுதி மக்கள் பெரும்பாலனவர்கள் புலம் பெயர்ந்து விட்டார்கள். ஆரம்பத்திலேயே அவர்களுக்கு இருந்த வியாபார வெளி தொடர்புகள் இப் புலம் பெயர்வை உந்துவித்திருக்கலாம். பொரும்பாலான புலம் பெயர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளிலும் ஆஸ்திரேலியா மற்றும் கனடாவிலும் சிதறி வாழுகின்றார்கள்.



பொருளாதாரம்

விவசாயம் மீன்பிடி வியாபாரம் ஆகிய மூன்று துறைகளுமே தீவுகளின் பொருளாதார அடிப்படை.நில வளம் நீர் வளம் விவசாயத்துக்கு அவ்வளவு ஒத்துழைக்காவிடினும் நெல் தோட்ட செய்கை மற்றும் வியாபாரப் பயிரான புகையிலை செய்கையும் மேற்கொள்ளப்படுகின்றது. இத் தீவுகளின்புவியியல் சூழல் மீன்பிடித்தலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கின்றது. தீவக மக்கள் கொழும்பு தென் இந்தியா மற்றும் பிற நாடுகளிலும் வியாபார தொடர்புகளை பேணியும் வியாபர தாபனங்களை உருவாக்கியும் பொருள் ஈட்டுவதில் ஈடுபட்டு வந்தனர் வருகின்றனர். இங்கும், யாழிலும் உற்பத்தியாகும் பல பொருட்களை இவ் வியாபரிகளே பல பிரதேசங்களிலும் சந்தைப்படுத்துகின்றார்கள். தீவக பொருளாதார கட்டமைப்பை யாழ்ப்பாண அரச உத்தியோக உயர் கல்வி தொழில் ரீதியிலான பொருளாதார கட்டமைப்போடு ஒப்பிட்டு வேறுபாடு சுட்டலாம்.


அரசியல்

தீவுகள் அரசியல் முக்கியத்துவம் அற்ற பிரதேசங்களாகவே கணிக்கப்பட்டு வந்துள்ளன. எனவேதான் இந்திய அமைதிகாக்கும் படை தீவுகளை ஆக்கிரமிக்கவில்லை. மேலும் இலங்கை அரசு தீவுப்பகுதிகளை ஆக்கிரமித்த பொழுது ஈழப் போராளிகள் முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்க முயலவில்லை. எனினும் நயினா தீவில் உள்ள விகாரை மற்றும் இராணுவ முகாம் ஊர்காவல்துறையில் உள்ள துறைமுகம் என்பன கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தவை.

புலம்பெயர்ந்தோர் ஊர் ஒன்றியங்கள்
இத் தீவுகளில் இருந்து இடம் பெயர்ந்தோர் அத்தீவுகளின் சார்பாகவோ அல்லது அத்தீவுகளில் உள்ள கிராமங்களின் சார்பாகவோ ஊர் ஒன்றியங்கள் அமைத்து அத் தீவுகளில் சமூக சேவை செய்யது வருகின்றார்கள். ஆபத்து உதவிகள் வைத்திய உதவிகள் பாடசாலைகள் மீள் கட்டமைப்பு சனசமூக நிலையங்கள் பராமரிப்பு தொழில் வள உதவிகள் (படகுகள் மீன் வலைகள் இழுவை இயந்திரங்கள்விதைகள் விவசாய நுட்பங்கள் மர வேலை கருவிகள்) பொருள் சந்தைப்படுத்தல் ஏற்றுமதிஉதவிகள் போக்குவரத்து மேம்படுத்தல் மின்சத்தி வழங்குதல் கணணி கல்வி ஊக்குவிப்பு தொலை தொடர்பு மேம்படுத்தல் குழந்தைகள்-முதியோர்-நோய்வாய்பட்டோர் பராமரிப்புகோயில்/தேவாலயங்கள்/பள்ளிவாசல்கள் பராமரிப்பு மற்றும் விழா எடுத்தல் போன்ற பல சேவைகளில் ஈடுபட்டு அங்கிருக்கும் மக்களின் நலனில் அக்கறை காட்டி வருகின்றனர்.
இவ் அமைப்புகள் தொடர்பு தகவல்கள் வியாபார/விளம்பர கைநூல்களில் இருக்கின்றன.

Wednesday, January 16, 2013

பெண்களே.... ஆண்களை எப்போதும் மற்ற ஆண்களோடு ஒப்பிட்டு பேசாதீங்க....


பெண்களே.... ஆண்களை எப்போதும் மற்ற ஆண்களோடு ஒப்பிட்டு பேசாதீங்க....




பொதுவாக ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது என்பது பிடிக்காது. அதிலும் மனைவி கணவனை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசினால், அப்போது அவர்களுக்கு வரும் கோபத்திற்கு அளவே இருக்காது. ஏனெனில் ஆண்களுக்கு எப்போதும் அவர்களுக்கு பிடித்த மாதிரி தான் நடப்பார்கள். அது பெண்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அப்போது அவர்களை நம்முடன் பழகிய மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசினால், அந்த நேரத்தில் வீடே இரண்டாகிவிடும்.

சில சமயங்களில் வீட்டில் பெரிய பூகம்பமே வந்துவிடும். மேலும் அவர்கள் ஒரு சில நேரங்களில் கூட பொறுமையாக இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் அவர்களுக்கு பிடிக்காத யாருடனாவது ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் அத்தகையவர்கள் யார் என்றும் கூறுகின்றனர். * மாமனார்: எப்போதும் வீட்டில் சண்டை வந்தால், உடனே அனைத்து மனைவியர்களின் வாயிலிருந்தும் வரும் சொல், "உன் அப்பாவை மாதிரியே நடந்துக்குற பார்!" என்று சொல்வார்கள். எந்த ஆணுக்கும் எப்போதும் பொதுவாக அவர்களது அப்பாவுடன் ஒப்பிட்டு பேசினால் பிடிக்காது. அவர்களுக்கு அவர்களது அப்பா மிகவும் முக்கியமான ஒருவர் தான், ஆனால் அதற்காக அவர்களுடன் ஒப்பிட்டு பேசினால் சுத்தமாக பிடிக்காது.

மேலும் எப்போது அவர்களிடம் ஒரு முறை பேசி சண்டை வந்ததோ, அப்போதிருந்தே அதை மறுபடியும் பேசுவதை விட்டுவிட வேண்டும். ஏனெனில் அத்தகைய பேச்சு ஒரு நல்ல உறவுகளுக்கிடையில் பெரும் விரிசலை ஏற்படுத்திவிடும்.

* நண்பர்கள்: எந்த கணவனுக்கும் தன் மனைவிக்கு ஆண் நண்பர்கள் இருந்தாலும் பிடிக்காது. என்ன தான் நண்பர்களாக இருந்தாலும், தன் மனைவியை யாருக்கும் விட்டு தர மாட்டார்கள். இது தெரிந்தும், அவர்களிடம் நண்பர்களுடன் ஒப்பிட்டு பேசினால், அந்த நேரமே அவ்வளவு தான். மேலும் கணவன்மார்கள் அனைவரும், தன் மனைவிக்கு தானே ஒரு நண்பன் மற்றும் அனைத்தும் என்றும் மனதில் நினைத்திருப்பார்கள். ஆகவே அத்தகைய கணவரை எப்போதும் நண்பர்களுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம்.

* பழைய காதலன்: திருமணத்திற்கு முன் ஒருவரை காதலித்து, அவன் நல்லவனாக இருந்தும், திருமணம் செய்ய முடியாமல் போய், மற்றொருவரை திருமணம் செய்து கொண்டு, அவரிடம் உங்களது முதல் காதல் பற்றி சொல்லியும், உங்களை திருமணம் செய்தவர், உங்களை சந்தோஷமாக வைத்து, எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வாழும் போது, ஒரு சில நேரத்தில் உங்கள் கணவன், ஏதோ ஒரு டென்சனில், உங்களை திட்டிவிட்டால், அப்போது நீங்கள் வாய் தவறிக் கூட பழைய காதலனுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம். ஏனெனில் எந்த இடத்தில் பாசம் இருக்கிறதோ, அதே இடத்தில் பொறாமையும், கோபமும் இருக்கும். ஆகவே எப்போதும் இவர்களுடன் கணவனை ஒப்பிட்டுப் பேசக்கூடாது.

* தோழியின் கணவன்: ஆண்களுக்கு ஒப்பிட்டுப் பேசினாலே பிடிக்காது என்று சொல்லும் போது, அது யாராக இருந்தால் என்ன? அதிலும் உதாரணமாக, உங்கள் தோழியின் கணவன் அவளுக்கு ஒரு நல்ல சேலை வாங்கி வந்து கொடுத்து, உங்கள் கணவன் குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு, தன்னால் முடிந்த ஒன்றை ஆசையாக வாங்கி வரும் போது, அந்த நேரத்தில் நீங்கள் அதைப்பற்றி பேசும் போது கண்டிப்பாக அவர்களுக்கு கோபம் வரும். ஆகவே இது போன்ற விஷயத்திலும் கவனமாக புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

எனவே இத்தகையவர்களுடன் எந்த காரணத்தைக் கொண்டும் ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் கணவன் என்ன தான் செய்தாலும், அவர்களது குணத்தை, சூழ்நிலையை மற்றும் அனைத்தையும் புரிந்து நடந்துகொண்டால், கண்டிப்பாக வாழ்க்கையானது நன்றாக மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

100 அடி சுரங்கம் தோண்டி வங்கியில் கொள்ளை

100 அடி சுரங்கம் தோண்டி வங்கியில் கொள்ளை



ஜெர்மனியில் உள்ள பெர்லின் வங்கிக்கு 100 அடி நீளத்துக்கு சுரங்கத்தை தோண்டி சென்ற மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

பெட்டக அறையிலிருந்து பணம், நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள், தடயங்களை மறைப்பதற்காக அந்த அறையை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பெர்லின் போலீஸ் அதிகாரி கூறுகையில், வங்கிக்கு அருகில் தரை தளத்துக்கு கீழே உள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் இடத்திலிருந்து வங்கியின் பெட்டக அறைக்கு சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. மிகவும் திறமையாக இந்த சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

பூமியும், சூரியனும் அருகருகே வந்த நிகழ்வு : பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்

பூமியும், சூரியனும் அருகருகே வந்த நிகழ்வு : பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்




கோள்கள் சுற்றும்போது மற்ற கோள்கள் அருகே வரும் அபூர்வ நிகழ்வுகள் அவ்வபோது நடப்பது வழக்கம். இந்த சுழற்சியில் ஜனவரி மாதத்தில் பூமியானது, சூரியனுக்கு மிக அருகிலும் ஜூலை மாதத்தில் வெகுதூரத்துக்கும் செல்லும். அந்த வகையில் சூரியனுக்கு மிக அருகில் பூமி வரும் நிகழ்வு இன்று காலை 10.10 மணிக்கு நடந்தது. பூமியிலிருந்து 147 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் சூரியன் இருந்தது. இதனால் சீதோஷ்ண நிலையில் சிறிது மாற்றம் தென்பட்டது. இந்த நிகழ்வை கோளரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு ஏற்பாடுகள் மூலம் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

பிர்லா கோளரங்க செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் கூறுகையில், 'சூரியனை நீள்வட்ட பாதையில் பூமி சுற்றி வருகிறது. இன்று சூரியனுக்கு அருகில் அதாவது 14.7 கோடி கி.மீ. அருகில் பூமி சுற்றி வரும். அதேபோல, வரும் ஜூலை 2ம் தேதியன்று சூரியனுக்கு 15.4 கி.மீ. அருகில் பூமி சுற்றி வரும். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.

இந்திய விஞ்ஞானிகள் சாதனை புற்றுநோயை குணப்படுத்தும் புது மூலக்கூறு கண்டுபிடிப்பு

இந்திய விஞ்ஞானிகள் சாதனை புற்றுநோயை குணப்படுத்தும் புது மூலக்கூறு கண்டுபிடிப்பு



 புற்றுநோயை குணப்படுத்தும் மூலக்கூறை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உயிர்கொல்லி நோயான புற்றுநோயால், இந்தியாவில் ஆண்டுதோறும் ஏராளமானோர் இறக்கின்றனர். இந்த நோய்க்கு தற்போது அளிக்கப்படும் சிகிச்சைகள் பக்க விளைவுகள் ஏற்படுத்துவதாக இருக்கின்றன. இந்நோயை குணப்படுத்துவதற்கான மாற்று மருந்தை கண்டுபிடிக்க இன்னும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் டாக்டர் சதீஷ் சி ராகவன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. அதில், புற்றுநோயை குணப்படுத்துவதற்கான புதிய மூலக்கூறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்நோயை குணப்படுத்துவற்கான புதிய மருந்துகளை தயாரிப்பதில் இந்த மூலக்கூறு புரட்சியை ஏற்படுத்தும் என்று இக்குழு தெரிவித்துள்ளது. இந்த மூலக்கூறுக்கு ‘சதீஷ் அஸ் எஸ்சிஆர்&7’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது பற்றி சதீஷ் அளித்த பேட்டியில், ‘‘புற்றுநோய்க்கு இப்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையில், இந்த மூலக்கூறு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். புற்றுநோய் சிகிச்சையில் இந்த மூலக்கூறு கண்டுபிடிப்பு ஒரு மைல்கல் என்று கூட கூறலாம். கட்டியால் பாதிக்கப்பட்ட எலிகளுக்கு இந்த மூலக்கூறை செலுத்தி பரிசோதனை செய்ததில், கட்டிகளின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, எலிகளின் வாழ்நாள் அதிகரிப்பது உறுதியானது’’ என்றார். இவர், கேரளாவில் உள்ள கன்னூரை சேர்ந்தவர்.

Tuesday, January 15, 2013

இவர்களுக்கு ஏன் நோபல் பரிசு கொடுத்தார்கள் தெரியுமா?

இவர்களுக்கு ஏன் நோபல் பரிசு கொடுத்தார்கள் தெரியுமா?




குளோனிங் தவளை...டாலி ஆடு...


இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த சர் ஜான் குர்டான். இவர் தான் முதன் முதலில் குளோனிங் மூலம் புதிதாக ஒரு உயிரை உருவாக்கியவர். விலங்கியல் துறை ஆராய்ச்சியாளரான இவர் 1962ம் ஆண்டில் Xenopus என்ற தவளையின் ஸ்டெம் செல்லில் இருந்து புதிதாக ஒரு தவளையை உருவாக்கினார். இந்த ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே பின்னர் டாலி என்ற ஆட்டுக் குட்டி ஸ்டெம் செல் மூலம் உருவாக்கப்பட்டது.






Godfather of cloning....


அதாவது உயிர் அணுக்களான விந்து, முட்டை ஆகியவை சேராமல் உடலில் வேறு ஒரு செல்லையே ஒரு உயிராக உருவாக்குவதே குளோனிங் ஆகும். குளோனிங் மூலம் உயிர்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கிய இவர் தான், Godfather of cloning.





எல்லா செல்லும் ஒரே செல்லே...


உடலின் எல்லா செல்களிலும் உள்ள ஜீன்கள் ஒரே மாதிரியானவை என்பதை முதன் முதலில் நிரூபித்தவரும் இவரே. உடலின் ஒரு செல் ஒரு உறுப்பாக மாறிவிட்டால், அதிலிருந்து அந்த உறுப்பை மட்டுமே உருவாக்க முடியும் என்று முதலில் நம்பப்பட்டு வந்தது. ஆனால், தோலாக மாறிவிட்ட செல்லைக் கூட இதயமாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்தவர் தான் ஜான் குர்டான்.




ஒரு செல்லை எடுத்து, அதன் நியூக்ளியஸைப் பிரித்து...


தவளையின் உடலில் இருந்து ஒரு செல்லை எடுத்து, அதன் நியூக்ளியஸைப் பிரித்து, அதை தவளையின் முட்டையுடன் சேர்த்து புதிதாக தவளையை உருவாக்கினார் ஜான் குர்டான். அப்போது தான் பிறந்தது குளோனிங் தொழில்நுட்பம். இப்போது அமெரிக்காவின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ள இவருக்கும் ஜப்பானிய ஆராய்ச்சியாளரான ஷின்யா யமனகா ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. யமனகாவும் ஒரு ஸ்டெம் செல் ஆராய்ச்சியாளரே.





'மக்கு பையன்' ஜான் குர்டான்...


ஜான் குர்டானின் தந்தை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் வங்கிப் பணியில் இருந்தவர் ஆவார். 1949ம் ஆண்டில் உயிரியல் பாடத்தில் மொத்தமுள்ள 250 மாணவர்களில் மிக மிகக் குறைவான மதிப்பெண் பெற்றவர் தான் ஜான் குர்டான். அப்போதே தான் ஒரு ஆராய்ச்சியாளராக வருவேன் என்று பள்ளியில் கூறி வந்தார். இதனால் இவரை ஆசிரியர்கள் கேலியும் கிண்டலும் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.






உருப்பட மாட்டே என்ற ஆசிரியர்கள்..


ஆசிரியர்களின் வெறும் புத்தகக் கல்வி போதனையையும் கிண்டல், கேலியையும் தாண்டி மாபெரும் ஆராய்ச்சியாளராக உருவான குர்டான், செல்களின் நியூக்லியஸைப் பிரித்து எடுத்து அதை உயிராக மாற்றிக் காட்டி ஸ்டெம் செல்-குளோனிங் ஆராய்ச்சியின் தந்தையாக விளங்குகிறார். (உலகம் பூராவுமே, எல்லா காலத்திலுமே இது போன்ற ஆசிரியர்கள் இருந்து தான் வருகின்றனர். மார்க் எடுத்தால் மட்டுமே அறிவாளி என்று கருதும் இந்த வகையான ஆசிரியர்களுக்கு இந்த நோபல் பரிசை அவர் அர்ப்பணித்துவிடலாம்)




ஷின்யா யமனகாவும் சும்மா இல்ல...


ஆனாலும், தனது ஆசிரியர்களை விட்டுக் கொடுக்க மறுக்கிறார் குர்டான். சில நேரங்களில் எனது ஆராய்ச்சிகள் தோற்கும்போது என்னைத் திட்டிய ஆசிரியர்களைத் தான் நினைத்துக் கொள்வேன். எனது ஆராய்ச்சிகளை முறையாக செய்யும் அளவுக்கு எனக்கு இன்னும் அறிவு வளரவில்லை என்பதையே இது காட்டுகிறது. எனவே எனக்கு அறிவில்லை என்று ஆசிரியர்கள் சொன்னது கூட சரிதான் என்று நினைத்துக் கொள்வேன் என்கிறார்.




யமனகா செய்த வேலை என்ன தெரியுமா?....


குர்டானுடன் சேர்ந்து நோபல் பரிசை வென்றுள்ள ஷின்யா யமனகா இந்த குளோனிங் ஆராய்ச்சியை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றவர் ஆவார். ஜப்பானின் குயோடா பல்கலைக்கழக பேராசிரியரான இவர் தோல்களின் செல்களை அதன் பழைய நிலைக்கு மாற்றிக் காட்டினார். அதாவது தாயின் வயிற்றில் ஒரு சிசு உருவாகும்போது, அங்கு தோல், இதயம், கண் என்று தனித்தனி உறுப்புகள் இருக்காது. அனைத்தும் இணைந்து ஒரு செல் தொகுப்பாகவே இருக்கும். இதிலிருந்து தான் பின்னர் உடலின் ஒவ்வொரு பாகமும் உருவாகும்.





செல்லை பல ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வைத்தவர்...


ஷின்யா யமனகா செய்த வேலை என்ன தெரியுமா?. நன்றாக வளர்ந்த ஒரு மனிதரின் தோல் செல்லை எடுத்து, அதை அவர் தனது தாயின் வயிற்றில் கருவாக இருக்கும்போது அந்த செல் எப்படி இருந்திருக்குமோ, அவ்வாறு மாற்றிக் காட்டினார். அதாவது, ஒரு செல்லை பல ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வைத்தார். சரியாகச் சொன்னால், ஒரு வளர்ந்த மனிதனை மீண்டும் கருவாக மாற்றும் ஆராய்ச்சியின் ஆரம்பம் இது!. இப்போது தெரிகிறதா ஷின்யா யமனகாவும் எவ்வளவு பெரிய ஆசாமி என்று!!.


குளோனிங் கூடாது.. கூடாது... 

இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சிகள் மூலம் ஆட்டுக்குட்டி, பசு வரை உருவாக்கிவிட்டனர். மேலும் இப்போதே மனிதத் தோல் உள்ளிட்ட உடல் பாகங்களை செயற்கையாக தயாரிக்கவும் ஆரம்பித்து விட்டனர். எதிர்காலத்தில் நமது உடலின் எந்தப் பாகத்தையும் நம் உடலில் இருந்து எடுக்கும் சிறிய தசையிலிருந்து தயாரிக்க முடியும். அந்தத் திசையில் தான் குளோனிங் ஆராய்ச்சிகள் போய்க் கொண்டிருக்கின்றன.




அப்புறம் சாமியை வைத்து இவர்களால் 'வாழ' முடியாதே!... 

ஆனால், குளோனிங் மூலம் மனிதனையே உருவாக்கிவிடுவார்களோ என்ற அச்சமும் நிலவத்தான் செய்கிறது. இதனால் தான் குளோனிங் ஆராய்ச்சிகளை உலகம் முழுவதும் பல்வேறு மதத் தலைவர்களும் எதிர்த்து வருகின்றனர். அப்புறம் சாமியை வைத்து இவர்களால் 'வாழ' முடியாதே!

அலகாபாத்தில் கும்பமேளா!

அலகாபாத்தில் கும்பமேளா! 4 சங்கராச்சாரிகள் புறக்கணிப்பு! முதல் நாளில் 85 லட்சம் பேர் புனித நீராடல்!!

அலகாபாத்: இந்துக்களின் புனிதத் திருவிழாக்களில் ஒன்றான மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நேற்று தொடங்கியது. இந்த கும்பமேளாவை 4 முக்கிய சங்கராச்சாரிகளும் புறக்கணித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கும்பமேளாவின் முதல் நாளில் சுமார் 85 லட்சம் பேர் புனித நீராடினர்.

நிர்வாண சாதுக்கள் ஊர்வலம் 


12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத்தில் மகா கும்பமேளா நடைபெறும். கங்கை, யமுனை மற்றும் கற்பனை நதியான சரஸ்வதி கலக்கும் என்று நம்பப்படுகிற அலகாபாத்தின் திரிவேணி சங்கமத்தில் இந்த ஆண்டின் மகா கும்பமேளா மகாசங்கராந்தி நாளான நேற்று அதிகாலை 5.15 மணிக்குத் தொடங்கியது. முதலில் நாகா சாதுக்கள் எனப்படும் நிர்வாண சாதுக்கள் ஊர்வலமாக வந்து புனித நீராடினர். அவர்கள் கைகளில் சூலாயுதங்கள், கோடாரிகள் என பயங்கர ஆயுதங்களை ஏந்தியபடி உறைய வைக்கும் குளிரில் நிர்வாணமாக நீராடினர். இவர்களுக்கு முன்னதாக சாதுக்களின் அமைப்பான 'அகாடாக்களின்' தலைவர்களான மஹாமண்டலேஸ்வர்கள் யானைகளிலும் குதிரைகளிலும் ஊர்வலமாக வந்தனர்.

சாதுக்களின் அமைப்பான அகாடாக்களிடையே யார் முதலில் புனித நீராடுவது என்ற மோதல் ஏற்பட்டு பல நூறு உயிர் இழப்புகள் ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு அகாடாவுக்கும் குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. முதல் புனித நீராடல் மாலை 4.45 மனிக்கு நிறைவடைந்தது. முதல் நாளில் சுமார் 85 லட்சம் பேர் நீராடியிருப்பர் என்று நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

1500 பேரை காணவில்லை 


முதல் முறையாக இந்தப் புனித நீராடல் நிகழ்ச்சிகள் எல்.இ.டி. திரைகளில் காட்சிப்படுத்தப்பட்டன. பல கோடிப் பேர் கூடக் கூடிய திருவிழா என்பதால் நெரிசலோ அல்லது தீ விபத்தோ ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படக் கூடாது என்பதற்காக பலத்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் முதல் நாளில் மட்டும் சுமார் 1500 பேரைக் காணவில்லை என்று தெரியவந்துள்ளது. அவர்களது கதி என்ன என்று தெரியவில்லை.

சங்கராச்சாரிகள் புறக்கணிப்பு 


இதனிடையே அகாடாக்களுக்கு அலகாபாத் மகா கும்பமேளா நிர்வாகம் முன்னுரிமை கொடுப்பதாகவும் தங்களுக்கான வழக்கமான இடம் ஒதுக்கப்படவில்லை என்றும் கூறி ஆதி சங்கரரால் நிர்மாணிக்கப்பட்ட 4 சங்கர மடங்களின் சங்கராச்சாரிகளும் கும்பமேளாவையே புறக்கணித்திருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பக்தர்கள் அய்யப்பா கோஷத்துக்கு மத்தியில் சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி!

பக்தர்கள் அய்யப்பா கோஷத்துக்கு மத்தியில் சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி!



சபரிமலை அய்யப்பன் கோவிலில் பொன்னம்பலமேட்டில் தெரிந்த மகரஜோதியை பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அய்யப்பன் கோவில் மண்டல பூஜை கடந்த 26-ந் தேதி நடைபெற்றது. பின்னர் 30-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நேற்று சபரிமலையில் அளவுகடந்த கூட்டம் அலைமோதியது. முதலில் அய்யப்பனுக்கு பந்தளத்தில் இருந்து ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டன. பின்னர் தொடர்ந்து பூஜைகள் நடத்தப்பட்டன. மாலை 6.30 மணியளவில் சபரிமலை அய்யப்பனுக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது.

தீப ஆராதனை காட்டப்ப்ட்ட அதே நேரத்தில் பொன்னம்பலமேட்டில் 'மகர ஜோதி' தெரிந்தது. அப்போது திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் "சுவாமியே சரணம் அய்யப்பா" என விண்ணைப் பிளக்கும் வகையில் சரணகோஷம் எழுப்பினர்.

மகர ஜோதி பூஜையை முன்னிட்டு சபரிமலைப் பகுதியில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

யுனைட்டட் ஏர்லைன்ஸூக்கு அமெரிக்க கிராமம் ஒன்றில் உள்ள மர்ம ஆபீஸ்!

யுனைட்டட் ஏர்லைன்ஸூக்கு அமெரிக்க கிராமம் ஒன்றில் உள்ள மர்ம ஆபீஸ்!



அமெரிக்காவின் யுனைட்டட் ஏர்லைன்ஸ், சின்னஞ்சிறு கிராமம் ஒன்றில், ஒரு கம்ப்யூட்டர்கூட இல்லாத ‘நிழலான’ அலுவலகம் என்றை நடத்தி வருவது குறித்து, அமெரிக்க போக்குவரத்து ஏஜென்சி இன்று விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அப்படி என்னதான் செய்கிறார்கள் அந்த குட்டி அலுவலகத்தில்?

ஒரேயொரு பகுதிநேர ஊழியர் மட்டும் பணிபுரியும் அந்த அலுவலகம்தான், அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனம் யுனைட்டட் ஏர்லென்ஸின் விமானங்களுக்கு 500 மில்லியன் டாலர் எரிபொருளை வாங்குகிறது!

விவகாரம் என்னவென்றால், சைக்கமோர் என்ற கிராமத்தில் (அல்லது சிறுநகரம்) எரிபொருளுக்கு செலுத்த வேண்டிய வரி குறைவு. யுனைட்டட்டின் தலைமைச் செயலகம் உள்ள சிக்காகோ நகரில் எரிபொருள் வாங்கும்போது கட்டவேண்டிய வரியை விட, வருடத்துக்கு சில மில்லியன் டாலர் குறைவான வரியை இங்கே கட்டுகிறது யுனைட்டட்.

இந்த விவகாரத்தை தெரிந்துகொண்ட அமெரிக்க போக்குவரத்து ஏஜென்சி, குறிப்பிட்ட அலுவலகத்துக்கு சென்றபோது, அலுவலகம் பூட்டியிருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தால், 500 மில்லியன் டாலர் வர்த்தகம் நடக்கும் அலுவலகத்தில் ஒரேயொரு மேஜை மட்டும் உள்ளது. ஒரு கம்ப்யூட்டர்கூட இல்லை. பகுதிநேர ஊழியர் லீவு.

யுனைட்டட் ஏர்லைன்ஸ் என்ன சொல்கிறது? “நாம் அமெரிக்காவில் எங்கு வேண்டுமானாலும் அலுவலகம் அமைக்கலாம். அலுவலகம் எந்த சைஸிலும் இருக்கலாம். அலுவலகம் உள்ள இடத்தில் எவ்வளவு வரிவிதிப்போ, அதைத்தான் செலுத்த வேண்டும். இது ஒன்றும் சட்டவிரோதம் கிடையாதே”

Monday, January 14, 2013

தை மாதத்தில் வலிமை அடையும் சூரிய பகுதி

தை மாதத்தில் வலிமை அடையும் சூரிய பகுதி



ஜோதிடங்களில் பூமி இரண்டாக பிரித்து பார்க்கப்படுகிறது. இதை சூரியன் பகுதி, சந்திரன் பகுதி என்று கூறுவதுண்டு. அதாவது, காலத்தை இரண்டு அயனமாகப் பிரிக்க வேண்டும். தட்சினாயணம் (தெற்கு), உத்திராயணம் (வடக்கு) என்பவை. மகரத்தில் இருந்து கடகம் வரை சந்திரனுடைய பகுதி, அவைகள் சந்திர
ஆதிக்கத்துக்கு உட்பட்டவை. மற்றவை சூரியன் பகுதி. அதாவது தை மாதத்தில் இருந்து சூரியன் பகுதி துவங்குகிறது. இந்த மாதத்தில் சூரியப் பகுதி வலிமையடைகிறது. உத்திரயாணப் புண்ணிய காலம் துவங்குகிறது. தை மாதம் என்பது சக்தி வாய்ந்தது. இதனை மகர மாதம் என்றும் அழைப்பார்கள்.

மகரத்திற்குள் சூரியன் நுழைவதே மகர மாதம். அதனால்தான் இந்த மாதம் எல்லா வகையிலும் சிறப்புடையது. உத்திராடத்தின் ராசியான மகரத்தில் சூரியன் நுழைவது வெகுச் சிறப்பான ஒன்றாகும். இந்த நேரத்தில்தான் பல விண்மீன்கள் சூரியனையும், சந்திரனையும் சூழ்ந்திருக்கும். மலையாளத்தில், கேரளாவில் இதனை மகர ஜோதி என்று அழைக்கின்றனர். ஆனால், விளக்கை ஏற்றி ஜோதி என்று காண்பிப்பது ஒரு அடையாளமே, இயற்கையாக இருப்பதை அறிவிப்பதற்காகவே அவ்வாறு செய்கின்றனர்.

உலகில் அதிக வயதான பாட்டி மரணம்

உலகில் அதிக வயதான பாட்டி மரணம்



உலகில் அதிக வயதான பெண்ணாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஜப்பான் பாட்டி தனது 115வது வயதில் நேற்றுமுன்தினம் இறந்தார். கோடோ ஒகுபோ (115) என்ற அந்த பாட்டி, ஜப்பானின் கவாசாகி நகரில் உள்ள மருத்துவமனையில் இறந்தார். முதுமை காரணமாக அவர் இறந்ததாக கூறப்படுகிறது. எனினும், இறப்புக்கான காரணம் பற்றியும், அவரது குடும்பப் பின்னணி விவரங்களையும் வெளியிட அவரது உறவினர்கள் மறுத்து விட்டனர். ஒகுபோ தனது மகன்களில் ஒருவரின் பராமரிப்பில் இருந்து வந்தார் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 1897ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி பிறந்தவர் ஒகுபோ. உலகில் அதிக வயதான பெண்ணாக முதலிடத்தில் இருந்த அமெரிக்காவை சேர்ந்த டைனா மேன்பிரடினி கடந்த மாதம் இறந்தார். இதையடுத்து உலகின் வயதான பெண் என்ற பெருமையை ஒகுபோ பெற்றார். மேன்பிரடினியும் வயதான பாட்டியாக அறிவிக்கப்பட்ட 2 வாரங்களில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.