Tuesday, October 30, 2012

நிலம் புயல் நாளை கரை கடக்கிறது சென்னை துறைமுகத்தில் 7ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

நிலம் புயல் நாளை கரை கடக்கிறது சென்னை துறைமுகத்தில் 7ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்





வங்க கடலில் நிலைக் கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளதால் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு 'நிலம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து 500 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ள இந்த புயல், தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 450 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள புயல், நாளை பிற்பகல் கரை கடக்கும். இதனால் 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை, காஞ்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதற்கு அடையாளமாக, கடந்த 18ம் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இதனால் தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து நல்ல மழை பெய்தது. தற்போது மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அந்தமான் அருகே உருவானது. அது கடந்த 2 நாட்களாக மெல்ல மேற்கு நோக்கி நகர்ந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு அது வங்க கடலில் தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு திசையில் நிலை கொண்டிருந்தது.

அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேலும் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 'நிலம்' புயலாக மாறியுள்ளது. தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 450 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதனால், நேற்று முதலே தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மணிக்கு 90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, நாகை, கடலூர், புதுச்சேரி உள்ள எல்லா துறைமுகங்களிலும் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டது. மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. பல ஆயிரக்கணக்கான படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக கடலோர பகுதிக்கு புயல் நெருங்கி வருவதால், காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. 6085 கிலோ மீட்டராக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் அதிக கடல் சீற்றம் காணப்பட்டது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி ஆகிய கடலோர பகுதிகளில் அதிக பாதிப்பு இருக்கும் என்பதால், அந்த பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் விழுப்புரம் கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், திருவாரூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 'மாநிலத்தில் பரவலாக அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை கொட்டும். நாளை பிற்பகல் நாகப்பட்டினம் நெல்லூர் ஊடாக கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் 16.6, நாகப்பட்டினம் 82.7, பாம்பன் 36.2, புச்சேரியில் 70.9 மி.மீ. மழை பதிவாகி உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது, மின்சாரம் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகத்தில் 7ம் எண் கூண்டு ஏற்றம்

சென்னை துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 7ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளதையடுத்து சென்னை துறைமுகம் கடும் புயல் காற்றின் சீற்றத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!