Thursday, January 24, 2013

பூக்களைத் தின்று கோர்ட்டில் ஆஜரான ஆஸ்திரேலிய ஆடு... ஏற்கனவே பீரடித்து சிக்கியதாம்!

பூக்களைத் தின்று கோர்ட்டில் ஆஜரான ஆஸ்திரேலிய ஆடு... ஏற்கனவே பீரடித்து சிக்கியதாம்!




ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகம் ஒன்றில் பூக்களை சாப்பிட்ட குற்றத்திற்காக ஆடு ஒன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அதிசய சம்பவம் நிகழ்ந்தது.

ஜிம்தேசமால் என்ற நகைச்சுவை நடிகர் கேரி என்ற பெயர் கொண்ட ஆடு ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். இவர் சமீபத்தில் சிட்னியில் உள்ள அருங்காட்சியகத்திற்கு சென்ற போது அவருடன் சென்ற ஆடு அங்கு வளர்க்கப்பட்டிருந்த பூச்செடிகளை தின்றுவிட்டதாம். இதனையடுத்து அந்த அருங்காட்சியகத்தின் மேலாளர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

அந்த புகாரின் பேரில் நடிகர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆட்டையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்தனர். இதனால் நீதிமன்றத்துக்கு தனது எஜமானருடன் வந்த ஆடு தலையில் தொப்பியுடன் கம்பீரமாக நடந்து வந்தது. ஆனால் பாவம் ஆடு பூக்களை தின்றதை நிரூபிக்க முடியவில்லை. இதனால் நடிகரும், ஆடும் விடுவிக்கப்பட்டனர். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்ற சந்தோஷத்தில் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தனர்.

வீடுகளிலும், காட்டிலும், ஏன் விலங்குகள் காட்சியகங்களில் மட்டுமே ஆட்டினை பார்த்திருந்தவர்கள் நீதிமன்றத்தின் வாசல்படியில் ஆடு நின்றிருந்ததைப் பார்த்து ஏராளமானோர் அதிசயித்துப் போனார்கள். போட்டி போட்டு புகைப்படமும் எடுத்தனர்.

இதே ஆடுதான் கடந்த ஆண்டு பீர் குடித்த வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜரானதாம். அடிக்கடி கோர்ட் படி ஏறி இறங்குவதால்தான் அச்சமின்றி நீதிமன்றத்திற்கு ஆடு வந்து செல்கிறது என்று பேசிக்கொண்டனர் அங்கிருந்த வழக்கறிஞர்கள்

Wednesday, January 23, 2013

நண்டுகளால் வலியை உணர முடியும்

நண்டுகளால் வலியை உணர முடியும்


நண்டு, இரால் போன்ற ஓடுடைய நீர் விலங்குகள் தமது ஓட்டிலேயே வலியை உணருகின்றன என்பதற்கு கூடுதல் தடயங்கள் கிடைத்துள்ளன.
நாம் சாப்பிடும் வகையை ஒத்த ஒரு கரை நண்டு வகைகள் தமது ஓட்டின் மேல் மின்சாரம் பாயும்போது அதனை உணருகின்றன என்றும், மின்சாரம் வருகிறது என்று தெரியும் இடங்களை அவை தவிர்க்கப் பார்க்கின்றன என்று புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.

வலியை உணரும் தருணங்களில் இரால்களுக்கும் நண்டுகளுக்கும் தமது இயல்பை மாற்றி்க் கொள்கின்றன என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே நிரூபித்திருந்தனர்.

பத்துக் கால்கள் கொண்ட ஓடுடைய கடல் பிராணிகளான சிங்க இரால்களும்கூட இதேபோன்ற இயல்பு மாற்றங்களை வலி ஏற்படும் சூழ்நிலையில் வெளிப்படுத்துகின்றன என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொடுக்கு

அவை வலியை உணரும் என்ற புரிதலுடன் அவற்றைக் கையாளுகிற போக்கு நம்மிடையே இல்லை என்றும் இவ்வகை விலங்குகளை அனாவசிய வலியிலிருந்து பாதுகாக்கும் விதிமுறைகளும் இல்லை என்று பெல்ஃபாஸ்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எல்வுட் சுட்டிக்காட்டுகிறார்.
தேவைப்படாத சில நண்டுகள் வலையில் மாட்டிக்கொண்டால், அவற்றின் கால்களையோ, கொடுக்கையோ உடைத்து மீண்டும் அவற்றைக் கடலில் எறிவது போன்ற வழக்கங்கள் மீனவர்களிடையே இருந்துவருவதாக அவர் தெரிவித்தார்

செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்தமைக்கான ஆறிகுறி கண்டுபிடிப்பு

செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்தமைக்கான ஆறிகுறி கண்டுபிடிப்பு



செவ்வாய்க் கிரகத்தில் நிலப்பரப்புக்கு கீழேயுள்ள கிடைக்கப்பெறுகின்ற தாதுக்கள் அந்த கிரகத்தில் முன்னொரு காலத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கு இதுவரையில் கிடைத்திருப்பதில் வலுவான ஆதாரம் என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

செவ்வாய்க் கிரகத்தின் சரித்திரத்தில் பெரும்பான்மையான காலங்களுக்கு அதன் மேற்பரப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் வரையான ஆழங்களில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டும் தாதுக்கள் அங்கு காணப்படுவதாக ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர்.

லண்டனின் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் மற்றும் அபெர்டீன் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஈசா ஆகியவற்றின் தரவுகளைக் கொண்டு நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் நேச்சர் ஜியோசயன்ஸ் அருங்காட்சியகத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கிரகங்களை விண்கற்கள் மோதும்போது, நிலப்பரப்புக்கு அடியில் இருக்கின்ற பாறைகள் மேற்பரப்புக்கு கொண்டுவரப்படுகின்றன.
செவ்வாய்க் கிரகத்தில் அவ்வாறு விண்கல் மோதி ஏற்பட்ட ஒரு பள்ளத்தில் காணப்படும் பாறைகளில் உள்ள தாதுக்களை ஆராயும்போது அங்கே உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் தெரிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பூமியில் உயிர்கள் எவ்வாறு தோன்றின என்று இன்னும் தெரியாத நிலையில், செவ்வாய்க் கிரகத்தில் நிலத்துக்குள்ளே நுண்ணியிர்கள் வாழ்ந்தது உறுதிசெய்யப்படுமானால் அது பூமியில் உயிர்கள் தோன்றிய விதத்தை புரிந்துகொள்ளவும் உதவியாக இருக்கும் என்று ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான டாக்டர் ஜோசஃப் மிச்சால்ஸ்கி கூறுகிறார்.

தேயிலை ஏற்றுமதி நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பு உருவானது

தேயிலை ஏற்றுமதி நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பு உருவானது



ITPF என்ற பெயரில் சர்வதேச தேயிலை உற்பத்தி நாடுகளின் அமைப்பொன்று இன்று திங்கட்கிழமை இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கறுப்புத் தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் இலங்கை, இந்தியா, கென்யா ஆகிய முன்னணி நாடுகளும் இந்தோனேஷியா, மலாவி மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளும் இந்த சர்வதேச அமைப்பில் பங்கெடுத்துள்ளன.

சீனாவும் இரானும் அதன் தூதுவர்களை இன்றைய தொடக்கவிழாவுக்கு அனுப்பிவைத்திருந்ததாக இந்த சர்வதேச சங்கத்தை உருவாக்குவதில் முன்னின்ற இலங்கைத் தேயிலைச் சபையின் வர்த்தக ஊக்குவிப்புத்துறை இயக்குநர் ஹசித்த டி அல்விஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

1933 முதல் இப்படியான அமைப்பொன்றை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் 1979 இல் இறுதியாக உருவாக்கப்பட்ட ஐடிபிஏ என்ற அமைப்பு 5 ஆண்டுகளில் தோல்வியடைந்ததாகவும் அவர் கூறினார்.

பின்னர் 2006-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட முயற்சியே 2013-ம் ஆண்டில் செயல்வடிவம் அடைந்திருப்பதாகவும் ஹசித்த டி அல்விஸ் தெரிவித்தார்.

சர்வதேச சந்தையில் தேயிலையின் விலையை நிர்ணயிப்பது, தேயிலை நுகர்வு நாடுகளுடன் தரக்கட்டுப்பாடுகள் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பது மற்றும் உற்பத்திச் செலவைக் குறைப்பது போன்ற நோக்கங்களுக்காகவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

தேயிலைத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம்



இதேவேளை, இலங்கையில் தேயிலைத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமை மிகமோசமாக இருப்பதாக எழுப்பப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் பற்றி வினவியபோது, அந்தக் குற்றச்சாட்டை ஏற்கமுடியாது என்று இலங்கைத் தேயிலைச் சபையின் வர்த்தக ஊக்குவிப்புத்துறை இயக்குநர் ஹசித்த டி அல்விஸ் கூறினார்.

தேயிலைத் தொழிலாளர்களின் அடிப்படை மருத்துவ, சுகாதார, போக்குவரத்து, வீட்டு வசதிகள் மற்றும் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட வசதிகள் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது முன்னேறிய நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இலங்கை தேயிலை சபையின் கருத்துக்கள் தவறானது என்று மூத்த தொழிற்சங்கத் தலைவரும் செங்கொடிச் சங்கத்தின் பொதுச்செயலாளருமான ஓ.ஏ.ராமையா பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து பணவீக்கமும் அதிகரித்துவருகின்ற சூழ்நிலையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சம்பளத்தொகை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானது என்று அவர் விபரித்தார்.
இந்தியாவைப் போல தோட்டத் தொழிலாளர்களுக்கு மானியவிலையில் அடிப்படை உணவுப் பொருட்கள் இலங்கையில் வழங்கப்படுவது இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல இலங்கையில் இன்று உருவாகியுள்ள தேயிலை ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பின் மூலம் சாதாரண தொழிலாளர்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.

சர்வதேச வர்த்தகர்களுக்கும், உள்நாட்டு இடைத்தரகர்களுக்கும் விற்பனையாளர்களுக்குமே அதன்மூலம் வருமானம் ஈட்டமுடியும் என்றும் அவர்களும் கூடுதல் வருமானம் ஈட்டும்போது அரசாங்கத்துக்கு செலுத்தும் வரியும் அதிகரிக்கும் என்றும் அதனால் தொழிலாளர்களின் நலன்களுக்கு ஏதும் நன்மை ஏற்படாது என்றும் ஓ.ஏ.ராமையா சுட்டிக்காட்டினார்.

மாடர்ன் பெண்கள் அவர்களின் பாட்டிகளை விட வீக் ஆனவர்களாம்

மாடர்ன் பெண்கள் அவர்களின் பாட்டிகளை விட வீக் ஆனவர்களாம்



மாட்ர்ன் பெண்கள் அவர்களின் பாட்டிமார்களை விட வலுவில்லாமல் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

தற்போதைய தலைமுறையினா் அவர்களின் மூதாதையர்களுடன் ஒப்பிடுகையில் உடல் வலுவின்றி உள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடாவில் உள்ள தற்போதைய தலைமுறையினருக்கு அவர்களின் மூதாதையர்களுடன் ஒப்பிடுகையில் உடல் வலு குறைவாகவே உள்ளது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதிலும் குறிப்பாக பெண்களின் உடல் வலு குறைந்துள்ளதாம்.

லண்டனைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் சாம்மி மார்கோ கூறுகையில், தசை சத்தே இல்லாமல் வீக்காக இருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கு தங்களின் முதுகெலும்பை தாங்கும் அளவுக்கு கூட அவர்களுக்கு தசை இல்லை. குண்டாக இருக்கும் பெண்களுக்கு கொழுப்புக்கு அடியில் தசையே இல்லை என்றார்.

பெரும்பாலான பெண்கள் திடமாக இருக்க விரும்புவதில்லை மாறாக ஒல்லியாக இருக்க விரும்புகிறார்கள். அதனால் தான் வலுவின்றி உள்ளனர் என்று பிரிஸ்டல் பல்கலைக்கழக பேராசிரியர் கென் பாக்ஸ் தெரிவித்தார். அவர்கள் ஒழுங்காக சாப்பிடுவது இல்லை, உடற்பயிற்சி செய்வதும் இல்லை. அதனால் தான் தசைகள் வலுவிழந்துள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Tuesday, January 22, 2013

டெல்லியில் 10 ஆயிரம் டுபாக்கூர் கால்சென்டர்கள் .. போலீஸ் 'திடுக்' தகவல்

டெல்லியில் 10 ஆயிரம் டுபாக்கூர் கால்சென்டர்கள் .. போலீஸ் 'திடுக்' தகவல்



நாட்டின் தலைநகர் டெல்லியில் சுமார் 10 ஆயிரம் போலி கால்சென்டர்கள் இயங்கி வருவதாக டெல்லி போலீஸ் துணை கமிஷனர் எஸ்.பி.எஸ். தியாகி தெரிவித்துள்ளார்.

"டெல்லியில் இயங்கும் 10 ஆயிரம் போலி கால்சென்டர்கள் மூலம் ஒரு நாளைக்கு உள்நாட்டுக்கும் வெளிநாட்டுக்குமாக சுமார் 2 லட்சம் தொலைபேசி அழைப்புகள் செல்கின்றன. இந்த கால்சென்டர்கள் பதிவு செய்யப்படாதவை மட்டுமின்றி.. கணக்கில் காட்டாத பணத்தையும் வைத்திருக்கின்றன.

எங்களுக்கு இதுதொடர்பாக தகவல்கள் கிடைத்தால் நாங்கள் ரெய்டு நடத்தி வருகிறோம். இது தொடர்பாக நேற்று நாங்கள் ஐந்து பேரை கைது செய்திருக்கிறோம். உத்திரவாதமற்ற கடன்கள் மற்றும் இன்சூரன்ஸ் பெற்றுத் தருவதாகக் கூறியே இந்த டுபாக்கூர் கால்சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன" என்றும் அவர் கூறியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/22/india-10-000-fake-call-centres-running-delhi-168334.html

அறிவியலின் முதல் அரசியல் ஆக்கம்

2017 இல் மீண்டும் தான் மட்டுமே உலக வல்லரசு என்பதை ஆணித்தரமாக நிரூபிக்க முயலும் அமெரிக்கா



2017ல் எண்ணெய் உற்பத்தியில் சவுதி அரேபியாவை முந்தப் போகும் அமெரிக்கா!


2017ம் ஆண்டு சவுதி அரேபியாவை பின் தள்ளி அமெரிக்கா உலகின் முன்னனி கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகவும், 2030ல் அமெரிக்கா நிகர எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் மாற போகிறது என்ற செய்தியை கேட்டால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா?. களிப்பாறை (shale gas) எரிவாயு மற்றும்

களிப்பாறை எண்ணையை எடுக்கும் ஆராய்ச்சியில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட அராய்ச்சியின் முன்னேற்றத்தால் அமெரிக்காவின் எண்ணெய் சுயசார்பு பெற வேண்டும் என்ற 1970களின் கனவு நினைவாக தொடங்கியிருக்கிறது.

சமீபத்தைய பொருளாதார மந்த நிலையால் வலுவிழந்து இருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் புத்தணர்வு ஊட்டும் ஒரு காரணியாக இருக்க இது வாய்ப்புள்ளது. இது அமெரிக்க பொருளாதாரத்திலும் உலக பொருளாதாரத்திலும், நாடுகளுக்கிடையிளான உறவுகளிலும் ஏற்படுத்த போகும் மாற்றம் கணிசமாக இருக்க கூடும்.

களிப்பாறை எரிவாயு/எண்ணெய் என்றால் என்ன?:


களிப்பாறை எரிவாயு மற்றும் எண்ணெயும் பெட்ரோல் போன்றே பல மில்லியன் அண்டுகளுக்கு முற்பட்ட தாவர, விலங்குகள் மக்கியதால் உருவானவை. இந்த எண்ணெயும் எரிவாயும் பூமிக்கு சில ஆயிரம் அடிகளுக்கு கீழே களிப்பாறை எனப்படும் கடினமான பாறைகளுக்கு இடையே அடைபட்டுள்ளன.

இவை பூமிக்கு மிக அடியில் இருப்பதாலும் பாறைகளுக்கு அடியில் சிக்கி இருப்பதாலும் இவற்றை வெளி கொணர்வதில் பொருளாதார ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் பல பிரச்சனைகள் இருந்தன.

தற்போது ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொருளாதார ரீதியாகவும், 1970ம் ஆண்டுகளிலிருந்து ஏற்பட்ட தொழிற்நுட்ப வளர்ச்சிகளாலும் களிப்பறை எரிவாயு மற்றும் எண்ணெயை எடுப்பது சாத்தியமாக தொடங்கியுள்ளது.

இந்த எரிவாயுவை எப்படி எடுக்கிறார்கள் என்பது பற்றியும், அது பற்றிய சுற்றுசூழல் காப்பளர்களின் அச்சம் பற்றியும் அது உலக பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் மாற்றம் பற்றியும் காண்போம்.

களிப்பாறை எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுக்கும் முறை...


1. முதலில் குழாய்களை ஆழ் துளையிடும் சாதனம் மூலம் உள்ளே செலுத்தி கீழ் நோக்கி கொண்டு செல்வார்கள். பூமியில் தண்ணீர் இருக்கும் ஆழத்திற்கும் மேலாக கீழ் செலுத்துவர்.

2. பிறகு குழாயை வெளியே எடுத்து அந்த ஓட்டையை சுற்றியும் வலிமையான மேற்பரப்பு வார்ப்பு (surface casting) கொடுத்து அதன் மேல் மீண்டும் சிமெண்டு அடுக்கு ஒன்றை பூசி வெளி பரப்பிற்கும் குழய்க்கும் இடையே ஒரு கடுமையான தடுப்பை ஏற்படுத்துவர். இதன் மூலம் பின்னாளில் செலுத்த இருக்கும் வேதி பொருட்கள் நிலத்தடி நீரில் கலந்து விடாமல் இருக்க உதவும்.

3. பிறகு மீண்டும் வெளியில் எடுக்கப்பட்ட ஆழ் துளையிடும் சாதனங்களை கொண்டு கீழ் நோக்கி துளையிடுவது தொடரப்படும். இது சில ஆயிரம் அடிகளுக்கு மேலானதாக இருக்கும். களிப்பாறையை நெருங்கியவுடன் வளைவாக துளையிட தொடங்குவர். அது களிப்பாறைக்குள் நன்கு சென்றவுடன் செங்குத்தாக செல்வதை விடுத்து மட்ட வாக்கில் (Horizontal Drilling) துளையிடத் தொடங்குவர்.

4. மட்ட வாக்கில் செல்லும் துளை மூலம் அதனை சுற்றியுள்ள களிபாறையிலிருந்து எண்ணெய் மட்டும் எரிவாயுவை எடுக்க முடியும். எனவே இந்தத் துளையின் நீளம் அதிகமாக இருக்கும். துளையிடுவது முடிந்த பின் வழக்கம் போல் மேற்பரப்பு வார்ப்புகளும் சிமெண்ட் பூச்சுகளும் பூசபடும்.

5. அதன் பின் துளையிடும் துப்பாக்கி அந்த மட்ட வாக்கு குழியின் உள் செலுத்தப்படும். துளையிடும் துப்பாக்கி என்பது இரும்பு குழாயில் பல துளைகளை கொண்டதாகும். இந்த குழாய்கள் மட்ட வாக்கு துளையினுள் செலுத்தப்படும். அந்த குழாய் மூலமாக களிபாறையினுள் சிறு துளையை ஏற்படுத்துவர்.

6. மிகவும் இருக்கமான களிபாறையினுள் எண்ணெயும் வாயுவும் மாட்டி கொண்டு இருப்பத்தால் பாறைக்குள் பல வெடிப்புகளை ஏற்படுத்த வேண்டும் அந்த வெடிப்புகளின் வழியே எரிவாயுவையும் எண்ணெயையும் எடுக்க முடியும். வெடிப்புகளை ஏற்படுத்த கடைபிடிக்கும் முறைக்கு நீரியல் முறிவு (Hydralic Fracturing) என்று பெயர்.

நீர் (90%), மணல் (9.5%) மற்றும் வேதி பொருட்கள் (0.5%- சோடியம் குளோரைடு, எத்திலின் கிளைக்கால், போரேட் உப்பு, சோடியம்/பொட்டாசியம் கார்பனேட், ஐசோ புரொப்பனால் மற்றும் பாலிசாக்கரைடுகள் கலந்த கலவை) கலவையை மிகவும் அதிகமான அழுத்தத்துடன் உள் செலுத்துவர். இந்த கலவை துளையிடும் துப்பாக்கி ஏற்படுத்திய துளைகளின் வழியே வேகமாக வெளி சென்று கடினமான களிபாறையினுள் பல வெடிப்புகளை ஏற்படுத்தும்.

7. களிபாறையின் வெடிப்பு மூலம் வெளிவரும் வாயு குழாயினுள் உள்ள துளை மூலம் குழாயினுள் வந்து அது பூமிக்கு மேல் வரும்.

அமெரிக்காவில் களிப்பாறை எரிவாயு புரட்சி


சுற்றுசூழல் பிரச்சனைகள்:


பெட்ரோல் துரப்பணம் சார்ந்த தொழில்நுட்பம் என்றாலே அது ஏற்படுத்த கூடிய சுற்றுசூழல் சீற்கேடு பற்றிய கவலை அனைவருக்கும் இருக்கும். களிப்பாறை எரிவாயு தொழில் நுட்பமும் சுற்றுசூழல் ஆர்வலர்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகி உள்ளது. உதாரணமாக நீரியல் முறிவு ஏற்படுத்த பயன்படுத்தும் வேதி பொருட்கள் நிலத்தடி நீரில் சேர்ந்தால், அது தண்ணீரை விஷமாக்க கூடும் என்று கருதுகிறார்கள்.

ஆனால் எரிவாயு நிறுவனங்களோ வலிமையான வார்ப்பு இருப்பதால் இந்த தொழில்நுட்பத்தில் பயன்படுத்தும் வேதி பொருட்கள் நிலத்தடி நீரில் கலக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

ஆனால் இந்தப் பணியின் போது வெளியேறும் மீத்தேன் வாயு தண்ணிரில் கலக்க வாய்ப்புள்ளது என்று குற்றம் சாட்டுகிறார்கள். மேலும் எண்ணெய் துரப்பண பகுதியில் பூகம்பம் ஏற்பட்டால் வேதி பொருட்கள் பெருமளவு தண்ணீரில் கலக்கவும் வாய்ப்புள்ளது.




எங்கும் உள்ளது களிப்பாறை.. ஆனால்:


தற்போது உலக கச்சா எண்ணெய் சந்தையை பெரும்பன்மையாக கட்டுப்படுத்துவது அரபு நாடுகள் மற்றும் ரஷ்யா மட்டுமே. களிப்பாறை எரிவாயு மற்றும் எண்ணெய் ஒரு சில நாடுகளின் பிடியில் மட்டும் சிக்காமல் உலகெங்கும் பரவியிருக்கிறது. தற்போது ஒவ்வொரு நாட்டின் கையிருப்பும் தோராயமாக தான் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் எந்த அளவு இவ்வகை எரிபொருள் இருக்கிறது என்பது இன்னும் முழுமையாக கணக்கிடப்படவில்லை.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ள களிப்பாறை எரிவாயுவை கீழே காணலாம். (இந்த கணக்கு எரிவாயு கையிருப்பு பற்றி மட்டும் காட்டுகிறது. களிப்பாறை எண்ணெய் சேர்க்கபடவில்லை).

பகுதி- எரிவாயு இருப்பு (trillian cubic meterகளில்)

கிழக்கு ஐரோப்பா/முன்னாள் சோவியத் பகுதிகள்- 174
அரபு நாடுகள்- 137
ஆசியா/பசுபிக்- 132
அமெரிக்கா- 122
ஆப்பிரிக்கா- 74
தென் அமெரிக்கா- 71
மேற்கு ஐரோப்பா- 45

அமெரிக்கா, சவுதி அரேபியா, ஈரான் மற்றும் கத்தாரில் எளிதில் கிடைக்கும் களிப்பாறை எரி வாயு மிகுந்துள்ளது. அமெரிக்காவில் மக்கள் நெருக்கம் குறைந்த பகுதியில் அதிகம் எரிவாயு/எண்ணெய் உள்ளது. மேலும் அங்கு நில உரிமையாளர்களுக்கே பூமிக்கடியில் உள்ள இயற்கை வளம் சொந்தம். மேலும் அங்கு தொழில் நுட்ப வளர்ச்சியும் முதலீடும் அதிகம் உள்ளதால் தற்போது அமெரிக்காவில் பெருமளவு களிப்பாறை எரிவாயு எடுக்கப்படுகிறது.

மேற்கு ஐரோப்பாவில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் எரிவாயு இருக்கிறது. எனவே அதனை எடுப்பதில் மக்கள் எதிர்ப்பும் சுற்றுசூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பும் அதிகமாக இருக்ககூடும்.

சீனாவில் எளிதில் எடுக்க முடியாத நிலையில் இந்த எரிபொருள் இருப்பதால் புதிய தொழில்நுட்பம் தேவைப்படலாம். மேலும் எரிபொருள் கிடைக்கும் இடமும் உபயோகிக்கும் இடமும் வெகு தொலைவில் உள்ளதால் நீண்ட தூர குழாய் கட்டமைப்பு தேவைப்படலாம்.ஆனால் சீனாவுக்கு இது போன்ற மிக பெரிய அடிப்படை கட்டமைப்பு செய்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை.

இந்தியாவில் அஸ்ஸா மற்றும் அருணாச்சல் பிரதேசத்தில் அதிக அளவு எரிபொருள் இருப்பதாகக் கருதபடுகிறது. சமீபத்தில் சீனா அருணாச்சல் பிரதேசம் மீது அதிக அளவில் உரிமை கோரிவருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் களிப்பாறை எரிவாயு புரட்சி:

பொதுவாக எரிவாயு பெட்ரோலுக்கு மாற்றாக இருப்பதால் அதன் விலையும் சந்தையில் பெட்ரோல் விலையை சார்ந்தே இருக்கும். அது மட்டுமின்றி எரிவாயுவின் விலையை நிர்ணயிப்பதில் அது எவ்வாறு உற்பத்தியாகும் இடத்திலிருந்து உபயோகபடுத்தும் இடத்திற்கு கொண்டு செல்லபடுகிறது என்பதும் முக்கிய பங்கை வகிக்கிறது.

குழாய் மூலம் எரிவாயுவை கொண்டு செல்ல முடிந்தால் அதன் விலை குறைவாக இருக்கும். ஆனால் எரிவாயுவை திரவமாக்கி கொண்டு செல்ல வேண்டுமானால் அதற்கு கூடுதல் செலவாகும். (அதனால் தான் இந்தியா ஈரானிடமிருந்து குழாய் மூலம் எரிவாயுவை கொண்டு வர முயற்சித்தது நினைவிருக்கலாம்).

அமெரிக்காவில் தற்போது அதிக அளவில் உற்பத்தியாகும் களிப்பாறை எரிவாயுவின் விளைவாக அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெய்க்கும், எரிவாயுவிற்கும் இடையே இருந்த விலை நிர்ணய உறவு அறுக்கபட்டு எரிவாயுவின் உற்பத்தி மற்றும் தேவையை கொண்டு அமெரிக்காவில் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

அதன் விளைவாக அமெரிக்காவில் எரிவாயுவின் விலை $2.50 mBtu ஆகவும், ஐரோப்பாவில் குழாய் மூலம் கிடைக்கும் எரிவாயுவின் விலை $12 mBtu ஆகவும், திரவ நிலையில் எரிவாயுவை வாங்கும் ஆசியாவில் $16 mBtu ஆகவும் உள்ளது.

குறைந்த விலையில் எரிபொருள் கிடைத்தவுடன் அமெரிக்காவில் மாற்றங்கள் பல தொடங்கி விட்டன.

1. அமெரிக்கா தனது திரவ எரிபொருள் தேவையில் தற்போது 45% மட்டுமே இறக்குமதி செய்கிறது. 2005ல் இது சுமார் 60% இருந்தது (பொருளாதார வளர்ச்சி மந்த நிலை கூட இதற்கு சிறிய பங்கு வகிக்கிறது). இது நிகர ஏற்றுமதி- இறக்குமதி பற்றாகுறையை ஓரளவு கட்டுபடுத்த உதவுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் OPEC நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயில் 20% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2. அமெரிக்க மக்களின் எரி பொருள் செலவில் இந்த விலை குறைப்பின் விளைவாக சேமிப்பு மட்டும் 2015ம் ஆண்டில் $113 பில்லியன் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

3. எரி வாயுவை முக்கிய தேவையாக கொண்ட பிளாஸ்டிக், உரம், வேதி பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் ஆசியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர ஆரம்பித்துள்ளன. டௌ கெமிக்கல்ஸ் போன்ற கம்பெனிகள் 91 வகை பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை சுமார் 70 பில்லியன் டாலர் முதலீட்டில் அமெரிக்காவில் தொடங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

4. கடந்த 5 வருடங்களில் 600 பில்லியன் டாலருக்கு மேலாக இந்த துறையில் முதலீடு குவிந்துள்ளது.

சர்வதேச பொருளாதார, அரசியல், சுற்றுச்சூழல், அதிகார மாற்றங்கள்


இந்த களிப்பாறை எரிவாயுவும் எண்ணெயும் சர்வதேச பொருளாதாரம், அரசியல் மற்றும் சுற்றுசூழலியலில் ஏற்படுத்த கூடிய மாற்றங்கள் பற்றி காண்போம்.

1. சுற்றுச் சூழலுக்கு தீங்கை ஏற்படுத்தும் நிலக்கரிக்கு மாற்றாக மின் உற்பத்தியில் எரிவாயு விளங்குவதால், சுற்றுசூழல் சீர்கேடு ஓரளவு குறைய வாய்ப்புள்ளது. ஏனென்றால் புவியை சூடேற்றும் வாயுக்களை நிலக்கரியை விட எரிவாயு குறைவாகவே வெளியிடுகிறது.

2. அதே சமயம் தற்போது மரபு சாரா பசுமை எரி சக்தி ஆராய்ச்சி மற்றும் உபயோகத்துக்கு இந்த மலிவான எரிபொருள் ஆபத்தாக முடிய வாய்ப்புள்ளது.

3. மக்கள் நெருக்கம் உள்ள ஆசிய, ஆப்ரிக்க பகுதிகளில் இவ்வகை எரிபொருளை அதிக அளவில் எடுக்க ஆரம்பித்தால் மனித செலவு (Human Cost) அதிகமாக இருக்க கூடும். அது மட்டுமன்றி நிலத்தடி நீர் மாசுபடுதல் பற்றி நிறைய சர்ச்சைக்குறிய செய்திகள் வருவதையும் கவனிக்க வேண்டும்.

4. சமீபத்தைய பொருளாதார நெருக்கடியாளும், அரசு மற்றும் வர்த்தக பற்றாகுறையாளும் அமெரிக்க நாணயத்தின் நம்பகத்தன்மை மேல் சந்தேகம் வந்து உலக பொது நாணயமாக யூரோ, யுவான் போன்ற நாணயங்கள் வருமா என்று விவாதம் தொடங்கபட்டது. ஆனால் இந்த களிபாறை எரிவாயுவின் மூலம் அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாகுறை குறைந்து, தொழில் வளர்ச்சியின் மூலம் அரசு பற்றாகுறை குறைந்தால் மீண்டும் டாலர் வலிமையுடன் தன்னுடைய பழைய ஆதிக்கத்தையே தொடர வாய்ப்புள்ளது.

5. அமெரிக்கா தன் எண்ணெய் மற்றும் உற்பத்தி பொருட்கள் இறக்குமதியை பெருமளவு குறைத்தால், உலக சந்தையில் டாலர் கிடைப்பது அரிதாக கூடிய நிலை வரலாம். அது சர்வதேச சந்தையில் ஏற்படுத்த கூடிய மாற்றங்களை கணிப்பது கடினம்.

6. அமெரிக்காவின் ஆற்றல் தேவைக்காக அரபு நாடுகளை சார்ந்திருக்கும் நிலை மாறகூடும். தன் தேவைக்காக அரபு நாடுகளின் ஆட்சியாளர்களை தூக்கவும், காக்கவும் நடத்த வேண்டிய போர்கள் குறைய கூடும்.

7. பெட்ரோல் வியாபாரத்துக்கு தற்போது மேலை நாடுகளை பெருமளவு சார்ந்து இருக்கும் அரபு நாடுகள் இனி தன் பார்வையை வளர்ச்சி பாதையில் செல்லும் சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகள் மீது அதிகம் காட்ட கூடும். மேலை நாடுகளின் கட்டுபாடு குறைந்த OPEC நாடுகளின்& எரிபொருள் வியாபாரம் நல்ல மாற்றத்தை கொடுக்குமா இல்லையா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

தற்போது எரிவாயுவின் விலை சர்வதேச அளவில் ஒரே மாதிரியாக நிர்ணயிக்காமல் அமெரிக்காவில் தனியாகவும் இதர பகுதிகளில் தனியாகவும் நிர்ணயிக்கப்படும் நிலை பெட்ரோலுக்கும் வருமா என்பது முக்கிய கேள்வியாக இருக்கும்.

8. எரிபொருள் சுயசார்பு பெற்ற அமெரிக்கா அரபு நாடுகளிலிருந்து உலக எரிபொருள் சப்ளையில் ஆர்வம் காட்டாவிட்டால் எரிபொருள் தேவை நிறைந்த மேற்கு ஐரோப்பா நாடுகளின் நிலை கவலைக்குள்ளாக வாய்ப்புள்ளது. அவர்கள் தேவையை அவர்களே பார்த்து கொள்ள வேண்டிய நிலை வரலாம்.

9. மலிவு எரிபொருள் அமெரிக்காவில் அதிகம் கிடைத்து மேற்கு ஐரோப்பாவில் குறைவாக கிடைத்தாலும், வளரும் நாடுகளில் சீனாவில் அதிகம் கிடைத்து இந்தியாவில் (தற்போதைய நிலவரபடி) குறைவாக கிடைத்தாலும் சர்வதேச அளவில் பல்வாறு நாடுகளின் வளர்ச்சியில் மிக பெரிய மாற்றங்கள் ஏற்படலாம்.

10. களிப்பாறை எரிவாயுவினால் சர்வதேச கச்சா எண்ணையின் விலை குறைப்பு ஏற்பட்டால் அதனால் அரேபிய மற்றும் ரஷ்ய நாடுகளில் ஏற்படும் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள் கணிசமாக இருக்க கூடும்.

சர்வதேச எரிபொருள் விலையை நிர்ணயிப்பதில் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் பங்கு முக்கியவத்துவம் வகிப்பதால், களிப்பாறை எரிவாயு விஷயத்தில் எண்ணெய் நிறுவனங்கள் எப்படி& செயல்படப் போகின்றன என்பதும் முக்கியம்.

தற்போது கிடைக்கும் மலிவான முதலீடு காரணமாகவும், கடுமையான போட்டி காரணமாகவும் களிப்பாறை எண்ணெய்/எரிவாயு எடுக்கும் நிறுவனங்கள் வருங்கால வருமானத்தை நம்பி தற்போது நஷ்டத்தில் இயங்குவதாகவும் கூறப்படுகிறது. அதன் விளைவாக இது ஒரு பொருளாதார குமிழை மட்டும் ஏற்படுத்தும் என்று ஒரு சில பொருளாதார நிபுணர்கள் எச்சரிப்பதும் கவனிக்கத்தக்கது.

எது எப்படியோ பிற்காலத்தில் எரிபொருள் குறைந்த விலையில் கிடைத்தால் பணவீக்கம் குறைந்து அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரமும் உயர வாய்ப்பிருக்கும்

கொசுறு செய்திகள்..

1. களிபாறை எரிவாயு/எண்ணெய் எடுக்கும் நீர்ம பிரிப்பு (hydraulic fracturing) முறைக்கு தேவைப்படும் மூலபொருட்களுள் ஒன்று நம் ஊர் கொத்தவரங்காய். அமெரிக்காவில் களிபாறை எண்ணெய் எடுக்க இது ஏற்றுமதியாக ஆரம்பித்துவிட்டதால் ராஜஸ்தான் மற்றும் வட மாநிலங்களில் கொத்தவரங்காய் விலை சுமார் 10 மடங்கு உயர்ந்துள்ளதால் விவசாயிகள் நல்ல லாபம் அடைந்து வருகின்றனர்.

2. களிப்பாறை எரிவாயுவிற்கு எதிரான கருத்துகளை அமெரிக்க மக்களிடையே விதைக்க அரபு நாடுகளின் நிதி உதவியுடன் ஹாலிவுட் படம் ஒன்றும் எடுக்கபட்டு வருகிறது... இது எப்டி இருக்கு!!




கும்பமேளா: புனித நீராடுவது மட்டுமல்ல… அது ஒரு புனித அனுபவம்


கும்பமேளா: புனித நீராடுவது மட்டுமல்ல… அது ஒரு புனித அனுபவம்


அலகாபாத்: உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் மகா கும்பமேளா தொடங்கியுள்ளது. இந்த மகா கும்பமேளாவில் யமுனை, கங்கை, சரஸ்வதி நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்காக கோடிக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மகா கும்பமேளா ஜனவரி 14ம் தேதி மகரசங்கராந்தி தினத்தன்று தொடங்கி மகா சிவராத்திரி நாள்வரை 55 நாட்கள் நடைபெறுகிறது. கும்பமேளாவின் தொடக்கநாளன்று ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் அலகாபாத் நகரில் குவிந்தனர். கிட்டத்தட்ட 80 லட்சம் பக்தர்கள் அன்றைய தினம் புனித நீராடினர் என்று தெரிவிக்கிறது புள்ளிவிபரம். ஒரு நாளைக்கு 20 லட்சம் பக்தர்கள் வீதம் மொத்தம் 10 கோடி பக்தர்கள் கும்பமேளாவுக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூர்ண கும்ப மேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், 

ஆர்த கும்ப மேளா 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். 


கும்பமேளா ஹரித்துவாரில் முதலில் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து பிரயாக், நாசிக், உஜ்ஜயினி நகரில் நடைபெறுகிறது. கும்பமேளா திருவிழா ஹரித்துவார், பிராயாக், நாசிக், உஜ்ஜயினி, ஆகிய மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.

அமுதம் சிந்திய நகரங்கள்


இந்த நகரங்களில் மட்டும் ஏன் கும்பமேளா நடைபெறுகிறது என்பதற்கு ஒரு புராண கதை கூறப்படுகிறது. தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது, இந்திரனின் மகன் ஜெயந்தனுக்கு அவசரம் தாங்கவில்லை. பறவை வடிவில் வந்து அமுதக் கும்பத்தைத் தூக்கிக்கொண்டு பறந்தான். அசுரர்கள், வாயு வேகத்தில் அவனைத் தொடர்ந்தார்கள். இருவருக்கும் இடையே பன்னிரண்டு நாட்கள் (அதாவது பன்னிரண்டு வருடங்கள்) இழுபறிப் போர் நடந்தது. அந்த சமயம் சந்திரன் கும்பத்திலிருந்து அமுதம் சிந்தாமல் தடுக்க முயற்சி செய்தான். சூரியன், கும்பம் உடைந்து விடக்கூடாதே என்று வருத்தப்பட்டான். பிரகஸ் பதி அசுரர்கள் அபகரித்துச் சென்றுவிடாமல் காப்பாற்ற முயன்றான். சனி பகவானோ, ஜயந்தன் ஒரே மிடறில் சாப்பிட்டுவிட்டால் என்ன செய்வதென்று கவலைப் பட்டான். இப்படி நால் வரும் கூடி முயன்றும் நான்கு இடங்களில் அமுதம் சிந்திவிட்டது. அதன் விளைவால் அந்த இடங்களின் புனிதம் பலமடங்கு உயர்ந்தது. அந்த இடங்கள்தான் ஹரித்வார், பிரயாகை, உஜ்ஜயினி, நாசிக் ஆகியவை.

பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள்


கோடிக்கணக்கான பக்தர்கள்... நகரமெங்கும் ஹரஹர முழக்கம்... திரிவேணி சங்கமத்தில் திரண்டுள்ள பக்தர்களின் வசதிக்காக 770 கி.மீ நீளத்திற்கு மின்சார கேபிள்களை இணைத்து 22000 தெருவிளக்குகளை அமைத்துள்ளனர். 550 கிலோ மீட்டர் நீளத்திற்கு பைப் லைன்கள் அமைத்து நளொன்றுக்கு 80000 கிலோலிட்டர் தண்ணீர் சப்ளை செய்கின்றனர். பக்தர்களுக்காக 12000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கும்பமேளா நடைபெறும் இடத்துக்கு அருகே 35 ஆயிரம் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 14 மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விழா நடைபெறும் இடத்தில் இருந்து 150 கி.மீ தூரத்துக்கு தற்காலிக ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

தை அமாவாசையில் கூட்டம்


அதிகபட்சமாக பிப்ரவரி 10 தை அமாவாசை தினம் வட மாநிலங்களில் மவுனி அமாவாசையாக அனுஷ்டிக்கப்படுகிறது. உத்தராயண புண்ணிய காலத்தில் வரும் அமாவாசை பிதுர் வழிபாட்டிற்கு உகந்த நாள். இந்நாளில் புனிதமான கடற்கரையிலோ, புண்ணிய நதிக்கரையிலோ, தீர்த்தங் களிலோ நீராடி மூன்னோர்களை வழிபடுவது மரபு. கும்பமேளா நடைபெறும் இந்த சமயத்தில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்கு அன்றைய தினம் 3 கோடி பக்தர்கள் நீராட திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பிப்ரவரி 15ம் தேதி வசந்த பஞ்சமி அன்று ஒரே நாளில் பல லட்சம் பக்தர்கள் வருவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கும்பமேளாவில் புனித நீராடினால்


கங்கையில் நீராடினால் புண்ணியம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கும்பமேளா நடைபெறும் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் குளிப்பது மட்டுமே நம்பிக்கையில்லை. அது ஒரு வித இறை உணர்வு. தினம் தினம் மந்திர உச்சாடனம், சாதுக்களின் ஜெபம், ஹோமம், நடனம், பிராத்தனை, என கும்பமேளா நடைபெறும் இடமே ஒருவித தெய்வீக தன்மையுடன் காட்சியளிக்கும்.

நிர்வாண சாதுக்கள் ஊர்வலம்


கும்பமேளாவில் உடலெங்கும் திருநீறு பூசியபடி மலர்மாலை மட்டுமே சூடி நாக சாதுக்கள் எனப்படும் நிர்வாண சாமியார்கள் ஊர்வலமாக வருவார்கள். அவர்கள் அனைவரும் ஹர ஹர மகாதேவா என்று மந்திரம் ஜெபித்தவாறு கடுங்குளிரையும் பொருட்படுத்தாது புனித நீராடுவார்கள்.

உத்தரபிரதேசத்திற்கு வருவாய்


அலகாபாத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் நீராட லட்சக்கணக்கான சாதுக்கள் வருவது ஒருபுறம் இருந்தாலும், இதனைக் காண லட்சக்கணக்கான வெளிநாட்டவர் வருகின்றனர். இதன் மூலம் உத்தரபிரதேச மாநிலத்தில் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மாநில அரசுக்கு 12000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.


நீராட சிறந்த நாட்கள்


கோடிக்கணக்கான சாதுக்களும், பக்தர்களும் கூடும் இந்த கும்பமேளாவில் 55 நாட்களும் நீராடுவது சிறப்புதான் எனினும், சில நாட்கள் முக்கியமான நாட்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் மகரசங்கராந்தி, ஜனவரி 27ம் தேதி தை பௌர்ணமி, பிப்ரவரி 6ம் தேதி ஏகாதசி, பிப்ரவரி 10ம் நாள் மவுனி அமாவாசை ஆகியவை சிறப்பு வாய்ந்த தினங்களாகும். அதேபோல் பிப்ரவரி 12ம் தேதி கும்பசங்ராந்தி, பிப்ரவரி 15ம் தேதி வசந்த பஞ்சமி, பிப்ரவரி 17 ரத சப்தமி, பிப்ரவரி 18 பீஷ்டாஷ்டமி, பிப்ரவரி 21 ஜெய ஏகாதசி, பிப்ரவரி 25 மகாபூர்ணிமா, மார்ச் 10 நாள் மகாசிவராத்திரி ஆகிய நாட்களும் நீராடுவதற்கு புண்ணிய தினங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.

To View Huge collection of Pictures Click Here

அழகான அம்மாவாக இருப்பது எப்படி?

அழகான அம்மாவாக இருப்பது எப்படி?



பெண்கள் இளமையில் இருக்கும் அழகை, திருமணம் முடிந்தவுடன் கவனிக்க தவறிவிடுகின்றனர். அழகிற்கு வயதுவரம்பு இல்லை. அழகு என்பது நம் தோற்றத்தில் நம்மை மாற்றி அதன் மூலம் நமக்கு நம்பிக்கையை கொடுக்கும் ஒரு தந்திரம். ஆதலால் திருமணம் முடிந்து ஒரு அம்மாவான பின் நாம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் எப்படி கவனித்து கொள்கிறோமோ, அதே போல் நம்மை நாம் கவனித்து கொள்வது மிக மிக அவசியம்.

வேலைக்கு சென்றாலாவது நம்மை நாம் அழகுப்படுத்தி கொண்டு வெளியில் செல்லலாம். ஆனால் வீட்டில் இருக்கும் நமக்கு எதற்கு இந்த அழகு என்று இல்லாமல், வீட்டில் வேலையின்றி இருக்கும் நேரத்தில் நம்மை எப்படி அழகாக வைத்து கொள்வது என்று யோசித்து, அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்கு ஒருசில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, பின்பற்றி வாருங்கள்.

1. சுகாதாரத்தின் மேல் கவனம் கொள்ளுதல் ஒரு அடிப்படையான விஷயம். அது அவர்களின் கம்பீரத்தை உணர்த்தும். முதலில் தினமும் குளிக்கும் பழக்கத்தை தொடர்வது அவசியம். வாரத்திற்கு இரண்டு முறையாவது தலைக்கு குளிக்கும் வழக்கத்தை கொள்ள வேண்டும். முகத்தை கழுவ, முகத்திற்கு ஏற்ற சோப்பை பயன்படுத்தவும். இல்லையேல் வீட்டில் உள்ள கடலை மாவு சிறந்த பலனைத் தரும்.

2. அவ்வபோது அக்குள், கால்கள் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள தேவையற்ற முடியை நீக்கவும். இதற்கு அதிக விளம்பரங்கள் வருகின்றன. அவை கண்டு உங்கள் தோலுக்கு ஏற்ற பொருளை உபயோகிக்கவும். இல்லை ஷேவ் செய்ய அதற்கு தகுந்த ஷேவ்விங் ப்ளேடை உபயோகிக்கவும்.

3. கூந்தலை பராமரிக்க, செயற்கைப் பொருட்களை பயன்படுத்துவதை விட, இயற்கைப் பொருட்களை பயன்படுத்துவது நல்லது. இதனால் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

4. தினமும் எளிய முறையில் அலங்கரித்து கொள்ளலாம். இதனால் எப்போதும் பார்க்க லக்ஷ்னமாகவும் இருக்கும். அதனால் இதை தவிர்க்க வேண்டாம். தோல் வறண்டு இருந்தால், அதை ஈரப்பதமூட்டும் வகையில் நல்ல சருமத்திற்கு ஏற்ற க்ரீம்களை பயன்படுத்துங்கள். மேலும் சூரிய ஒளியால் ஏற்படும் தோல் பிரச்சனைகளுக்கு ஏற்ற கற்றாழையை பயன்படுத்துவது நல்லது.

5. வழக்கமாக அணிய சில எளிய நகைகளை தேர்ந்தெடுத்து அணியவும். குழந்தைகள், கழுத்தணிகள் மற்றும் காதணிகளை ஆசையுடன் இழுப்பர். அதனால் அதற்கேற்றவாறு அணிகலன்களை அணிவது நல்லது. 6. பார்லருக்கு சென்று தான் பெடிக்யூர் செய்து கொள்ள வேண்டும் என்று இல்லை. வீட்டில் இருந்த படியே நேரம் கிடைக்கும் பொழுது, கை நகங்கள் மற்றும் கால் நகங்களை சுத்தம் செய்து கொள்ள, சுடு தண்ணீரில் ஊற வைத்து ஒரு நல்ல சோப்பு மற்றும் பிரஷை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.

7. தினமும் உடற்பயிற்சி அல்லது யோகா போன்றவைகளை செய்தலால் உடம்பு ஆரோக்கியமாகவும், நல்ல கட்டுமானத்துடனும் இருக்கும். தூக்கம் வரும் சமயமோ அல்லது மாலை வேளையிலோ குழந்தைகளை வெளியே தினமும் பூங்காவிற்கு அழைத்து செல்லலாம். இதனால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.

8. எப்போதும் சிரித்து கொண்டு, பற்களை வெண்மையாக வைத்து கொள்ள வேண்டும். இது வெளிதோற்றத்திற்கு சிறந்த உதவியாக இருக்கும். பல் மருத்துவரின் ஆலோசனை கொண்டு நடந்து கொள்ளுதல் அவசியம்.

9. அமைதியாகவும், பொறுமையாகவும் நடந்து கொள்வதால் அனைத்து வேலைகளையும் சரிவர செய்ய இயலும். மேலும் அது அழகு கூட்டும். உங்களை போலவே அம்மாவாக இருக்கும் சிலரிடம் நட்பை கொண்டு, அவர்களின் ஆலோசனைகளை பெறவும்.

விமான நிலையங்களில் உடல் அங்கங்களை காட்டும் எக்ஸ்-ரே ஸ்கேனர்களை அகற்ற யுஎஸ் முடிவு

விமான நிலையங்களில் உடல் அங்கங்களை காட்டும் எக்ஸ்-ரே ஸ்கேனர்களை அகற்ற யுஎஸ் முடிவு


விமானநிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள உடலின் அங்கங்களை பிரதிபலிக்கும் எக்ஸ்-ரே ஸ்கேனர்களை அகற்ற அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்காவின் டெட்ராய்ட் விமான நிலையத்தில் தீவிரவாதி ஒருவன், நின்றிருந்த விமானத்தில் வெடிகுண்டை பொருத்தி பரபரப்பை ஏற்படுத்தினான். இதனையடுத்து, அமெரிக்காவில் உள்ள அனைத்து விமானநிலையங்களிலும் நவீனராக எக்ஸ்-ரே ஸ்கேனர்கள் பொருத்தப்பட்டன. இது சாதாரண ஸ்கேனர்களைப் போல இல்லாமல் உடலின் சதைப்பகுதிகளும் துல்லியமாக திரையில் தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நவீன ஸ்கேனர்களில் பதிவாகும் காட்சிகளை விமானநிலைய ஊழியர்கள், சோதனைக்கு பிறகும் போட்டு பார்க்கக்கூடும். எனவே, இந்த ஸ்கேனர்களை அகற்ற வேண்டும் என்று சிலர் கூறினர். எனவே இந்த வகையிலான சோதனைக்கு பெண்கள் உள்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இந்த ஸ்கேனர்களை அகற்ற அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அவற்றை சிறைத்துறை அல்லது ராணுவ நிர்வாகத்தில் பயன்படுத்தப்படும் என தெரிகின்றது.

இந்நிலையில், உடலின் சதைப்பகுதிகளை தவிர்த்து, எலும்புக்கூடு மற்றும் உலோகங்களால் ஆன பொருட்களை மட்டும் திரையில் காட்டும் புதுவகை ஸ்கேனர்களை வரும் ஜுன் மாதத்திற்குள் பொருத்த அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Monday, January 21, 2013

தலை வெட்டி கொல்லும் வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டவர் கைது

தலை வெட்டி கொல்லும் வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டவர் கைது


 தலைகளை வெட்டி கொல்லும் வீடியோ காட்சியை பேஸ்புக்கில் வெளியிட்ட இங்கிலாந்துகாரருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பிரஸ்டோன் நகரை சேர்ந்தவர் கிரெய்க் ஆலன் ஸ்லீ (42). இவர் பேஸ்புக்கில் தன் பெயரில் ஒரு கணக்கு தொடங்கினார். பிணை கைதிகளின் தலையை தீவிரவாதிகள் துண்டிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவை கிரெய்க் தனது பேஸ்புக்கில் வெளியிட்டார். தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போலீசார், ஆன்லைனில் உள்ள வீடியோ, மெசேஜ்களை தொடர்ந்து ஆய்வு செய்த போது, இதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் கிரெய்க்கை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். தீவிரவாதத்தை ஊக்குவித்தது, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்தது உள்பட 4 பிரிவுகளின் கீழ் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. விசாரணையின் போது இவற்றை கிரெய்க் ஒப்புக் கொண்டார். இதையடுத்து 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

இளம்பெண்களுக்கு தேவையான பாய் பிரெண்ட்ஸ் ‘வாடகைக்கு’

கிஸ் பண்ணலாம்.. ஊர் சுற்றலாம்.. கழற்றிவிடலாம் இளம்பெண்களுக்கு தேவையான பாய் பிரெண்ட்ஸ் ‘வாடகைக்கு’


சீனாவில் அடுத்த மாதம் புத்தாண்டு கொண்டாட ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டு பாம்புகளின் ஆண்டாக அரசு அறிவித்துள்ளது. கல்வி, வேலை விஷயமாக வெளி இடங்களில் தங்கி உள்ள இளம்பெண்கள், பெற்றோர் நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வார்கள். அப்போது, 'எப்போது கல்யாணம் செய்து கொள்ள போகிறாய்', 'யாரையாவது காதலிக்கிறாயா?', 'உன்னோட பாய் பிரண்ட் யாரு?' போன்ற வழக்கமான கேள்விகளை கேட்கின்றனர்.

பலர் தங்கள் காதலர்களை வீட்டுக்கு அழைத்து சென்று பெற்றோருக்கு அறிமுகப்படுத்தி வைக்கின்றனர். காதலன் இல்லாமல் தனித்து வாழும் இளம்பெண்கள் பலர், பெற்றோரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு உதவ, சீன ஆன்லைன் வி'வாடகைக்கு வாலிபர்கள் சேவை' என்று விளம்பரம் தந்துள்ளது.

இதன்படி, தேவைப்படுவோருக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் வாலிபரை உடன் அனுப்பி வைப்பார்கள். அவர்களை வீட்டுக்கு அழைத்து சென்று 'பாய் பிரண்ட்' என்று அறிமுகப்படுத்தலாம். வாலிபருடன் ஷாப்பிங் செல்லலாம். விரும்பினால் முத்தம் கொடுத்து கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரேட். பெற்றோருடன் சந்திப்பு முடிந்த பின், வாலிபரை கழற்றி விட்டு விடலாம். அதன்பின் அவரால் எந்த பிரச்னையும் ஏற்படாது. இதற்கு கேரன்டி தருகிறது நிறுவனம். இந்த அவசர 'பாய் பிரண்ட்' அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக, டிரஸ் மற்றும் தேவையான பொருட்களை இளம்பெண்கள் வாங்கி தரலாம். போக்குவரத்து, உணவு, தங்குமிடம் எல்லாம் பெண்களே ஏற்பாடு செய்து தர வேண்டும்.

இந்த சேவையில் ஈடுபட, பல இளம் வாலிபர்கள் இந்நிறுவனத்தில் பதிவு செய்துள்ளனர். சீனாவில் மட்டும் 18 கோடி இளம்பெண்கள் திருமணம் ஆகாமல் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பலர் பெற்றோரை திருப்திப்படுத்த இந்த வாடகை வாலிபர் சேவையை பயன்படுத்தி கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

இதற்கு பீஜிங் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர் லின் ஜியூயுன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'இது நல்ல ஐடியா இல்லை. திருமணம் பற்றிய கேள்விகளில் இருந்து தப்பிக்க பாய் பிரண்ட் அல்லது கேர்ள் பிரண்ட்டை வாடகைக்கு எடுத்தது பெற்றோருக்கு தெரிந்து விட்டால் நிலைமை மேலும் சிக்கலாகி விடும்' என்று அவர் கூறியுள்ளார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: காளைகள், காளைகளை அடக்கிய சில ஆக்ஷன் போட்டோக்கள்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: காளைகள், காளைகளை அடக்கிய சில ஆக்ஷன் போட்டோக்கள்!




ஜல்லிக்கட்டு தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் நடந்தாலும், உலகப் புகழ்பெற்றது, மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், அலங்காநல்லூரில் (சென்னையில் இருந்து சுமார் 530 கி.மீ.) நடைபெறும் ஜல்லிக்கட்டுதான். இந்த ஜல்லிக்கட்டை பார்க்க தமிழகத்தின் மற்றைய பகுதிகளில் இருந்து வருபவர்களுடன், வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் ஒவ்வொரு வருடமும் வந்து குவிந்து விடுவார்கள்.


இந்த ஆண்டு அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில், சீறிப் பாய்ந்த முரட்டுக் காளைகளை அடக்கப் பாய்ந்தவர்களில், 36 பேர் காயமுற்றனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு, தங்கக் காசு, லேப்டாப், பிரிஜ், வாஷிங் மெஷின், எல்.சி.டி. டிவி போன்ற பரிசுகள் கிடைத்தன.


இந்த ஜல்லிக்கட்டில் ஒவ்வொரு வருடமும் அடங்காத காளைகள் வீரர்களைப் படுமோசமாக காயப்படுத்திவிடும். இதை எல்லாம் பொருட்படுத்தாமல் வீர சாகசத்துடன் காளையை மூக்கணாங் கயிறு பிடித்து அடக்கி வெற்றி வாகைசூடுவதே இதன் சிறப்பு.



அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு பெரும்பாலான காளைகள் கோவை, கம்பம், காங்கேயம், ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, சேலம் ஆகிய இடங்களிலிருந்து லாரிகள் மூலமாக கொண்டு வரப்படும்.



இங்கு கொண்டுவரப்படும் காளைகள் விவசாயத்திற்கோ மற்ற வேலைகளுக்கோ பயன்படுத்தாமல் ஜல்லிக்கட்டுக்காகவே வளர்க்கப்பட்டவை. இந்த ஆண்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட, 473 காளைகளை அடக்க, 361 வீரர்கள், வாடிவாசலில் தயாராக நின்றனர்.



இந்த ஜல்லிக்கட்டு, தமிழகத்தில் மிகப் பழமையான வீர விளையாட்டு. மன்னர்கள் ஆண்ட காலத்தில் கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்களையே பெண்கள் மணந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. (ஆனால் இப்போது மாப்பிள்ளை ஜல்லிக்கட்டுக்கு போறார்னு தெரிஞ்சா, இந்த இடம் நம்ம புள்ளைக்கு ஒத்துவராது என்று ஒதுங்கிவிடுவார்கள்)



சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவை, மாவட்ட வருவாய் அலுவலர் ரவீந்திரன் காலை, 7:55 மணிக்கு தொடக்கி வைத்தார். வாடிவாசல் வழியாக, கோயில் காளை முதலில் விடப்பட்டது. அதை, வீரர்கள் பிடிக்கவில்லை. ஒரு நிமிடத்திற்கு ஒரு காளை என, காளைகள் அடுத்தடுத்து விடப்பட்டன.



சில காளைகள், ஆடுகளத்தில் அடக்க முடியாத அளவுக்கு நின்று விளையாடின. அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கக்காசு, வாஷிங் மெஷின் பரிசுகளாக வழங்கப்பட்டன.



சீறிப் பாய்ந்த காளைகளை அடக்குவதற்கு விதிமுறைகள் உள்ளன. முக்கிய விதிமுறைகளாக, ஒரு காளையின் மீது பலர் சேர்ந்து மொத்தமாக விழுந்து பிடிக்க கூடாது. அத்துடன், காளையின் வாலைப் பிடித்து இழுக்கவும் கூடாது. இந்த ஆண்டு விதிமீறிய 22 வீரர்கள் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.



இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் வந்தவை, மதுரை பி.ராஜசேகரனின் காளைகள். இந்தக் காளைகள் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக வந்தபோது, “பிடித்துப் பார்… காளை பிடிபட்டால் தங்கக் காசு உனக்கு” என, விழாக் குழுவினர் உசுப்பேற்றினர்.



மதுரை பி.ராஜசேகரனின் காளைகள், வீரர்களிடம் பிடிபடாமல், லாவகமாக தப்பின. சில வீரர்கள் மட்டும், நான்கைந்து காளைகளை பிடித்து பரிசுகளை வென்றனர்.



இந்த ஆண்டு காளைகளை பிடிக்க முயன்ற, 36 வீரர்கள் காயமுற்றனர். அத்துடன், வேடிக்கை பார்த்தபோது காயமுற்ற இரண்டு பேர், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.



எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் 2 மணியுடன் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டது. இதனால் அவனியாபுரம், பாலமேட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க முடியாமல் போன நிலையில், அலங்காநல்லூரில் அனைத்து காளையும் 2 மணிக்குள் அவிழ்த்து விடப்பட்டன.



அலங்காநல்லூரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஏற்றுவதற்காக, தலா, 4 யூனிட் ரத்தம், மருத்துவமனை ரத்தவங்கியில் இருந்து வழங்கப்பட்டது. ஆனால் ரத்தம் ஏற்றும் அளவுக்கு, எந்த வீரர்களும் காயம்படவில்லை.



போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததால், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, ரத்தம் சிந்தாதமல் நடந்து முடிந்தது. “ரத்தம் சிந்தாத, ரத்தம் ஏற்றாத ஜல்லிக்கட்டை, காவல்துறையினர் வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்” என, ஸ்பாட்டில் முதலுதவி சிகிச்சை வழங்க வந்திருந்த டாக்டர்கள் கூறினர்.



கலெக்டர் அன்சுல் மிஸ்ரா ஆலோசனையில் நடந்த ஜல்லிக்கட்டில் எஸ்.பி. பாலகிருஷ்ணன் நேரடி மேற்பார்வையில் 1300 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அமைதியாக நடந்து முடிந்ததால் அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். போலீசார் அனைவரையும் எஸ்.பி. பாராட்டியதுடன், அனைவருக்கும் ரிவார்டு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.



விலங்குகள் நலவாரிய பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை முழுமையாக கண்காணித்ததுடன் வீடியோ, போட்டோ ஆதாரங்களுடன் மேலிடத்திற்கு அறிக்கையாக அளித்துள்ளனர். ஜல்லிக்கட்டில் காளைகள் சித்ரவதை செய்யப்படுவதாக விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கால், உச்ச நீதிமன்றம் 77 கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த கட்டுப்பாடுகளை மீறாமல் ஜல்லிக்கட்டு நடத்த ஹைகோர்ட் அனுமதி அளித்தது.



அடக்க முடியாமல் நின்று விளையாடிய அதிக காளைகளின் உரிமையாளர் மதுரை பி.ராஜசேகரன் என்றால், அதிக காளகளை அடக்கிய வீரர் யார்? அட, அவரும் நம்ம மதுரைக்காரர்தானுங்க. மதுரை முடக்கத்தான் பகுதியை சேர்ந்த 30 வயதான இன்ஜினியர் ரஞ்சித், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மூன்று காளைகளை அடக்கி பரிசுகளை குவித்தார். “எனது பெற்றோர் ஆசிரியர்களாக உள்ளனர். விவசாய குடும்பத்தை சேர்ந்த எனக்கு காளைகளை அடக்கவும் தெரியும், அன்பு காட்டவும் தெரியும்” என்றார் அதிக காளைகளை அடக்கிய ரஞ்சித்.



அந்தரத்தில் நிர்வாணமாக சாதனை

அந்தரத்தில் நிர்வாணமாக சாதனை




சாகசம் செய்வதில் நாட்டமுடைய ஹேலி அஷ்பேர்ன் என்ற 24 வயது யுவதி, சூரிய அஸ்தமன நேரத்தில் 120 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் எதுவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி நிர்வாணமாக நடந்து சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்க சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த இவர் தாய்லாந்திலுள்ள மெய் லெயுங் குன்றுப் பகுதிகளுக்கிடையில் கட்டப்பட்டுள்ள கயிற்றிலேயே இந்த சாதனையை படைத்துள்ளார்.

தனது சாதனை குறித்து ஹேலி விபரிக்கையில், ஆடைகளின்றி இருளில் அதி உயரத்தில் நடந்தபோது சுதந்திரமாகவும் பரபரப்பாகவும் இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.