Friday, July 6, 2012

Part II : Exclusive Report 

கடவுகளைக் கண்டுபிடித்துவிட்டார்கள் விஞ்ஞானிகள் !



கடவுகளைக் கண்டுபிடித்துவிட்டார்கள் விஞ்ஞானிகள் ! இந்தத் தலைப்பே ஒரு ஆச்சரியமாக உள்ளது அல்லவா ? கடவுள் எங்கே இருக்கிறார் என்று கேட்டால் அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பார்கள் ! துரும்பு என்பது ஒரு துகள் ஆகும். துகளில் காணப்படுவது அணுவாகும். இந்தப் பிரபஞ்சம் தூசுத்துகள்களால் நிரப்பப்பட்டுள்ளது. இவைகளில் காணப்படும் அணுக்களில் ஒரு சக்தி மறைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அணுவுக்கு நிறையைத் தரக்கூடியதாகக் கருதப்படும் கண்ணுக்குத் தட்டுப்படாத ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) எனப்படும் நுண் துகள் உண்மையிலேயே இருக்கிறது என்பது ஊர்ஜிதமாகியுள்ளதாகத் தெரிகிறது.



இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகள் நேற்று முந்தினம் (புதன்கிழமை) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்புக்காக உலகமே ஆவலோடு காத்துக் கொண்டிந்தது. ஹிக்ஸ் போஸான் என்பது எல்லா அணுக்களுக்குள்ளும் இருப்பதாகக் கருதப்படும் ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள். ஆனால், அதை யாரும் பார்த்தும் இல்லை, அது இருப்பதாக நிரூபித்ததும் இல்லை. ஆனால், இந்த துணைத் துகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால் இந்த பிரபஞ்சம் உருவானது தொடர்பாக சொல்லப்படும் கோட்பாடாக முழுமை பெறுவதும் இல்லை. கிட்டத்தட்ட பிளாக் ஹோல், டார்க் மேட்டர் மாதிரி இது ஒரு கோட்பாடாகவே இருக்கிறது.


இப்படி கண்ணுக்குப் புலப்படாத இந்த அதிசயத்தைத் தான் விஞ்ஞானிகள் கடவுளின் அணுத் துகள் (God's particle) என்கிறார்கள். இந்தத் துகள் இருப்பதாக முதலில் சொன்னவரான ஒருவரான (பீட்டர்) ஹிக்ஸ்சின் பெயரையே அதற்கு வைத்துவிட்டார்கள். கூடவே போஸான் என்ற பெயரும் இருக்கிறதே. அது மாபெரும் இயற்பியல் வல்லுனர் சத்யேந்திர நாத் போஸின் பெயரிலிருந்து வந்தது. அதாவது சப் அடாமிக் பார்ட்டிகிள் எனப்படும் அணுவில் உள்ள துணைத் துகள்களில் 2 வகை உண்டு. ஒன்று நமது போஸ் மற்றும் ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளுக்குள் அடங்கும் துகள்கள். அவற்றுக்குப் பெயர் தான் **போஸான்**.

(இந்த கோட்பாடுகளுக்குள் அடங்காத துகள்களுக்கு பெர்மியான் (fermions) என்று பெயர். அதைப் பற்றி சமயம் வரும்போது பார்ப்போம். இப்போ வேணாம்!).

இவ்வாறு போஸான் கோட்பாடுகளுக்கு, விதிகளுக்கு உட்பட்ட துணைத் துகள்களில் முக்கியமானவை photons, gluons மற்றும் ஹிக்ஸ் போஸான் ஆகியவை. இதில் போட்டான், குளுயான்கள் இருப்பதை நிரூபித்தாகிவிட்டது. ஆனால், ஹிக்ஸ் போஸான் இன்னும் விஞ்ஞானிகளுக்கு �விக்கல்� தந்து கொண்டே இருக்கும் ஒரு ரகசியமாகவே உள்ளது. இந் நிலையில் தான் இதைக் கண்டுப்பிடித்தே தீருவது என்ற முடிவில் களத்தில் குதித்தனர் உலக விஞ்ஞானிகள். பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்த மாபெரும் வட்ட சுரங்கத்தில் இந்த சோதனை நடந்து வருகிறது.


சோதனை என்றால் நாம் சினிமாக்களில் பார்ப்பது மாதிரி ஒரு டெஸ்ட் டியூபில் 2,3 கலர் கலர் திரவங்களைக் கலந்துவிட்டு அதே வேக வைத்து, வடிகட்டி.. ரசம் தயார் செய்வது மாதிரியான சமாச்சாரமல்ல இது. பூமிக்கு அடியில் சுமார் 27 கி.மீ. வட்டப் பாதைக்குள் (Large Hadron Collider-LHC) புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் ஒளியின் வேகத்தில் பயங்கரமாக மோதவிட்டு அலற வைக்கும் அடாவடியான விஷயம் இது. 1,800 �சூப்பர் கண்டக்டிங்� காந்தங்களின் உதவியோடு வினாடிக்கு 600 மில்லியன் முறை புரோட்டான்- நியூட்ரான் கதிர்கள் எதிரெதிர் திசையில் நேருக்கு நேர் மோதி அவை குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், போட்டான், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என சிதறின.

கூடவே புரோட்டான்களுக்குள் இருந்த ஹிக்ஸ் போஸானும் எட்டிப் பார்த்ததாக சொல்கிறார்கள் ....

2008ம் ஆண்டு செப்டம்பரிலேயே இந்த சோதனைகளுக்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கிவிட்டன. விஞ்ஞானிகள் 2 குழுக்களாகப் பிரிந்து இந்த சோதனையை நடத்தினர்.

ஒரு குழுவுக்கு **அட்லஸ்** (A Toroidal LHC Apparatus) என்று பெயர். இன்னொரு குழுவுக்கு **சிஎம்எஸ்** (Compact Muon Solenoid) என்று பெயர். ஒரு குழுவுக்குக் கிடைக்கும் ரிசல்டை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவே இந்த இரு குழுவினரும் தனித்தனியே இந்த சோதனைகளை நடத்தினர். 2008ம் ஆண்டிலேயே ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கினாலும் உண்மையான சோதனைகள் ஆரம்பித்தது 2010ம் ஆண்டு மார்ச் இறுதியில் தான். ஆனால், சோதனைகள் நடக்க ஆரம்பித்தவுடனேயே ஆராய்ச்சிகளுக்கும் சோதனை வந்துவிட்டது. ஆராய்ச்சிகள் நடக்கும் சுரங்கத்தில் குளிர்விப்பான்கள் செயல்படுவது பாதிக்கப்பட்டதால், அதை சரி செய்து சோதனைகளை ஆரம்பிக்க மேலும் ஓராண்டு தாமதம் ஆகிவிட்டது. குளிர்விப்பான்களை ரிப்பேர் செய்ய ஒரு வருஷமா என்று கேட்கலாம்.

LHCயின் உள் வெப்பநிலை -271.3 C. ஹீலியம் வாயு உதவியோடு கிரையோஜெனிக் சிஸ்டத்தை பயன்படுத்தி இந்த குளிர்ச்சியை ஏற்படுத்தப்பட்டது. காரணம், புரோட்டான்கள் மோதும்போது சூரியனின் வெப்பத்தை விட 100000 மடங்கு வெப்பம் உருவாகும். அதை குளிர்விக்கவே இத்தனை ஜாக்கிரதை. இவ்வளவு டெக்னிகலான விஷயத்தில் ரிப்பேர் வந்தால் சரி செய்ய ஒரு வருடம் ஆகாதா! எப்படியோ இந்த ஆராய்ச்சி மூலமாக ஹிக்ஸ் போஸானை விஞ்ஞானிகள் பார்த்துவிட்டார்கள் அதுதான் இப்போ வெளியான உண்மை.

சரி இனி கடவுள் உள்ளார் என்பதனை விஞ்ஞானிகள் எவ்வாறு நிருபிக்கிறார்கள் என்று பார்போமா ?

13750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிக்-பேங்க் எனப்படும் பெரு வெடிப்பின்போது வாயுக்கள் உருவாகி பின்னர் அதில் உள்ள அணுக்கள் ஒன்றிணைந்து பிரபஞ்சமும், அதில் உள்ள மற்ற பொருட்களும் உருவானதாக விஞ்ஞானம் கூறுகிறது. எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் என்ற 3 உட்பொருட்களின் சேர்க்கைதான் அணு. இந்த அணுக்களின் சேர்க்கைதான் வெவ்வேறு திடப்பொருட்களாக ஆகி உள்ளன. நாம் வாழுகிற பூமி, நம்மைச் சுற்றிலும் இருக்கிற டி.வி, செல்போன், மேஜை, நாற்காலி, பேனா, மோட்டார் வாகனங்கள், கம்ப்யூட்டர் இப்படி எல்லாமே அணு சேர்க்கையில் உருவானவைதான். இவற்றைப் போலவே எல்லாம் ஒன்றிணைந்த இந்த பிரபஞ்சமும் அடிப்படையில் அணுக்களின் சேர்க்கைதான்.


அணுக்களை சேர்க்கும் ஒட்டுப்பொருள் எது என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தது. அணுக்களை ஒன்றோடு ஒன்று ஒட்டவைக்கும் பொருள் என்ன என்பதை கண்டுபிடித்தால், பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதால், அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த கடவுள் துகளை கண்டறியும் முயற்சியில் தற்போது விஞ்ஞானிகள் வெற்றியடைந்துள்ளனர். அணுக்களை ஒன்றோடு ஒன்று ஒட்டவைக்கும் கண்ணுக்குத் தெரியாத சக்தியை தான் கடவுள் என்கிறார்கள் பல விஞ்ஞானிகள். ஆனால் அந்த சக்தியை தற்போது பார்த்துவிட்டார்கள் விஞ்ஞானிகள். இதனால் கடவுளைப் பார்த்ததுபோல அவர்கள் துள்ளிக்குதிக்கிறார்கள்.


Click below To see the Video - >




Thursday, July 5, 2012

கடைசி ஆமையும் இறக்க அரிய ஆமை இனம் அழிந்தது





எக்வடோர் நாட்டின் தீவான கேலப்பகோஸ் தீவில் அமைந்திருக்கும் கேலப்பகோஸ் தேசியப் பூங்காவில் நூறு வயதான ஒரு அரிய ஆமை இறந்து விட்டதாக அந்த தேசியப் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'தன்னந்தனி ஜார்ஜ்' ( லோன்சம் ஜார்ஜ்) என்று அழைக்கப்பட்ட இந்த அரிய ஆமை, அதன் இனத்தில் கடைசி ஆமையாகக் கருதப்படுகிறது.
இதன் வயது 100 இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.
இதன் மரணத்திற்குக் காரணம் என்ன என்பதைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என இந்தப் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதைக் கடந்த 40 ஆண்டுகளாகப் பராமரித்து வந்த பூங்கா ஊழியர் பட்டியில் அது இறந்து கிடந்ததைக் கண்டார்.
இதன் உட்பிரிவு வகை ஆமைகள் சுமார் 200 ஆண்டுகள் உயிருடன் வாழும் என்பதை வைத்துப் பார்க்கையில், லோன்சம் ஜார்ஜ் ஒரு இளம் வயது ஆமை என்றே கூறலாம்.


அரிய இனம்

லோன்சம் ஜார்ஜ் முதலில் 1972ல் கேலப்பகோஸ் தீவான பிண்டாவில் ஒரு ஹங்கேரிய நாட்டு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போதெல்லாம், இந்த வகை ஆமைகள் அழிந்து விட்டதாகவே பலரும் கருதியிருந்தனர்.
லோன்சம் ஜார்ஜ் இந்த தேசியப் பூங்காவின் ஆமை விருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டது.
சுமார் 15 வருடங்கள் ஒரு பெண் ஆமையோடு சேர்ந்து வாழ்ந்த பின்னர், ஒரு வழியாக லோன்சம் ஜார்ஜ் அந்தப் பெண்ணோடு சேர்ந்தது.
ஆனால் அந்தப் பெண் ஆமை பொரித்த முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவரவில்லை.
லோன்சம் ஜார்ஜின் மரணத்தை அடுத்து, அந்த பிண்டோ உட்பிரிவு ஆமைகள் இல்லாதொழிந்து விட்டதாக கேலப்பகோஸ் தேசியப் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது போன்ற பெரிய ஆமை ரகங்கள் கேலப்பகோஸ் தீவுகளில் 19ம் நூற்றாண்டின் பிற்காலம் வரை மிகவும் அதிகமாகக் காணப்பட்டன.
ஆனால் கடலோடிகளும், மீனவர்களும் இந்த ரக ஆமைகளை அவைகளின் இறைச்சிக்காக வேட்டையாடிதன் விளைவாக அவை மிகவும் அரிதாகிவிட்டன.
அவை வாழும் இடங்களில் , எக்வடோர் பெருநிலப்பரப்பிலிருந்து, ஆடுகளை அறிமுகப்படுத்திய பின்னர், அவைகளின் வசிப்பிடங்கள் மேலும் பாதிப்படைந்தன.
கேலப்பகோஸ் தீவுக்கூட்டங்களில் இருக்கும் பல்வேறு தீவுகளில் காணப்பட்ட வெவ்வேறு ஆமையினங்களின் தோற்றங்களை வைத்துத்தான், பிரிட்டிஷ் இயற்கை விஞ்ஞானியான சார்லஸ் டார்வின், பிரபலமான தனது பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை உருவாக்கினார்.
கேலப்பகோஸ் தீவுகளில் மற்ற ஆமையின உட்பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 20,000 ஆமைகள் இன்னும் வாழ்கின்றன



Click to See the Video


Thanks : BBC




விண்வெளியில் நிகழப் போகும் `மெகா’ மோதல்!



நமது பூமி உள்ளிட்ட கிரகங்கள் அடங்கிய பால்வீதி மண்டலம், தனது அண்டை வீடான `ஆண்ட்ரமீடா கேலக்சி’யுடன் மோதப் போகிறது. இதனால் சூரியன் உள்பட நட்சத்திரங்கள் எல்லாம் அங்குமிங்கும் வீசியெறியப்படப் போகின்றன. பயப்படாதீர்கள், இதெல்லாம் நடப்பதற்கு 400 கோடி ஆண்டுகள் ஆகும்!

அமெரிக்காவின் பால்டிமோரில் உள்ள ஸ்பேஸ் டெலஸ்கோப் சயன்ஸ் இன்ஸ்டிட்யூட் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறும் தகவல் இது.

மேற்கண்ட இரு பிரபஞ்ச மண்டலங்களும் நேருக்கு நேராக மோதிக் கொண்டாலும், பூமியும், சூரியக் குடும்பமும் சேதம் அடையாது. மாறாக தற்போது இவை இருக்கும் இடங்களில் இருந்து இடப்பெயர்ச்சி அடையலாம். சூரியன் ஏதோ ஒரு மூலைக்கும், நட்சத்திரங்கள் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைக்கும் தூக்கியெறியப்பட அதிக வாய்ப்பில்லை என்றும் விண்வெளி விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

“பல நூறு கோடி ஆண்டுகளுக்குப் பின் விண்வெளியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஊகமாகப் பேசப்பட்டு வந்தது. தற்போதுதான் நாம் ஒரு தெளிவான முடிவுக்கு வந்திருக்கிறோம்” என்கிறார், மேற்கண்ட விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த சாங்மோ டோனி சோன்.

ஆண்ட்ரமீடா கேலக்சி, பால்வீதி மண்டலத்துடன் கடைசியில் மோதியபிறகு, மேலும் இருநூறு கோடி ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு மண்டலங்களும் இணைந்து ஒரே மண்டலமாகும் என்றும் சோன் கூறுகிறார்.

பால்வீதி மண்டலம், ஆண்ட்ரமீடா கேலக்சி இடையிலான நேருக்கு நேரான மோதல் எப்படியிருக்கும் என்பது குறித்த படங்களை `நாசா’ வெளியிட்டிருக்கிறது.

இந்த விண்வெளித் தீபாவளியைக் காண நாம் இருக்கப் போவதில்லை என்பதுதான் வருத்தமாயிருக் கிறது!


Wednesday, July 4, 2012


ஆப்பிள், ஆண்ட்ராய்டு ஆதிக்கம்...
பிளாக்பெரி தோல்வியால் சோகத்தில் மூழ்கும் நகரம்

ஆப்பிள், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கத்தால் அழிவின் விளிம்பில் நிற்கும் பிளாக்பெரி தோன்றிய நகர மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
கனடா தலைநகர் டொரான்டோவில் இருந்து 100 கி.மீ. தெற்கே உள்ள நகரம் வாட்டர்லூ. அங்குதான் ரிசர்ச் இன் மோஷன் (ரிம்) என்ற நிறுவனம் பிளாக்பெரி என்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பை தொடங்கியது. 20 ஆண்டுகளுக்கு முன் 1992ல் மைக் லசாரிடிஸ், ஜிம் பால்சிலி எனற இருவரின் முயற்சியால் வாட்டர்லூ நகரம், உலக தொழில்நுட்ப வரைபடத்தில் முக்கியத்துவம் பெற்றது.



ஒரு லட்சம் பேர் வசிக்கும் அந்த குட்டி நகரத்தில் அடுத்த சில ஆண்டுகளில் அபரிமித வளர்ச்சி. எங்கு திரும்பினாலும் பிளாக்பெரி ஸ்மார்ட்போன் போஸ்டர்கள், பேனர்கள். சொந்த கட்டிடங்களும், வாடகை கட்டிடங்களுமாக ரிம் நிறுவனத்தின் அலுவலகங்கள், போன் தொழிற்சாலைகள்தான் நகரின் மூலை முடுக்குகளில் எல்லாம் வியாபித்திருந்தன. 
உலகம் முழுவதும் பரந்து விரிந்தது அதன் போன் சாம்ராஜ்யம். உள்ளூர் தொழிலதிபர் முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா வரை பிளாக்பெரி போன் வைத்திருப்பதை கவுரவமாக கருதியதுண்டு. 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 16,500 ஊழியர்கள். அதில் வாட்டர்லூ நகரில் மட்டும் 9,000 பேர். இப்படி உலா வந்த பிளாக்பெரி கடந்த 8 ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த 3 மாதத்தில் நஷ்ட கணக்கை வெளியிட்டுள்ளது.

காரணம், ஆப்பிள் ஐபோன், கூகுளின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வருகை. கடந்த ஆண்டில் மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் 11 சதவீதமாக இருந்த பிளாக்பெரி, கடந்த 3 மாதங்களில் 5 சதவீதமாக இறங்கி விட்டது. இதனால், 5,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பப் போவதாக அறிவித்துள்ளது நிர்வாகம்.
இதுதான் வாட்டர்லூ நகர மக்களின் சோகத்துக்கு காரணம். நகரின் பெயரும் அதற்கு காரணமாக இருக்கலாம்... ஆம், வாட்டர்லூ என்றால் மோசமான தோல்வி என்றும் பொருள்.

கிரீன்லாந்தில் பிரமாண்ட விண்கல் பள்ளம் உலகிலேயே பெரிசு.. 300 கோடி ஆண்டு பழசு


விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பிரமாண்ட பள்ளம் கிரீன்லாந்தில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 100 கி.மீ. விட்டம் கொண்ட இப்பள்ளம் 300 கோடி ஆண்டு பழமையானது என்றும் தெரியவந்துள்ளது. டென்மார்க் அருகே உள்ள கிரீன்லாந்து நாட்டில் உலகின் மிக பழமையான, மிகப்பெரிய விண்கல் பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டென்மார்க் புவியியல் ஆய்வு துறை மற்றும் கிரீன்லாந்து ஆராய்ச்சியாளர் ஆடம் க்ரேட் தலைமையில் நடைபெற்ற ஆய்வின் அரிய கண்டுபிடிப்பு இது. கிரீன்லாந்தின் மனிட்ஸ்சாக் என்ற இடத்தில் இந்த மெகா சைஸ் பள்ளம் உள்ளது. பள்ளம் உருவாக காரணமான விண்கல்லின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பல்வேறு நவீன தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டதில் இதுகுறித்த அரிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இவ்வளவு பெரிய விண்கல் பள்ளம் கண்டறியப்பட்டுள்ளது உலகில் இதுவே முதன்முறை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மெகா சைஸ் விண்கல் பள்ளம் குறித்து க்ரேட் மேலும் கூறியதாவது:
விண்ணில் இருந்து பல்வேறு அளவுகளில் தொடர்ந்து கற்கள் விழுந்துகொண்டே இருக்கின்றன. இதில் பெரும்பாலான கற்கள் பூமியின் வளிமண்டலத்தை கடக்கும் நேரத்தில் எரிந்து, நடுவானிலேயே சாம்பலாகி விடுகின்றன. கிரீன்லாந்தின் மனிட்ஸ்சாக் பகுதியில் பிரமாண்ட விண்கல் ஒன்று சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு விழுந்திருப்பதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட பள்ளத்தின் விட்டம் 100 கி.மீ. நீளம் உள்ளது. இதன் பரப்பு சுமார் 7,857 சதுர கி.மீ. (சென்னை பெருநகரம் போல 18 மடங்கு அதிகம்.) விழுந்தபோது, இது சுமார் 500 கி.மீ. கொண்ட பள்ளமாக இருந்திருக்கிறது. மழை, காற்று, மண்அரிப்பு உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றங்களால், 300 கோடி ஆண்டுகளில் இப்பள்ளம் சற்று சுருங்கியுள்ளது. ஆண்டுகள் ஓடியதில், இப்பள்ளமும் புதைந்து போயிருக்கிறது. இது தற்போது பூமியின் தரைப்பகுதியில் இருந்து 25 கி.மீ ஆழத்தில் இருக்கிறது. இவ்வளவு பெரிய விண்கல் பள்ளம் கண்டுபிடிக்கப்படுவது உலகிலேயே இதுதான் முதன்முறை. ராட்சத விண்கல் விழுந்ததால் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஏற்பட்ட பாதிப்புகள், சேதம் பற்றி தெரியவில்லை. ஒருவேளை, இவ்வளவு பெரிய கல் ஒன்று இப்போது விழுந்தால், அது ஏற்படுத்தும் பாதிப்புகளை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. மிகப்பெரிய அழிவை சந்திக்க நேரிடும். விண்கல் பள்ளம் தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது.

கடவுளின் துகள் ஹிக்ஸ் போசானின் ஒரு பகுதி கண்டுபிடிப்பு

பௌதீகத்துறையில் "கடவுள் துகள்" என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போசான் என்கிற நுண்துகளை தாங்கள் கண்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் அறிவிப்பு


சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் ஹிக்ஸ் போசன் தியரி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் 40 ட்ரில்லியன் புரோட்டான்களை அதிவேகத்தில் மோத விட்டு சோதனை நடத்தினர். இதில் இயற்பியல் துறையில் முக்கிய கண்டுபிடிப்பாக கடவுளின் துகள் என கூறப்படும் ஹிக்ஸ் போசானின் சிறிய பகுதி கண்டறியபட்டு உள்ளது. அவற்றின் தன்மை மிக உறுதியாகவும், கடினமாகவும் உள்ளது.

இத்தகவலை சுவிட்சர்லாந்து செர்ன் ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பேசிய அவர்கள், கடிவுளின் துகள் என அழைக்கப்படும் இந்த ஹிக்ஸ் போசானை கண்டுபிடிக்க அதிக நாட்களை விஞ்ஞானிகள் எடுத்துக்கொண்டதாகவும், இது உலகிற்கு பயனளிக்கு வகையில் என்றும் கூறியுள்ளார்கள். மேலும், இது 125 பில்லியன் எடைக்கொண்டதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, July 2, 2012

குழந்தைக்கு பெயர் சூட்டிய பெற்றோர் ‘மை நேம் இஸ் கூகுள்’

குழந்தைகளுக்கு ‘கூகுள்’ என்று பெயர் சூட்டுவது பேஷன் ஆகி விட்டது. டெல்லியை சேர்ந்தவர் வக்கீல் முனீஸ் சந்தர் ஜோஷி. சமீபத்தில் அவருக்கு பிறந்த அழகான ஆண் குழந்தைக்கு, கூகுள் என்று பெயரிட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன காரணம் புதுமையானது அல்ல. ஏனெனில், அதே காரணத்தை லூதியானாவை சேர்ந்த பெண் உமா தவான் ஏற்கனவே கூறி இருக்கிறார்.

‘‘எந்த குழந்தையாக இருந்தாலும் அதற்கு பெயர் சூட்டும்போது, அதன் தோற்றத்திற்கு ஏற்றதாக அது இருக்க வேண்டும். அதன்படி எனது 3 வயது மகனுக்கு கூகுள் என்று பெயர் சூட்டியுள்ளேன். வீட்டில் ஏதாவது ஒரு பொருளை எங்காவது வைத்துவிட்டு, இடம் தெரியாமல் தேடுவது எல்லாருக்கும் வழக்கம். அப்படி நான் தேடும்போதெல்லாம் 5 நிமிடங்களில் அதை கண்டுபிடித்து கொடுத்து விடுவான். அந்த ஒரு காரணத்திற்காகவே அவனுக்கு கூகுள் என்ற பெயரை சூட்டி விட்டேன். இப்போது அவன் எங்கள் வீட்டில் மட்டுமல்ல; பள்ளியிலும் பாப்புலராகி விட்டான்’’ என்று சிரிப்பும் பூரிப்புமாய் அந்த பெண் சொன்னதைதான் டெல்லி வக்கீலும் கூறியிருக்கிறார்.

சர்ச் இன்ஜின் என்று சொல்லப்படுகிற தேடுதலுக்கான வலைத்தளம் கூகுள், நவீன உலகின் ஆதார மையம். கூகோள் (ரீஷீஷீரீஷீறீ) என்ற வார்த்தையில் இருந்து உருவான இந்த சொல்லுக்கு கணித சாஸ்திரப்படி, 1,ஐ 100 பூஜ்ஜியங்கள் தொடர்வதாக அர்த்தம். குக்கிராமங்களில் கூட கூகுள் பிரபலமாகி விட்டதால், அதையே தனது குழந்தைகளுக்கு பெயராக சூட்டும் பழக்கமும் வந்து விட்டது. முதன் முதலில் இதற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது 2005ல். சுவீடன் நாட்டு தம்பதியினர் தான் தங்களது குழந்தைக்கு ‘ஆலிவர் கூகுள் கெய்’ என்று பெயர் சூட்டி, இந்த மந்திரத்தை பிற நாட்டினருக்கு கற்று கொடுத்தனர். இந்தியா வந்து சேர அதற்கு ஏழாண்டு பிடித்திருக்கிறது.

பூமிக்குத் திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்



சீனாவின் எதிர்கால தியாங்காங்-1 விண்கலத்தை விண்ணில் நிறுவ 13 நாள் பயணமாக விண்ணுக்குச் சென்ற சீன விண்வெளி வீரர்கள் ஜிங் ஐபிங், லியூ வாங், பெண் விண்வெளி வீரரான லியூ யாங் ஆகியோர் அங்கு வெற்றிகரமாக நிறுவிவிட்டு, இன்று காலை 10 மணியளவில் பூமிக்குத் திரும்பினார்கள். மங்கோலியாவின் உட்பகுதியில் ஷான்ஷூ 9 பாராசூட் மூலம் பூமியில் இறங்கினார்கள். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விண்வெளி சீன வீரர்கள் தங்களது தியாங்காங்-1 விண்கலத்தை விண்ணில் நிறுவி விட்டதாகவும். அது வசதியாகவும் சிறப்பாகவும் செயல்படுகிறது என்றும் கூறினர். மேலும், தாங்கள் தங்கள் நாட்டைப் பற்றிப் பெருமை கொள்வதாகவும் லியூ யாங் கூறினார்.

நெபுலாவில் இருந்து உருவான நட்சத்திரக் குடும்பம்


விந்தையான விண்வெளி ரகசியங்களில் சுமார் 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்பு விண்வெளியில் நெபுலா எனப்படும் மையபகுதியிலிருந்து சூரியன் உள்பட ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் தோன்றியதாக கருதப்படுகிறது. பால்வெளியில் அவை இப்பொழுது எங்கு உள்ளன. சூரியனின் அந்த நட்சத்திர சகோதரர்களை பற்றிய தேடல் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இதற்கிடையில், கடந்த வருடம் டச்சு நாட்டை சேர்ந்த வானியலாளர் போர்சுகீஸ் ஷ்வார்ட் என்பவர், பூமியை சுற்றி 330 ஒளி ஆண்டுகள் தூரத்தில் ஏறக்குறைய 10 முதல் 60 நட்சத்திரங்கள் வரை பரவியிருக்க வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டார்.

இரவு நேரத்தில், ஒரு பைனாகுலர் உதவியுடன் இவ்வகை நட்சத்திரங்களை எளிதில் பார்க்கலாம் என்றார். மேலும், இவை சூரியனின் வயது, வேதியியல் அமைப்பு மற்றும் விண்வெளியில் பயணம் ஆகியவற்றில் ஒத்திருக்கும். இதனால் நமது சூரிய குடும்பம் எவ்வாறு பிறந்தது என்பதற்கான விடையையும் இந்த நட்சத்திரங்கள் கொண்டிருக்கும் என்றும் கூறினார். ஆனால் ரஷ்ய வானியலாளர் யூரி மிஷுரோவ் இந்த கருத்துகளை ஏற்று கொள்ளவில்லை. பால்வெளியில் சூரியனின் இந்த சக நட்சத்திரங்கள் அதிகளவில் ஈர்ப்பு விசை கொண்டிருக்கும்.

அதனால் அவை சுற்றி வரும் பாதையும் மாறியிருக்கும் என்றார். மேலும் அவரது கணக்கின்படி, 3 அல்லது 4 நட்சத்திரங்கள் சூரியனின் மிக அருகில் பால்வெளியில் அமைந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார். இது பற்றி கேம்பிரிட்ஜ் வானியலாளர் ஜெரார்டு கில்மோர் கூறும் போது, சூரியனை போன்று தோற்றம் உடைய மற்ற நட்சத்திரங்களை கண்டறிவது சற்று சிக்கலான விசயம். எனினும் விண்வெளியில் மறைந்திருக்கும் இதுபோன்ற அபூர்வ விசயங்களை ஆராய்வது அறிவியலுக்கு உகந்த ஒன்று என கூறினார்.

பாலை திருடும் பூனையின் விசித்திர திறன்


பாலை திருடுவது பூனையின் சாகசங்களுள் ஒன்று. இந்த சாகசத்தை நிகழ்த்த அதன் உடலமைப்பு எவ்வாறு அதற்கு பயன்படுகிறது என்ற கேள்வி எழுந்தது ரோமன் ஸ்டாக்கர் என்ற பொறியாளருக்கு. இந்த சந்தேகத்தின் அடிப்பிடையில் அவர் ஒரு ஆராய்ச்சி நடத்தினார். அதில், நாய்கள் தங்கள் நாக்கினை ஒரு குழி கரண்டி போல் லாவகமாக மடித்து திரவ உணவுகளை அள்ளிக்கொள்ளும் தன்மை படைத்தவை. ஆனால், பூனைகளுக்கு இது சாத்தியமில்லை. அவை நுனி நாக்கினை பயன்படுத்தியே பால் போன்ற திரவங்களை உறிஞ்சுகின்றன.

பூனை தனது நாக்கினை பயன்படுத்தி ஈர்ப்பு விசையை தாண்டிய ஒரு விசையுடன் திரவங்களை உறிஞ்சுகிறது. ஒரு பாத்திரத்தில் சாயம் கலந்த தண்ணீரை நிரப்பி தன் வீட்டு பூனையை குடிக்க வைத்து அந்த காட்சியை அதிவேக வீடியோ கேமரா மூலம் படமாக்கி மேற்சொன்ன உண்மையை ஸ்டாக்கர் கண்டறிந்தார். தண்ணீர் நிறமற்றது என்பதனால் அதிவேக காமிராவில் அது தெரியாமல் போகும் என்பதனால் தண்ணீரில் சாயம் கலந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவரது இந்த கண்டுபிடிப்பு ரோபோ தயாரிப்பில் பயன்படுத்த ஏற்றது என்றும் கூறப்படுகிறது.

பவழப்பாறைகளை காப்பாற்றும் கடற்புற்கள்


சிலவகை கடற்புற்களை வளர்ப்பதன் மூலம் வேகமாக அழிந்துவரும் பவழப்பாறைகளை காப்பாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கடலில் இருக்கும் பவழப்பாறைகள், கடந்த 40 ஆண்டுகளாக வேகமாக அழிந்துவருகின்றன. பூமியானது வேகமாக வெப்பமடைவது தான் இதற்கான காரணமாக கருதப்படுகிறது. அதாவது மனிதனும், தொழிற்சாலைகளும் வெளியிடும் கரியமிலவாயுவின் அளவு வேகமாக அதிகரித்து சுற்றுசூழலில் கார்பனின் அளவை அதிகப்படுத்துகிறது. இப்படி சுற்றுச்சூழலில் அதிகரிக்கும் கார்பன், கடல்நீரிலும் அதிகரிக்கும் போது கடல்நீரின் அமிலத்தன்மையும் கூடுகிறது.
இப்படி கடல்நீரின் அமிலத்தன்மை அதிகரிக்கும்போது, அது பவழப் பாறைகளை அழிக்கிறது. காரணம் பவழப்பாறைகளை உருவாக்கும் சுமார் ஒரு சென்டிமீட்டர் நீளமுள்ள புழுவைப்போன்ற தோற்றமுடைய கடல்வாழ் உயிரினம், ஆரோக்கியமாக வாழ்ந்தால் தான் அவை சுரக்கும் வேதிப்பொருள் பவழப்பாறையாக வளரும். கடல்நீரில் அமிலத்தன்மை அதிகரித்தால் இந்த புழுக்கள் அதில் வாழமுடியாது என்பது ஒருபக்கம் இருக்க, அவை உருவாக்கும் பவழப்பாறைகளும் இந்த அமிலத்தன்மை மிகுந்த தண்ணீரில் கரைந்து காணாமல் போய்விடும்.
ஆக்ஸ்போர்ட், ஸ்வான்ஸி மற்றும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் குக் பல்கலைக்கழகங்கள் இணைந்து செய்த ஆய்வில், குறிப்பிட்ட சிலவகை கடற்புற்கள், கடல் நீரில் இருக்கும் கார்பனை மிகவேகமாக உள்வாங்கிக் கொள்வதன் மூலம் கடல்நீரின் அமிலத்தன்மையை குறைக்கின்றன. இது பவழப்பாறைகளின் அழிவை தடுப்பதுடன், அவை ஆரோக்கியமாக வளரவும் வழி செய்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதைத்தொடந்து எங்கெல்லாம் பவழப்பாறைகள் வேகமாக அழிந்து வருகிறதோ அந்த பகுதியில் இந்த குறிப்பிட்ட கடற்புற்களை வளர்க்கலாம் என்கிறார் அவர்.




டாலர், பவுண்டுகளை விட அதிக மதிப்பு

பிராங்க் கரன்சிகளை பதுக்க ஸ்விஸ் வங்கிகள் புதிய வசதி



வரி கட்டாமல் கோடி கோடியாய் சம்பாதிக்கும் பணக்காரர்களுக்கு கறுப்பு பணத்தை பதுக்க, பாதுகாப்பான புதிய ஏற்பாட்டை ஸ்விஸ் நாட்டு வங்கிகள் செய்துள்ளன. அதன்படி, அதிக மதிப்பு கொண்ட ஸ்விஸ் பிராங்க் நோட்டுகளை பாதுகாப்பு பெட்டகங்களில் அடுக்கி வைத்துக் கொள்ளலாம். உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்கள் தாங்கள் சம¢பாதிக்கும் கறுப்பு பணத்தை ஸ்விஸ் நாட்டின் ரகசிய வங்கிக் கணக்குகளில் பதுக்கி வருகின்றனர். சமீப காலமாக இந்தப் பணத்தை மீட்க, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதனால் பல ஆண்டுகளாக ரகசியமாக வைத்திருந்த வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் ஸ்விஸ் வங்கிகள் உள்ளன. இந்த விவரங்கள் மூலம் கறுப்பு பண முதலைகள் பிடிபட்டு வருகின்றனர். இருந்தாலும் கோடீஸ்வர வாடிக்கையாளர்களை இழக்க விரும்பாத ஸ்விஸ் வங்கிகள், அவர்கள் தங்கள் பணத்தை பதுக்க புதிய ஏற்பாட்டை செய்துள்ளன.
பெரும்பாலும் பணக்காரர்களின் சேமிப்பு வங்கிக் கணக்குகள், டெபாசிட்டுளை குறிவைத்துத்தான் கறுப்பு பண வேட்டை நடந்து வருகிறது. பாதுகாப்பு பெட்டகங்களை யாரும் கண்டுகொள்வதில்லை. அதில் பணத்தை பதுக்கும் புதிய முறையைத்தான் ஸ்விஸ் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளன. அதன்படி, 1000 ஸ்விஸ் பிராங்க் கரன்சி நோட்டை இந்த பெட்டகங்களில் வைத்துக் கொள்ளலாம் என ஊக்குவிக்கின்றன.

ஒரு நோட்டின் மதிப்பு இந்திய ரூபாயில் ஸி60 ஆயிரத்துக்கு சமம். ஆயிரம் கரன்சி நோட்டுகளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்தால் அதன் மதிப்பே ஸி6 கோடியைத் தொடும். இதுபோக, வைரங்கள், தங்க பிஸ்கட்டுகள், விலை மதிப்புள்ள ஓவியங்கள் ஆகியவற்றையும் பாதுகாப்பு பெட்டகங்களில் வைத்துக் கொள்ளலாம். கறுப்பு பண வேட்டையாடும் பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள் பாதுகாப்பு பெட்டகங்களை கண்டு கொள்வதில்லை என்பதால் இந்த ஏற்பாடு.
ஸ்விஸ் வங்கிகளின் இந்த வசதி காரணமாக, 1000 பிராங்க் நோட்டுகளுக்கான தேவை அதிகரித்து, பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பணக்காரர்கள் எல்லோரும் இந்த நோட்டுகளை வாங்க அடித்துக் கொள்வதால் வங்கிகளில் கூட இவை கிடைப்பதில்லை. இதனால் 1000 பிராங்க் நோட்டுகளை அதிகம் அச்சிட ஸ்விட்ஸர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள மொத்த நோட்டுகளில் இவற்றின் மதிப்பு மட்டுமே 60 சதவீதம். அதை இன்னமும் அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியா போன்ற நாடுகளில் இருந்து 1000 பிராங்க் நோட்டுகளுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு பெட்டகங்களுக்கும் பெரும் போட்டியே நடக்கிறது. எனவே, மிகப் பெரிய பணக்காரர்களுக்கு மட்டுமே பெட்டக வசதி கிடைக்கிறது என ஸ்விஸ் வங்கியான எஸ்என்பி தெரிவித்துள்ளது. அமெரிக்க கரன்சிகளில் அதிக மதிப்பு கொண்டது 100 டாலர் கரன்சி. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 5,500 தான். இங்கிலாந்து கரன்சிகளில் 50 பவுண்டு நோட்டுதான் அதிக மதிப்பு கொண்டது. இதன் மதிப்பு ரூபாயில் ஸி4,300தான். 500 டாலர், 1000 டாலர், 5,000 டாலர், 10 ஆயிரம் டாலர் நோட்டுகள் 1969க்கு பிறகு புழக்கத்திலேயே இல்லை. எனவேதான் 1000 பிராங்க் நோட்டுகளுக்கு அதிக கிராக்கி எழுந்துள்ளது.