Friday, November 15, 2013

களிமண் பொம்மைகளுடன் கப்பலில் கடத்தப்பட்ட ஆயுத ரகசியம் அவுட் ஆன கதை

களிமண் பொம்மைகளுடன் கப்பலில் கடத்தப்பட்ட ஆயுத ரகசியம் அவுட் ஆன கதை


இது, 1996-97ம் ஆண்டு காலப்பகுதியில், மொசாம்பிக் நாட்டு துறைமுகம் நகாலாவில் நடந்த சுவாரசியமான ஆயுத டீல்!

ரினாமோ என்ற பெயரை உங்களில் சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். கேள்விப்படாவிட்டால் – அது ஒரு மொசாம்பிக் விடுதலை அமைப்பு. ரினாமோ என்ற போத்துகீஸ் சொல்லின் விரிவாக்கம், Resistência Nacional Moçambicana (மொசாம்பிக் தேசிய பாதுகாப்பு). இவர்கள் தம்மை ஒரு அரசியல் கட்சி என்கிறார்கள். ஆனால், துப்பாக்கி ஏந்தி போராடிய அமைப்புதான்.

இவர்களுக்கு ஆயுத விஷயத்தில் ஒரு நடைமுறை உண்டு – அது ஆயுதங்கள் புதிது புதிதாக வாங்கும்போது தங்களிடமிருக்கும் பழைய ஆயுதங்களை வெளியே விற்றுவிடுவார்கள்.

வழமையாக இவர்கள் தமது ஆயுதங்களை விற்பது ப்ருண்டி மற்றும் ஸயர் நாடுகளிலிருந்து இயங்கும் விடுதலை அமைப்புக்களுக்கு. இதெல்லாம், ஒருவித பண்டமாற்று முறையில் நடைபெறும் வியாபாரம். அந்த நாட்டு விடுதலை இயக்கங்கள், இந்த ஆயுதங்களுக்கு பதிலாக, பாம்பு தோல்கள், சந்தனக் கட்டைகள், வைரங்கள் என வெளியே நல்ல விலைக்கு விற்பனை செய்யக்கூடிய சரக்குகளை கொடுப்பார்கள்.

இந்த செகன்ட் ஹேன்ட் ஆயுதங்கள் விற்கப்பட்டு எந்த ரூட்டில் அவற்றை வாங்கியவர்களிடம் போய்ச் சேருகின்றன என்ற விபரங்களை அறிவதில், சர்வதேச உளவு அமைப்புக்களுக்கு – சி.ஐ.ஏ. உட்பட – ஆர்வம் அதிகம். காரணம், இவர்கள் விற்கும் ஆயுதங்கள், ஆபிரிக்கா பகுதியில் ஆயுத சமநிலையை குலைத்துவிடும் என்பதால், எவ்வளவு ஆயுதங்கள், எங்கே, எப்படி போகின்றன என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

இதனால், சி.ஐ.ஏ.வும் மற்றைய மேலைநாட்டு உளவுத்துறைகளும், அந்தப் பகுதியில் எந்த நேரமும் கண்வைத்திருப்பார்கள். ஆனால், ஆயுதக் கடத்தலை தடுப்பதில்லை. இந்த கடத்தல்களை வைத்து, விடுதலை இயக்கத்தின் ஆயுத பலத்தை உளவுத்துறைகள் கணித்து கொள்வார்கள்.

இது, ஆயுதம் விற்கும் விடுதலை இயக்கத்துக்கும் நன்றாகவே தெரியும். இதனால், இவர்கள், அவர்களுக்கு விஷயம் தெரியாமல் ஆயுதங்களை கடத்த பார்ப்பார்கள்.

ரினாமோ இயக்கத்தினர், தாம் விற்கும் ஆயுதங்களை பெரும்பாலும் வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் நகாலா துறைமுகத்தக்கு அருகிலுள்ள சரக்கு குடோன் (கார்கோ வேர்ஹவுஸ்) ஒன்றுக்கு கொண்டுவருவார்கள். அங்கு ஆயுதங்கள் மரப்பெட்டிகளில் (Crates) அடைக்கப்படும். மரப் பெட்டிகளில் தனி ஆயுதங்கள் அடைக்கப்படுவதில்லை. களிமண் பொம்மைகளுக்கு கீழே, மறைத்து வைத்து பேக்கிங் செய்யப்படும்.

மொசாம்பிக் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் களிமண் பொம்மைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி. இதனால், அங்கிருந்து பெட்டி பெட்டியாக களிமண் பொம்மைகள் கப்பல் ஏறுவது வழக்கம். விடுதலை இயக்கத்தின் ஆயுதங்களும், மரப் பெட்டிகளில் களிமண் பொம்மைகளுடன் கலந்து நகாலா துறைமுகத்திற்குள் பிரவேசிக்கும். இது இரவோடு இரவாக நடக்கும்.

நகாலா துறைமுகத்தில் இருந்து அதிகாலை நேரத்தில் புறப்படும் கப்பல் ஒன்றில் லோடு செய்யப்பட்டு, மத்வாரா துறைமுகம் நோக்கிச் செல்லும். மத்வாரா துறைமும் இருப்பது தான்சானியா நாட்டில்.

மத்வாரா துறைமுகத்தை அடைவதற்கு முன்னர் லஸ்கே தங்கன்யிகா என்ற ஆழம் குறைந்த பகுதியில் கப்பல் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும்.

அந்த நேரத்தில் கப்பலை அணுகும் சில அதிவேகப் படகுகளில் இந்த ஆயுதங்கள் அடங்கிய மரப்பெட்டிகள் ஏற்றப்பட்டுவிட, கப்பல் தான் ஏற்றிவந்த நிஜ களிமண் பொம்மை ஷிப்மென்ட் பெட்டிகளுடன் மத்வாரா சென்றுவிடும்.

ஆயுதங்களை ஏற்றிக்கொண்ட வேகப்படகுகள் லஸ்கே தங்கன்யிகா கடல் பகுதியில் இருந்து, பிஸ்ஸி (Fizi) என்ற இடத்திலுள்ள கடற்கரையை சென்றடையும். அங்கே ஸாயர் நாட்டு விடுதலை இயக்கத்தினர் இந்த ஆயுதங்களுக்காக கடற்கரையில் காத்திருப்பார்கள். இதுதான், ஆயுதம் கடத்தப்படும் ரூட்.

இந்தக் கப்பல் போக்குவரத்து, நடுவழியில் ஆயுதமாற்றம் எல்லாவற்றையும் செய்து கொடுப்பது தான்சானியா நாட்டிலுள்ள ஒரு செக்யூரிட்டி நிறுவனம்.

அந்த நாட்களில் இவர்களிடம், லீசுக்கு எடுக்கப்பட்ட 2 நடுத்தர சைஸ் கப்பல்களும் சுமார் 8 அதிவேகப் படகுகளும் இருந்தன. அவற்றை வைத்துதான் இந்த கடத்தல் வருடக் கணக்கில் நடந்து வந்தது.

ஒரு சில வருடங்களாகவே இந்த ஆயுதப் பரிமாற்றம் நடைபெற்று வந்தாலும் 1997-ம் ஆண்டுவரை வெளியே தெரியாமல் விஷயம் காதும் காதும் வைத்ததுபோல நடந்து முடிந்திருக்கிறது – 1997-ல் விஷயம் வெளியே கசிந்துவிட்டது. 

இந்த சம்பவம் நடந்தது,  1997-ம் ஆண்டின் மார்ச் மாதத்தில்.

கடத்தல் வழமைபோல நடைபெற்றிருந்தால் மாட்டியிருக்காது – அதாவது மொசாம்பிக் நாட்டின் நகாலா துறைமுகத்தில் களிமண் பொம்மைகளுடன் பொம்மைகளாக ஆயுதங்கள் ஏற்றப்பட்டு, தான்சானியாவின் போர்ட் மத்வாரா ஊடாக செல்லும் கடத்தல் திட்டம்.

இம்முறை திட்டத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டு விட்டது.

மார்ச் மாதம் 1997-ம் ஆண்டில் நடைபெற்றது என்னவென்றால், வழமைபோல ஒரு வெள்ளிக்கிழமை இரவு ஆயுதப் பெட்டிகள் நகாலா துறைமுகத்திற்கு அருகாமையிலுள்ள கார்கோ வேர்ஹவுஸில் கொண்டுவந்து இறக்கப்பட்டுவிட்டன. துறைமுகத்துக்கு உள்ளே அதிகாலையில் தான்சானியா நோக்கிப் பயணம் செய்யவேண்டிய கப்பலும் வந்து சேர்ந்துவிட்டது.

ஏற்பாடுகள் எல்லாம் கனகச்சிதமாக இருப்பதாக தெரியவே நள்ளிரவுக்கு சற்று முன்பாக ஆயுதங்கள் இருந்த மரப்பெட்டிகள், முழுமையாக களிமண் பொம்மைகள் இருந்த பொட்டிகளோடு பெட்டிகளாக கலந்து, துறைமுகத்துக்குள் நுழைந்து, கப்பலில் ஏற்றப்பட்டும் விட்டது.

எல்லாமே கிளியர். அதிகாலை 4.30க்கு கப்பல் புறப்படுவதாக இருந்தது. அதற்குமுன் செய்யப்பட வேண்டிய கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் வேலைகளை கப்பல் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் செய்யத் தொடங்கியும் விட்டார்கள்.

கிளியரன்ஸ் கிடைக்கும் நேரத்தில், நகாலா துறைமுகத்திற்கு பணியில் புதிதாக போஸ்ட் ஆகியிருந்த புதிய அதிகாரி ஒருவர் வழமையான நடைமுறைக்கு மாறாக, ஒரு காரியத்தை செய்தார். அதிலிருந்துதான் தொடங்கியது சிக்கல்.

வழமையாக வெள்ளிக்கிழமைகளில் இந்த கடத்தல் நடக்கும்போது டூட்டியில் இருக்கும் துறைமுக அதிகாரிகளை தான்சானியா செக்யூரிட்டி நிறுவனம், கப்பல் கிளம்பிச் சென்றபின் ‘நன்றாகவே கவனித்து’ விடுவார்கள். அதனால், இந்த ‘களிமண் பொம்மை ஏற்றுமதி’ பற்றி யாருமே வாயைத் திறப்பதில்லை.

ஆனால், இந்த குறிப்பிட்ட தினத்தில் கடமையிலிருந்த துறைமுக அதிகாரி புதிய ஆள். செக்யூரிட்டி நிறுவனம் கப்பல் கிளம்பிய பின்னர்தான் தமது பாக்கெட்டை கவனிப்பார்கள் என்று அறியாமலோ, அல்லது வேலைக்குப் புதிதாக வந்த நேரத்தில் நேர்மையாக செயற்பட முயன்றதாலோ, விதிமுறைகளின்படி செயல்பட முடிவு செய்தார்.

கப்பலுக்கான துறைமுக கிளியரன்ஸ் ஆர்டர் அவரது கையொப்பத்துக்காக போனபோது அவர், துறைமுகத்திலிருந்த தனது அலுவலகத்திலிருந்து துறைமுக டெக்குக்கு ரவுன்ட்ஸ் போய், கப்பலை ஒரு நோட்டம் விட்டிருக்கிறார்.

அவரது பணி, கப்பலுக்கு உள்ளே ஏறி செக்கிங் செய்வதல்ல. துறைமுக டெக்கில் நின்று, கிளியரன்ஸ் ஆர்டரில் குறிப்பிட்டுள்ள கப்பல், நிஜமாகவே துறைமுகத்தில் நிற்கிறதா என்று பார்த்து விட்டு கிளியரன்ஸ் கொடுக்க வேண்டியதுதான் அவருடைய வேலை. அவரும் அப்படித்தான் பார்த்தார்.

அப்போதுதான் கப்பலிலிருந்த விசித்திரமான அம்சம் ஒன்று அவரது கண்ணுக்குத் தட்டுப்பட்டிருக்கிறது.



அது கப்பல் எந்த நாட்டைச் சேர்ந்தது என்பதற்கு அடையாளமாகப் பறக்கவிடப்படும் நாட்டுக் கொடியும் இல்லை. கப்பலின் வெளிப்புறத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டிய ரிஜிட்ரேஷன் நம்பரும் இல்லை. சுருக்கமாக, கப்பலின் பெயரைத் தவிர வேறு எந்தவொரு அடையாளமும் இல்லாத கப்பல், துறைமுக கிளியரன்ஸூகாக (Port Departure Clearance) காத்திருக்கிறது.

தனது துறைமுக அலுவலகத்துக்கு வந்த அந்த அதிகாரி, இந்த விபரங்களை துறைமுக Departure Control log பதிவேட்டில் எழுதி, கப்பலை மறுநாள் காலை முழுமையாக சோதனையிடும்படி பரிந்துரை செய்துவிட்டு, கப்பல் அதிகாலையில் கிளப்புவதற்கான கிளியரன்ஸ் ஆர்டரை கொடுக்க மறுத்துவிட்டார்.

கிளியரன்ஸ் மறுக்கப்பட்ட விஷயமும் அதற்கான காரணமும் துறைமுக அலுவலகத்திலிருந்து கப்பலுக்குத் தெரியவந்தது.

அந்தக் கப்பலின் கேப்டன் அதுவரை சுருட்டி வைத்திருந்த நாட்டுக் கொடியை எடுத்து, இரவோடு இரவாக கப்பலில் அந்த கொடியை ஏற்றிப் பறக்கவிட்டார். கப்பலில் அவர் பறக்கவிட்ட நாட்டுக்கொடி எது தெரியுமா?

டட்டடாங்…. பாரத தேசத்தின் மூவர்ணக் கொடி!

கப்பலில் இரவோடு இரவாக கப்பலில் இந்திய கொடி ஏற்றப்பட்ட விவகாரம், துறைமுக அதிகாரிக்கு இருந்த சந்தேகத்தை மேலும் கிளப்பிவிட்டது.

அவர் கப்பலை சோதனையிடுவதற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டார். மறுநாள் காலை சோதனையிடப்படாமல் இந்தக் கப்பல் துறைமுகத்தை விட்டு வெளியேற அனுமதிக்க கூடாது என்ற வாரண்ட்டில் கையெழுத்து போட்டு, கப்பல் நகர முடியாதபடி செய்தே விட்டார்.

மறுநாள் சோதனையிடப்பட்டால், கப்பலில் ஏற்றப்பட்டிருந்த ஆயுத பெட்டிகள் சிக்கிக் கொள்ளும் என்ற நிலையில், சம்பந்தப்பட்ட தான்சான்யா நாட்டு செக்யூரிட்டி நிறுவனம் தடாலடியாக ஒரு வேலை செய்தது.

கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த துறைமுக போர்ட் டெக்கில், திடீரென இரண்டு பெரிய லாரிகள் வந்து சேர்ந்தன. கப்பலில் இருந்தவர்கள் அவசர அவசரமாக மரப்பெட்டிகள் சிலவற்றை கீழே இறக்க, பெட்டிகள் இரண்டு லாரிகளிலும் ஏற்றப்பட்டு துறைமுகத்துக்கு வெளியே அனுப்பப்பட்டன. கப்பலை சோதனையிட உத்தரவிட்ட அதிகாரி இரவு 1 மணிக்கு தமது ஷிஃப்ட் முடிந்து வீடு சென்ற பின்னரே, இந்த காரியம் நடந்தது.

அந்த நள்ளிரவு கடந்த இரவு நேரத்தில், ஓரிரு அதிகாரிகளே கடமையில் இருந்தனர். அவர்கள் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. (பணம் வாங்கியிருப்பார்கள். இதெல்லாம் அங்கு சகஜம்)

விடிவதற்கு முன்னர் இந்த இரு லாரிகளும் 5 லோடுகளை அடித்துவிட, காலையில் நகாலா துறைமுக அதிகாரிகள் சோதனையிட வந்தபோது கப்பலில் வெறும் களிமண் பொம்மை ஷிப்மென்ட்டுகள்தான் இருந்தன. ஆயுதங்கள் அனைத்தும் துறைமுகத்துக்கு வெளியே போய்விட்டன.

கதை இத்துடன் முடிந்திருந்தால், ஆயுதக் கடத்தல் விவகாரம் வெளியே தெரிய வந்திருக்காது. ஆனால், கதை இத்துடன் முடியவில்லை.

இந்த கடத்தல் விவகாரம் எப்படி வெளியே வந்தது என்றால், இவர்கள் லாரிகள் மூலம் நகாலா துறைமுகத்துக்கு வெளியே கொண்டு போய் சேர்த்துவிட்ட ஆயுதப் பெட்டிகளை இந்த சந்தடியெல்லாம் அடக்கும் வரை சில தினங்களுக்காவது மறைவிடத்தில் வைத்திருந்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை.

மறுநாளே, அவசரப்பட்டு வேறு ஒரு வழியில் ஆயுதங்களை அனுப்பி வைக்க ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்கள்.

அதற்குக் காரணம், வெளிநாட்டு உளவு அமைப்புகளின் கண்களும், காதுகளும் நகாலா பகுதியில் இருப்பதை நன்றாக தெரிந்து வைத்திருந்த ரினாமோ விடுதலை இயக்கம், இந்த ஆயுதங்கள் தொடர்ந்தும் நகாலா ஏரியாவில் இருப்பதை விரும்பவில்லை என்று ஊகிக்கப்படுகிறது.

இதனால், எவ்வளவு சீக்கிரம் ஆயுதங்களை அனுப்ப முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அனுப்ப, சர்வதேச கடத்தல் நெட்வெர்க்குகளின் உதவிகளை நாடினார்கள். அதுதான் மிகப் பெரிய தவறு.

கப்பலில் இருந்து ஆயுதங்கள் இறக்கப்பட்ட மறுநாளே முயற்சிகளை தொடங்கினாலும், உடனடியாக ஆயுதங்களை அனுப்பக்கூடிய ஏற்பாட்டை அவர்களால் செய்யமுடியவில்லை – ஏற்பாடுகளை செய்து முடிக்க ஒரு வாரம் பிடித்தது.

அதற்குள் நகாலா ஏரியாவில் ஆயுதங்கள் இருப்பதை சி.ஐ.ஏ. மணந்து பிடித்துவிட்டது. அவசரப்பட்டு சர்வதேச கடத்தல் நெட்வெர்க்குகளிடம் போனால், சி.ஐ.ஏ.வுக்கு மூக்கில் வியர்த்துவிடும்.

ஒரு வார காலத்தின் பின்னர் இவர்கள் ஆயுதங்களை வெளியேற்ற செய்துகொண்ட ஏற்பாடு, நகாலா துறைமுகத்தின் ஊடாக மற்றுமோர் கப்பல் மூலமாக கடத்துவது அல்ல. துறைமுகத்தில் ஏற்கனவே ஒரு தடவை சறுக்கி விட்டதால், வழமையான கடல் பாதையைத் தேர்தெடுக்காமல், வேறு ஒரு வழியை தேர்தெடுத்தார்கள்.

அந்த வழி – விமானம் மூலம் ஆயுதங்களை மொசாம்பிக்கை விட்டு வெளியே கொண்டு செல்வது.

இதில் தமாஷ் என்னவென்றால், விமானம் மூலம் ஆயுதங்களைக் கடத்துவதில் இவர்களுக்கு பெரிதாக அனுபவம் இல்லை. இதற்குமுன் விமானம் மூலம் ஆயுதம் கடத்தியதும் இல்லை.

இவர்கள் செய்த ஏற்பாட்டின்படி, ஆயுதப் பெட்டிகள் நகாலா துறைமுகத்துக்கு அருகிலிருந்த சரக்கு குடோனில் இருந்து சரியாக ஒரு வாரத்தின்பின், நம்பூலா என்ற இடத்திற்கு தரை மார்க்கமாக ட்ரக் மூலம் அனுப்பப்பட்டது. அங்குள்ள சிறிய சிவிலியன் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கே ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தபடி இரு செஸ்னா 210 ரக விமானங்கள் தயாராக இருந்தன. இதில் ஒரு விமானத்திற்கு வெளியே பெயர் ஏதும் எழுதப்பட்டு இருக்கவில்லை. அது எந்த நிறுவனத்தின் விமானம் என்று தெரியாது. இரண்டாவது விமானத்தில் எழுதப்பட்டிருந்த பெயர் Sky Air Cargo.



இரு விமானங்களிலும் ஆயுதப் பெட்டிகள் ஏற்றப்பட்டன. விமானங்களும் புறப்பட்டு சென்றுவிட்டன. நம்பூலா விமான நிலையம் அருகே, சி.ஐ.ஏ. ஏஜென்ட்டுகள் இருந்து இதையெல்லாம் பார்த்தார்கள். ஆனால், விமானங்கள் புறப்படுவதை யாரும் தடுக்கவில்லை.

இந்த இடத்தில், உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். இவ்வளவையும் தெரிந்துகொண்ட சி.ஐ.ஏ., எதற்காக கடத்தலை தடுத்து நிறுத்தவில்லை? மொசாம்பிக் அரசு உதவியுடன் மடக்கி பிடித்திருக்கலாமே?

செய்ய மாட்டார்கள். அதுதான் ஆபிரிக்க சி.ஐ.ஏ. ஆபரேஷன்.

சிறிய ஆபிரிக்க நாட்டு விடுதலை அமைப்புகளுக்கு ஆயுதங்கள் போய் சேர வேண்டும் என்பது, சி.ஐ.ஏ. ஆபரேஷனின் ஒரு பகுதி. தற்போது, அமெரிக்க சிறையில் இருக்கும் பிரபல ஆயுதக் கடத்தல்காரர் விக்டோர், இந்த ஏரியாவில் ஆயுதம் கடத்திய காலத்தில், அவரது ஒவ்வொரு நடமாட்டத்தையும் சி.ஐ.ஏ. அறிந்து வைத்திருந்தது. (அவை மிகவும் சுவாரசியமான விஷயங்கள். மற்றொரு கட்டுரையில் தருகிறோம்)

ஆபிரிக்க நாடுகளில் ‘கொதிநிலை’ இருக்கும்படி பார்த்துக் கொள்வது, சி.ஐ.ஏ. ஆபரேஷனின் ஒரு பகுதி. அதனால், அங்குள்ள விடுதலை இயக்கங்கள் ஆயுதம் வாங்கும்போதோ, கடத்தும்போதோ, உடனடியாக தடுப்பதில்லை. யாருக்கு எவ்வளவு ஆயுதங்கள் போகின்றன, ஆயுதக் கடத்தல் ரூட் எது என்ற விபரங்களை மட்டும் முழுமையாக தெரிந்து கொள்வார்கள்.

சுருக்கமாக சொன்னால், ஆபிரிக்காவில் சி.ஐ.ஏ. கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பார்கள். ஆனால், பாலைப் பற்றி பசுவுக்கு தெரிந்திராத அனைத்தும் சி.ஐ.ஏ.வுக்கு தெரிந்திருக்கும்.

ஏதாவது ஒரு விடுதலை இயக்கம், அளவுக்கு அதிகமாக ஆயுதங்களை வாங்கி குவிக்கிறது என்று தெரியவந்தால், கடத்தல் செயினை வெட்டி விடுவார்கள். ஆயுத சமநிலை மாறாமல் பார்த்துக் கொள்வதே சி.ஐ.ஏ.வின் வேலை. ஒரு விடுதலை இயக்கங்கத்துக்கு ஆயுதம் சப்ளை செய்ய ஆள் கிடைக்காதபோது, சி.ஐ.ஏ.வே வேறு சானல் ஊடாக ஆயுத விநியோகம் செய்ததுகூட நடந்தது.

இதெல்லாம் ‘வேறு விதமான’ விளையாட்டுகள்

இந்த மொசாம்பிக் விடுதலை இயக்கம் இரு செஸ்னா விமானங்களில் ஆயுதம் கடத்தியதை தடுக்காமல் விட்ட சி.ஐ.ஏ., அந்த ஆயுதங்கள் எப்படி ‘போய் சேர வேண்டியவர்கள்’ கைகளுக்கு போய் சேர்ந்தன என்பதை மட்டும் முழுமையாக தெரிந்து கொண்டார்கள். பிற்காலத்தில் சி.ஐ.ஏ., அந்த ரூட்டிலும் ஒரு கண் வைத்திருக்கலாம் அல்லவா?

சரி. நம்பூலா விமான நிலையத்தில் இருந்து இந்த ஆயுதங்கள் போய் சேர்ந்த ரூட் எது?

உளவு வட்டார தகவல்களில் இருந்து தெரியவந்ததன்படி, இந்த இரு செஸ்னா விமானங்களும் மொசாம்பிக் நம்பூலா ஏர்போர்ட்டில் இருந்து, ஸாம்பியா நாட்டிலுள்ள ன்டோலா (Ndola) என்ற விமான நிலையத்திற்கு போனதாகத் தெரிகிறது. அதன் பின்னர் அங்கிருந்து ட்ரான்ஸ் ஷிப்மென்ட் ஆக ஆபிரிக்காவிலுள்ள பெயர் குறிப்பிடப்படாத நாடு ஒன்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அங்கிருந்து படகுகள் மூலம், ப்ருண்டி மற்றும் ஸயர் (தற்போதைய பெயர் கொங்கோ குடியரசு) நாடுகளிலிருந்து இயங்கும் விடுதலை அமைப்புக்களுக்கு லேக் தன்காயின்கா (Lake Tanganyika) வழியாக போய் சேர்ந்தன.

இந்த ஆயுதங்களை ஏற்றிச் செல்ல நகாலா துறைமுகத்தில் தயாராக நின்ற கப்பல் தான்சேனியா நாட்டவர் ஒருவருக்கு சொந்தமானது. அதில் இந்திய நாட்டுக் கொடி பறக்க விடப்பட்ட காரணம், அது நிஜமாகவே இந்தியாவில் ரிஜிஸ்ட்ரேஷன் செய்யப்பட்ட கப்பல் என்பதால் அல்ல. ஆனால், அந்தக் கப்பல் அடிக்கடி மும்பை துறைமுகம் சென்று வந்துகொண்டிருந்தது.

ஒருவேளை, கப்பல் உரிமையாளரான தான்சேனியா நாட்டவருக்கு, இந்திய கனெக்ஷன் ஏதாவது இருக்கலாம். அது தெளிவாக தெரியவில்லை.

இந்த ஆயுதக் கடத்தல் முடிந்த பிறகு கிடைத்த ஒரேயொரு தகவல் – ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு சென்ற இரண்டு செஸ்னா 210 விமானங்களில் ஒன்று மாத்திரம் 2 நாட்கள் கழித்து மீண்டும் நம்பூலா விமான நிலையத்திற்கு வந்தது. இம்முறை வந்தபோது அதிலிருந்த பொருட்கள் ஆயுதங்கள் அல்ல – பாம்புத்தோல்கள், சந்தனக் கட்டைகள் மற்றும் சில சிறிய பெட்டிகள்.

அந்தச் சிறிய பெட்டிகளில் இருந்தவை வைரங்கள் என்று நம்பப்படுகிறது.

அனுப்பி வைக்கப்பட்ட ஆயுதங்களுக்கு பண்டமாற்றாக, மொசாம்பிக் வரை வந்து சேர்ந்தவை இவை என்றும் ஊகிக்கப்படுகிறது.

ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற விமானத்தில் சரக்கை ஏற்றிய நம்பூலா விமானநிலைய ஊழியர்களை சி.ஐ.ஏ. பின்னர் விசாரித்தபோது, அந்த செஸ்னா விமானத்தினுள் ஏற்றப்பட்ட மரப்பெட்டிகளுக்குள் இருந்த சரக்கு என்ன என்று தமக்கு தெரியாது என்று கூறிவிட்டார்கள். ஆனால், சரக்கு இருந்த மரப்பெட்டிகள் (Crates) மற்றும் அவற்றை சுற்றியிருந்த பொலிதீன் கவர்களில் (shrink wrap) அவை தயாரிக்கப்பட்ட இடம் பல்கேரியா என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததாக கூறியிருக்கிறார்கள்.

இந்த செகன்ட் ஹேன்ட் ஆயுதங்கள் நிஜமாக புறப்பட்ட இடம் (பாயின்ட் ஆஃப் ஒரிஜின்) பல்கேரியா நாடாக இருக்க முடியாது. ஆனால், மொசாம்பிக் விடுதலை அமைப்புக்கு ஆயுத விவகாரங்களில், பல்கேரியாவில் ‘ஏதோ கனெக்ஷன்’ இருப்பதை சி.ஐ.ஏ. தெரிந்து கொண்டது. The End.


படித்தது பிடித்திருந்ததா? தமிழில் அதிகம் வெளிவராத இதுபோன்ற கட்டுரைகள் அதிகம் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறீர்களா? வாசகர்களின் ஆதரவு இருந்தால் தொடர்ந்து தரமுடியும். 


Tuesday, November 12, 2013

ஒரே நாளில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.50 ஆயிரம் கோடி விற்பனை: சீனாவின் புதிய சாதனை

ஒரே நாளில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.50 ஆயிரம் கோடி விற்பனை: சீனாவின் புதிய சாதனை 

ஒரே நாளில் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து சீன ஆன்லைன் கம்பெனி ஒன்று சாதனை புரிந்துள்ளது. 

சீனாவின் புகழ்பெற்ற ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டான ‘டி மால்' நேற்று ஒரேநாளில் ரூ 50 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து புதிய சாதனையை புரிந்துள்ளது. 

நேற்று முன் தினம் நள்ளிரவில் தனது சாதனை முயற்சி விற்பனையை தொடங்கியது டி மால். விற்பனையைத் தொடங்குவதற்காகக் காத்திருந்த மக்கள் உடனடியாக போட்டி போட்டுக் கொண்டு பொருட்களை முன்பதிவு செய்யத் தொடங்கினர். 

இதனால், நேற்று ஒரேநாளில், இந்த ஆன்லைன் வெப்சைட் மூலம், சீனா முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் தேவையானவற்றை வாங்கினர். இதன் மூலம் ஒரே நாளில் ரூ.50 ஆயிரம் கோடிக்கு பொருட்கள் விற்பனை ஆனதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இது சீனா வரலாற்றில் மிகப் பெரும் சாதனையாக கருதப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் ஒரே நாளில் ரூ.30 ஆயிரம் கோடி அளவில் விற்பனை ஆனது தான் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


5 கிமீ நீளத்தில் ஜொலிக்கும் ஐசான் வால் நட்சத்திரம் 28ம் தேதி பார்க்கலாம்

5 கிமீ நீளத்தில் ஜொலிக்கும் ஐசான் வால் நட்சத்திரம் 28ம் தேதி பார்க்கலாம் 




புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மத்திய அரசின் விஞ்ஞான தொழில் பரிமாற்றக் குழு சார்பில் ‘ஐசான்‘ வால் நட்சத்திரம் குறித்த மாநில கருத்தரங்கம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற  கல்பாக்கம் அணுமின்நிலைய விஞ்ஞானி பார்த்தசாரதி, வானியல் நிபுணர் மோகனா ஆகியோர் கூறியதாவது:

ஆண்டுதோறும் ஓரிரு வால் நட்சத்திரங்கள் சூரியனுக்கு அருகில் வருகின்றன. இது அரிய நிகழ்வு. அவற்றை கண்ணால் காண முடியும். கடந்த 400 ஆண்டுகளில் 5000 வால்நட்சத்திரங்களை வானியல் அறிஞர்கள் கண்டு, அதன் வட்டப்பாதையை அறிந்தனர். புதிய வால் நட்சத்திரமான 5 கி.மீ நீளமுள்ள பிரகாசமான ஐசான், வரும் 28ம் தேதி இரவு 11.55 மணிக்கு சூரியனுக்கு மிக அருகில் வருகிறது. அதை வெறும் கண்களால் காணலாம். 29ம் தேதி மாலை வானின் மேற்குப் பகுதியில் பிரகாசமான ஒளியுடன் காண முடியும். டிசம்பர் முதல் வாரம் வரை வெறும் கண்களாலும், தொலைநோக்கி உதவியுடனும் காணலாம். தமிழகத்தில் ஒரு கோடி பேரை ஐசான் வால் நட்சத்திரத்தை காண வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

வரும் 18 முதல் 25ம் தேதி வரை கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சென்னை, நாகை ஆகிய நான்கு இடங்களில் இருந்து ஐசான் குறித்த வேன் பிரசாரம் நடைபெற உள்ளது. பிரசாரக் குழுவில் 20 விஞ்ஞானிகள் இருப்பர்.

Monday, November 11, 2013

முதல்முறையாக பெங்களூரில் அறிமுகமாகும் ஹைபிரிட் வால்வோ பஸ்கள்!

முதல்முறையாக பெங்களூரில் அறிமுகமாகும் ஹைபிரிட் வால்வோ பஸ்கள்!




டீசல் மற்றும் பேட்டரியில் இயங்கும் ஹைபிரிட் வால்வோ பஸ்களை விரைவில் பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகம்(பிஎம்டிசி) சோதனை முறையில் இயக்க உள்ளது. 

சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், அதிக எரிபொருள் சேமிப்பை வழங்கும் வகையில் தொழில்நுட்பம் கொண்ட இந்த பஸ்கள் போக்குவரத்து துறையில் புதிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பம்சம் 

டீசல் எஞ்சினில் பஸ் ஓடிக்கொண்டிருக்கும்போது பேட்டரி சார்ஜ் ஆகும் தொழில்நுட்பத்தை கொண்டது. பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆனவுடன் இந்த பஸ் தானாகவே எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும். பேட்டரியில் சார்ஜ் தீர்ந்துபோகும்போது மீண்டும் டீசல் எஞ்சினில் இயங்க ஆரம்பித்துவிடும்.

சார்ஜ் 

மற்ற எலக்ட்ரிக் தொழில்நுட்பம் போன்று தனியாக சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இதன் பேட்டரி பஸ் ஓடும்போது சார்ஜ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம். பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆவதற்கு 6 முதல் 8 மணி நேரம் பிடிக்கும்.

ரேஞ்ச் 

ஒருமுறை சார்ஜ் ஆனவுடன் 280 கிமீ தூரத்துக்கு பேட்டரி ஆற்றலில் செல்லும். முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த பஸ் இந்தியாவிலேயே முதன்முறையாக பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்பட உள்ளது.

விலை 

ஒவ்வொரு பஸ்சும் ரூ.1.3 கோடி விலை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் மூலம் பிஎம்டிசி.,யின் டீசல் நுகர்வு வெகுவாக மிச்சப்படுத்தப்படும் வாய்ப்பு கிட்டும்.


எரிபொருள் செலவு 

நாட்டின் எரிபொருள் தேவையில் 80 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில், கர்நாடக போக்குவரத்து துறையால் இயக்கப்படும் அரசு பஸ்களுக்கு 54 கோடி லிட்டர் டீசல் பயன்படுத்தப்படுகிறது.

சராசரி மைலேஜ் 

கர்நாடகத்தில் சராசரியாக ஒரு அரசு பஸ் லிட்டருக்கு 4.42 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், விரைவில் இயக்கப்பட உள்ள ஹைபிரிட் டீசல் வால்வோ பஸ்கள் மூலம் எரிபொருள் தேவை ஓரளவு குறையும் என்று 

மிச்சம் 

புதிதாக களமிறக்கப்பட உள்ள பஸ்கள் 30 சதவீத டீசலை மிச்சப்படுத்தும் என்றும், சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆண்களால் சகித்துக் கொள்ள முடியாத 8 விஷயங்கள்!!!

ஆண்களால் சகித்துக் கொள்ள முடியாத 8 விஷயங்கள்!!! 


உலகில் நரகத்தை கூட சகித்துக்கொள்ளும் ஆண்களும் உண்டு, அதே சமயம் ஒரு ஈயின் தொல்லையை கூட சகிக்க முடியாத ஆண்களும் உண்டு. இந்த தொழில்நுட்ப யுகத்தில், ஆண்கள் தங்கள் சகிப்புத்தன்மையை மிகவும் இழப்பவர்களாக உள்ளனர். விளையாட்டு நேரத்தில் மின்வெட்டு ஏற்படுவது போன்ற சிறிய விஷயத்திற்கு கூட அவர்கள் தங்கள் பொறுமையை இழக்கின்றனர். சிலரால் தங்கள் நண்பர்களின் வெற்றியை சகித்துக் கொள்ள முடியாது. அது போல உயர்ந்த கொள்கையுடைய சில ஆண்களால் இலஞ்சம் போன்ற விஷயங்களை சகித்துக்கொள்ள முடியாது. ஒவ்வொருவரும் மாறுபட்டவர்களாக இருப்பதால், அவர்களின் வெறுப்புணர்ச்சியை பாலினத்தை வைத்து கூற இயலாது. 

ஆண்களால் சகித்துக் கொள்ள முடியாத ஒரு சில விஷயங்களாக பொய் பேசுதல், விவாதங்கள், ஒப்பிடுதல், குறைந்த அறிவுள்ள பெண்கள் போன்றவை உள்ளன. ஆண்களால் உடல் ரீதியான அழுத்தங்களை சகிக்க முடிந்தாலும், மனரீதியான அழுத்தங்களை ஏற்படுத்தும் விஷயங்களை சகிக்க முடிவதில்லை. பெண்கள் தங்கள் காதலையும் மற்றும் உறுதிப்பாட்டையும் அடிக்கடி உறுதிப்படுத்திக் கொள்ளவும், அவற்றை பெண்கள் அடிக்கடி உறுதிப்படுத்திக் கொள்வதும் மீண்டும் மீண்டும் நடைபெறும். ஆனால் பொதுவாகவே, ஆண்களால் பெண்களைப் போன்று காதல் சார்ந்த விஷயங்களை மீண்டும் மீண்டும் சகித்துக்கொள்ள முடியாது. 

உன்னதமான உறவுகளில் ஏற்படும் பிரிவு, நேசித்தவர்களால் ஏமாற்றப்படுதல், நேர்மையற்ற நடத்தை போன்றவற்றை ஆண்களால் சகித்துக் கொள்ள முடியாது. ஆண்கள் காதலிலும் உறவுகளிலும் உண்மைவுள்ளவர்கள், அதனால் அவர்களால் ஏமாற்றத்தை தாங்கவே முடியாது. அலுவலகங்களில் ஆண்களால் நீதியற்ற காரியங்களையும் மற்றும் முறையற்ற விஷயங்களையும் ஏற்றுக் கொள்ள இயலாது. நேர்மையற்ற முறையில் பதவி உயர்வு பெறும் தங்கள் நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்பவர்களை ஆண்களால் சகிக்க இயலாது. ஆண்கள் வெறுக்கும் மற்றும் சகிக்க முடியாத சில விஷயங்கள் பின்வருவன:

திருப்தி அளிக்காத வேலை அல்லது தொழில் 

ஆண்கள் தங்கள் கனவுகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற விரும்புகிறார்கள். தங்களுக்கு திருப்தியளிக்க கூடிய வேலையையும், விரும்பும் விஷயங்களையும் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் அது அவர்கள் அனுபவித்து செய்யாததாகவோ அல்லது விருப்பமில்லாமலோ இருந்தாலும், அடிமாடு போல வேலை செய்ய வேண்டியிருந்தாலும் அதனை அவர்களால் வாழ்க்கை முழுவதும் ஏற்றுக் கொள்வது கிடையாது.

அதிகமாக பேசுவது 

ஆண்கள் அதிகமான பேச்சை சகித்துக் கொள்வதில்லை. அது அவர்களுடைய அலுவலக நண்பர்களோடோ அல்லது மனைவியரிடமாக இருந்தாலும். அவர்கள் தங்களுக்கு விருப்பமான தலைப்பில் தான் பேச விரும்புவார்கள். தங்கள் மனைவியடன் இருக்கும்போது தாங்கள் கேட்பதைவிட அதிகம் பேசவே விரும்புவார்கள்.

நேர்மையாக இல்லாதிருத்தல் 

இது பொதுவாக அனைத்து ஆண்களுக்கும் பொருந்தும். ஆண்களால் உண்மையற்ற உறவுகளை, பொய் மற்றும் ஏமாற்றத்தையும் சகித்துக் கொள்ள முடியாது. ஆவர்கள் வழக்கமாக நம்பிக்கையுடன் இருக்கும் மனிதர்களிடம் எளிதில் ஏமாந்து விடுவார்கள். தங்கள் நண்பர்கள் மற்றும் மனைவியிடம் நேர்மை இல்லாதிருப்பதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. அவர்கள் எல்லா காரியங்களிலும் நேர்மையுடன் இருக்கவே விரும்புவார்கள்.

ஏமாற்றுதல் 

தங்களின் திருமணம் அல்லது இதயத்தால் நேர்மை மற்றும் நம்பிக்கையில் உருவாகும் உறவுகளில் வரும் ஏமாற்றத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அவர்களுடடைய உறவு உண்மையானதாக இருந்தால், அதை பாதுகாக்கவும், மதிக்கவும் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லையில்லாதவைகளாக இருக்கும்.

விவாதம் செய்தல் 

உண்மை மற்றும் தகவல்களின் அடிப்படையிலான விஷயங்களைப் பேசவே ஆண்கள் அதிகம் விரும்புவார்கள். உண்மையின் எல்லை மற்றும் தகவல்களை திசைமாற்றும் விவாதங்களை ஆண்கள் விரும்புவதில்லை. விவாதங்களை மோதல்கள் மற்றும் சண்டையை நோக்கி செல்லுவதற்கு முன்னரே உண்மையை அடிப்படையாக கொண்ட முடிவிற்கு கொண்டு செல்ல முயற்சிப்பார்கள்.

திரும்ப திரும்ப செய்தல் 

வேலையோ, வார்த்தையோ எதுவாக இருந்தாலும் அவற்றை மீண்டும் மீண்டும் செய்வதை ஆண்கள் வெறுப்பார்கள். ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்வதை ஆண்கள் சகித்துக் கொள்வதில்லை. ஒரே விஷயத்தை பல தடவைகள் சொல்வதையும் அவர்கள் விரும்புவதில்லை. குறிப்பாக, தங்கள் தங்களுடைய காதல் மற்றும் உறுதிப்பாட்டை திரும்பத் திரும்ப கேட்கும் துணைவியரின் விஷயத்தில் அவர்கள் சகித்துக் கொள்வதில்லை.

ஆரோக்கியமில்லாத உடல்நிலை 

பெரும்பாலான ஆண்கள் சீரான உடல்நிலையையும் மற்றும் பார்க்க பளிச்சென்றும் இருப்பதையே விரும்புவார்கள். இப்படிப்பட்ட ஆண்களுக்கு, தங்களுடைய உடல்நலம் மற்றும் சீரான உடல்நிலையை கவனிக்காத ஆண்களை சகித்துக் கொள்ள முடிவதில்லை. மேலும், தங்களுடைய துணைவியரும் கூட ஊதிப்போன உடலுடன் இருப்பதை விட, எப்பொழுதும் ஆரோக்கியத்துடனும், சீரான உடற்கட்டுடனும் இருப்பதையே விரும்புவார்கள்.

மன அழுத்தம் 

ஆண்கள் அதிகமான வேலைப்பளு மற்றும் தங்களுடைய கனவுகள் அல்லது விருப்பங்களை நிறைவேற்றுவதில் கடினத்தன்மை ஆகியவற்றை எதிர் கொண்டால், அது போன்ற வேலைகளை அவர்கள் சகித்துக் கொள்வதில்லை. ஆண்கள் மேல் ஆரோக்கியமான வேலையையும் மற்றும் முறையற்ற வகையில் திணிக்கப்படும் வேலைப்பளுவையும் சகித்துக் கொள்வதில்லை.


உலக மகா அதிபருடன் கூடவே போகும் குடிசை...

உலக மகா அதிபருடன் கூடவே போகும் குடிசை... 




அமெரிக்க அதிபர் ஒபாமா, வெளிநாடுகளுக்குப் பயணப்படும்போது கூடவே ஒரு குட்டிக் கூடாரத்தையும் அதிகாரிகள் எடுத்துச் செல்கிறார்களாம். 

அதாவது டென்ட் கொட்டாய்தான் அந்த குட்டிக் கூடாரம். இந்தக் குட்டிக் கூடாரம், அதிபர் ஒபாமா ரகசியமாக உட்கார்ந்து ஆலோசனை நடத்துவதற்கும், அமைதியாக விவாதிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறதாம். 

இதை பாதுகாப்பு கருதி ஒபாமா பயணங்களின்போது அமெரிக்க அதிகாரிகள் பயன்படுத்துகிறார்களாம். இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்கள் கசிந்துள்ளன.

ஹோட்டலுக்குப் பக்கத்தில் 

இந்த கூடாரமானது, ஒபாமா தான் போகும் வெளிநாடுகளில் அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அருகில் அமைக்கப்படுகிறதாம். அதில்தான் அவர் பெரும்பாலும் முக்கிய ஆலோசனைகளை நடத்துவதிலும், புத்தகம் படிப்பதிலும் கழிப்பாராம்.

முக்கிய விவாதங்கள் இங்குதான் 

அதேபோல முக்கிய விவாதம் ஏதாவது நடத்த வேண்டியிருநதால், ஹோட்டல் அறையிலிருந்து இந்தக் கூடாரத்திற்கு இடம் பெயர்ந்து விடுவாராம். ரகசியக் கேமராக்கள், ஒட்டுக் கேட்புக் கருவிகள் ஆகியவற்றின் அபாயங்களிலிருந்து தப்பிக்கவும் இந்த உபாயமாம்.

நேச நாடுகளுக்குப் போனாலும் இப்படித்தான் 

அன்னிய நாடுகளுக்குப் போகும்போது மட்டுமல்லாமல் மிகவும் நேசமான நாடுகளுக்குப் போனாலும் கூட இந்தக் கூடாரத்தையும் தூக்கிக் கொண்டு போய் விடுகிறார்களாம். யாரையும் நம்புவதில்லையாம் அமெரிக்க அதிகாரிகள்....

யாரா இருந்தா என்ன 

இதுகுறித்து அமெரிக்க மத்திய உளவுப்பிரிவின் இயக்குநரான ஜேம்ஸ் உல்ஸி என்பவர் கூறுகையில், இப்போதெல்லாம் யாரையும் நம்ப முடியாது. எனவே அதிபரின் பாதுகாப்பு, ரகசியங்களைக் காப்பது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தர வேண்டியுள்ளது. எனவேதான் இந்த கூடார யோசனையை அமல்படுத்தியுள்ளோம் என்றார். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி கடைசியில் குடிசைக்கு வந்துதான் ஆக வேண்டும் போல...  


கூகுளில் எச்சிரிக்கை தேவை !

கூகுளில் எச்சிரிக்கை தேவை !


இணையத்தில் சிறந்து விளங்கும் கூகுள் அது தன் வாடிக்கையாளர்களை கவர பல யுத்திகளை தினமும் கையாண்டு வருகிறது இதன் முலம் அதன் யூஸர்ஸ் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து வருகிறது.மேலும் கூகுள் தன் வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை வழங்க கூகுள் பிளே ஸ்டோர் அமைத்து, அதில் ஒரு மல்லியனுக்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களைக் கொண்டு தற்பேது செயல்பட்டு வருகிறது.

இது பெரும்பாலும் ஆண்ட்ராய்டு மொபைலுக்கு பொருந்தும் வண்ணமே இதன் அனைத்து அப்ளிகேஷன்களுமே இருக்கும் நண்பரே, இதற்கு காரணம் ஆண்ட்ராய்டு உலக மொபைல் சந்தையை ஆக்கிரமித்து இருப்பது தான் காரணம்.இதனால், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் அதிக அளவில் டவுண்லோட் செய்யப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இதில் சில அப்ளிகேஷன்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளதாக, ஆன்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தயாரித்து வழங்கும் செமாண்டெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது சென்ற ஏழு மாதங்களில் மட்டும் ஏறத்தாழ 1,200 அப்ளிகேஷன்கள் இது போல உள்ளதனை இந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. எனவே, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அப்ளிகேஷன்களை டவுண்லோட் செய்திடும் முன் சற்று கவனத்துடன் அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என செமாண்டெக் நிறுவனம் அறிவித்துள்ளது

எரிபொருள் தீர்ந்து போன சாட்டிலைட் இன்று பூமியில் மோதுகிறது

எரிபொருள் தீர்ந்து போன சாட்டிலைட் இன்று பூமியில் மோதுகிறது 


எரிபொருள் தீர்ந்து போனதால், ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் செயற்கைக் கோள்களில் ஒன்று இன்று பூமியில் மோதவுள்ளது. 

பூமியில் மனித நடமாட்டமே இல்லாத ஒரு இடத்தில் இது வந்து விழும் என்று ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

அனேகமாக இது கடல் அல்லது துருவப் பிரதேசத்தில் விழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்கைக் கோளின் பெயர் ஜோஸ். இது கீழே வரும்போது முற்றிலும் உருக்குலைந்த நிலையில்தான் வருமாம். கீழே வந்து விழும்போது அதன் துண்டுகள்தான் நமக்குக் கிடைக்கும். 

அதுவும் 90 கிலோ அளவுக்குத்தான் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

கடந்த 2009ம் ஆண்டு இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டது.