Thursday, August 23, 2012

இரகசியத் தகவல்களை கண்டறியும் புதிய மென்பொருள்

இரகசியத் தகவல்களை கண்டறியும் புதிய மென்பொருள்



சுவிட்சர்லாந்தில் லாசேனில் உள்ள மத்திய தொழில் நுட்பக்கல்லூரியின் ஆய்வாளர்கள், தவறான தகவல், வைரஸ் போன்றவற்றை இணையதளத்தில் பரவும்போது அவற்றின் மூலாதாரத்தை அறிவதற்கான வழிமுறைகளைக் கொண்ட மென் பொருளை கண்டறிந்துள்ளனர்.

இந்த மென்பொருள், வைரஸ் மூலங்களைக் கண்டுபிடிக்க உதவுகின்றது. ஒரு தகவல் வதந்தியாகப் பரவி வந்தாலும், பின்னோக்கிப் பயணித்து முதலில் அத்தகவல் எவரிடமிருந்து வெளியாயிற்று என்பதைக் கண்டுபிடிக்கும்.

இதனால் இம்மென்பொருள் புலனாய்வு அதிகாரிகளுக்கு "மதிப்பு மிகு கூட்டாளியாக" விளங்கும் என்று ஆய்வாளர் பெட்ரோ பிண்ட்டோ தெரிவித்தார்.

இந்த மென்கலம் பலமுறை பரிசோதனைக்கு பிறகு உருதிபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 2001 செப்டம்பர் 11 ம் திகதி அன்று உலக வர்த்தக மையத்தில் நடந்த தாக்குதலுக்கான திட்டமிடல் குறித்த விபரங்களை, இந்த மென்பொருளின் உதவியுடன் தேடியபோது மூன்று பேரை சந்தேகத்துக்கு இடமானவர் என காண முடிந்தது.

இம் மூவருள் ஒருவர் தான் இந்த வன்முறைத் தாக்குதலுக்கான குழுத்தலைவர் என்பது உறுதியாகியுள்ளது.

இனிமேல் பேஸ்புக்கில் அழிக்கப்படும் படங்கள் சேர்வரிலிருந்து முற்றிலுமாக நீக்கப்படும்



இனிமேல் பேஸ்புக்கில் அழிக்கப்படும் படங்கள் சேர்வரிலிருந்து முற்றிலுமாக நீக்கப்படும்


 

பேஸ்புக்கில் நீங்கள் சேமித்து வைக்கும் படங்களை அழித்த பின்னரும் அதன் நேரடி யூ.ஆர்.எல் தெரிந்திருந்தால் அவற்றை யார் வேண்டுமானாலும் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கு காரணம் பேஸ்புக் Profile-ல் படங்களை நீங்கள் அழித்து விட்ட பின்னரும் கூட அவை பேஸ்புக் சேர்வரில் நீக்கப்படாமல் இருப்பதே.

இதற்கு தீர்வாக இனிமேல் நீங்கள் அழித்துவிடும் படங்கள் பேஸ்புக் சேர்வரிலிருந்து முற்றாக நீக்கப்பட்டுவிடுமென தெரிவித்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.

மேலும் அப்படங்களின் நேரடி முகவரி தெரிந்திருந்தாலும் அவற்றை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


உடலுக்கு கெடுதலை விளைவிக்கும் கொசுவர்த்தி சுருள்


உடலுக்கு கெடுதலை விளைவிக்கும் கொசுவர்த்தி சுருள்

வீட்டை எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும், கொசுக்கள் மட்டும் எங்கிருந்து தான் வருகிறதோ தெரியவில்லை. அவ்வாறு கொசுக்கள் வருவதால் இரவில் நன்றாக தூங்க முடியாமல் அவஸ்தைபடுகிறோம்.

இந்த அவஸ்தையை நீக்க கடைகளில் கொசுக்களை விரட்ட விற்கப்படும் கொசுவர்த்தி, மேட், கிரீம் போன்ற பொருட்களைப் பயன்படுத்துகிறோம்.


அவ்வாறு அவற்றை பயன்படுத்துவதால் நம் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும் ஒரு கொசுவர்த்தி சுருளில் இருந்து வரும் புகை, 100 சிகரெட்களுக்கு சமம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் அந்த ஆய்வில் கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் பொருட்களில் கொசுக்களை அழிக்கும் கெமிக்கலான அலெத்ரின்(alletrin) இருக்கிறது.


இது கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை, நமது நுரையீரல்களையும் அழிக்கிறது. ஏனெனில் அதனை இரவில் தூக்கும் போது அதிகம் சுவாசிப்பதால், நமது உடலில் நல்ல ஆக்ஸிஜன் செல்வது தடைபட்டு, மாசுபட்டிருக்கும் காற்றை சுவாசிப்பதால் நுரையீரலில் அந்த காற்று அடைபட்டு நுரையீரலின் அரையை பாதிக்கிறது.


சிலர் கொசுக்களுக்கு பயந்து மாலை நேரத்தில் இருந்தே வீட்டு ஜன்னல்கள், கதவுகள் என்று அனைத்தையும் அடைத்து விட்டு இந்த கொசு விரட்டிகளை போட்டுவிடுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், அவ்வாறு அடைத்து விடுவதால் வீட்டில் சமைக்கும் போது வரும் புகை, இந்த கொசு விரட்டிகளால் வரும் புகை என்று வீட்டில் நல்ல காற்றை விட, அசுத்தமான காற்று இருப்பதால் அவற்றை சுவாசிக்கும் போது அந்த கொசு விரட்டிகளில் உள்ள விஷம் உடலில் வந்துவிட்டது என்பதற்கு அறிகுறியாக முதலில் சளி, காய்ச்சல் என்று ஆரம்பிக்கும்.


இவை மூன்று நாட்கள் நீடித்தால் அதனை அலர்ஜி என்று முடிவு செய்து அதற்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு ஒரு நோயாளியாக நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம்.

பின்னர் அந்த நிலை சற்று படிப்படியாக முன்னேறியதன் அறிகுறியாக உடலில் ஆஸ்துமா என்னும் நோய் வந்து விடுகிறது. சில பிறந்த குழந்தைகள் அந்த மேட் புகையை சுவாசித்தால், வலிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று லக்னோ கிஸ் ஜோர்ஜின் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் அந்த புகையை சுவாசிப்பதால் சிலசமயங்களில் சிலருக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்த வல்லது என்றும், கொசு விரட்டியில் உள்ள டயோக்சின் புற்றுநோயை உருவாக்க வல்லது என்றும் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.

செவ்வாய் கிரகத்திற்கு மீண்டும் விண்கலம் அனுப்பும் முயற்சியில் நாசா


செவ்வாய் கிரகத்திற்கு மீண்டும் விண்கலம் அனுப்பும் முயற்சியில் நாசா



செவ்வாய் கிரகத்தை ஆராய மீண்டும் விண்கலம் அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா முடிவு செய்துள்ளது.

முன்னதாக கடந்தாண்டு செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய கியூரியாசிட்டி ரோவரை அமெரிக்கா அனுப்பியது.

அத்திட்டம் வெற்றிகரமாக அமைந்ததையடுத்து, இன்சைட் என்ற அடுத்த திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது.


செவ்வாயின் மேற்பரப்பு குறித்தும், அதன் தள அமைப்பு பூமியைப் போல தகடுகளால் அமையாதது ஏன் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதன் மூலம் பூமிக்கு அடியில் எப்படி புவித் தகடுகள் அமைந்தன என்பதையும் கூடத் தெரிந்து கொள்ள முடியும்.

செவ்வாய் கிரகம் பற்றி இதுவரை நமக்குத் தெரியாத பல விஷயங்களை இன்சைட் திட்டம் தெளிவுபடுத்தும் என்றும் நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

நிக்கோன் அறிமுகப்படு​த்தும் முதலாவது அன்ரோயிட் கமெரா


நிக்கோன் அறிமுகப்படு​த்தும் முதலாவது அன்ரோயிட் கமெரா




மக்கள் மனம் வென்ற உற்பத்திகளை சந்தைகளில் அறிமுகப்படுத்திவரும் நிக்கோன் நிறுவனமானது, தற்போது முதலாவது அன்ரோயிட்டினை அடிப்படையாகக் கொண்ட Coolpix S800c என்ற கமெராவினை அறிமுகப்படுத்துகின்றது.

இக்கமெராவில் GPS வசதி காணப்படுவதுடன், 16 மெகாபிக்சல்கள் உடைய BSI CMOS சென்சாரினையும் கொண்டுள்ளது.





தவிர 10x என்ற உருப்பெருக்கம் கொண்ட வில்லைகள் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் 3.5 அங்குல அளவுகொண்ட OLED WVGA தொடுதிரை வசதி, 1080p வீடியோ பதிவு, Android 2.3 போன்றவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

4GB சேமிப்பு வதியும் கொண்டு இக்கமெராவின் பெறுமதி 350 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

Wednesday, August 22, 2012

பிரிட்டன் கோடீஸ்வரரில் இந்தியர்கள் 22 சதவீதம்



பிரிட்டன் கோடீஸ்வரரில் இந்தியர்கள் 22 சதவீதம்



பிரிட்டனில் வசிக்கும் 15 மெகா பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பில் இந்தியர்கள் 22 சதவீதத்தை கொண்டுள்ளனர். ரஷ்யர்கள் முதலிடத்தில் இருக்கின்றனர். சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டுள்ள வெல்த்,எக்ஸ் குழுமம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. பிரிட்டனில் வசிக்கும் 15 மெகா பணக்காரர்கள் பட்டியலை வெல்த்,எக்ஸ் வெளியிட்டது. இதில் இந்தியரான ஸ்டீல் தொழில் ஜாம்பவானான ஆர்சிலர் மிட்டல் நிறுவன தலைவர் லட்சுமி மிட்டல் 1,580 கோடி டாலர் (டாலர் 55) செல்வ வளம் கொண்டவராக இரண்டாமிடத்தை வகிக்கிறார்.

ரஷ்யாவைச் சேர்ந்த தொழிலதிபரும், இங்கிலிஷ் கால்பந்து கிளப் பங்குதாரருமான பர்கனோவிச் உஸ்மனோவ் 1,640 கோடி டாலர் சொத்துகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். இந்தியாவை சேர்ந்த இந்துஜா சகோதரர்கள் 760 கோடி டாலர் சொத்துடன் 9வது இடத்திலும், ஸ்ரீசந்த் குழுமத்தைச் சேர்ந்த கோபிசந்த் 600 கோடி டாலருடன் 12வது இடத்தையும் வகிக்கின்றனர். பிரிட்டனின் டாப் 15 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 13,330 கோடி டாலர். இதில் 3 இந்தியர்களின் சொத்து மட்டும் 22 சதவீதமாக உள்ளது.

 
RANK NAME     Value (US $ Billion)
1 Alisher Burkhanovich Usmanov              16.4
2 Lakshmi Niwas Mittal                15.8
3 Roman Abramovich              12.1
4 Duke of Westminister, Gerald Cavendish Grosvenor              11.1
5 Leonard Valentinovich Blavatnik                9.5
6 John Fredrikesen                9.3
7 Hans Rausing                9.1
8 Willard Gordon Galen Weston                 8.4
9 Srichand Hinduja                 7.6
10 Charlene de Carvalho-Heineken                6.9
11 Nicholad Oppenheimer                6.8
12 Gopichand Hinduja                6.0
13 Sir Richard Branson                5.0
14 David Reuben                4.7
15 Earl Cadogan Charles Cadogan                 4.6





Wealthx Exclusive Intelligent report

Tuesday, August 21, 2012

அழிந்துவரும் அரியலூர் ஆழ்கடல் படிமங்கள்


அழிந்துவரும் அரியலூர் ஆழ்கடல் படிமங்கள்



 




கடந்தகாலத்தில் அரியலூர் பகுதி ஆழ்கடலுக்குள் மூழ்கியிருந்தபோது அங்குவாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் பாசில்ஸ் எனப்படும் அரியவகை தொல்படிமங்கள் அந்த பகுதியின் சிமெண்ட் தொழிற்சாலைகளால் அழிந்துவருவதாக கவலைகள் அதிகரித்துவருகின்றன.

தமிழ்நாட்டின் வறட்சியான மாவட்டங்களில் ஒன்றாக பரவலாக பார்க்கப்படும் இன்றைய அரியலூர் மாவட்டத்தின் பெரும்பகுதி கிரேடேஷியஸ் யுகத்தில் (அதாவது 65 முதல் 146 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) கடலுக்கடியில் முழ்கியிருந்தது என்பது பலருக்கும் பெரிதும் தெரியாத செய்தி.

ஆனால் உலகின் பல நாடுகளைச்சேர்ந்த புவியியல் நிபுணர்கள் மத்தியில் அரியலூரில் கிடைக்கும் ஆழ்கடல்வாழ் உயிரினங்களின் பாசில்ஸ் எனப்படும் படிமங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிலவியல் மற்றும் கடலியல் நிபுணர்கள் இந்த படிமங்களை கண்டறிவதிலும், வகைப்படுத்துவதிலும், ஆராய்வதிலும் ஈடுபட்டுவருகிறார்கள்.

அதேசமயம், அரியலூரில் செயற்பட்டுவரும் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருளை வெட்டியெடுக்கும்போது இந்த அரியவகை படிமங்களும் அழிவதாக கூறப்படுகிறது.

புதிய வேகத்தை எட்டும் ஹைபர்சானிக் விமானத்தின் முயற்சி தோல்வி


புதிய வேகத்தை எட்டும் ஹைபர்சானிக் விமானத்தின் முயற்சி தோல்வி


 


ஒலியை விட ஆறு மடங்கு விரைவாக பறக்கக்கூடிய வல்லமை கொண்டது என்று கூறப்பட்ட ஒரு ஹைபர்சானிக் விமானம் பரிசோதனை ஓட்டத்தின்போது பசிஃபிக் பெருங்கடலில் விழுந்துள்ளது.

அமெரிக்க படையினரின் பயன்பாட்டுக்காக சோதிக்கப்பட்ட அந்த வேவ்ரைடர் விமானத்தால் ஒலியை விட ஆறு மடங்கு வேகத்தை எட்ட முடியவில்லை.

வேவ்ரைடர் விமானத் திட்டத்தில் இது இரண்டாவதாக ஏற்படும் தோல்வியாகும்.

கடந்த ஆண்டும் இதே போன்ற ஒரு சோதனை முயற்சி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வேவ்ரைடர் விமானம் புறப்பட்ட 31 விநாடிகளில் அது பசிஃபிக் கடலுக்குள் விழுந்தது.




பி 52 போர் விமானத்தில் இறக்கையில் இணைக்கப்பட்ட இந்த வேவ்ரைடர், 50,000 அடி உயரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ஒரு ராக்கெட் உதவியுடன் உந்தி செலுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

அப்படி உந்திச் செலுத்தப்பட்ட வேவ்ரைடர் பின்னர் மணிக்கு 3,600 கிலோ மீட்டர் என்கிற வேகத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த வேகத்தை அடையாமல் கட்டுப்பாட்டை இழந்து அது கடலில் விழுந்து நொறுங்கியது.

அடுத்த தலைமுறை ஏவுகணைகளை தயாரிக்க இந்த அளவுக்கு ஹைபர்சானிக் வேகம் தேவை என்று அமெரிக்க படைத்துறை தெரிவித்துள்ளது.

இந்த அதியுயர் தொழில்நுட்பத்துக்காக அமெரிக்க இரண்டு பில்லியன் டாலர்களை செலவழித்ததாக் கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தை அமெரிக்கா எந்த அளவுக்கு முக்கியம் வாய்ந்ததாக கருதுகிறது என்பதை இது எடுத்துரைக்கிறது.

இந்த தொழில்நுட்பம் வெற்றி பெறுமாயின், தயாராகும் புதிய விமானங்களில் லண்டன்- நியூயார்க் இடையே பயணிக்க வெறும் ஒரு மணி நேரமே ஆகும்.


உயிரணுவை ஸ்டாக் வைக்கும் பாம்பு


உயிரணுவை ஸ்டாக் வைக்கும் பாம்பு




பொதுவாக எந்த ஒரு உயிரினமும் கலவி யில் ஈடுபட்டு ஆணின் உயிரணு மூலமாக கருத்தரிப்பதே இயற்கை. ஆனால் இதற்கு முரணாக சிலவகை பல்லிகள், பாம்புகள் போன்றவை ஆணின் உயிரணு இல்லாமல் - அதாவது, கலவியில் ஈடுபடாமலேயே கருத்தரிப்பதுண்டு. இதனை வெர்ஜின் பர்த் என்பார்கள். ஆனால், இதையும் தாண்டி இன்னொரு விநோதமான கர்ப்பத்தை சமீபத்தில் கண்டறிந்திருக்கிறது விஞ்ஞான உலகம். ஆம், கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்திலிருந்து பிடிக்கப்பட்ட ஒரு வகை விரியன் பாம்பு, தற்போது 19 குட்டிகளை ஈன்றுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த ஐந்து வருடங்களாக தனித்து வைக்கப்பட்டிருந்த இந்தப் பாம்பு, எந்த ஒரு ஆண் பாம்புடனும் உறவு கொண்டிருக்கவில்லை.

பிறகெப்படி கரு உண்டானது என்று ஆராயக் கிளம்பினார்கள், வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். முதலில், ஆணின் உயிரணு இல்லாமல் கருத்தரிக்கும் ‘வெர்ஜின் பர்த்’தாகத்தான் இது இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், பிறந்திருக்கும் குட்டிகளை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, தாய்ப் பாம்பின் டி.என்.ஏவோடு இன்னொரு ஆண் பாம்பின் டி.என்.ஏவும் அவற்றிடம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. அப்படியென்றால் ஆண் பாம்பின் உயிரணு இல்லாமல் குட்டிகள் பிறக்க வில்லை. அந்த உயிரணு எங்கிருந்து வந்தது என்று ஆராய்ந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்போதுதான் பல புதிய தகவல்கள் கிளம்பியுள்ளன. அதாவது, குறிப்பிட்ட அந்த விரியன் பாம்பு, ஒரு முறை ஆண் பாம்போடு உறவு கொண்டால் போதும்.

ஆணின் உயிரணுவை பல நாட்களுக்கு தன் உடலிலேயே பாதுகாப்பாக ஸ்டாக் வைத்துக் கொள்ளும் திறன் அதற்கு இருக்கிறது. அதன்பின் எப்போது தனக்கு கருத்தரிக்க ஆர்வம் இருக்கிறதோ, அப்போது கருவை அதுவே உருவாக்கிக் கொள்கிறது. கிழக்கு டயமன்ட் பேக் விரியன் என்று அழைக்கப்படும் இந்த ஒரு வகைப் பாம்புதான் இப்படியா? இல்லை, இன்னும் நிறைய விலங்குகள் இந்த ஸ்டாக் முறையைப் பயன்படுத்துகின்றனவா என்பது தெரியவில்லை. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மேல் ஆணின் உயிரணுக்களை அழிந்து போகாமல் வீரியத்தோடு, உடலின் எந்த இடத்தில் வைத்து, எப்படி இவை பாதுகாக்கின்றன என்பதும் புதிராகவே இருப்பதாகச் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து


பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து


 

உண்மைதான்... பனி உருவத்தில் பெரிதாகி, கடலில் மிதந்து கொண்டிருந்தால் பலரது உயிரையும் காவு வாங்கிவிடும். 1912ல் உற்சாகமான முதல் பயணத்தைத் தொடங்கிய டைட்டானிக் கப்பலுக்கு எமனாக நகர்ந்து வந்தது ஒரு பனிக்கட்டிப்பாறைதான். மரங்களாலும், இரும்பினாலும், இன்னபிற வலுவான பொருட்களாலும் உருவாக்கப்பட்ட அந்த மெகா கப்பலை, வெறும் தண்ணீரால் மட்டுமே ஆன பனிப்பாறை ஆட்டம் காணச் செய்தது. 1517 பேரை சாகடித்தது. இந்த அளவு அசாத்திய சக்தி கொண்ட பனிப்பாறைகள் பூமிப்பந்தின் சில இடங்களில் கடலாகவே விரிந்து கிடக்கின்றன.

 

வடதுருவத்தின் ஆர்க்டிக் கடல் நிரந்தரமாக ஐஸ் கட்டிகளால் மூடப்பட்டிருக்கிறது. தென்துருவத்தின் அன்டார்க்டிகாவிலும் ஐஸ்... ஐஸ்தான். இந்த ஐஸ் பாறைகளின் பருமன் மட்டுமே 6 ஆயிரத்து 500 அடி. இவை எல்லாம் உருகிவிடுவதாகக் கற்பனை செய்யும்போதே விஞ்ஞானிகளுக்கு நடுக்கம் வந்துவிட்டது. உலகின் கடல் மட்டமே 180 அடி அதிகரித்துவிடும் என்பதுதான் காரணம். பூமி வெப்பநிலை உயராமல் பார்த்துக்கொள்வது நம் கடமை என சுற்றுச்சூழலாளர்கள் வாய் ஓயாமல் கத்துவதற்கும் இதுவே காரணம்.


செயற்கை விழித்திரை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை


செயற்கை விழித்திரை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை



கண் பார்வையற்றவர்களுக்காக செயற்கை விழித்திரையை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். உலகம் முழுவதும் 2 கோடியே 50 லட்சம் பேர் கண் பார்வையின்றி தவிக்கின்றனர். எனவே செயற்கையான முறையில் விழித்திரையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கண் பார்வையற்ற எலிக்கு செயற்கையாக தயாரிக்கப்பட்ட அதிநவீன லென்சுடன் கூடிய விழித்திரை பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

இதன் மூலம் பார்வை கிடைத்த எலி துள்ளிக் குதித்து விளையாட ஆரம்பித்தது. எனவே இதே தொழில்நுட்பத்தை மனிதர்களுக்கும் பயன்படுத்தி அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் மனிதர்களிடம் இச்சோதனை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளனர்.




முதுமைத் தோற்றம் ஆரம்பிச்சுடுச்சா?


முதுமைத் தோற்றம் ஆரம்பிச்சுடுச்சா?




இந்த உலகில் பிறந்த அனைவரும் எப்போதும் இளமையோடு இருக்க முடியாது. ஆனால் முற்காலத்தில் வாழ்ந்த மக்கள் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்டதால், அவர்கள் நீண்ட நாட்கள் இளமையோடு வாழ்ந்தனர். தற்போதோ மக்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுகளை உண்பதால், அவர்கள் 30 வயதிலேயே முதுமை தோற்றத்தை அடைகின்றனர். அதிலும் முகத்தில், கழுத்தில் சுருக்கங்கள், கோடுகள் போன்றவை காணப்படுகின்றன. அவ்வாறு தோற்றமளிக்க ஆரம்பித்தால், கவலைப்படாமல் ஒரு சில உணவுகளை உண்டாலே அந்த தோற்றத்தை தடுக்கலாம். அத்தகைய உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு அதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், முதுமைத் தோற்றத்தை தள்ளிப் போடலாம்.

ப்ளு பெர்ரிஸ் 



இந்த பழம் மிகவும் சிறந்த முகச்சுருக்கத்தை தடுக்கும் பழம். ஏனெனில் இதில் உள்ள ஆன்தோசைனோசைடு, முதுமை தோற்றத்தை ஏற்படுத்தும் முகச்சுருக்கம், பார்வை குறைவு போன்றவற்றை தடுக்கிறது. மேலும் இதில் 40% ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதல் இருக்கும் வைட்டமின் சி, உடலில் இருக்கம் கொலாஜென் உருவாக்கத்தை உறுதிப்படுத்துவதால், முதுமையை தடுக்கிறது.

தக்காளி 



இது மற்றொரு சிறந்த உணவுப் பொருள். இதனை உண்பதால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும். மேலும் இதன் ஜுஸை முகத்திற்கு தடவி வந்தால், முகமானது பளபளப்புடன் இருக்கும். ஏனென்றால் தக்காளியில் இருக்கும் லைக்கோபீன் என்னும் கெமிக்கல், முகத்தில் தோன்றும் கோடுகளை தடுப்பதோடு, செல்கள் பாதிப்பு மற்றும் சரும தோற்று நோய்கள் வராமலும் தடுக்கும்.

மீன் எண்ணெய்



கடலோரப் பகுதிகளில் வாழும் பெண்கள் இளமையோடு காட்சியளிக்க காரம் என்னவென்று தெரியுமா? ஏனேனில் மீன் மற்றும் மீன் எண்ணெயை அவர்கள் தினமும் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால், சருமம் இறுக்கமடைந்து அளமை தோற்றதை அளிக்கிறது. அதிலும் குளிர்ந்த தண்ணீரில் வாழும் சாலமன், டுனா போன்ற மீனில் அதிகமான அளவு ஒமேகா 3 ஃபேட்டி ஆஸிட் இருப்பதால், சருமத்திற்கு தேவையான எண்ணெய் பசை கிடைப்பதோடு, சுருக்கங்களும் மறையும்.

கிரீன் டீ 



பானங்களில் கிரீன் டீ மிகவும் ஆரோக்கியமானது. கிரீன் டீ குடிப்பதால் செரிமானத் தன்மை சரியாக நடப்பதோடு, உடல் எடையும் குறைந்து, முகச்சுருக்கமும் குறையும். முக்கியமாக முகச்சுருக்கம் வருவதற்கு டி.என்.ஏ பாதிப்பும் ஒரு காரணமாகும். இந்த டி.என்.ஏ பாதிப்பை கிரீன் டீ தடுக்கும். எனவே தினமும் ஒரு கப் கிரீன் டீ குடித்தால், முகம் அழகாக சுருக்கம் இல்லாமல் இருப்பதோடு, கூந்தல் உதிராமல், எடை குறைந்து ஸ்லிம்மாக அழகாக இருக்கலாம்.

சாக்லேட்



சாக்லேட் ஃப்ளேவர் மிகவும் பிடிக்கும் என்றால் அந்த சாக்லேட் ஃப்ளேவர் சாப்பிடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. சாக்லேட் சாப்பிட்டால், அதில் இருக்கும் கொக்கோ என்னும் பொருள், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, சரும வறட்சி நீங்கி, சருமம் மென்மையாவதோடு, சுருக்கம் ஏற்படாமல் இளமை தோற்றத்தை தரும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆகவே தினமும் ஒரு சாக்லேட் சாப்பிடுங்க, இளமையோடு இருங்க.

மேற்கூறிய உணவுப் பொருட்களையெல்லாம் சாப்பிட்டால், முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம். அதுமட்டுமல்லாமல், தினமும் அதிக அளவு தண்ணீர் குடித்தாலும் சருமத்தில் சுருக்கும் ஏற்படுவதை தடுக்கலாம்.




குட்டிப்பாப்பாவுக்கு பசும்பால் கொடுக்கறீங்களா?


குட்டிப்பாப்பாவுக்கு பசும்பால் கொடுக்கறீங்களா?


 


பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காமல் பசுவின் பால் கொடுப்பது நல்லதல்ல என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பாலில் உள்ள புரதச்சத்து குழந்தைகளின் சிறுநீரகத்தை பாதிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தாய்ப்பால்தான் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்ற ஊட்டச்சத்து மிக்க உணவு. ஆறுமாதம் வரை தாய்ப் பால் மட்டும் குடித்து வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று குழந்தை நல நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தாய்ப்பாலுக்குப் பதிலாக பலரும் பசுவின் பாலை குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு ஜீரணம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் என்பது நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

பசுவின் பாலில் அதிகளவு புரதச்சத்து உள்ளது. இந்தப் புரதச்சத்து, குழந்தைகளின் சிறுநீரகம் உரிய வளர்ச்சியைப் பெறாத நிலையில் இருக்கும் என்பதால் அவற்றில் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று தேசிய குடும்ப நல சர்வேயில் தெரியவந்துள்ளது.

தாய்ப்பாலில் குறைந்த அளவு கலோரிகளும், புரதச்சத்தும் உள்ளது. இதனை குடித்து வளரும் குழந்தைகள் வளர்ச்சி சராசரியாக இருக்கும். அதேசமயம் பசுவின் பாலில் தாய்ப்பாலை விட மூன்று மடங்கு புரதச்சத்தும், கொழுப்பும் அதிகமாக உள்ளது. இதனால் உடல் பருமன் சட்டென்று அதிகரிக்கும் என்கின்றனர். பெரியவர்களுக்கும், வளர்ந்த குழந்தைகளுக்கும் பசுவின் பால் நன்மை தரலாம் அதேசமயம் பிறந்த குழந்தைகளுக்கு இது ஏற்றதல்ல என்பதே நிபுணர்களின் அறிவுரை.

பசுவின் பால் கொடுப்பதனால் குழந்தைகளுக்கு ஜீரணமாகாமல் வாந்தி எடுத்துவிடும். வயிற்றுப்போக்கு ஏற்படும். வயிறு வலியால் அவதிப்படும். உதடு, வாய், தொண்டை போன்றவைகளினால் எரிச்சல் ஏற்படும். சளித் தொந்தரவுகள் ஏற்படும். தோல் அரிப்பு போன்றவைகளும் ஏற்படும் என்றும் எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

எனவே உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில், தாய்மார்கள் இதுகுறித்து குடும்ப மருத்துவரைக் கலந்து ஆலோசித்து மாற்று வழி காண வேண்டுமே தவிர பசுவின்பாலைத் தரக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.

டார்க் சாக்லேட் இதயத்திற்கு மட்டுமல்ல மூளைக்கும் நல்லது : ஆய்வில் தகவல்


டார்க் சாக்லேட் இதயத்திற்கு மட்டுமல்ல மூளைக்கும் நல்லது : ஆய்வில் தகவல்




வயதானவர்கள் டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் இதயம் தொடர்பான நோய்கள் வராது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதேசமயம் டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்பாக செயல்படுவதோடு மறதிநோய் ஏற்படாமல் தடுக்கும் என்கின்றன சமீபத்திய ஆய்வு முடிவுகள். தினசரி சிறிதளவு டார்க் சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கிறதாம். இதற்கு காரணம் இதில் உள்ள ப்ளேவனாய்டுகள், சாக்லேட்டில் உள்ள கோகோவும் மூளையின் சுறுசுறுப்பு திறனை அதிகரிக்கிறதாம்.

ப்ளேவனாய்டுகள் கோகோ, ரெட் ஒயின், திராட்சை, ஆப்பிள், டீ போன்றவைகளில் காணப்படுகின்றன. லேசான ஞாபகமறதி நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 90 வயது முதிர்ந்த நபர்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ப்ளேவனாய்டுகள் அடங்கிய உணவுப்பொருட்கள் 8 வாரங்களுக்கு கொடுக்கப்பட்டன. இதனையடுத்து அவர்களின் நினைவுத்திறன் பரிசோதிக்கப்பட்டது. ஆய்வின் முடிவில் 70 சதவிகிதம் அளவிற்கு நினைவுத்திறன் அதிகரித்தது கண்டறியப்பட்டது.




அதேபோல் லண்டனில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் மறதி நோயில் இருந்து விடுபட முதலில் இதயத்தை வலுவாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரியவந்துள்ளது. யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் லண்டன், பிரான்சில் உள்ள தொற்றுநோய் மற்றும் மக்கள்தொகை குறித்த ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்திய ஆராய்ச்சியாளர் அர்ச்சனா சிங் தலைமையில் இது குறித்த ஆய்வு நடத்தின. ஆய்வின் முடிவில் சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.




இதயம், மூளை இரண்டும் ஆரோக்கியமாக இருந்தால் அனைத்து பாதிப்புகளுக்கும் எளிதில் நிவாரணம் உறுதி. பொதுவாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது இதயம்தான். இதே நினைப்பு மூளைச்செயல்பாட்டையும் பாதிக்கும். மேலும் மறதி நோயால் அவதிப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இருந்து விடுபட முதலில் இதயத்தை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். இதயம் ஆரோக்கியத்திற்குத் தேவையான உணவுகளை உட்கொள்வதன் மூலம் மறதி நோயை விரட்டலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.




கிச்சன் சுத்தமா இருக்கணும்!


கிச்சன் சுத்தமா இருக்கணும்!







நமது ஆரோக்கியத்தின் பங்கு நாம் உண்ணும் உணவுக்கு மட்டுமல்ல நம் சமையலறைக்கும் முக்கிய பங்குண்டு. ஏனெனில் சமையல் அறை சுத்தமாக இருந்தால் மட்டுமே அங்கு சமைக்கப்படும் உணவும் சுத்தமாக இருக்கும். சமையலறையில் எப்பொழுதும் தண்ணீர் உபயோகம் செய்யப்படுவதாலும், அழுக்கும் கறையும், நிறைந்த துணிகளும் இருப்பதாலும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் வாழத்தொடங்கிவிடும். இதுவே நாளடைவில் நாம் உண்ணும் உணவோடு கலந்து நமக்கு நோய் தொற்றினை ஏற்படுத்திவிடும். எனவே சமையலறையை சுத்தமாக வைக்க நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.


காய்கறி நறுக்கும் பலகை




காய்கறியை கட் செய்ய உதவும், கத்தி, பலகை போன்றவைகளை தினசரி சுத்தம் செய்யவேண்டும். இல்லையெனில் காய்கறிகளில் உள்ள சாறுகள் வழிந்து அவை கறை பிடித்து விடும் இதில் எளிதாக பாக்டீரியாக்கள் குடியேறிவிடும். மறுபடியும் அதே கறைபிடிந்த பலகையில் காய்கறிகளை நறுக்கும் போது கிருமிகள் நம் வயிற்றுக்குள் சென்றுவிடும்.


சிங்க் சுத்தம்




சமையல் அறையில் பாத்திரங்கள் கழுவும் 'சிங்க்' எப்போதும் தண்ணீர் படும் இடம் என்பதால், பாசியும் அழுக்கும் படிந்திருக்கும். இதனால், ஒருவித நாற்றமும் கிளம்பும். இதைப் போக்க சிங்க் சுவர்களில், கிளீனரை ஊற்றி நன்றாகத் தேய்த்துக் கழுவவும். அதன் பின் ஒரு நாப்தலின் உருண்டையை சிங்கினுள் போட்டு வைத்தால் கரப்பான் போன்ற பூச்சித் தொல்லையை தவிர்க்க முடியும்.



ஸ்பாஞ்ச் பத்திரம்




பாத்திரம் துலக்கப் பயன்படுத்தும் ஸ்பான்ச், கிருமிகள் தங்கும் இடம். அதன் ஒரு சதுர இன்ச் பரப்பிலேயே பல லட்சம் பாக்டீரியாக்கள் குடியிருக்கும். ஸ்பான்ச்சில் உள்ள ஈரப்பதத்தால் வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று வலியை உருவாக்கும் கிருமிகள் அதில் உருவாகலாம். இதைத் தவிர்க்க வாரம் ஒருமுறை இந்த ஸ்பான்ச்சை மாற்றிவிட வேண்டும். அல்லது ப்ளீச்சிங் தூள் கலந்த வெந்நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து அலசி எடுத்தால், கிருமிகள் ஒழிந்துவிடும்.


கைப்பிடித்துணி




நம் சமையலறையின் ஆரோக்கியத்தை பறைசாற்றுவதில் கைப்பிடித்துணிக்கும் பங்குண்டு. அதை அவ்வப்போது கறையாக இருக்கும், சில சமயம் பிசுக்கு பிடித்து கறியாக மாறிவிடும். இதனை நன்கு வெந்நீரில் ஊறவைத்து சுத்தம் செய்யவேண்டும். அப்பொழுதுதான் அதில் வசிக்கும் கிருமிகள் மடியும்.


பாத்திரம் வைக்கும் ஸ்டான்ட்




பாத்திரம் வைக்கும் இடம் எப்பொழுதும் உலர்வாக இருக்கவேண்டும். இதற்கு நாம் பாத்திரத்தை கழுவி அதனை நன்கு வெயிலில் உலர்த்தி பின்னர் ஸ்டான்டில் அடுக்கவேண்டும். இல்லையெனில் ஈரம் படிந்து கிருமிகள் வசிக்கும் கூடாரமாகிவிடும். அவை நாம் உண்ணும் உணவுகளோடு உள்ளே சென்றுவிடும்.


குப்பைக்கூடை




சமையல் அறைக் குப்பைக் கூடையில்தான் அதிக அளவு கிருமிகள் தங்கும். மூடும் வசதியுடைய கூடை நல்லது. இதனை சிங்கிற்கு கீழ் வைக்கலாம். இந்தக் குப்பைக் கூடையில் இருந்து கிளம்பும் நாற்றத்தைத் தடுக்க ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடாவைக் கொட்டி, கூடைக்குப் பக்கத்திலேயே வைப்பது பலன் தரும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பேக்கிங் சோடாவை மாற்றினால் போதும்.


சகலத்தையும் சுத்தம் செய்யும் சமுத்திரப்புளி


சகலத்தையும் சுத்தம் செய்யும் சமுத்திரப்புளி




இயற்கையோடு இயைந்த வாழ்வு ஆதிகாலத் தமிழர்களின் வாழ்வு. இன்றிருக்கும் எத்தனையோ ரசாயனப் பொருட்களுக்குப் பதிலாக இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்தத் தெரிந்திருந்தது நமக்கு. அப்படி சோப்புக்கு பதிலாக தமிழர்கள் பயன்படுத்திய பொருள்தான் சமுத்திரப் புளி எனும் ஒரு வகை கொடி மரத்தின் விதை. இன்றைய தலைமுறைக்கு கிட்டத்தட்ட அடையாளம் தெரியாது போய்விட்ட இந்த சமுத்திரப்புளியை காட்சிப் படுத்தி, அதன் பயன்பாட்டையும் எடுத்துக் கூறினார் சென்னை அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் புஷ்பா.

வெப்ப மண்டல நாடுகள் பலவற்றிலும் வளரும் இந்த சமுத்திரப் புளி எனும் கொடியை தமிழகத்தில் நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகளில் பார்க்கலாம். இது நீர் நிலைகளின் கரையோர மரங்களில் படர்ந்து, 150 அடி வரை வளரக்கூடியது. புளியம் பழம் போலவே விதைகளை பட்டையாக மூடியிருக்கும் இதன் காய்கள், சுமார் 4 அடி முதல் 6 அடி வரை இருக்கும். விதைகளின் சுற்றளவு சுமார் இரண்டரை அங்குலம் இருக்கும். இதற்கு இருக்கி, ஆனைப்புளியன் என்ற வேறு பெயர்களும் உண்டு. தாவரவியலில் இதற்கு பெயர் என்டடா. என்டடா என்பது மலபார் பெயர். இதற்கு பெரிய விதை என்று அர்த்தம்.

இதன் விதைகள் பெரிதாக இருந்தாலும், கனம் குறைந்ததாக இருக்கும். இதனால் நீரில் மிதந்து இதர கரையோரங்களில் முளைக்கிறது. பழங்குடி மக்கள் இந்தக் கொடியின் விதைகளை மருத்துவத்துக்கும் உணவுப் பொருளாகவும் பயன்படுத்துகிறார்கள். இந்த விதைகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டு. அதிகபட்சமான புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துடன், பொட்டாஷியம், பாஸ்பரஸ், மக்னீஷியம், இரும்பு, ஈயம் போன்ற மினரல்களும் இதில் காணப்படுகின்றன. விதையை மட்டுமல்லாது, முழு காயையுமே சில பழங்குடியினர் உண்கின்றனர். சமுத்திரப்புளி விதைகளை நீரில் ஊற வைத்தால், அதிலிருந்து நுரை போன்ற திரவம் நீரில் கலக்கும்.

இந்த நுரை நீரையே அந்தக் கால மனிதர்கள் குளிக்கும்போது சோப்பாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். இது தவிர, இந்த விதைகள் மெகா சைஸில் இருப்பதால் பைகள், மற்றும் இதர அழகுப் பொருட்களில் அலங்காரம் செய்யவும் பயன்படுத்தினார்கள் என்றார் அவர். இன்றும் பழங்குடியினப் பெண்கள் இந்த விதைகளை அரைத்து, இதனுடன் பாசிப் பயிறு மாவையும், சீயக்காய் தூளையும் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்துகிறார்களாம். நகைகளிலுள்ள அழுக்கைக் கழுவவும் இந்த விதை பயன்படுவதாகச் சொல்கிறார்கள். மேலை நாட்டு ரசாயன சோப்புகள்தான் இப்படிப்பட்ட பண்பாட்டைக் கழுவி விட்டதோ



Monday, August 20, 2012

பீரங்கிகளை தாக்கி அழிக்கும் நாக் ஏவுகணை சோதனை தோல்வி


பீரங்கிகளை தாக்கி அழிக்கும் நாக் ஏவுகணை சோதனை தோல்வி





பீரங்கிகளை தாக்கி அழிக்கும் நாக் ஏவுகணை சோதனை தோல்வி அடைந்ததால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராணுவத்தின் பயன்பாட்டுக்காக ஏவுகணை களை தயாரிக்க ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றை கடந்த 1980களில் மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் எதிரி நாட்டு பீரங்கிகளை தாக்கி அழிக்கும் நாக் ரக ஏவுகணை களை தயாரிக்க ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப் பின்(டி.ஆர்.டி.ஓ) விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர். இதன்படி நாக் ரக ஏவுகணைகளை தயாரித்துள்ளனர். இதுவரை 50 முறை அந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணைகளை ராணுவத்தினர் பயன்படுத்தி சோதனை செய்யும் நிகழ்ச்சி ராஜஸ்தானில் உள்ள மகாஜன் துப்பாக்கி சுடும் மையத்தில் அண்மையில் நடந்தது. இதில், ராணுவ உயர் அதிகாரிகள், டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இதில்,மொத்தம் 4 நாக் ஏவுகணைகள் ஏவப்பட்டன. ஆனால், ஒரு ஏவுகணை மட்டுமே இலக்கை தாக்கியது. மற்ற ஏவுகணைகள் இலக்கை தாக்கவில்லை. இதனால், ஏவுகணையில் மாற்றங்கள் செய்யும்படி டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகளை ராணுவத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாக் ஏவுகணை சோதனை தோல்வி அடைந்ததால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்போது, பிரான்சில் இருந்து வாங்கிய மிலன் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை ராணுவம் பயன்படுத்தி வருகிறது. நாக் ஏவுகணையை ராணுவத்தில் சேர்ப்பது தாமதம் ஆவதால், அமெரிக்காவிடம் இருந்து ஜாவ்லின் ஏவுகணையை வாங்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாக் ஏவுகணையை ராணுவத்தில் சேர்க்க இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.