Tuesday, December 31, 2013

துபாயில் புதிய பார்க்கிங் மீட்டர்கள்! அண்ணே சற்று அதிகம் நடக்க வேணும்!!

துபாயில் புதிய பார்க்கிங் மீட்டர்கள்! அண்ணே சற்று அதிகம் நடக்க வேணும்!!




துபாயில் தற்போது இலவசமாக பார்க்கிங் செய்யக்கூடியதாக உள்ள இடங்களில் பார்க்கிங் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன. அடுத்த ஆண்டு இந்த புதிய மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன என்ற தகவலை, துபாய் வீதி மற்றும் போக்குவரத்து வாரியம் (RTA – Roads and Transport Authority) அறிவித்துள்ளது.

தற்போது துபாயில் டவுன்டவுனின் முக்கிய பகுதிகளில் பார்க்கிங் மீட்டர்கள் உள்ளன. ஆனால், நகரின் மையப்பகுதிக்கு வெளியேயுள்ள பல இடங்களில் பார்க்கிங் மீட்டர்கள் கிடையாது. இதனால், சற்று தொலைவில் பார்க்கிங் செய்துவிட்டு வந்தால், பார்க்கிங் கட்டணத்தை செலுத்த தேவையில்லை.

அடுத்த ஆண்டு முதல், மையப்பகுதிக்கு வெளியேயுள்ள ஏரியாக்களிலும், கட்டண பார்க்கிங் முறை நீடிக்கப்படவுள்ளது. முதல் கட்டமாக, அல்-பார்ஷா, அல்-குவோஸ், ஹொர் அல்-அன்ஸ், அல்-நாதா பகுதிகளில் புதிய பார்க்கிங் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன.

நகரின் பகுதிகளில் போக்குவரத்தின் அளவு, குடியிருப்போரின் எண்ணிக்கை, காலியாகவுள்ள பார்க்கிங் இடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை வைத்து கணித்து, எந்தெந்த பகுதிகளில் பார்க்கிங் மீட்டர்கள் அமைப்பது என முடிவு செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது, RTA. தற்போது துபாயில் 111,026 கட்டண பார்க்கிங் ஸ்லாட்டுகள் உள்ளன. மேலும் 10,000 புதிய ஸ்டாட்டுகள் அமைக்கப்படவுள்ளன.

புதிய ஆண்டில், சற்றே அதிகம் நடக்க வேண்டியிருக்கும்.. அதனாலென்ன, எக்சர்சைஸ் நல்லதுதானே!

டெல்டா ஏர்லைன்ஸ் இணையம் சொதப்பியது! நம்ப முடியாத மலிவு விலை டிக்கெட்டுகள்!!

டெல்டா ஏர்லைன்ஸ் இணையம் சொதப்பியது! நம்ப முடியாத மலிவு விலை டிக்கெட்டுகள்!!



அமெரிக்க விமான நிறுவனம் டெல்டா ஏர்லைன்ஸின் இணையதளத்தில் நேற்று காலை 10 மணி முதல் 12 மணிவரை (அமெரிக்க கிழக்கு நேரம்) புக்கிங் செய்ய முயன்றவர்கள் அதிஷ்டசாலிகள். கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஏற்பட்ட ஒரு தவறு காரணமாக, நம்பவே முடியாத மலிவு விலைகளில் டிக்கெட் கட்டணங்கள் டிஸ்பிளே ஆகின.

எவ்வளவு மலிவு?

பால்டிமோரில் இருந்து ஹவாய் தீவு ஹொனலூலு செல்ததற்கு முதல் வகுப்பு கட்டணமே, 99 டாலர்கள் என்ற அளவில் மிக குறைந்த கட்டணங்கள். பல அமெரிக்க நகரங்களுக்கு இடையே கட்டணம், 9.99 டாலர் முதல், 19.99 டாலர் வரை காண்பிக்கப்பட்டதில், பயணிகள் திகைத்துப் போயினர்.

பலர் உடனே பாய்ந்து, புக்கிங்கும் செய்து விட்டனர்.

இதற்கிடையே டெல்டா ஏர்லைன்ஸின் இணையதளத்தில் கோளாறு பற்றி பலர் பேஸ்புக், ட்விட்டர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ள, டெல்டா ஏர்லைன்ஸ் பக்கமே திரும்பாத பலரும்கூட, டெல்டா இணையதளத்துக்கு படையெடுத்தனர். மலிவு விலை டிக்கெட்டுகளை வாரிக் கொண்டனர்.

மதியம் 12 மணிவரை இந்த கட்டணங்கள் டிஸ்பிளே ஆகிக்கொண்டு இருந்தன. அதன்பின்தான் விஷயத்தை புரிந்துகொண்டது டெல்டா ஏர்லைன்ஸ். உடனடியாக இணையத்தில் இருந்த தவறு சரி செய்யப்பட்டது. அதுவரை 99 டாலருக்கு டிஸ்பிளே ஆகிக்கொண்டிருந்த டிக்கெட் கட்டணங்கள், திடீரென 799.00 ஆகின.

டெல்டா தலைமையகத்தில் யாரோ ஒரு ஜூனியர் புரோகிராமர் செய்த தவறால் இந்த மலிவு விலை கட்டணங்கள் டிஸ்பிளே ஆகின என டெல்டாவில் பணிபுரியும் சிலர் சொல்கிறார்கள். அதுவும் சரிதான். சீனியர்கள் எல்லோருக்கும் கிருஸ்துமஸ் டே-ஆஃப் கிடைக்க, ஜூனியர்கள் பணி புரிந்திருப்பார்கள்!

இந்த இரண்டு மணி நேரத்தில் பல ஆயிரக்கணக்கானோர் மலிவு விலை டிக்கெட்டுகளை புக்கிங் செய்து விட்டிருந்தனர். அந்த டிக்கெட்டுகள் அனைத்தும் பயணத்துக்காக ஏற்றுக்கொள்ளப்படும் என இன்று அறிவித்துள்ளது டெல்டா ஏர்லைன்ஸ். (அமெரிக்க கான்ஸ்யூமர் சட்டம் அப்படி! (Airlines to honor any mistake fares offered)

ஆமா.. நம்ம டெல்டா ஏர்லைன்ஸ் சகாக்கள் அந்த இரு மணி நேரமும் கிருஸ்துமஸ் பார்ட்டி ஓவரான நிலையில் இருந்தார்களா? அல்லது, ஓவர் பார்ட்டியிங்கில் இருந்தார்களா? (புத்தாண்டு தினம் ஜனவரி 1-க்கு ஏதாவது திட்டம் உள்ளதா டெல்டா நண்பர்களே?)

துபாயில் பிரிட்டிஷ் பிரதமருக்கு மூக்கு உடைந்தது: “போய்யா.. நீரும், உம்ம பிளேனும்”

துபாயில் பிரிட்டிஷ் பிரதமருக்கு மூக்கு உடைந்தது: “போய்யா.. நீரும், உம்ம பிளேனும்”




விமானம் தயாரிக்கும் மேலை நாட்டு நிறுவனங்களுக்கு, அவர்களது விமானங்களை விற்பதில் அந்தந்த நாட்டு தூதரகங்கள் உதவுவது என்பது சர்வசாதாரணம். தரகங்கள் உதவுவதற்கு ஒருபடி மேலாக சென்று, சில விமான தயாரிப்பு நிறுவனங்களுக்கு, அந்தந்த நாட்டு ஜனாதிபதிகளோ, பிரதமர்களோ உதவுவதும் அவ்வப்போது நடப்பதுண்டு 

அப்படியொரு முயற்சியில் இறங்கிய பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேம்ரொன், இந்த வாரம் மூக்குடைபட்டிருக்கிறார். அவருக்கு நோஸ்கட் கிடைத்துள்ள இடம், துபாய். கொடுத்துள்ள நாடு, ஐக்கிய அரசு அமீரகம்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் விமானப்படைக்கு, போர் விமானங்கள் வாங்க முடிவு செய்துள்ளார்கள். அவர்களுக்கு விமானம் விற்பனை செய்வதற்காக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உட்பட பல மேலை நாட்டு விமான தயாரிப்பு நிறுவனங்கள் போட்டியிட்டன. பிரிட்டனின் BAE Systems Plc நிறுவனம், தமது யூரோபைட்டர் டைஃபூன் போர் விமானங்களை விற்பதற்காக பெரும் முயற்சி செய்தது.

பிரிட்டிஷ் ராணுவத்தின் பட்ஜெட்டில் ஏகப்பட்ட வெட்டுகள் செய்யப்பட்டுள்ளதால், சமீப காலத்தில் பிரிட்டன் புதிய விமானங்கள் எதையும் வாங்குவதாக திட்டமில்லை. இதனால் பிரிட்டிஷ் விமானத் தயாரிப்பு நிறுவனம், தமது விமானங்களை விற்பதற்கு வெளிநாட்டு விமானப்படைகளை நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை.

இன்றைய தேதியில் விமானப்படைக்கு விமானம் விமானமாக வாங்கி குவிக்கும் நாடுகள், இந்தியாவும் அரபு நாடுகளும்தான். இந்தியா, தமக்கு தேவையான விமானங்களுக்கு ஏற்கனவே ஆர்டர் கொடுத்துள்ள நிலையில், மேலைநாட்டு விமானத் தயாரிப்பு நிறுவனங்களின் உயரதிகாரிகள் அரபு நாடுகளில்தான் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், தமது நாட்டு விமானத் தயாரிப்பு நிறுவனமான BAEக்கு கைகொடுக்க முன்வந்தார் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன்.

இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு, பிரிட்டன் திரும்பும் வழியில், துபாய் சென்றார் அவர். அப்போது துபாயில் ஏர்-ஷோ நடந்து கொண்டிருந்தது. அனைத்து நாடுகளின் விமான தயாரிப்பு நிறுவனங்கள் போல BAE-ம் ஸ்டால் அமைத்திருந்தது.

பிரிட்டிஷ் பிரதமர் தாமே தனிப்பட்ட முறையில் பிரிட்டிஷ் விமானங்களை விற்பனை செய்வதற்கு ஐக்கிய அரபு அமீரக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரிட்டிஷ் பிரதமரே தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதையடுத்து, ஐக்கிய அரபு அமீரக விமானப் படைக்காக பிரிட்டிஷ் விமானங்களே வாங்கப்படும் (6 பில்லியன் பவுன்ட்ஸ் டீல்!) என ஏவியேஷன் வர்த்தகத்தில் உள்ள பலரும் ஊகம் வெளியிட்டிருந்தார்கள்.

ஐக்கிய அரபு அமீரக விமானப்படை அதிகாரிகளும், பிரிட்டிஷ் தயாரிப்பான யூரோபைட்டர் டைஃபூன் போர் விமானங்களை வாங்குவதையே விரும்புகின்றனர் எனவும் செய்திகள் வெளியாகின.

எல்லாமே பாசிட்டிவ்வாக இருந்த நிலையில், பிரிட்டிஷ் விமானங்களை வாங்குவதில்லை என இந்த வாரம் முடிவெடுத்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம்.

இந்த சறுக்கல், பிரிட்டிஷ் பிரதமரின் தனிப்பட்ட முயற்சிக்கு கிடைத்த தோல்வி என பிரிட்டிஷ் மீடியாக்கள் அலறுகின்றன.

அமீரகத்துக்கு விமானம் விற்பதில் பிரிட்டிஷ் நிறுவனத்துடன் நெக்-டு-நெக் போட்டியில் இருந்த நிறுவனங்கள், சுவீடன் நாட்டு விமான தயாரிப்பு நிறுவனம் Saab, மற்றும் பிரான்ஸின் Dassault Aviation நிறுவனம். இவர்களில் யாருக்கோ இந்த 6 பில்லியன் பவுன்ட்ஸ் டீல் அதிஷ்டம் அடிக்க போகிறதா தெரியவில்லை.

இதில் மற்றொரு விஷயமும் உள்ளது. Saab நிறுவனத்தின் கிரிப்பன் ஜெட் போர் விமானமும், Dassault Aviation தயாரிக்கும் ரஃபால் பைட்டர் விமானமும், பிரிட்டிஷ் யூரோபைட்டர் டைஃபூன் போர் விமானங்களை விட விலை குறைந்தவை என்பது உண்மைதான். ஆனால், விலைக்கு ஏற்ற வகையில் செயல்திறனும் குறைந்தவை.

வாசகர்களில் எத்தனை பேருக்கு பிரிட்டிஷ் யூரோபைட்டர் டைஃபூன் போர் விமானங்களுடன் பரிச்சயம் உள்ளது என்று தெரியவில்லை. பரிச்சயம் இல்லாதவர்கள் நாம் இணைத்துள்ள போட்டோக்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அரபு நாட்டு காலநிலைக்கு நன்கு பொருந்தக்கூடிய விமானங்கள் இவை. அமீரக விமானப்படை அதிகாரிகளும், யூரோபைட்டர் டைஃபூன் போர் விமானங்களை வாங்குவதையே விரும்புகின்றனர் என்ற கூற்றும் நிஜம்தான் என்பதை, பிரிட்டிஷ் யூரோபைட்டர் டைஃபூன் போர் விமானத்தின் சில பிளஸ்களுடன் காட்டுகிறோம், பாருங்கள்.

போட்டோவை பாருங்கள். டைஃபூன் விமானம், அதிக பே-லோடுடன் சுலபமாக திரும்பக் கூடியது என்பதை கவனியுங்கள். அரேபிய பகுதியில் குறுகலான நாட்டு வான் பாதைகளில் சில நாடுகளை தவிர்க்க இது அவசியம். அல்லது, தேவையற்ற நாட்டு வான் எல்லைக்குள் விமானி தவறிப் போய் புகுந்துவிட வாய்ப்பு உண்டு.


போட்டோவில், டைஃபூன் போர் விமானத்தில் இருந்து ஏவுகணை ரிலீஸ் செய்யப்படும் நேர்த்தியை பாருங்கள் (கிராஃபிக் படம்),



அப்படியே போட்டோவில், டைஃபூன் போர் விமானத்தின் கீழ்ப்பகுதியில் பொருத்தப்படக்கூடிய ஆயுதங்களின் தொகையை பாருங்கள். இந்த பே-லோடுடன் முழுமையான இயங்கு திறனுடன் பறக்கக்கூடிய விமானம் இது.



போட்டோவில், டைஃபூன் போர் விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் ஒரு விமானியின் வியூவை பாருங்கள். மிராஜ் போன்ற விமானங்களின் காக்பிட்டில் இருந்து பார்த்தால், பதுங்கு குழிக்குள் இருந்து பார்ப்பது போல தெரியும்.



டைஃபூன் போர் விமானத்தின் காக்பிட்டில் இருந்தால், எதிரி விமானங்களை மிக தெளிவாக பார்க்கலாம். ‘வானத்து நாய் சண்டை’ (Sky Combat air-to-air dogfighting) எனப்படும் துரத்தித் துரத்தி  தாக்கும் யுத்தத்துக்கு சூப்பர் டூப்பர் வடிவமைப்பு, இந்த காக்பிட்தான். (காக்பிட்டின் இடதுபுறம் பறக்கும் மற்றொரு விமானத்தை பாருங்கள்.. எவ்வளவு தெளிவாக உள்ளது)

பிரிட்டிஷ் விமானத்தை வேண்டாம் என்று சொன்ன அமீரக விமானப்படை தற்போது பயன்படுத்தும் அமெரிக்க தயாரிப்பு F16E ரக போர் விமானத்தை போட்டோவில் பாருங்கள்.



சரி. அமீரகம் எதற்காக பிரிட்டிஷ் விமானங்களை நிராகரித்தது? காரணம் வெளிப்படையாக கூறப்படவில்லை. ஊகம் என்னவென்றால், சிரியாவுக்கு எதிராக பிரிட்டன் தாக்குதல் நடத்தவில்லை என்ற கோபத்தில் அமீரகக்காரர்கள் “போய்யா.. நீங்களும், உங்க பிளேனும்” என்று உதறி விட்டார்களாம்!

ஏங்க.. அப்படின்னா இனி அமெரிக்க விமானங்களையும் வாங்க மாட்டீகளோ!


Tuesday, December 17, 2013

இந்திய ராஜதந்திரி தேவயானி நியூயார்க்கில் கைது: நாளைக்கு டில்லியில் யார் கைது?

இந்திய ராஜதந்திரி தேவயானி நியூயார்க்கில் கைது: நாளைக்கு டில்லியில் யார் கைது?



சீனியர் இந்திய ராஜதந்திரி 39 வயதான தேவயானி கொப்ராகேட் நியூயார்க் நகர வீதியில் வைத்து கைது செய்யப்பட்டு கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம், இருவித சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை வட்டாரங்களில் ஒருவிதமாக கூறப்படுகிறது. அமெரிக்கா வாழ் இந்தியர்கள் சிலர் மத்தியில் வேறு விதமாக கூறப்படுகிறது.

“இந்த கைது, எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று” என்று தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, இது தொடர்பாக அமெரிக்க ராஜாங்க துறையுடன் தொடர்பில் உள்ளார்கள்.

அதே நேரத்தில், அமெரிக்க இந்தியர்களில் ஒரு பகுதியினர் நடத்தும் மீடியாக்கள் இந்த சம்பவம் தொடர்பாக வேறு விதமான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.

“இந்திய சீனியர் ராஜதந்திரி ஒருவர், விசா மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டது, இந்தியர்களுக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவயானியை இந்திய தூதரகப் பணியில் இருந்து உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்” என்று அமெரிக்காவில் வெளியாகும் சில இந்திய மீடியாக்களில் கூறப்படுகிறது.

தேவயானி கைது செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவல் டில்லி சவுத் பிளாக்கில் உள்ள வெளியுறவு அமைச்சுக்கு அழைக்கப்பட்டு, இந்தியாவின் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சிங், “தேவயானியின் கைது சம்பவம் இந்தியாவால் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது” என்று மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இந்திய ராஜதந்திரி கைது செய்யப்பட்ட காரணம், அரசியல் காரணமல்ல. அமெரிக்காவில், கிரிமினல் குற்றமாக கருதப்படும் விசா மோசடி, மற்றும் தவறான தகவல் தெரிவிப்பது ஆகியவை!

இந்த விவகாரத்திலுள்ள மற்றொரு விஷயம், தேவயானிக்கு எதிரான இந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்படுவதற்கான உத்தரவிட்ட நியூயார்க் தெற்கு மாவட்ட அட்டர்னியும், ஒரு அமெரிக்க இந்தியரான பெண்தான். ப்ரீத் பராரா என்பது அவருடைய பெயர்.

அத்துடன், தேவயானி மீது புகார் கொடுத்தவரும் ஒரு இந்திய பெண்தான் (இவர் இந்தியப் பிரஜை). அவர் பெயர், சங்கீதா ரிச்சார்ட்.

தேவயானி கொப்ராகேட், நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தின் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் மகளிர் விவகாரங்களுக்கு பொறுப்பான ராஜதந்திரி. வயது குறைவாக இருந்தாலும் (39 வயது), இந்திய வெளியுறவு சேவையில் இந்தப் பதவி, சீனியர் ராஜதந்திரி என்ற தரத்தில் உள்ளது.

இரு குழந்தைகளுக்கு தாயான இவர், நியூயார்க்கில் உள்ள தமது வீட்டில் வீட்டுப் பணிகளை கவனிக்க இந்தியாவில் இருந்து தருவித்த பணியாளர்தான், சங்கீதா. A-3 விசாவில் இந்திய பணியாளரை தருவிக்கும் விண்ணப்பத்தில், பணியாளருக்கு மாதச் சம்பளம் 4,500 டாலர் கொடுக்கப்படும் என் குறிக்கப்பட்டு, விசா பெறப்பட்டது.

அத்துடன், தேவயானிக்கும், சங்கீதாவுக்கும் இடையிலான முதல் ஒப்பந்தத்திலும் அந்த 4,500 டாலர் தொகையே குறிப்பிடப்பட்டது. (வீட்டுப் பணிக்கு அந்தளவு சம்பளம் யாரும் கொடுக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்)

விசா கிடைத்தபின், சங்கீதாவுக்கு மாதச் சம்பளம் 30,000 இந்திய ரூபா என பிக்ஸ் பண்ணிக் கொண்டார்கள் (அநேகமாக தொடக்க டீலே அதுவாகத்தான் இருக்கலாம். விசா எடுப்பதற்காக 4,500 டாலர், நிஜ ஊதியம் ரூபா 30,000 என்று பேசியிருந்தாலும் ஆச்சரியப்பட முடியாது)

இந்த மாற்றத்தில், 4,500 டாலர் மாத ஊதியம், 30,000 ரூபாவாக மாறியதில், அப்போதைய பண மதிப்பில் 573.07 டாலராக சுருங்கியது.

ஆரம்ப ஒப்பந்தத்தில், வாரம் 40 மணி நேர வேலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி சங்கீதா, தேவயானி வீட்டில் காலை 7 மணி முதல் 12.30 மணி வரையும், அதன்பின் மாலை 6.30 மணியில் இருந்து, இரவு 8.30 மணி வரை பணிபுரிய வேண்டும். ஆனால், அதைவிட அதிக நேரம் பணிபுரிந்ததாகவும், அப்படி பார்த்தால் சங்கீதா பணி புரிந்ததற்கு மணிக்கு $3.31 ஊதியமே கிடைத்தது என்பதும், புகாரில் கூறப்பட்டது.

இந்த தொகை அமெரிக்க குறைந்தபட்ச ஊதிய தொகையைவிட குறைவானது.

நவம்பர் 2012-ம் ஆண்டில் இருந்து பணிபுரிந்த சங்கீதா, ஜூன் 2013-க்கு பிறகு வேலைக்கு வரவில்லை. விவகாரம் சட்டத்துறைக்கு சென்றதில், தேவயானியை கைது செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நியூயார்க்கில் தனது இரு குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக அவர் சென்றபோது, நியூயார்க் போலீஸால் கைது செய்யப்பட்டு, கைகளில் விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது, இரண்டரை லட்சம் டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதில் மற்றொரு தமாஷ் என்னவென்றால், கடந்த வாரம் இந்திய வெளியுறவு செயலர் சிங் வாஷிங்டனுக்கு விஜயத்தை மேற்கொண்டபோது, அவருடன் அமெரிக்க டாப் அதிகாரிகளை சந்தித்த இந்திய டீமில், தேவயானியும் இருந்தார். இவர்கள், அமெரிக்க ராஜாங்க செயலர் ஜான் கெரி, துணை செயலர் வில்லியம் பர்ன்ஸ், மற்றும் ராஜாங்க அமைச்சு அதிகாரிகளை சந்தித்தனர்.

அந்த சந்திப்பு நடந்து ஒரு வாரத்துக்குள், தேவயானி நியூயார்க் வீதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் மற்றொரு விவகாரம் என்னவென்றால், இந்த கைது விஷயத்தை சென்சேஷன் இஷ்யூ ஆக்குவதற்காக சில மீடியாக்கள், தேவயானி கையில் ஒயின் கிளாஸூடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டன. மற்றைய மீடியாக்களும் அனுப்பி வைக்கப்பட்டன. எமக்கும் வந்து சேர்ந்தது. (நாங்கள் அந்த போட்டோக்களை வெளியிடுவதாக உத்தேசமில்லை)

அதில் ஒரு போட்டோ, இந்திய தூதரக பார்ட்டியில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்திய பெண் ராஜதந்திரி ஒயின் குடிப்பது ஒன்றும் பெரிய விவகாரம் கிடையாது. இந்த போட்டோக்களை வைத்து சாயம் பூசுவது, மோசமான சென்சேஷனல் ஜேர்னலிஸம்.

தேவயானி மீது பதிவாகிய வழக்கில் இரு குற்றப்பிரிவுகள் உள்ளன. ஒன்று, visa fraud. மற்றையது, making false statements. குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதலாவது குற்றத்துக்கு 10 ஆண்டுகள், இரண்டாவது குற்றத்துக்கு 5 ஆண்டுகள் அதிகபட்ச சிறைத்தண்டனை கொடுக்கப்படலாம்.

இந்திய வெளியுறவு அமைச்சு, இந்த விவகாரத்தில் அமெரிக்க முடிவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதே நிலைப்பாட்டையே தொடருவார்கள் என டில்லி வெளியுறவு வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக வட்டாரங்களிலுள்ள ராஜதந்திரிகள் சிலருடன் இது பற்றி பேசினோம். பெயர் வெளியிடப்படுவதை விரும்பாத அவர்கள், தமது தரப்பு நியாயங்களை தெரிவித்தார்கள்.

“தேவயானி கொப்ராகேட் இந்திய தூதரகத்தில் பணிபுரிவதற்காக வழங்கப்படும் அடிப்படை மாத ஊதியமே, 4,000 டாலர்தான். இதில் அவர் எப்படி மாதம் 4,500 டாலர் தனது பணியாளருக்கு கொடுக்க முடியும்?” என்பது ஒரு கேள்வி (A-3 விசா எடுப்பதற்கு அதிக ஊதியம் காட்டுவது என்பது அமெரிக்காவில் ஊரறிந்த ரகசியம்)

அமெரிக்காவில் உள்ள இந்திய ராஜதந்திரிகள் கூறும் மற்றொரு விவகாரம் சுவாரசியமானது. “டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் அமெரிக்க ராஜதந்திரிகளின் மனைவிகள், டில்லி இன்டர்நேஷனல் பள்ளிகளில் ஆசிரியைகளாக பணிபுரிகிறார்களே… அவர்களில் யாரிடமாவது இந்திய work permit இருக்கிறதா?

யாரிடமும் கிடையாது.

ஒருவித புரிந்துணர்வு அடிப்படையில் நாம் அதை கண்டுகொள்வதில்லை. மத்திய வெளியுறவுத்துறை டில்லியின் கடும் நடவடிக்கை எடுக்க தொடங்கினால் என்னாகும் தெரியுமா?” என்பதே அந்த விவகாரம்.

டில்லியில் அமெரிக்க ராஜதந்திரி ஒருவரது மனைவி கைது என்று செய்தி வருமோ!


Monday, December 9, 2013

அடிக்கடி சூடு பிடிக்குதா? அப்ப இந்த காய்கறிகளை அளவா சாப்பிடுங்க...

அடிக்கடி சூடு பிடிக்குதா? அப்ப இந்த காய்கறிகளை அளவா சாப்பிடுங்க... 




காய்கறிகளில் இயற்கையாகவே வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அனைவருக்கும் அவசியமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. நமக்குத் தேவையான சத்துக்களை சேமித்து வைக்கும் வங்கிகள் தான் காய்கறிகள். ஆனால், சில காய்கறிகள் இயற்கையாகவே உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் குணம் கொண்டவையாக உள்ளன. 

கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் நிறைந்த சில காய்கறிகள் உடல் சூட்டை அதிகப்படுத்தும் என்றால் நம்ப முடிகிறதா? கொழுப்பை குறைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் விரும்புபவர்களுக்கு இந்த காய்கறிகள் பயனுள்ளவையகாவே உள்ளன. ஆனால், இது முழுமையான பலன் அளிப்பதில்லை. கோடைக்காலங்களில், அதுவும் வெப்பக் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும் நாட்களில் உங்கள் உடலை குளுமையாக வைத்திருப்பது மிகவும் கடினமாக இருக்கும். அந்த நாட்களில், இது போன்ற காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நலம். 

அனைத்து வகையான பருவநிலைகளிலுமே உடல் சூடு அதிகரித்து விடுவது பலருக்கும் பிரச்சனையான விஷயம் தான். அதன் காரணமாக ஹார்மோன் சமநிலையற்ற தன்மைகள், அரிப்பு மற்றும் பிற தோல் வியாதிகள், மூலம் மற்றும் பிற செரிமானக் கோளறுகள் போன்றவை வரிசையாக அணிவகுத்து உடலின் மீது தாக்குதல் தொடுக்கின்றன. இது போன்ற பிரச்சனைகளை அவ்வப்போது எதிர்கொள்ளும் மனிதர்கள், உடல் சூட்டை அதிகரிக்கும் காய்கறிகளை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். இங்கே அது போன்று சாப்பிடாமல் தவிர்க்க வேண்டிய காய்கறிகளை வரிசைப்படுத்தியுள்ளோம்.


இஞ்சி 

காரமான மற்றும் சூட்டை அதிகரிக்கும் காய்கறியாக இஞ்சி உள்ளது. இஞ்சி இயற்கையாகவே நமது உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை உடைய காய்கறி வகையைச் சேர்ந்தது. அதன் காரத்தன்மைதான் சூட்டை அதிகரிக்கும் குணத்தைக் கொடுக்கிறது. எனவே, உடல் சூட்டைக் குறைக்க நீங்கள் நினைத்தால், இஞ்சி சாப்பிடுவதை குறைக்கவும் அல்லது தவிர்க்கவும். ஆனால், சிறதளவு இஞ்சியை உடலில் சேர்த்துக் கொண்டால் அது உடலுக்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பெருமளவு இஞ்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் சூடு அதிகரித்து கெட்டுவிடும்.


மிளகாய் 

மிளகு குடும்பத்தைச் சேர்ந்த காய்கறிகளான மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாய் ஆகயிவற்றில் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் குணங்கள் நிறைய உள்ளன. உடலின் இரத்த ஓட்டத்தை தூண்டக் கூடிய குணமுடைய மிளகாயில், உடல் சூட்டை அதிகரிக்கும் குணம் உள்ளது. எனவே மிளகாய் சாப்பிடும் போது சற்றே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மேலும், நமது வாயில் உள்ள தோல் பகுதியை எரிக்கும் தன்மையும் மிளகு, மிளகாயின் காரத்திற்கு உண்டு - உஷார்.


கேரட்

 'பக்ஸ் & ஃபன்னி' முயல் குட்டியின் பேவரைட் சாப்பாடான கேரட்டில் உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை அளவற்ற வகையில் உள்ளது என்பதை நம்பித்தான் ஆக வேண்டும். அதன் உறுதியான வண்ணம் உடலின் இரத்த ஓட்டத்தை பராமரிக்க மிகவும் உதவியாக இருக்கும் அதே நேரத்தில், அதன் மூலம் உடல் சூடும் அதிகரிக்கும் என்பதை மறக்க வேண்டாம். எனவே, உஷ்ணத்தை அதிகரிக்கும் கேரட்டை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்ப்பது நலம்.


வெங்காயம்

எந்தவொரு உணவிலும் காரத்தை கூட்ட உதவும் காய்கறியாக வெங்காயம் உள்ளதால் தான், பல்வேறு சுவை மிக்க உணவுகளின் தயாரிப்பிலும் வெங்காயத்திற்கு பங்கு உள்ளது. ஆனால் இந்த வெங்காயத்தை அதிகளவு உட்கொண்டால், அதன் மூலம் ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படுகிறது என்ற உண்மையை நாம் அறியும் போது, வெங்காயம் உரிக்காமலே நமக்கு கண்ணீர் வந்து விடும். உடல் சூட்டை அதிகரிக்கும் குணமுடைய வெங்காயத்தை எடுத்து, உங்கள் கையின் அக்குளில் வைத்தால் உடல் சூடு தானாக மேலேறத் துவங்கி, உங்களுக்கு காய்ச்சல் வந்து விட்ட உணர்வை ஏற்படுத்தி விடும். எனவே, உடல் சூடு தொடர்பான பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் வெங்காயத்திற்கு சொல்லுங்கள் 'NO'.


பச்சை இலைக் காய்கறிகள் 

கீரைகள், பசலை கீரை மற்றும் பிற பசுந்தழைக் காய்கறிகள் உடலுக்கு மிகவும் நன்மை தரும் என்று படித்திருப்போம். அவற்றில் அதிக அளவில் ஆக்ஸிஜன் எதிர் பொருட்கள் இருப்பதால், அவை மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளன. ஆனால், அதே பச்சை இலைக் காய்கறிகளில் புரதங்களும் அதிகளவில் உள்ளன. எனவே, அவற்றை சாப்பிடும் போது உடலில் சேரும் புரதங்களால் பெருமளவு வெப்பம் உடலில் உருவாகும். எனவே, உடலுக்குள் சூடு ஏற்படும் பிரச்சனையை நீங்கள் எதிர்கொண்டிருந்தால், பச்சை இலைகள் உள்ள காய்கறிகளை தவிர்ப்பது நலம்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு! 

மேலே படித்த காய்கறிகள் எல்லாம் உடல் சூட்டை கூட்டக் கூடியவை தான். ஆனால், சத்தான இந்த காய்கறிகளை அளவாக உட்கொள்ளும் போது உடலுக்கு எந்தவித கெடுதலும் ஏற்படாது. எனவே, காய்கறிகளை முழுமையாக தவிர்த்து விடாமல், அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களை மனதில் கொண்டு, நமக்குத் தேவையான அளவில் மட்டும் சாப்பிடுவது நல்லது.


Thursday, December 5, 2013

காற்றிலே கலந்து காணாமல் போகும்... சீனாவின் விசித்திர ‘இன்விசிபிள் மேன்’ போலின்

காற்றிலே கலந்து காணாமல் போகும்... சீனாவின் விசித்திர ‘இன்விசிபிள் மேன்’ போலின் 



இசையைக் கேட்டு காற்றில் கரைந்து போனேன்... காதலில் காணாமல் போனேன் என வசனம் பேசும் ஆசாமிகளைப் பற்றிக் கேள்விப் பட்ட்டிருப்பீர்கள். 

ஆனால், இந்த சீனாக்காரர் உண்மையிலேயே காற்றில் கலந்து கண்களுக்கு மறைந்து விடுகிறார். அதற்காக இவர் ஏதோ பெரிய மாயாஜால மந்திரவாதி எனத் தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள். 

விசிட்டிங் புரொபசராக பணியாற்றி வரும் இவரது வித்தைகளை நீங்களும் கொஞ்சம் பாருங்களேன்.... 

கலை வல்லுநர்.... 

சீனாவின் சாண்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் லு போலின். ஃபைன் ஆர்ட்ஸ் முதுகலை முடித்துள்ளார்.

மறைந்து போகும் கலை.... 

கலைத்துறையில் ஆர்வம் மிக்க போலின் கண்டறிந்தது தான் ‘ மறைந்து போகும் கலை'. கலையோடு ஐக்கியமாகி இவரின் கைவண்ணம் மிளிர்கிறது.

இன்விசிபிள் மேன்.... 

உலகத்தின் ஆறு முன்னணி பல்கலைக்கழகங்கள் இவரை தங்களது விசிட்டிங் புரொபசராக பணிக்கு வைத்துள்ளன. மக்கள் இவரை செல்லமாக ‘இன்விசிபிள் மேன்' என்றே அழைக்கிறார்கள்.

நகரத்துக்குள் மறைந்து போதல்.... '

நகரத்துக்குள் மறைந்து போதல்' என்கிற தலைப்பில் சீனா முழுவதும் சென்று மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் இடத்தில் அந்த இடத்தில் உள்ள சுவர், மேஜை, நாற்காலி போல தன்னையும் வரைந்து கொண்டு மறைந்து போய் விடுகிறார் போலின்.

வாழ்க்கை ஒரு புத்தகம்.... 

உதாரணத்திற்கு புத்தகக் கடையின் ரேக்கில் இருக்கும் புத்தகங்கள் போலவே உடலில் வரைந்து கொண்டு, பார்ப்பதற்கு புத்தகங்கள் போலவே நின்று கொள்கிறார்.

படிக்கட்டு மனிதர்... 

இதுபோலவே, காய்கறிக்கடை, படிக்கட்டுகள், சுவர்கள் எதுவாக இருந்தாலும் அது மாதிரியே தன் உடையில் வரைந்து ‘காணாமல்' போய் விடுகிறார் போலின்.

இன்னும் சில.... 

இதோ, உங்களுக்காக போலினின் மேலும் சில அற்புதப் படைப்புகள்.... இந்த சேர்களில் அவர் எங்கு உட்கார்ந்திருக்கிறார் என உங்களால் உடனடியாக அனுமானிக்க முடிகிறதா...

மரக்கட்டைகள் நடுவில்... 

மரக்கட்டைகளோடு மரக்கட்டையாக நின்று கொண்டிருக்கிறார் போலின். எப்படித்தான் மனுசர் அசராமல் லொகேஷன் மாத்துகிறாரோ....

இங்கே பாருங்கள்.... 

வண்டியோடு நின்று கொண்டிருக்கும் போலினை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமமான வேலை தான். இருந்தாலும் முயற்சி செய்து பாருங்களேன்....

ஆவி எல்லாம் இல்லீங்க.... 

இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் போது, இந்தக் காவலர் ஏதோ ஆவியுடன் இருப்பது போன்ற மாயை ஏற்படுகிறதல்லாவா... அது போலின் தான்.

திகில் அனுபவம்.... 

திகில் படங்களில் பார்த்திருப்போமே, ஆங்காங்கே ஒரு நிழலுருவம் யார் கண்ணுக்கும் புலப்படாமல் உலா வருவது மாதிரி, அந்த மாதிரி போலின் நிற்கிறார் பாருங்கள்....

கண்ணை நம்பாதே... உன்னை ஏமாற்றும் 

இவரது பலப் புகைபடக்களைப் பார்க்கும் போது, என்னாமா யோசிச்சுருக்கான்யா மனுஷன்' என வியக்காமல் இருக்க முடியவில்லை. அந்தளவிற்கு கண்களை ஏமாற்றுகிறார் போலின்....

தேடித் தேடிப் பார்த்தேனே.... 

போலினின் சில படைப்புகளை பார்க்கும் போது, நன்றாக கண்ணைக் கசக்கிக் கொண்டு ‘உண்மையிலேயே அக்கு போலின் இருக்கிறாரா...' எனத் தேடித் தான் பார்க்க வேண்டி இருக்கிறது....

சூப்பர் போலின்.... 

போலினின் ஒவ்வொரு படைப்புகளுமே அவரது கடின உழைப்பை பறை சாற்றுவதாக அமைந்துள்ளது மறுக்க இயலாது....

கைண்ட் அண்டென்சன் ப்ளீஸ்.... 

மிஸ்டர் போலின், தயவு செஞ்சு எங்க ஊர்ப்பக்கம் வந்துடாதீங்க... உங்க உடம்புல ஏதாவது அரசியல் சின்னத்தை வரைந்து தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன் படுத்த ஆரம்பிச்சிடுவாங்க... ஹி...ஹி...ஹி...

















'சிம்பன்சிக்கு சட்டரீதியான நபர் என்ற அந்தஸ்து தேவை'

'சிம்பன்சிக்கு சட்டரீதியான நபர் என்ற அந்தஸ்து தேவை'



சிம்பன்சி மனிதக் குரங்குகளை சட்ட ரீதியான ஆளாக அங்கீகரிக்க வேண்டும் என்று நியூயார்க் நீதிமன்றம் ஒன்றில் அமெரிக்க விலங்கு உரிமைக் குழு ஒன்று மனுத்தாக்கல் செய்துள்ளது.

மனிதரல்லாதோரின் உரிமைக்கான திட்டம் என்னும் பெயரைக் கொண்ட அந்த அமைப்பு ''டொமி'' என்னும் சிம்பன்சி ஒன்றுக்கு ''சட்ட ரீதியான ஆளந்தஸ்து'' கிடைக்க வேண்டும் என்றும்,அதன் மூலம் அது, ''உடலியல் சுயாதீனத்துக்கான அடிப்படை உரிமைகளைப் பெறும்'' என்றும் கூறுகிறது.

நியூயார்க்கில் வேறு இடங்களில் உள்ள மேலும் மூன்று மனிதக் குரங்குகளுக்காகவும் இதே மாதிரியான மனுவை தாக்கல் செய்ய அந்த அமைப்பு விரும்புகிறது.

இந்த நான்கு மனிதக் குரங்குகளும் அவை வைக்கப்பட்டிருக்கும் ஆய்வுக்கூடங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, மனிதக் குரங்குகளுக்கான ஒரு சரணாலயத்தில் எஞ்சியிருக்கும் நாட்களைக் கழிக்கவேண்டும் என்றும் அந்த அமைப்பு கோருகின்றது.

அந்த மனிதக் குரங்குகள் சுயாதீனமானவை என்று நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவற்றுக்கு 'சட்ட ரீதியான ஆளந்தஸ்து கிடைத்துவிடும் என்று அந்த அமைப்பு கூறுகின்றது.

அந்தக் குரங்குகளுக்கு சுயநிர்ணயம், சுய விழிப்புணர்வு, தமது வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை தெரிவு செய்யும் வாய்ப்பு எல்லாம் இருக்க வேண்டும் என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.

இந்த வழக்கில் பொதுவாக சட்டவிரோதமாக மனிதர்கள் அடைத்துவைக்கப்படுவதற்கு எதிராக பிரயோகிக்கப்படும் 'ஹேபியஸ் கார்ப்பஸ்' (ஆட்கொணர்வு மனு ) என்ற பழங்கால உரிமையை இந்த அமைப்பு பயன்படுத்தியிருக்கிறது.

18ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொடுக்கப்பட்ட அடிமை வர்த்தகத்துக்கு எதிரான வழக்குகளும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த வழக்குக்கு ஆதாரமாக விஞ்ஞான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

கடத்தப்பட்ட கதிரியக்கப் பொருளடங்கிய வாகனம் மீட்பு

கடத்தப்பட்ட கதிரியக்கப் பொருளடங்கிய வாகனம் மீட்பு


மெக்சிகோ சிட்டியில் செவ்வாய்க்கிழமையன்று கதிரியக்க பொருட்களைக் கொண்டு சென்று, கடத்தப்பட்ட ட்ரக் வண்டியைக் கைப்பற்றியுள்ளதாக மெக்சிகோ அதிகாரிகள் கூறுகின்றனர்.

கோபால்ட்-60 எனப்படும் அந்த கதிரியக்க பொருள் அதன் பாதுகப்பு கொள்கலனிலிருந்து வெளியே எடுக்கப்பட்டிருந்தது, ஆனால் அது அருகிலேயே இருந்தது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அதைத் திருடியவர்கள், உயிருக்கு ஆபத்தான அளவிலான கதிரியக்கத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும், ஆனால் சுற்றுப்புறப் பகுதியில் இருக்கும் மக்களின் உடல் நலத்திற்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் கதிரியக்க சிகிச்சை இயந்திரம் ஒன்றை, வடக்கு நகரமான திஜுவானா என்ற ஊரின் மருத்துவமனையில் இருந்து, இந்த வாகனம் கொண்டு சென்றுகொண்டிருந்தது.

ஒரு பெட்ரோல் நிலயத்தில் தன்னை தாக்கி அந்த வாகனத்தை இரண்டு நபர்கள் எடுத்துச் சென்றதாக அதன் ஓட்டுனர் தெரிவித்துள்ளார். திருடியவர்களுக்கு அந்த வாகனத்தின் உள்ளே என்ன பொருட்கள் உள்ளதென்று தெரிந்திருக்காது என்றும் அந்த ஓட்டுனர் கூறினார்.

சர்வதேச சந்தையில் யூரோவை முறியடித்த சீனாவின் யுவான்!

சர்வதேச சந்தையில் யூரோவை முறியடித்த சீனாவின் யுவான்! 




உலகில் அதிகம் புழங்கப்படும் இரண்டாவது நாணயம் என்ற பெருமையை யூரோவிடமிருந்து தட்டிப் பறித்திருக்கிறது சீனாவின் யுவான். 

உலக சந்தையில் பயன்பாட்டு அளவில் இதுவரை யூரோதான் அதிக அளவு பயன்பாட்டில் இருந்தது. அதன் சந்தை பங்களிப்பு 6.64 சதவீதமாகும். 

ஆனால் இதனை முறியடிக்கும் வகையில் சந்தைப் பயன்பாட்டில் 8.66 சதவீதம் எனும் அளவுக்கு யுவான் அல்லது ரென்மின்பி (RMB)யின் சந்தைப் பயன்பாடு அதிகரித்துள்ளது. 

இதனை சர்வதேச இன்டர்பேங்க் பைனான்சியல் டெலிகம்யூனிகேஷன்ஸின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

உலகளாவிய வர்த்தகத்தை தீர்மானிப்பது இன்றைக்கும் அமெரிக்க டாலர்தான். அதன் சர்வதேச பங்களிப்பு 81.08 சதவீதமாகும். 

இப்போதைய நிலவரப்படி, சீனாவின் யுவான்தான் சர்வதேச அளவில் அதிகப் புழக்கத்தில் உள்ள ஆசிய நாணயமாகும். 

சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அதிக அளவில் யுவானைப் புழக்கத்தில் வைத்துள்ளன. பாகிஸ்தானிலும் யுவான் அதிகம் புழங்குவது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் இலங்கையும் இந்தப் பட்டியலில் இடம்பெறக் கூடும்!

 டாலருக்கு நெருக்கடி தரும் அளவுக்கு சர்வதேச பொருளாதாரத்தில் யுவானின் பங்களிப்பை அதிகரிக்கும் வேலையில் தீவிரமாக உள்ளது உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசான சீனா.


தி அப்சர்வர்: இன்று உலகின் முதல் ஞாயிறு செய்தித்தாளின் பிறந்த நாள்...

தி அப்சர்வர்: இன்று உலகின் முதல் ஞாயிறு செய்தித்தாளின் பிறந்த நாள்... 



கிட்டத்தட்ட 222 ஆண்டுகளுக்கு முன்பு இன்று தான் உலகின் முதல் ஞாயிறு செய்தித்தாள் வெளியிடப்பட்டது. 

தி அப்சர்வர் என்ற பெயரில், 1791 டிசம்பர் 4ம் தேதி தான் முதல் ஞாயிரு செய்தித்தாள் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. ஆரம்பத்தில் அரசு மானியத்துடன் வெளிவந்த இந்த செய்தித்தாளை டபிள்யூ.எஸ்.போர்ன் என்பவர் வெளியிட்டார்.

16 ஆசிரியர்கள்.... 

எபிள்யூ.எஸ்.போர்ன்க்குப் பிறகு கிட்டத்தட்ட எட்டு பேரிடம் கைமாறிய ‘தி அப்சர்வர்' செய்தித்தாளில், இதுவரை 16 பேர் ஆசிரியர்களாக இருந்துள்ளனர்.

இரண்டு நூற்றாண்டுகள்.... 

222 வருடங்களாக வெளியாகும் அப்சர்வர் தற்போது 2லட்சத்து 16 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனையாகிறது. கால ஓட்டத்திற்கேற்ப அதன் வளர்ச்சியும் வேறுபட்டது.

மறுப்பு.... 

உளவாளி என குற்றம்சாட்டப்பட்டு, பர்சாத் பசோப்ட் எனும் அப்சர்வரின் செய்தியாளர் 1990ல் ஈராக்கில் தூக்கில் போடப்பட்டார். பிறகு அது தவறான தகவல் என மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.

இணையத்தில்.... 

2005ல் இணைய உலகில் அடியெடுத்து வைத்த அப்சர்வர், பத்திரிகையின் உள்நிர்வாகத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மக்களுக்கு பகிரங்கப்படுத்துகிற பழக்கத்தை மக்களிடம் தொடங்கி வைத்தது.

எகிப்தில் தடை.... 

2008ல் முகமது நபி பற்றிய கார்ட்டூன்களை வெளியிட்டதால் எகிப்தில் அப்சர்வர் தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தி கார்டியன்... 

தி அப்சர்வரின் சகோதர பத்திரிகையாக தி கார்டியன் எனும் புகழ்பெற்ற நாளிதழ் வெளியாகிறது.

நியூஸ் ரூம்.... 

தங்களின் அனைத்து ஆவணங்களும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் லண்டன் நகரில் நியூஸ் ரூம் என்ற மையத்தை அப்சர்வரும் கார்டியனும் இணைந்து நடத்துகின்றன.

இணைய ஆவண வசதி.... 

1791 முதல் 2003 வரை அப்சர்வரின் பழைய பத்திரிகைகள் இணைய தளத்திலும் கிடைக்கும் வசதியை 2007ல் அறிமுகப் படுத்தியது அப்சர்வர்.


கமராவை தூக்கி சென்ற கழுகு! 110 கி.மீ. படம் பிடித்த அதிசயம்!

கமராவை தூக்கி சென்ற கழுகு! 110 கி.மீ. படம் பிடித்த அதிசயம்!



அவுஸ்திரேலியாவில் முதலைகளை கண்காணிக்க வைத்திருந்த கமராவை கழுகு ஒன்று தூக்கி சென்று 110 கி.மீ. தூரத்தில் வீசியுள்ளது. கமரா செயற்பாட்டில் இருந்ததால் கழுகு பறந்த 110 கி.மீ. தூரமும் அதில் பதிவாகி இருப்பது அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் வன பாதுகாவலர்கள் மே என்ற பகுதியில் மார்க்கரெட் ஆற்று பகுதியில் முதலைகளை கணக்கிடுவதற்காக சென்சார் பொருத்தப்பட்ட கமராவை வைத்திருந்தனர். 

இந்த கேமரா 10 முதல் 15 செ.மீ. நீளமும், 5 செ.மீ. அகலமும் கொண்டது. இது நீரில் விழுந்தாலும் பாதிக்காமல் இயங்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, December 4, 2013

‘தேங்க்ஸ் கிவ்விங் டே’ அன்று இறைவனடி சேர்ந்த உலகின் அசிங்கமான நாய் ‘எல்வுட்’

‘தேங்க்ஸ் கிவ்விங் டே’ அன்று இறைவனடி சேர்ந்த உலகின் அசிங்கமான நாய் ‘எல்வுட்’



அழகான பொருட்கள் தான் இனிமையான நினைவுகளில் நிற்கும் என்றில்லை. சில சமயங்களில் இதற்கு நேர் மாறாகவும் நடப்பதுண்டு. இறைவன் படைப்பில் ஒவ்வொரு பொருளுக்குமே அதற்கென்று தனிச்சிறப்பு உண்டு. 

அந்தவகையில், உலகின் மோசமான அழகற்ற நாய் என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்ற அமெரிக்க நாயான எல்வுட், கடந்த வாரம் மரணமடைந்துள்ளது. அமெரிக்காவே தேங்க்ஸ் கிவ்விங் டேயை விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருக்க, எல்வுட்டின் மரணத்தால் அதன் ரசிகர்கள் மட்டும் சோகத்தில் மூழ்கிப் போயினர்.

எல்வுட்.... 

அமெரிக்காவின் நியூஜெர்ஸி யைச் சேர்ந்த கரேன் குவிக்லிக்கு சொந்தமான நாய் எல்வுட். இந்த நாய், சைனீஸ் கிரெஸ்டட், சிகுவாகுவா ஆகிய நாய் இனங்களின் கலப்பினம்.


அழகற்ற நாய் பட்டம்... 

கடந்த 2007-ம் ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற உலகின் மிகவும் அழகற்ற நாய் என்ற போட்டியில் பங்கேற்ற எல்வுட், மிக எளிதாக பட்டத்தைத் தட்டிச் சென்றது.

வித்தியாசமான முகம்... 

எப்போதும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் எல்வுட், சற்று மூடிய கண்களுடனும், தலையில் விசித்திரமான வெள்ளை முடிக் கற்றைகளுடன் மிகவும் வித்தியாசமாக இருந்ததே அது பலரையும் ஈர்க்க முக்கியக் காரணமாக அமைந்தது.

ரசிகர் பட்டாளம்.... 

பட்டத்தை வென்ற எல்வுட்டின் புகழ், அமெரிக்கா மட்டுமின்றி பிரேஸில், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் பரவத் தொடங்கியது. எல்வுட்டின் ரசிகர்கள் வட்டம் உலக அளவில் அதிகரித்தது.


திடீர் மரணம்.... 

இந்த உலகில் அழகற்றது என்று எதுவுமே இல்லை. ஒவ்வொரு உயிரினமும் அதற்குரிய லட்சணங்களுடனும் தனித்தன்மையுடனும் அழகாகப் படைக்கப் பட்டிருக்கிறது என்ற கூற்றுக்கு உதாரணமாக திகழ்ந்த எல்வுட், எதிர்பாராத விதமாக கடந்த வாரம் தனது 8வது வயதில் மரணமடைந்தது.

எவ்ரி ஒன் லவ்ஸ் எல்வுட்.... 

தனது நாய் எல்வுட்டை மிகவும் நேசித்த அதன் உரிமையாளர் குவிக்லி, ‘எவ்ரி ஒன் லவ்ஸ் எல்வுட்' என்ற தலைப்பில் குழந்தை களுக்கான புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

குறுகிய காலத்தில்.... 

தனது செல்ல நாயான எல்வுட் குறித்து குவிக்லி நினைவு கூறியதாவது, ‘மிகவும் சிறிய நாயான எல்வுட், தான் வாழ்ந்த குறுகிய காலத்திலேயே பலரின் அபிமானத்தைப் பெற்றுள்ளது. எல்வுட்டை நேரில் பார்க்காதவர்கள் கூட, அதன் மீது அன்பு செலுத்தியது நெகிழ்ச்சியாக உள்ளது. கடந்த வாரம் வியாழக்கிழமை (நவம்பர் 28) தேங்ஸ் கிவ்விங் டே (அறுவடைத் திருநாள்) அன்று திடீரென நோய்வாய்ப்பட்டு எல்வுட் உயிரிழந்தது. இறப்புக்கான காரணம் தெரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.


Tuesday, December 3, 2013

மனைவிக்கு 15 நாள், லிவ் இன் பார்ட்னருக்கு 15... ஆளுக்கு ஒரு ரூம்.. லோக் அதாலத் அதிரடி தீர்ப்பு!

மனைவிக்கு 15 நாள், லிவ் இன் பார்ட்னருக்கு 15... ஆளுக்கு ஒரு ரூம்.. லோக் அதாலத் அதிரடி தீர்ப்பு!



ம.பி.: மனைவிக்கு 15 நாளும், லிவ் இன் பார்ட்னருக்கு 15 நாள் என்றும் ஒதுக்கி இருவரையும் சம அளவில் பாவிக்குமாறு மத்தியப் பிரதேச மாநிலலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அங்குள்ள லோக் அதாலத் கோர்ட் அறிவுரை கூறியது சலசலப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லிவ் இன் உறவுகளில் தவறில்லை, அதை 8 நெறிமுறைகளுடன் கடைப்பிடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்தியப் பிரதேசத்தில் ஒரு வினோதமான வழக்கில் வித்தியாசமான தீர்ப்பை அளித்துள்ளது லோக் அதாலத் நீதிமன்றம்

மனைவி, மற்றும் லிவ் இன் பார்ட்னருடன் வசிக்கும் ஒரு நபரை, இருவரையும் சமமாக பாவிக்குமாறும், சமமாக நேரம் ஒதுக்கிக் கவனிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது அந்த லோக் அதாலத்.

காதலிக்கு அதிக நேரம்.. மனைவிக்கு ஓர வஞ்சனை

இந்த நிலையில், மனைவியை விட அதிக நேரம் காதலிக்கு ஒதுக்கி வந்தாராம் இந்த ரிடையர்ட் ஆசாமி. மேலும் காதலியை தனது வீட்டுக்கே கூட்டி வந்து விட்டார்.

லோக் அதாலத்துக்குப் போன மனைவி

இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி லோக் அதாலத்தில் வழக்குப் போட்டார். தன்னிடம் பாரபட்சமாகவும், காதலியிடம் அதிக பாசம் காட்டியும் கணவர் நடந்து கொள்வதாக அவர் முறையிட்டார்.

லோக் அதாலத்தின் அட்டகாச தீர்ப்பு

இந்த வழக்கை நீதிபதி கங்கா சரண் துபே விசாரித்தார். பின்னர் அவர் அதிரடியான உத்தரவைப் பிறப்பித்தார். அவரது தீர்ப்பைப் பாருங்கள்...

ஒரே வீட்டில் வசிக்கலாம்

மனைவியும், காதலியும் ஒரே வீட்டில் வசிக்கலாம்.

ஆளுக்கு 15 நாள்

ஒரு மாதத்தில் மனைவிக்கு 15 நாட்களையும், காதலிக்கு 15 நாட்களையும் பிரதிவாதி ஒதுக்க வேண்டும்.

ஆளுக்கு ஒரு ரூம்

பிரதிவாதியின் வீட்டில் மொத்தம் 3 அறைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மனைவிக்கு ஒரு அறை, காதலிக்கு ஒரு அறை என ஒதுக்கித் தங்கிக் கொள்ள வேண்டும். நடுவில் உள்ள அறை பிரதிவாதிக்கானது. அதில் அவர் தங்கிக் கொள்ளலாம்.

நடுரூமிலிருந்து ரெண்டு ரூமுக்கும் கதவு வைங்க..

இந்த நடு ரூமிலிருந்து மனைவியின் ரூமுக்கும், காதலியின் ரூமுக்கும் போய் வருவதற்கு வசதியாக கதவு வைத்துக் கொள்ள வேண்டும்.

மனைவிக்கும், காதலிக்கும் சம பங்கு

பிரதிவாதியின் அசையும், அசையா சொத்துக்களில் அவரது மனைவிக்கும், காதலிக்கும் சம பங்கு உண்டு... இதுதான் நீதிபதியின் தீர்ப்பாகும்.

பிப்ரவரி மாதம் எப்படி... ??!!!

இந்தத் தீர்ப்பில் 29 நாட்கள் வரும் பிப்ரவரி மாதத்தில் பிரதிவாதி எப்படி பிரித்துக் கொள்ள வேண்டும், 31 நாட்கள் வரும் மாதங்களில் அவர் எப்படி நாள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.

நிலவின் சுற்றுவட்ட பாதையை கடந்தது மங்கல்யான்

நிலவின் சுற்றுவட்ட பாதையை கடந்தது மங்கல்யான்



செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ரூ.450 கோடி செலவில் உருவாக்கப்பட்ட மங்கல்யான் விண்கலம் பி.எஸ்.எல்.வி சி-25 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 5ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியை சுற்றிக் கொண்டிருந்த மங்கல்யான் விண்கலம், நேற்று முன்தினம் அதிகாலை 12.49 மணியளவில் புவி சுற்றுவட்ட பாதையில் இருந்து வெற்றிகரமாக விலக்கப்பட்டது. மங்கல்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள நியூட்டன் திரவ இன்ஜின் சுமார் 20 நிமிடங்கள் இயக்கப்பட்டு,  விண்கலத்தை புவி சுற்றுவட்டபாதையிலிருந்து விலக்கி செவ்வாய் கிரகத்தை நோக்கி செல்ல வைக்கும் ‘டிரான்ஸ் மார்ஸ் இன்ஜெக்ஷன்’ என்ற சிக்கலான பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செய்தனர். 

செவ்வாய் கிரகத்தை நோக்கிய 300 நாள் பயணத்தை மங்கல்யான் நேற்று முன்தினம் வெற்றிகரமாக தொடங்கியது. தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையையும் கடந்து மங்கல்யான் சென்று கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 10 லட்சம் கி.மீ தூரம் மங்கல்யான் பயணிக்கிறது. இந்திய விண்கலம் நிலவின் சுற்றுவட்டபாதையை கடந்து விண்வெளியின் வெகு தூரத்தில் பயணிப்பது இதுவே முதல் முறை. மங்கல்யான் பயணத்தை பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 

Monday, December 2, 2013

ஏர்பஸ் மிலிடரி A400M ராணுவ விமானத்தின் கன்னிப் பயணமும், கடைசிப் பயணமும்!

ஏர்பஸ் மிலிடரி A400M ராணுவ விமானத்தின் கன்னிப் பயணமும், கடைசிப் பயணமும்!



 
ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனம் ஏர்பஸ்ஸின் ராணுவ பிரிவான ‘ஏர்பஸ்-மிலிடரி’ (‘Airbus Military’), தமது முக்கிய விமானம் ஒன்று ஓய்வு பெறுவதை அறிவித்துள்ளது. ஏர்பஸ் மிலிடரி A400M ராணுவ விமானம் 1-வது தடவை கன்னிப் பயணமாக வானில் பறந்த தேதியில் இருந்து சுமார் 4 வருடங்களின் பின், தனது இறுதி பயணத்தை முடித்து தரையிறங்கியது.

கன்னிப் பயணத்தின்போது அந்த விமானத்தை இயக்கிய அதே விமானிகள் மற்றும் பிளைட் எஞ்சினியர்கள்தான், இறுதி பிளைட்டையும் இயக்கினர் 



விமானம் அறிமுகப்படுத்தப்பட்டு 4 ஆண்டுகளில் ஓய்வு பெறுகிறது என நாம் எழுதியதால், விமானத்தில் ஆயுள் காலமே அவ்வளவுதானா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இதை அப்படி பார்க்க கூடாது.






எந்தவொரு புதிய மாடல் விமானத்தை டிசைன் செய்யும்போதும், தயாரிக்கப்படும் 1-வது விமானம் விற்பனைக்காக தயாரிக்கப்படுவதில்லை. தயாரிக்கப்படும் 1-வது விமானத்தை Development aircraft என்பார்கள். ஏர்பஸ் மிலிடரி A400M ராணுவ விமானத்தின் 1-வது விமானம், MSN1, இந்த விமானத்தை அடுத்த அடுத்த கட்ட தயாரிப்புகளில் எப்படி மேம்படுத்தலாம் என்பதற்கான பரிசோதனைகளை செய்ய தயாரிக்கப்பட்டது.

புதிய மாடல் விமானம் ஒன்றை தயாரிக்க தொடங்கியபின், சிறிது சிறிதாக அதன் இயங்குதிறனை டெவலப் செய்வது, 1-வது விமானத்தை தொடர்ந்து பறக்க வைத்து பார்ப்பதன் மூலம்தான். புதிதாக மாற்றம் எதையாவது செய்து, 1-வது விமானத்தில் பொருத்தி பறந்து பார்த்தே, அது சரியாக உள்ளதா என்று செக்கிங் செய்வார்கள்.

அப்படி தயாரிக்கப்பட்ட 1-வது விமானம்தான், தற்போது ஓய்வு பெற்றுள்ளது. இதை, கண்காட்சிச்சாலை ஒன்றில் காட்சிக்கு வைப்பது என ஏர்பஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.



ஒரு விமானத்தின் புதிய மாடல் டிசைன் பண்ணப்படுவது, தயாரிக்கப்படுவது, அறிமுகப்படுத்தப் படுவது, அப்கிரேட் செய்வது, கஸ்டமர்களை வசப்படுத்துவது என ஒவ்வொரு ஸ்டெப்புமே, மிகவும் சுவாரசியமானவை. இதற்காகவே மில்லியன் கணக்கில் செலவிடுவார்கள். சுவாரசியமான இந்த ஸ்டெப்ஸ்களை, நாம் கொடுத்துள்ள போட்டோக்களில் பார்க்க போகிறீர்கள்.

ஏர்பஸ் மிலிடரி A400M ராணுவ விமானம், புதிய தலைமுறை விமானமாக பல நாடுகளின் விமானப்படைகளால் கருதப்படுகிறது. இந்த ரக விமானத்தின் முதலாவது கஸ்டமர், பிரான்ஸ் நாட்டு விமானப்படை.

ராணுவத்துக்காக தயாரிக்கப்படுகிறது என்பதால், இது ஒரு போர் விமானமல்ல. ராணுவ போக்குவரத்து விமானம். துருப்புக்களையும், ராணுவ தளவாடங்களையும் கொண்டுசெல்ல பயன்படுத்தப்படும் விமானம்.


ஏர்பஸ் மிலிடரி A400M ராணுவ விமானத்தின் மற்றொரு சிறப்பம்சம், இதை டேங்கள் விமானமாகவும் மாற்ற முடியும். அதாவது, வானில் வைத்து மற்றைய விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் விமானமாக இதை பயன்படுத்த முடியும். பொதுவாக அப்படியான பணிக்கு பயன்படுத்தப்படும் விமானம், வேகமாகவும், அதே நேரத்தில் மெதுவாகவும் பறக்கக்கூடிய விமானமாகவும் இருக்க வேண்டும்.

அத்துடன், அளவில் பெரிய அந்த விமானம், செங்குத்தாக மேலெழ கூடிய திறன் கொண்டதாகவும் இருக்க வேண்டும் (14-வது போட்டோவை பார்க்கவும். இந்த சைஸ் விமானங்கள் இப்படி பறப்பதை லேசில் பார்க்க முடியாது).

நம்ம பவர் ஸ்டார் படம் வெளியானாலே முதல்நாள் ஹீரோ கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதை லோக்கல் தியேட்டர் வாசல்களில் பார்த்திருப்பீர்கள். பவர் ஸ்டாருக்கே பால் அபிஷேகம் செய்வதை பார்த்த கண்களால், பிளேனுக்கு அபிஷேகம் செய்வதை பார்த்திருக்கிறீர்களா?

அதுவும் பால் அல்ல, ஷம்பெயின் அபிஷேகம்!