Friday, August 3, 2012

100 மில்லியன் வருடங்கள் பழமையான சிப்பி கண்டுபிடிப்பு


100 மில்லியன் வருடங்கள் பழமையான சிப்பி கண்டுபிடிப்பு : சாதாரண சிப்பியை விட 10 மடங்கு பருமனுடன் காணப்படும் இச் சிப்பியே உலகில் மிகப் பெரிய முத்தை உடையதென எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் ஆராயப்படுகின்றது


உலகில் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டதில் மிகப்பெரிய முத்தினைக் கொண்டதாக இருக்கும் என நம்பப்படும் சிப்பி ஒன்றின் தொல்லுயிர் எச்சத்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இவ் எச்சம் 145 மில்லியன் வருடங்கள் பழமையானதெனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள் சிலரால் கண்டெடுக்கப்பட்ட இச்சிப்பி பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் எம். ஆர்.ஐ ஸ்கேனிங் தொழில்நுட்பத்தின் மூலம் சிப்பிக்குள் என்ன இருக்கின்றது என்பது தொடர்பில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சிப்பிக்குள் கோல்ப் பந்து அளவிலான பொருள் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது முத்தாக இருக்குமென ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

இது சாதாரண முத்தினை விட 10 மடங்கு பெரியதாகும்.

ஆனால் சிப்பிக்குள் இருக்கும் முத்தினை வெளியே எடுப்பதற்கு விஞ்ஞானிகள் மறுப்புத் தெரிவித்து விட்டனர்.

முத்தினை எடுப்பதற்காக மிகப்பழமையான சிப்பியை சிதைக்க நேரிடும் என்ற காரணத்தினாலேயே ஆராய்ச்சியாளர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.








.

உயிர் வாழும் உரிமைக்கு உலை வைக்கும் மரபணு தொழில்நுட்பம்


உயிர் வாழும் உரிமைக்கு உலை வைக்கும் மரபணு தொழில்நுட்பம்




தக்காளிக்குள் மீனின் மரபணு

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் தக்காளியில் மீனின் மரபணுவும் உள்ளது. நீங்கள் வெஜிடேரியனா? சிகிச்சை மற்றும் பல காரணங்களுக்காக புலால் உணவு தவிர்ப்பவரா? அப்படியானால் இன்னுமொரு கூடுதல் அதிர்ச்சியும் காத்திருக்கிறது. தக்காளிக்குள் தவளையின் மரபணுவும் உள்ளது. இந்தத் தகவல் உங்களுக்கு குமட்டலை ஏற்படுத்தினாலும் அதிர்ச்சியில் மயக்கமே வந்தாலும் இது தான் உண்மையாகும். எந்த உண்மையும் சற்று கசக்கவே செய்யும் என்பார்கள். ஆனால் இந்த உண்மை கசக்க மட்டும் செய்யாது பலவீனமானவர்களுக்கு மாரடைப்பையே ஏற்படுத்தும்.

இவையெல்லாம் மரபணு தொழில்நுட்பம் என்ற பெயரில் நடைபெற்று வரும் காய்கறி உற்பத்திகள். இந்தத் துறையில் இன்னும் நடைபெறப்போகும் சில உண்மைகளைக் காண்போம். நீங்கள் உங்கள் நண்பரின் பிறந்த நாள் பரிசாக பூங்கொத்து ஒன்றைக் கொடுக்கும்போது அதை மல்லிகை மணம் கொண்ட பச்சை வண்ணத் தாமரை மலராகக் கூட கொடுக்கலாம். அந்த நண்பரின் விழாவில் விருந்தாக பழங்களும் உணவு வகைகளும் சதுரமாகவும் நீளமாகவும் வழங்கப்படலாம். விழா வானவில்லின் ஏழு நிறங்களான புல் தரையில் கூட நிகழலாம். மூன்று மாதங்களுக்கு முந்தைய தக்காளியில் பழச்சாறு பிழிந்து குடிக்கலாம். அந்தத் தக்காளியும் தற்போது பறித்ததுபோல் பளபளப்பாகவும் அழகாகவும் இருக்கும். அதே சமயம் வனங்களுக்கு நீங்கள் சுற்றுலா சென்றால் அங்கே தேளின் கொடுக்கை கொண்ட யானையைப் பார்க்கலாம். பறக்கும் எட்டுக்கால் பூச்சியை நீங்கள் பார்க்க நேரிடலாம். இவை எல்லாம் காமிக்ஸ் படங்களில் வருவது போன்று அதிசயமாக இருக்கலாம். இன்னும் எவ்வளவோ வியப்புகள் உள்ளன. இவற்றை நிகழ்த்தி வருவது மரபணு பொறியியல். இப்படி ஆராய்ச்சிக்கூடங்களில் உருவாக்கப்பட்ட உயிரினங்கள் (செடிகள் உள்ளிட்ட பல வகை தாவரங்கள், விலங்குகள்) மரபிணி மாற்ற உயிரினங்கள் (genetically modified organisms) என்றழைக்கப்படுகின்றன.

தக்காளியில் தவளையும் மீனும் வருவது எப்படி? காய்கறிகளையும் பழங்களையும் சதுரமாகவும் நீளமாகவும் எப்படி உருவாக்குகிறார்கள்? எதற்காக உருவாக்குகிறார்கள்? ஏன்? இந்த கேள்விகளுக்கு பதில் காண வேண்டுமானால் நீங்கள் மரபணு தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ள வேண்டும். அறிவியலில் ஏற்பட்டுள்ள பிரம்மாண்டமான வளர்ச்சியின் முக்கிய மைல்கல்லாக மரபணு தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இது மரபணு தொழில் நுட்பம் என்றும் மரபணு பொறியியல் என்றும், உயிரியல் தொழில்நுட்பம் என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலும் ஆதரவிலும் இலாப நோக்கத்திற்காக இப்படிப்பட்ட விபரீதமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு காய்கறிகளிலும் தாவரங்களிலும் விலங்குகளிலும் மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டு அவை மக்களின் பயன்பாட்டிற்காக சந்தையில் விடப்பட்டுள்ளன. முதலில் மரபணு தொழில் நுட்பம் மிக முன்னேறிய தொழில் நுட்பம் என்றும் மனிதனுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் உயிர் வாழும் உரிமைக்கும் இயற்கைக்கும் எதிரானதாக மரபணு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.™ எனவே சமூக மாற்றத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் பாடுபடுபவர்கள் மரபணு தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

மரபிணிகள் (Genes) எனப்படுபவை உயிரினங்களின் மரபியல் பண்புகளைத் தலைமுறை தலைமுறையாக சுமந்து வரும் தூதர்கள் ஆகும். உயிரினங்கள் அமீபா போன்ற ஒரு செல் நிலையில் தொடங்கி மக்கள், யானை, திமிங்கலங்கள் போன்ற பல கோடி செல்களைக் கொண்டதாகப் பல உயிரினங்கள் உள்ளன. இந்த செல்களை உயிரினங்களின் அடிப்படை அலகுகள் என்று கூறலாம். செல்களுக்குள் உட்கரு (nucleus) எனப்படும் ஒரு பகுதி உள்ளது. அதற்குள் குருமேனியன்கள் எனப்படும் குரோமோசோம்கள் உள்ளன. இவை குச்சி வடிவத்தில் காணப்படும். குரோமோசோம்களை உள்ளடக்கிய டி.என்.ஏ அமைப்பு உள்ளது. இந்த டி.என்.ஏவில் உள்ளதுதான் மரபிணிகள் ஆகும். மரபிணிகளைக் கொண்ட டி.என்.ஏ வில் குறியன்கள் எனப்படும் (codens) பண்புக்கூறுகள் உள்ளன. இவைதாம் உயிரினங்களின் உடலியல் கூறுகளைத் தீர்மானிப்பவையாகும். வம்சாவழித்தகவல்களை சுமந்து வருபவையும் இவைதான். மரபிணிப் பொறியியல் என்பது ஏற்கனவே கூறியுள்ள குறியன்கள் எனப்படும் மரபிணிக் கூற்றை மாற்றியமைப்பதாகும். அதாவது ஒவ்வொரு உயிரினமும் தனக்கேயுரிய தனித்த பண்புகளைக் கொண்டுள்ளன. (மாங்கொட்டையிலிருந்து மாமரம் வளர்வதுபோல) இவை மரபிணிகளின் அமைப்பிற்கு ஏற்ப உருவாகின்றன. ஆனால் அறிவியலாளர்கள் உயிரினங்களின் தனித்தன்மையான பண்புகளைக் கூட மாற்றி வெவ்வேறு உயிரினங்களில் அமைத்து விடுகின்றனர்.

டி.என்.ஏ விலுள்ள ஒரு மரபுக்கூற்றைத் தனியே பிரித்தெடுத்து அதே இனத்திலோ அல்லது மற்றொரு இனத்திலுள்ள மரபுக்கூற்றில் பொருத்தி புதியதொரு மாற்று மரபு கொண்ட உயிரினத்தை உருவாக்குவதாகும். மரபணு பொறியியலின் மூலம் நாம் விரும்புகின்ற உயிரினத்தையோ தாவரத்தையோ உருவாக்க முடியும். அதே போல நாம் விரும்பாத பண்பை நீக்கி விட்டு ஒரு உயிரினத்தை உருவாக்கிட முடியும். இந்த மாற்றம் திடீரென்று ஏற்பட்டதல்ல. இந்த வரலாறு அறிவியல் பல மைல்கல்களை கொண்டது.

1957ல் கிரிகர் மெண்டல் என்ற துறவியார் பட்டாணிச் செடிகளில் பல ஆய்வுகளை அவர் நிகழ்த்தி வந்தார். அவர் நிறம், உயரம் போன்றவை அடுத்தடுத்த தலைமுறைச் செடிகளுக்கும் கடத்தப்படுவதை கண்டறிந்தார். மெண்டல் அதை மரபியல் காரணிகள் என்று கருதினார். ஆனால் அவருடைய ஆய்வுகள் அப்போது யாராலும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. பின்னர் 1940களில் கனடா நாட்டு மருத்துவர் ஆஸ்வால்ட் ஆவரி, மெண்டலால் கண்டுபிடிக்கப்பட்ட மரபியல் காரணிகளை டி.என்.ஏ என்று தெளிவாக நிறுவினார். அவரும் அவருடன் உடன் பணிபுரிந்த அறிவியலாளர்களும் ஒரு நுண்ணுயிரிலிருந்து மற்ற உயிரினத்திற்கு அதை மாற்ற முடியும் எனவும் கண்டறிந்தனர். 1953ல் வாட்சனும் கிரிக்கும் முப்பரிமான டி.என்.ஏ அமைப்பை இரட்டைத்தன்மை வடிவமுள்ளதாக கண்டறிந்தனர்.

1950முதல் 1960களுக்கு இடைப்பட்ட காலத்தில் அறிவியலாளர்கள் மரபினிச் செய்திகள் எவ்வாறு பொதிந்துள்ன? எவ்வாறு பெருக்கமடைகின்றன? தலைமுறைக்கு தலைமுறை எவ்வாறு கடத்தப்படுகின்றன? என்பனவற்றை தெளிவாகக் கண்டறிந்தனர். 1970களிலிருந்து 1980கள் வரை மரபணுவை ஒரு உயிரினத்திலிருந்து மற்ற உயிரினத்திற்கு மாற்ற முடியும் என்பதை நிருபித்தனர். இதற்காக கட்டுப்பாட்டு நொதிமங்கள் (restriction enzymes) கண்டுபிடிக்கப்பட்டன. இது அறிவியலாளர்களுக்கு மாபெரும் கருவியாக அமைந்து விட்டன. இப்போதுள்ள பல்வேறு நுண்ணுயிரிகள் இப்படிப்பட்ட நொதிமங்கள் மரபிணிக் கத்திரிகளாக உள்ளன. இவை குறிப்பிட்ட மரபினிகளை அவை சூழ்ந்துள்ள டி.என்.ஏவில் இருந்து வெட்டி எடுக்க உதவுகின்றன. பல நூறு நொதிமங்கள் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளன. மரபினிப் பொருட்களை ஒரு புதிய ஓம்புநர் உயிரிக்கு (host) மாற்றும்போது ஓட்டுதல் பணி குறிப்பிட்ட ஒரு நொதிமத் தொகுப்பால் நடைபெறுகின்றது. 1970களில் முதல் வணிக உயிரி நுட்ப மருந்து இம்முறையில் கண்டறியப்பட்டது. மனிதரின் மரபினி இன்சுலின் சுரப்பிற்கு ஒரு நுண்ணுயிரில் செலுத்தப்பட்டு புதிய வகை இன்சுலின் உருவாக்கப்பட்டது.(இப்போது நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும்பாலும் விலங்குகளின் இன்சுலின்தான் விற்கப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்க)

நுண்ணுயிரிகளில் மரபினி மாற்றம் நடத்தியவுடன் அறிவியலாளர்களின் கவனம் செடிகளுக்கு சென்றது. செடிகளில் மரபினி மாற்றப் பணி கடுமையாக இருந்தது. முதலில் சிறு நுண்ணுயிரிகளை விடக் கூடுதலான வகை மரபினிகளை அவை கொண்டிருந்தன. மேலும் இவற்றின் இவற்றின் செல்களின் சுவர்கள் ஊடுருவதற்கு கடினமாக இருந்தன. ஆனால் இயற்கையே இதற்கு ஒரு தீர்வையும் வழங்கியது. அகரச்குச்சில் (agrobacterium)என்னும் நுண்ணுயிரிச் செடிகளின் மரபினியில் இயற்கையாகவே ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்டது. இருப்பினும் அகரச்குச்சிகளால் அனைத்துச் செடிகளையும் ஊடுருவிச் செல்ல முடியவில்லை. இதற்கும் தீர்வாக நச்சுயிரிகளில் இருந்து மரபினிகளைப் பெறுகின்றனர். இதன் உச்சகட்டமாக மரபினித் துப்பாக்கி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் எந்த செடியையும் எந்த உயிரினத்தையும் நேரடியாகத் துளைக்க முடியும் அதாவது வைரஸ் மூலமாக விரும்புகின்ற மரபணுவை மரபினி துப்பாக்கியின் மூலமாக செலுத்தி உயிரினத்தில் செலுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்ட பின்னர் இலாப நோக்கிலும் பல விபரீதங்களைத் தொடங்கினர். ஏனெனில் இந்த மரபினித் துப்பாக்கியின் உரிமையை டூபாண்ட் என்ற பன்னாட்டு நிறுவனம் வைத்துள்ளது.

விலங்குகளின் கருமுட்டையிலேயே உள்ள மரபணுவை மாற்றத் தொடங்கினர். இதன் அடிப்படையில் புதிய இன சுண்டெலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நுண் ஊசி வழியாக சுண்டெலியின் கருவில் ஒரு மரபணுவைப் புகுத்தி மைந்து சுண்டெலி என்ற புதிய இன சுண்டெலி உருவாக்கப்பட்டது. இதே போல பிரிட்டானிய அறிவியலாளர்கள் வெள்ளாட்டையும் செம்மறி ஆட்டையும் இணைத்து வெண்மறி ஆட்டை உருவாக்கினர்.

கடையில் இருக்கும்போது தக்காளி நீண்ட நாட்களுக்கு மிகவும் கனிந்து அழுகிப்போகாமல் இருக்க வேண்டும். அது குளிர்சாதனப் பெட்டியில் வைத்தாலும் அது விரைத்துப் போய் உடைந்து விடாமல் இருக்க வேண்டும். செடியிலிருந்து பறித்த பின்னரும் அது நீண்ட நாட்களுக்கு உறுதியாகவும் புதிதாகவும் அப்போது பறித்தது போன்று பளபளப்பாக இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்வது?. அதற்கு கண்டுபிடித்த வழிமுறைதான் மீனின் மரபணுவை தக்காளியில் புகுத்துவது ஆகும். கடுமையான தட்பவெப்ப நிலைகளிலும் நீரில் இருக்கும் உயிரினங்களின் மரபணுவை தக்காளியில் சேர்ப்பது. பிளவுண்டர் என்ற ஆர்டிக் உறைபனி சமுத்திரத்திலுள்ள மீன் வகையானது இயல்பிலேயே எவ்வளவு குளிரிலும் விரைத்து விடாத தன்மையுடையது. இதனால் இம்மீன்களின் விரைத்து விடாத தன்மையைக் கொண்ட அந்த மரபணுவை தனியே பிரித்தெடுத்து தக்காளியின் டி.என்.ஏவில் சேர்த்து அதை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தாலும் விரைத்துவிடாத தன்மைகொண்ட தக்காளியாக மாற்றுகின்றனர். இதே போல கத்திரிக்காய், அரிசி, சோயா பீன்ஸ், காபி மிளகு, காலி பிளவர் முட்டைக்கோஸ் பட்டாணி, முலாம்பழம், உருளைக்கிழங்கு, நிலக்கடலை, வெண்டை, வள்ளிக்கிழங்கு, கூவைக்கிழங்கு, ஏலக்காய், மொச்சை, மாதுளை பருத்தி, சணல், உதட்டுச்சாயத்திற்கான செவ்வண்ணம் தரும் உலர் குசும்பப்பூ போன்று மரபணு ரீதியான மாற்றியமைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் நீளுகிறது. அடுத்த முறை நீங்கள் காய்கறி கடைக்குச் செல்லும் போது பளபளப்பாக அழகாக இருக்கும் காய்கறிகளைக் கண்டு மயங்கி விடாதீர்கள் எச்சரிக்கை. இந்த அழகுக்கு பின்னேதான் ஆபத்து மறைந்து கிடக்கிறது. அது என்ன ஆபத்து?

பகுதி-2

உயிர் வாழும் உரிமைக்கு உலை வைக்கும் மரபணு தொழில்நுட்பம்

மரபணுரீதியாக மாற்றியமைக்கப்பட்டவை காய்கறிகள், பழங்கள் மற்றும் பொருட்கள் மட்டுமல்ல, பல புதிய தாவர அடிப்படையிலான இனிப்பூட்டிகளும் இந்த பட்டியலில் உள்ளன. இவை சந்தைக்கு வர அணி வகுத்து நிற்கின்றன. இந்த இனிப்பூட்டிகளில் தவ்மாட்டின், மோனெல்லின், ஹெர்னாண்டல்சின், ஸ்டீவியோசை, மிராக்குலின், பிரேஸியன் போன்றவை அடங்கும். இவையெல்லாம் சக்ரோஸ் எனப்படும் சர்க்கரையைப் போல ஆயிரக்கணக்கான மடங்கு அதிகமாக இனிப்பூட்டுபவை. தாவரங்களிலிருந்து இந்த இனிப்பூட்டிகளை பிரித்தெடுப்பதற்கு அதிகமாக செலவாகும். எனவே, இந்த மரபினிகளைத் தனிமைப்படுத்தி அவைகளை பாக்டீரியாவாக மாற்றுவதை நோக்கிய ஆராய்ச்சிகள் பெருமளவில் நடைபெறுகின்றன. மரபினிப் மாற்றப்பயிர்களினால் பாதிப்புகள் இல்லையா? அந்த பாதிப்புகளை ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதில்லை.

மரபினிப் மாற்றப் பயிர்கள் மனிதர் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் ஆரோக்கியம், மண் வளம், சூழல் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளை காண்போம். முதலாவதாக மரபணுக்கள் ஒரு உடலிலுள்ள சூழலிருந்து மற்றொரு சூழலுக்கு மாற்றப்படுவதால், மாற்றப்படும் புதிய சூழலுக்கு ஒத்துப் போவது மிகவும் குறைவாகும். அங்கிருந்தே பிரச்சினைகள் தொடங்குகின்றன. செம்மறி ஆட்டையும் வெள்ளாட்டையும் இணைத்து புதிய வெண்மறி ஆட்டை உருவாக்கியது குறித்த பரபரப்பான செய்திகள்தான் ஊடகங்களில் வந்தன. ஆனால் அந்த ஆடு மலடாகி குருடாகிப்போனது பற்றி எந்த ஊடகங்களும் செய்தி வெளியிடவில்லை. பிரிட்டனிலுள்ள ஒரு ஆய்வுக்கூடத்தில் எட்டுக்கால் பூச்சிக்கு பறவையின் மரபணுவை செலுத்தினர். ஆனால் சில மணி நேரங்களில் அந்தப் பூச்சி இறந்து விட்டது. இயற்கையின் வரம்புகளை மீறினால் இப்படித்தான் நடக்கும்.

வட அமெரிக்க தேசிய அறிவியல் கழகம் தனது அறிக்கையில் மரபினிப் மாற்ற பயிர்கள் உணவில் எதிர்பாராத அழற்சிப் பொருட்களையும் நச்சுப்பொருட்களையும் உண்டாக்கும் ஆற்றல் பெற்றவை என்றும் அவை கடுமையான சுற்றுச்சூழல் விளைவுகளையும் கட்டுப்படுத்தாத உயிரிகளையும் மண்ணிலுள்ள உயிர்மங்களின் மீது தீய விளைவுகளையும் உண்டாக்கும் ஆற்றலையும் பெற்றவை என்றும் கூறுகின்றது. பூச்சி எதிர்ப்பு என்ற பெயரில் மரபணுப் பொறியியல் முறையில் தயாரிக்கப்பட்ட பி.டி பயிர்களை சுவீடன் நாட்டின் இரண்டு விஞ்ஞான பரிசோதனைக் கூடங்கள் ஆய்வு செய்தன. இந்த ஆய்வில் மரபணுப் பொறியியல் முறையில் நோவர்ட்டீஸ் என்ற சோள வகைப் பயிரிலிருந்து சோளத்தை உட்கொண்ட பசுமை நாடாப் பூச்சிகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த ஆய்வில் இந்த பயிர்களில் உள்ள பி.டி நஞ்சானது மற்ற உயிரினங்களைக் கொல்வதோடு நாம் உண்ணும் உணவிலும் நுழைந்து விடும் என்பதும் இதன் தொடர்ச்சியாக உண்ணும் உணவின் மூலம் நமது உடலில் இருக்கும் பி.டி நஞ்சானது நமது நோய்களுக்கு எந்த ஆன்டிபயோடிக் மருந்தை உட்கொண்டாலும் அதை செயல் இழக்கச் செய்து விடுகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.

கூடுதலாக, மரபணுப் பொறியியல் முறையில் உருவான பூச்சி எதிர்ப்பு நஞ்சினைத் தாவரங்களாவது தங்கள் பாகங்கள் முழுவதும் உற்பத்தி செய்யும் ஆற்றல் பெறுகின்றன. இதனால் இப்பயிர்கள் அறுவடைக்குப் பின்னர் கழிவாகிப் புதைவதனால் மண் முழுவதும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி விடுகிறது. இந்த நச்சுத்தன்மையையும் அப்பயிர்கள் உறிஞ்சிக் கொள்கின்றன. அது மற்ற உயிரினங்களான மனித குலத்திற்கு சேவை செய்யும் தேனி, சுருள் பூச்சி, வண்ணத்துப் பூச்சி மற்றும் முக்கியமாக விவசாயிகளின் நண்பனான மண் புழு ஆகியவற்றைக் கொன்று விடும். இது மட்டுமின்றி அந்த நிலங்களில் மேயும் ஆடு மாடுகள் மற்ற உயிரினங்கள் இறந்து விடுகின்றன. ஆந்திராவில் பி.டி. பருத்திச் செடியை சாப்பிட்ட 1500க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்து விட்டன. ஆந்திராவில் கரீம் நகரிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள மாமிடலப்பள்ளி கிராமத்தில் பி.டி பயிரிடப்பட்ட நிலத்தில் மேய்ந்த 12 மயில்கள் இறந்து விட்டன.

எந்தப் பூச்சிக்காக இப்பூச்சி எதிர்ப்பு நஞ்சுடன் மரபணுக்கள் செலுத்தப்படுகின்றனவோ, அந்தப்பூச்சிகள் தங்களின் உடலில் இந்த நஞ்சிற்கு எதிர்ப்பு சக்தியையும் நாளடைவில் வளர்த்துக் கொள்கின்றன. அந்தப் பூச்சியானது 3லிருந்து 5 ஆண்டுகளுக்குள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வதாக அமெரிக்க சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தனது ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளது. மண்ணின் உவர் நிலைமையை சகித்துக் கொள்ளும் மரபணுக்கள் பொருத்தப்பட்ட பயிர்கள் வளர்க்கப்படுவதால் பகுதியின் சூழல் மாசாவதோடு உவர் மண்ணுக்கேற்ப இயற்கையாக விளையும் பயிர்களுக்கு இடமில்லாத சூழ்நிலையும் ஏற்படுகிறது.
ஒரு முறை மரபணுப் பொறியியல் முறையில் உருவாக்கப்பட்ட உயிரினங்களையும் தாவரங்களையும் மீண்டும் கட்டுபடுத்த முடியாது. அவை எங்குள்ளது என்பதையும் கண்டுபிடிக்காத அளவில் பெருகி விடும். இந்த முறையில் தயாரிக்கப்படாத உயிரினங்கள், தாவரங்கள் ஆகியவற்றுடன் அவை இணைந்து பரவி விடும். ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் மரபணுப் பொறியியலுக்கு உட்படுத்தி வளர்க்கப்பட்ட பயிர்கள் 200 மீட்டர் வரை பரவியுள்ளதை கண்டுபிடித்தனர். அமெரிக்காவிலும் நார்வேயிலும் சால்மன் மீன் வகைகளில் மிக நீளமாகவும் அதிக எடையுடன் வளர்வதற்கு மரபணுக்கள் பொருத்தப்பட்டன. இம்மீன்களுக்கு இருந்த எடையுடன் 5 மடங்கு அதிகரித்தது. ஆனால் மிக வேகமாக பரவி இத்தொழில் நுட்பத்திற்குள்ளாகாத மீன்களை விட ஒன்றுக்கு 5 மடங்கு விகிதத்தில் அதிகரித்து விட்டன. இதே போல் பயோ டெக்னிக்கல் இன்டர்நேசனல் என்ற பன்னாட்டு நிறுவனம் சோயா பீன்ஸ்களுக்கு இந்த உற்பத்தி முறையைக் கடைபிடித்தது. தொடர்ந்து கண்காணித்ததில் 4 ஏக்கரில் இதே பயிர்கள் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் உயிரினங்கள் சுற்றுச்சூழல் மாசினாலும் காடுகளை அழிப்பதாலும் அழிந்து வருகின்றன. ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பானது 75 விழுக்காடு மரபணு பெருக்கமானது இந்த நூற்றாண்டிலேயே அழிந்து விட்டது என்றும் இதற்கு முக்கிய காரணமாக தாவரங்களின் பன்முகத்தன்மையை அழித்து செயற்கையான மரபணுப் பொறியியல் முறையில் ஒருமைத் தன்மையுடன் (mono culture) வளர்க்கப்படுவதே என்று கூறியுள்ளது.

மரபணு பொறியியல் மூலம் ஒரே தன்மை கொண்ட ஒரே பயிர்கள் வளர்க்கப்படுவதால் அவை ஒரு நோய் தாக்கினாலே விரைவாக அழிந்து பஞ்சம் ஏற்படுகிறது. அதே சமயத்தில் பன்முகத் தன்மையுடன் பல வகைப் பயிர்கள் வளர்க்கப்படும்போது அவை எந்த வகை நோயையையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலைப் பெற்று விடுகின்றன. மெக்சிகோவிலும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்திலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் முன்னதில் 300 வகையான பயிர்களும் வளர்க்கப்பட்டதால் இவ்விரு பகுதிகளும் அனைத்து விதமான பூச்சிகளையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெற்றதாகத் தெரிய வந்துள்ளது. மரபணு பொறியியலின் இன்னொரு பாதக விளைவாக ஒரு பகுதியின் தட்ப வெப்ப சூழ்நிலைக்கேற்ப விளையும் பயிர்களை அழிப்பது உள்ளது.

சில காலத்திற்கு முன்னதாக மான்சான்டோ என்ற பன்னாட்டு கம்பெனி மரபணு பொறியியல் மூலமாக தயாரிக்கப்பட்ட பருத்தி விதைகளை அறிமுகப்படுத்தியது. அதிக மகசூல் கிடைக்கும் என்ற இந்த கம்பெனியின் பொய்ப் பிரச்சாரத்தை நம்பி ஏராளமான விவசாயிகள் அதிக கடன் வாங்கி இந்த விதைகளை பயிரிட்டனர். ஆனால் இவை மறுபடியும் பயிரிட முடியாத மலட்டு விதைகள் என்பதாலும் அதிக மகசூல் கிடைக்காததாலும் விவசாயிகள் ஆயிரக்ககணக்கானோர் தற்கொலை செய்து கொண்டனர் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இந்திய அரசு இப்போது இந்த கம்பெனியின் விதைகளுக்கு மட்டுமல்ல ஏறத்தாழ 144 கம்பெனிகளின் விதைகளை இந்திய மண்ணில் பரிசோதித்து பார்ப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. நமது நாட்டின் இறையாண்மை தன்னிறைவான உணவு உற்பத்தியில் உள்ளது. விவசாயத்தை அழிப்பது நாட்டின் இறையாண்மையை அழிப்பதாகும். நமது நாட்டின் அடிப்படை ஆதாரமாகவும் முதுகெலும்பாகவும் உள்ள விவசாயத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடகு வைக்கப்படும் இந்த நாசகரமான போக்கை எப்படி தடுத்து நிறுத்தப் போகிறோம்?


உணவு சாப்பிட்டபின் கட்டாயமாக செய்யக்கூடாதவை


உணவு சாப்பிட்டபின் கட்டாயமாக செய்யக்கூடாதவை




உணவு சாப்பிட்டபின் கட்டாயமாக செய்யக்கூடாதவை. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாத ஒன்று.

1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும்.

2. சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

3. அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது, அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை(Bloated with air) உருவாக்குகிறது.

எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.


துன்புறுத்தியவரை குத்தி கொன்ற காளை: சுடுகாடு வரை பின் தொடர்ந்து சென்றும் பார்த்தது


துன்புறுத்தியவரை குத்தி கொன்ற காளை: சுடுகாடு வரை பின் தொடர்ந்து சென்றும் பார்த்தது




மத்திய பிரதேச மாநிலம், சாகர் மாவட்டம், தியோரி பகுதியை சேர்ந்தவர் பூப் நாராயணன் பிரஜாபதி (65). கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஒரு நாள், இவர் தன் வீட்டருகே சுற்றித் திரிந்த காளை ஒன்றை கம்பால் அடித்தார். உடன் அந்த காளை, பிரஜாபதியை தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த அவர், ஒரு மாதம் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். இந்நிலையில், கடந்த வாரம் தன்னைத் தாக்கிய காளை, தன் வீட்டின் முன் உள்ள ரோட்டில் படுத்திருப்பதைக் கண்ட பிரஜாபதி, அதன் மீது வெந்நீரை ஊற்றினார். மறுநாள் காலை பிரஜாபதி தன் வீட்டின் முன், தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது, அந்தக் காளை மீண்டும் வந்து, அவரைத் தாக்க முற்பட்டது. பயந்து போன அவர், தப்பித்தால் போதும் என, தன் குடிசை வீட்டுக்குள் ஓடினார். ஆனாலும், அவரைத் தொடர்ந்து குடிசைக்குள் சென்ற காளை, குடிசையை துவம்சம் செய்ததோடு, பிரஜாபதியை தன் கொம்புகளால் குத்தியவாறு, தரதரவென வெளியே இழுத்துச் சென்றது. பின், தரையில் இரண்டு முறை அவரை தூக்கி வீசியதுடன், தன் கூரிய கொம்புகளால் அவரை மீண்டும் மீண்டும் குத்தி சின்னாபின்னம் ஆக்கியது.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள், காளையை அங்கிருந்து விரட்டினர். பின், பிரஜாபதியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாகக் கூறினர்.

இதனிடையே, அக்கம் பக்கத்தினர் பிரஜாபதியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர்களுடன் மருத்துவமனை வரை காளை மாடு தொடர்ந்து சென்றது. இதனை, அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர். அத்துடன், பிரஜாபதியின் உடல் தகனம் செய்யப்படும் வரை, சுடுகாட்டிலேயே காளைமாடு இருந்துள்ளது.

இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த தீபக் சவுராசா கூறுகையில், ""மருத்துவமனை மற்றும் சுடுகாட்டிற்கு அருகில் பிரஜாபதியின் வீடு இருந்தாலும், அவரை மாடு பின் தொடர்ந்து வந்தது எங்களுக்கெல்லாம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது,” என்றார். "மருத்துவமனைக்கும், சுடுகாட்டிற்கும் காளை வந்ததை நானும் பார்த்தேன்’ என, தியோரி காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.பி.சர்மாவும் கூறினார்.


பனிக்காலத்தில் சருமத்தை பாதுகாப்பதெப்படி?


பனிக்காலத்தில் சருமத்தை பாதுகாப்பதெப்படி? 



வெறும் பாலாடை அல்லது பாலாடையுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகம், கை, கால்களில் தேய்த்து ஊறிய பிறகு குளிப்பதும் நல்ல பலனைத் தரும். பாலாடையுடன் கசகசாவை ஊற வைத்து அரைத்து முகம் மற்றும் கை, கால்களில் பூசி, சிறிதுநேரம் கழித்து குளிப்பதும், சருமத்தை மென்மையாக்கும். ஆலுவேரா எனப்படும் சோற்றுக் கற்றாழை சேர்த்த மாய்ச்சரைஸரை சோப்புபோல உடல் முழுவதும் தேய்த்து, வெறுமனே தண்ணீ­ர் ஊற்றிக் குளிக்கலாம். சோப்பைத் தவிர்த்து, பால், தயிர் போன்றவற்றையும் உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்கலாம். கிளிசரின் அதிகம் சேர்த்த சோப்பை உபயோகித்தாலும் தவறில்லை.

வறண்ட சருமக்காரர்கள், பப்பாளி, ஆப்பிள் போன்றவற்றைத் தவறாமல் சாப்பிட வேண்டும். அதிக தண்­ர் குடிக்க வேண்டும். இது எல்லா சரும வகையினருக்கும் பொருந்தும்.


தோல் நோய்கள் வராமல் இருக்க வேண்டுமானால், மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பனிக் காலத்தில் உடலுக்கு கடலை மாவு, பயத்தம் மாவு தேய்த்துக் குளிக்கக்கூடாது. அது சருமத்தில் இருக்கும் கொஞ்சநஞ்ச எண்ணெய்ப் பசையையும் உறிஞ்சிவிடும். மிகவும் வறண்ட சருமக்காரர்களுக்கு பனிக்காலத்தில் தோலில் அரிப்பு, வெடிப்பு போன்றவை ஏற்படலாம். இவர்கள் தினமும் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து தேய்த்துக் குளித்து வரவேண்டும்.

சாதாரண மற்றும் எண்ணெய்ப் பசையுள்ள சருமக்காரர்களுக்குப் பனிக்காலம் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தாது. அவர்களும் நிறைய தண்ணீ­ர் குடித்து, பப்பாளி, ஆப்பிள் பழ வகைகளை சாப்பிட்டு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்"

.

பற்களை பாதுகாக்கும் முறை


பற்களை பாதுகாக்கும் முறை 



இரவில் படுக்கைக்குப் போகும் முன்னர் பற்களை துலக்குவது அவசியம். இரவில் தான் பாக்டீரியாக்கள் பற்களின் இடுக்குகளில் எஞ்சியுள்ள உணவுப்பொருட்களைச் சுற்றி ஒரு வித அமிலத்தைச் சுரக்கின்றன. அவை பற்களில் உள்ள எனாமல்களை அரித்து விடுகின்றன.

கொப்பளித்தல்:
சுத்தமான நீரால், வாயை நன்றாக அலசி கொப்பளிக்க வேண்டும். இது பற்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட சிறு சிறு உணவுத்துகள்களை எளிதில் அகற்றி விடும்.


நாக்கை சுத்தம் செய்தல்:
பாக்டீரியாக்களின் வெதுவெதுப்பான படுக்கையாக நாக்கு உள்ளது. அதனால், நாக்கின் மேலும், கீழும் நன்றாக சுத்தம் செய்வது அவசியம். தற்போது நாக்கைச் சுத்தம் செய்யும் வகையில் சொரசொரப்பான பிரஷ்களும் உள்ளன.
பரிசோதித்தல்:ஆண்டுக்கு இருமுறையாவது பல் மருத்துவரிடம் சென்று பற்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் பற்களுக்கும், உடலுக்கும் உடனடியான தீர்வு கிடைக்கும்.


மனரீதியான பிரச்னைகள் கூட உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்


மனரீதியான பிரச்னைகள் கூட உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்


 

மனரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் உயிருக்கு ஆபத்தாகும் என்ற சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

கவலை, மனச்சோர்வு, தனியாக இருப்பது போன்ற உணர்வு மனிதர்களுக்கு விரைவில் மரணத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் 68000 பேரிடம் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதயநோய், புற்றுநோய் மற்றும் பல நோய்களினால் பாதிப்பிற்குள்ளாகி குறைந்த வயதிலேயே மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை இங்கிலாந்தில் அதிகரித்து வந்தது.

ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து 35 வயதிற்கு மேற்பட்ட 68 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். கடந்த 1994ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் நடைபெற்ற இந்த ஆய்வில் பல உண்மைகள் கண்டறியப்பட்டன.

உடல்ரீதியாக ஏற்படும் நோய்களுக்கு மனரீதியான சிக்கல்கள் காரணமாக அமைகின்றன. மது அருந்துதல், புகைப்பழக்கம், போதைப்பழக்கத்தினால் குறைந்த வயதில் சிலர் மரணத்தை தழுவினாலும், சைக்கலாஜிகல் ரீதியான சிக்கல்களினால் பாதிக்கப்படும் பலர் விரைவில் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.

தனியாக இருப்பது போன்ற அச்சம், மனச்சோர்வு, போன்றவை நோய்களை தோற்றுவிக்கின்றன. இதனால் பெரும்பாலானோர் குறைந்த வயதில் மரணமடைந்து விடுகின்றனர் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

எனவே சிறிய அளவில் மனரீதியான சிக்கல்கள் ஏற்பட்டாலே அவற்றினை தீர்ப்பதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஏனெனில் மனரீதியாக ஏற்படும் சிறு பிரச்சினைதான் உடல்ரீதியான நோய்களுக்கு வழிவகுக்கின்றன என்கின்றனர் நிபுணர்கள்.

எனவே சிறு பிரச்சினை தானே என்று கவனிக்காமல் விட்டு விடாமல் பிரச்சினைகளை களைய முற்பட வேண்டும் என்கிறார் ஆய்வினை மேற்கொண்ட டாக்டர் ரஷ்.

செவ்வாய் கிரகத்தில் ரோவர் விண்கலம் தரையிறங்கும் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு


செவ்வாய் கிரகத்தில் ரோவர் விண்கலம் தரையிறங்கும் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு



அமெரிக்காவின் ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையம்(நாசா) கடந்தாண்டு நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்துக்கு ரோவர் என்ற விண்கலத்தை அனுப்பியது.


250 கோடி டொலர் செலவில் அனுப்பப்பட்டுள்ள ரோவர் விண்கலம் வரும் 6ஆம் திகதி செவ்வாய் கிரகத்தில் தரையிறங்குகிறது.

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பள்ளத்தாக்கான கேலே பகுதியில் சரியான நேரத்தில் ரோவர் தரையிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இது குறித்து நாசா இணை நிர்வாகி ஜான் கிரன்ஸ்பெல்டு குறிப்பிடுகையில், செவ்வாய் கிரகத்தில் ரோவர் தரையிறங்கும் காட்சியை நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் பெரிய திரை வைத்து நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளோம்.

இதன் மூலம் பொதுமக்களுடன் எங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளோம். கலிபோர்னியாவின் பசடெனா ஏவுதள ஆய்வு மையத்தில் இருந்து இந்த காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்றார்.



ஒரு நாளைக்கு மட்டும் ஐரோப்பாவில் ஒரு மில்லியன் மின்னல் தோன்றுகிறது: மக்களுக்கு எச்சரிக்கை


ஒரு நாளைக்கு மட்டும் ஐரோப்பாவில் ஒரு மில்லியன் மின்னல் தோன்றுகிறது: மக்களுக்கு எச்சரிக்கை 


 

ஜேர்மனியில் கடந்தாண்டை விட இந்த ஆண்டில் இடி, மின்னல், புயல் மழையால் ஏற்படும் அபாயம் அதிகமாகும் என்று புயல் கண்காணிப்பு அமைப்பான நவ்காஸ்ட் எச்சரித்துள்ளது.



இது குறித்து நவ்காஸ்ட்டின் தலைவரான ஹேன்ஸ பீட்டர் பெட்ஸ் கூறுகையில், ஒரு நாளைக்கு ஐரோப்பாவில் ஒரு மில்லியன் மின்னல் வானில் தோன்றுகிறது.

இதன் எண்ணிக்கை அதிகரிக்கா விட்டாலும், இதனால் ஏற்படும் ஆபத்துகள் அதிகமாகும். இதற்கு முக்கிய காரணம், இந்த மின்னல்கள் முன்பை விட அதிகத் திறன் உடையதாக உள்ளன என்று தெரிவித்தார்.

 

மேலும் மின்னல், வானில் பறக்கும் விமானங்களுக்கும், வெளியில் நடமாடும் மக்களுக்கும் மட்டுமல்லாமல், வீட்டுக்குள் இருப்பவருக்கும் பிரச்னையை ஏற்படுத்தும் என்று நவ்காஸ்ட் தெரிவித்துள்ளது.

இதற்கான காரணம் குறித்து கர்ல்ஸ்ருஹே கல்லூரியின் மைக்கேல் குன்ஸ் தெரிவித்த போது, தரையின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே போவதால், ஈரப்பதமும் உயர்கின்றது. இந்த உயர்வு புயல் மழையைத் தரக்கூடிய மேகங்களை உருவாக்கும். இந்த ஈரப்பதம் அதிகரிக்க அதிகரிக்க புயலின் திறனும் வேகமும் அதிகரிக்கும், அபாயமும் அதிகரிக்கும் என்றார்.


மேலும் இந்த ஆண்டு தரையின் வெப்பம் அதிகரித்தால் அதிகம் பாதிக்கப்படுவது தென்மேற்கு ஜேர்மனி தான் என்றார்.

மின்னலால் ஏற்படும் பாதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் 25% உயர்ந்துள்ளது. இப்போது இதன் மதிப்பு 500,000 யூரோவாகும். ஒரு வீட்டின் மீது மின்னல் பாய்ந்தால் வீட்டைப் புதுப்பிக்க சுமார் 800 யூரோ தேவைப்படுகிறது என்று ஜேர்மன் காப்பீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.






Thursday, August 2, 2012

வறண்ட நமீபியாவில் ஆயிரம் அடி ஆழத்தில் பிரமாண்ட ஏரி


வறண்ட நமீபியாவில் ஆயிரம் அடி ஆழத்தில் பிரமாண்ட ஏரி





ஆப்ரிக்க நாடான நமீபியாவில் 10 ஆயிரம் ஆண்டு பழமையான பிரமாண்ட நிலத்தடி நீர்நிலை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன்மூலம் 400 ஆண்டுகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்கின்றனர். தென்மேற்கு ஆப்ரிக்க நாடு நமீபியா. அட்லான்டிக் பெருங்கடல் ஓரமாக தென்ஆப்ரிக்காவை ஒட்டியுள்ளது. இங்கு குடிநீர் ஆதாரம் தொடர்பாக ஜெர்மனி புவிஅறிவியல் மற்றும் இயற்கை வளங்கள் நிறுவனத்தின் திட்ட மேலாளர் மார்ட்டின் கிங்கர் தலைமையில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், மிகமிக பழமையான பிரமாண்ட நீர்நிலை ஒன்று தரைக்கு அடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மார்ட்டின் கிங்கர் மேலும் கூறியதாவது: ஆப்ரிக்காவின் வறண்ட பகுதிகளில் ஒன்று நமீபியா. பாலைவனங்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் தரைக்கு கீழே சுமார் 1000 அடி ஆழத்தில் பிரமாண்ட ஏரி அளவுக்கு நீர்நிலை இருப்பது தெரியவந்துள்ளது. தரைக்கு அடியில் நிலத்தடி நீர்ப் படுகைகள் இருப்பது சாதாரணம்தான். 10 ஆயிரம் ஆண்டு பழமையானது என்பதுதான் சிறப்பம்சம். இத்தனை ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த நீர்நிலை சுமார் 70 கி.மீ. நீளம், 40 கி.மீ. அகலம் என பிரமாண்ட ஏரி அளவுக்கு இருக்கிறது. நிலத்தடி ஏரிக்கு ‘ஓகங்வெனா,2’ என்று பெயரிட்டுள்ளோம். அங்கோலா நாட்டின் எல்லையை ஒட்டி இது அமைந்துள்ளது.

சமீப ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் உள்ளதால், ஆறு, கடல் போன்றவை நிறைய மாசுபட்டிருக்கிறது. ஆனால், 10 ஆயிரம் ஆண்டுகளாக நிலத்தின் மேல் பகுதியுடன் தொடர்பில் இல்லாத தண்ணீர் என்பதால், ஓகங்வெனா ஏரியின் தண்ணீர் மிகவும் சுத்தமாக உள்ளது. சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் ஆப்ரிக்காவில் பல பகுதிகளில் மக்கள் அவதிப்படுகின்றனர். நமீபியாவிலும் மக்கள் நல்ல தண்ணீருக்காக வெகுதூரம் செல்ல வேண்டி இருக்கிறது.

நமீபியா நாட்டின் மொத்த மக்களில் 40 சதவீதத்தினர் வடக்கு பகுதியில் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஓகங்வெனா ஏரி நீரைக் கொண்டு இன்னும் 400 ஆண்டுகள் வரை தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும். அது மட்டுமின்றி, பாசனத்துக்கும் பயன்படுத்தலாம். அந்தளவுக்கு அங்கு தண்ணீர் தாராளமாக இருக்கிறது. இவ்வாறு மார்ட்டின் கிங்கர் கூறினார். ஆய்வு பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு, தண்ணீரை எடுக்கும் பணி தொடங்கும் என்று நமீபியாவின் விவசாய துறை உயரதிகாரி ஆபிரகாம் நெகமியா தெரிவித்தார்





Tuesday, July 31, 2012

நாற்பது ஆண்டுகளாக நிலவில் கம்பீரமாய் நிற்கும் அமெரிக்க தேசிய கொடிகள்


நாற்பது ஆண்டுகளாக நிலவில் கம்பீரமாய் நிற்கும் அமெரிக்க தேசிய கொடிகள்


அமெரிக்க விஞ்ஞானிகள் நிலவில் கால் வைத்து 40 ஆண்டுகள் கழித்தும், அவர்கள் அங்கே நட்டு வைத்த கொடிகள் இன்னும் சேதமடையாமல் பறந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதி அப்போலோ 11 விண்கலத்தில் சென்ற நீல் ஆம்ஸ்டிராங் உள்ளிட்ட அமெரிக்க விஞ்ஞானிகள் முதன் முதலாக நிலவில் கால் வைத்தனர்.


The flag planted by Apollo 17 astronauts in December 1972 -- the last manned mission to the moon -- is seen here in this image taken by the Lunar Reconnaissance Orbiter Camera

இதைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் 5 முறை நிலாவுக்கு சென்று வந்து விட்டனர். கடந்த 1972ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி அப்போலோ 17 விண்கலத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றது தான் நிலவுக்கு அமெரிக்கர்கள் கடைசியாகச் சென்றதாகும்.


Astronauts in each of the six Apollo moon landings planted American flags in lunar soil. The Apollo 15 mission in 1971 is seen here


இந்த 6 முறையும் தங்கள் பயணத்தின் நினைவாக விஞ்ஞானிகள் அமெரிக்க கொடியை நிலவில் நட்டு வைத்தனர்.


This is the flag planted by the Apollo 16 mission in April 192


அந்த கொடிகளில் நிலவுக்கு முதன் முதலாகச் சென்ற நீல் ஆம்ஸ்டிராங் நட்டுவைத்த கொடியைத் தவிர மற்ற 5 கொடிகள் நிலவின் தட்பவெட்பத்தையும் தாண்டி இத்தனை ஆண்டுகள் கழித்தும் பறந்து கொண்டிருக்கின்றன. நாசாவின் கமெரா எடுத்துள்ள புகைப்படத்தில் இந்த கொடிகள் பறப்பது தெளிவாகத் தெரிகிறது.


Pete Conrad planted this flag on the Apollo 12 mission in November 1969 -- it is still standing


தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறினாலும் இதுவரை அமெரிக்க விஞ்ஞானிகள் மட்டுமே நிலவில் கால் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



பூமியை காப்பாற்ற துணி துவைக்க வேண்டாம்: மக்களுக்கு வேண்டுகோள்



பூமியை காப்பாற்ற துணி துவைக்க வேண்டாம்: மக்களுக்கு வேண்டுகோள்




பூமியை காப்பாற்றுவதற்கு அடிக்கடி நிறைய துணிகளை லாண்டரிக்கு போட வேண்டாம் என்று இங்கிலாந்தை சேர்ந்த அரசு சாரா தொண்டு நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இங்கிலாந்தில் குவாங்கோ என்ற தொண்டு நிறுவனம் சுற்றுச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிறுவனத்துக்கு அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. இந்நிலையில் பூமியை காப்பாற்ற அடிக்கடி லாண்டரிக்கு துணிகளை போட வேண்டாம்.வாஷிங் மெஷின்களில் துணி துவைப்பதை குறைப்பதன் மூலம் கார்பன் வாயு வெளியேறுவது கணிசமாக குறையும். அத்துடன் தண்ணீரும் நிறைய சேமிக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிறுவனம் கூறுகையில், ஒருமுறை உடுத்திய உடையை மீண்டும் அணிய பலர் தயங்குகின்றனர். ஆனால் இங்கிலாந்தில் பத்து பேரில் 4 பேர் 2வது முறை அதே துணியை அணிகின்றனர்.

துணி துவைப்பதற்கு முன், இன்னொரு முறை அணிந்தால் என்ன என்று உண்மையிலேயே அவர்கள் நினைக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளது.

உணவினால் உண்டாகும் தலைவலி!


உணவினால் உண்டாகும் தலைவலி!




தலைவலியா..? சூடாக ஒரு கப் காபியோ, டீயோ குடித்தால் போதும். வலி பறந்து போகும் பலருக்கும். ஆனால், குறிப்பிட்ட சில உணவுகள் தலைவலியை வரவழைக்கும் தெரியுமா? எந்தெந்த உணவுகள் தலைவலியைக் கொடுக்கும், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும், வலி நீங்க எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்? விளக்கமாகப் பேசுகிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார்.

‘‘நம்மில் 10 சதவிகித மக்களுக்கு தலைவலி இருக்கிறது. அதில் 5 சதவிகிதத் தலைவலிக்கு, சரியான நேரத்துக்கு சாப்பிடாததும், தூக்கமின்மையுமே காரணங்கள். இந்த இரண்டையும் தவிர்த்தாலே தலைவலி தானாகச் சரியாகும். தலைவலியைத் தூண்டும் உணவுகளில் முக்கியமானது சீஸ். அதிலுள்ள ‘தைரமின்’ எனப்படுகிற வேதிப்பொருளே வலியைத் தூண்டும்.

தவிர கேக், சைனீஸ் உணவுகள், சாக்லெட் போன்றவற்றிலும் தலைவலியைத் தூண்டும் காரணிகள் இருப்பதால் அவற்றையும் தவிர்க்க வேண்டும்.

தினசரி நாம் உபயோகிக்கிற பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும், தலைவலியைத் தூண்டும் நைட்ரைட் என்கிற வேதிப் பொருள் கலக்கப்படுகிறது. ஊறுகாய், ஆரஞ்சு, அன்னாசி, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு, செயற்கை இனிப்புகள், குளிர்பானங்கள், சிப்ஸ் போன்றவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்பவர்களுக்கும் தலைவலி வரலாம்.

இவை தவிர மது குடிப்பவர்களுக்கும், கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்கிற பெண்களுக்கும்கூட அடிக்கடி தலைவலி வரலாம்.

அடிக்கடி தலைவலியால் அவதிப்படுகிறவர்கள் பின்வரும் பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். தினசரி 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பாட்டுக்கு முன்பும், சாப்பிட்ட பிறகும் தேவையான தண்ணீரைக் குடிக்க வேண்டும். உயர்தரக் கொழுப்பான ஒமேகா ஃபேட்டி 3 அமிலம் கொண்ட மீன், இஞ்சி, பூண்டு, கீரை, ஃபிளாக்ஸ் சீட்ஸ் போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டும்.

வைட்டமின் பி12 நிறைந்த காளான், பிராக்கோலி, மக்னீசியம் அதிகமுள்ள முள்ளங்கி, கீரை போன்றவற்றையும் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கால்சியம் மற்றும் மக்னீசியம் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளலாம். வெறும் உணவின் மூலம் மட்டுமே தலைவலியை முழுக்க சரிப்படுத்தி விட முடியாது. தீராத தலைவலிக்கு சில சிறப்பு சிகிச்சைகள் உள்ளன. நவீன மருந்துகளுடன், போடாக்ஸ், ஸ்டெல்லேட் காங்லியன், கஸேரியன் காங்லியன் போன்ற சிகிச்சைகளையும், சில பயிற்சிகளையும் மேற்கொண்டால் தலைவலியிலிருந்து முழுமையான விடுதலை பெறலாம்.’’