Friday, May 31, 2013

வருமானம் உள்பட எல்லாவற்றிலும் ஆஸ்திரேலிய மக்கள்தான் டாப்

வருமானம் உள்பட எல்லாவற்றிலும் ஆஸ்திரேலிய மக்கள்தான் டாப்



''பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி''க்கான ஓஇசிடி என்ற அமைப்பு, பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் வாழும் மக்களிடம் சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தியது. உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி அடைந்த 30 நாடுகளில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அப்போது, மக்களின் வாழ்க்கை தரம் வசிப்பிடம், வருமானம், வேலைவாய்ப்பு, கல்வி, சுற்றுச்சூழல், சுகாதாரம், ஆரோக்கியம், பாதுகாப்பு, வாழ்க்கை சமன்பாடு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் இடம் பெற்றன.

மக்களின் பதில்கள் அலசி ஆராயப்பட்டு முடிவு வெளியிடப்பட்டது. இதில் வளர்ச்சி அடைந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. 84 சதவீத ஆஸ்திரேலியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து ஓஇசிடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலியாவில் 15 வயது முதல் 64 வயது வரை உள்ள 73 சதவீதம் பேர் வருமானம் ஈட்டி வருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்தின் சராசரி வருமானம் ஆண்டுக்கு 28,884 அமெரிக்க டாலராக உள்ளது.

ஆரோக்கியத்தின் அடிப்படையில் மக்களின் சராசரி ஆயுள் 82 வயதாக உள்ளது. மொத்தத்தில் அனைத்து விதங்களிலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது ஆஸ்திரேலியர்கள்  மகிழ்ச்சியுடன் உள்ளனர். இந்த பட்டியலில் சுவீடன், கனடா, நார்வே, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, டென்மார்க், நெதர்லாந்து, ஐஸ்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகள் முதல் 10 இடத்தில் உள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, May 29, 2013

போலீஸார் முன் ஸ்ரீசாந்த்தும், சண்டிலாவும் செம சண்டை..!


போலீஸார் முன் ஸ்ரீசாந்த்தும், சண்டிலாவும் செம சண்டை..!


உன்னால நான் கெட்டேன் என்று ஸ்ரீசாந்த் சண்டை போட, அதற்கு அஜீத் சண்டிலா கடுமையான வார்த்தைகளால் பதிலடி தர போலீஸ் அதிகாரிகள் முன்பு இருவரும் கடுமையாக திட்டிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டு, கைதாகியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜீத் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் தற்போது சிறைவாசத்தைத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று கோர்ட்டுக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்பு ஸ்ரீசாந்த் மற்றும் சண்டிலா ஆகியோரிடையே கடும் சண்டை மூண்டதாம். இருவரும் கடுமையான வார்த்தைகளால் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



உன்னாலே உன்னாலே... 

டெல்லி போலீஸ் காவலில் இருந்தபோது நேற்று ஸ்ரீசாந்த்துக்கும், சண்டிலாவுக்கும் இடையே முட்டிக் கொண்டு விட்டதாம். உன்னால்தான் இத்தனை பிரச்சினையும் எனக்கு வந்தது. உன்னால்தான் நான் சீரழிந்து போனேன் என்று சண்டிலாவைப் பார்த்து சொல்லியபடி இருந்தாராம் ஸ்ரீசாந்த்.

ஏய்.. நிப்பாட்டு 

ஸ்ரீசாந்த் பேசியதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த சண்டிலாவுக்கு அவர் தொடர்ந்து தன்னை குறை கூறியதால் கோபம் வந்து விட்டது. உடனே ஸ்ரீசாந்த்தை பார்த்து கடுமையான வார்த்தைகளால் திட்டியபடி பதிலடி கொடுக்கஆரம்பித்தார்.

சண்டையோ சண்டை 


இதற்கு ஸ்ரீசாந்த்தும் பதிலுக்குப் பேச அந்த இடமே மீன் கடை போல மாறி விட்டதாம். இருவரும் சரமாரியாக திட்டிக் கொண்டனராம்.

ஆர்டர் ஆர்டர் ஆர்டர் 


இதைப் பார்த் போலீஸ் அதிகாரிகள் ரசாபாசமாகி விடாமல் தடுக்கும் வகையில் இருவரையும் அமைதிப் படுத்தி தள்ளித் தள்ளி உட்கார வைத்தனராம்.

ஒபாமா சட்டை காலரில் லிப்ஸ்டிக்.... வாயை வச்சது யாரோ...?

ஒபாமா சட்டை காலரில் லிப்ஸ்டிக்.... வாயை வச்சது யாரோ...?



அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சட்டைக் காலரில் காணப்பட்ட லிப்ஸ்டிக் அடையாளத்தால் லேசான சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் ஒபாமாவே அதற்குக் காரணமானவர்களை கொண்டு வந்து நிறுத்தி விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போதுதான் இந்தக் களேபரம் நடந்தது. வெள்ளை மாளிகையில், ஆசிய அமெரிக்க பசிபிக் தீவுகளைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஒபாமா கலந்து கொண்டார்.

அந்த விருந்து நிகழச்சியில் ஏராளமான இந்திய அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட 300 பேருக்கும் மேற்பட்டோர் அதில் பங்கேற்றனர். பலரிடம் ஒபாம் நெருங்கிச் சென்றும் கட்டிப்பிடித்தும் கை குலுக்கியும் அளவளாவினார்.

பின்னர் அவர் பேசுகையில் இவர்களின் அன்பில் நனைந்ததன் விளைவாக எனக்குக் கிடைத்த பரிசு இந்த லிப்ஸ்டிக் என்று தனது சட்டைக் காலரைக் காட்டி குறிப்பிட்டார். அப்போதுதான் பலரும் சட்டைக் காலரில் லிப்ஸ்டிக் அடையாளம் இருந்ததைப் பார்த்தனர்.

பின்னர் லிப்ஸ்டிக் கரைக்குக் காரணம் யார் என்பதையும் அவரே விளக்கினார். அவர் கூறுகையில், இதற்குக் காரணமானவர் யார் என்பது எனக்குத் தெரியும். அவர் ஜெஸ்ஸிகா சான்செஸ். ஜெஸ்ஸிகா அல்ல, அவரது அத்தை.எங்கே அவர்....இதோ இங்கே இருக்கிறார். இவர்தான், இவர்தான் இதற்குக் காரணம் என்று ஒபாமா ஜெஸ்ஸிகாவின் அத்தையைக் காட்டி கூறியபோது கூட்டத்தில் சிரிப்பு வெடித்தது.

இதை நான் ஆளைக் காட்டி சொல்கிறேன் என்றால், எனக்கும் மிஷலுக்கும் இதனால் சண்டை வந்து விடக் கூடாதே.. அதற்காகத்தான் என்று கூறி ஒபாமா நிறுத்தியபோது கூட்டத்தில் மேலும் சிரிப்பலை பரவியது.

ஜெஸ்ஸிகா, அமெரிக்கன் ஐடல் சீசன் 11ல் 2வது இடத்தைப் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல வேளையாப் போச்சு போங்க.. இல்லாட்டி இன்னொரு 'கிளிண்டன் கதையை'அமெரிக்கக் குழந்தைகள் கேட்க நேரிட்டிருக்கும்..!!!!

ஜெயலலிதா நினைத்தால் அடுத்த விநாடியே பிசிசிஐ காலி!

ஜெயலலிதா நினைத்தால் அடுத்த விநாடியே பிசிசிஐ காலி!






 

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சீனிவாசன் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் மீது தமிழக அரசின் நடவடிக்கை பாயுமா என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமிழக அரசிடம் இருப்பதால் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதாவது முதல்வர் ஜெயலலிதா நினைத்தால் இந்திய கிரிக்கெட் வாரியத்தையே அரசின் வசம் கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

The Board of Control for Cricket in India. இதுதான் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முழுப் பெயர். இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது.

1928ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வாரியம் உருவாக்கப்பட்டது. அதுவரை இந்தியாவில் கல்கத்தா கிரிக்கெட் கிளப் என்ற பெயரில்தான் கிரிக்கெட் வாரியம் இயங்கி வந்தது. 1928ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் உருவாக்கப்பட்டபோது, அது, தமிழ்நாடு சங்க பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்து. அதாவது தமிழகத்தில்தான் இந்திய கிரிக்கெட் வாரியமே பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது சுயேச்சையான தனியார் அமைப்பாக பெரும் பணக்கார அமைப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் திகழ்கிறது. இருப்பினும் தமிழக அரசின் சட்டத்தின் கீழ் இது பதிவு செய்யப்பட்டிருப்பதால் தற்போது பெரும் சிக்கலுக்குள் மாட்டும் அபாயத்தின் கீழ் அது தள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சங்க பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பு சரியாக செயல்படாவிட்டால் அல்லது அதன் இயக்குர்கள் குழுவில் பிரச்சினை ஏற்பட்டால், அல்லது வேறு ஏதாவது நிர்வாகக் கோளாறு, நிதி மோசடி உள்ளிட்ட புகார்கள் கிளம்பினால், அந்த அமைப்பின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க முடியும். ஏன் தமிழக அரசு நினைத்தால் வாரிய இயக்குநர்கள் குழுவை கலைத்து விட்டு தனியாக ஒரு சிறப்பு அதிகாரியைப் போட்டு நிர்வாகத்தையே தன் வசம் எடுத்துக் கொள்ள முடியும்.

இது இந்திய கிரிக்கெட்வாரியத்திற்கும் முழுமையாக பொருந்தும். இப்படி ஒரு நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க முடிவு செய்தால், சட்டப்படி அதை யாரும் தடுக்கவும் முடியாது.

தற்போது ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் சிக்கி இந்திய கிரிக்கெட் வாரியம் தத்தளிக்கிறது. அதன் தலைவர் சீனிவாசனுக்கு எதிராக போர்டு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக கிளம்பத் தொடங்கியுள்ளனர். நிர்வாகிகளான காங்கிரஸின் ராஜீவ் சுக்லா மற்றும் பாஜகவின் அருண் ஜேட்லி ஆகியோர் சீனிவாசன் தற்காலிகமாக விலக வேண்டும் என்று குரல் கொடுத்தனர். பரூக் அப்துல்லா சீனிவாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் போர்டுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.

சூதாட்டப் புகார்களும் பெருமளவில் குவிந்து வருகின்றனர். சென்னையில் வைத்து பல புக்கிகள் கைதாகியுள்ளனர். உச்சகட்டமாக சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனும் கைதாகியுள்ளார். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு தலையிட்டு வாரிய போர்டை கலைத்து விட்டு தன் வசப்படுத்தி சிறப்பு அதிகாரியை நியமித்து வாரியத்தை தன் வசப்படுத்த முழுமையான வாய்ப்புகள் இருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதா நினைத்தால் அவர் மனது வைத்தால், அவர் முடிவு செய்து விட்டால் எந்த நொடியிலும், இந்திய கிரிக்கெட் வாரியத்தை தமிழக அரசின்வசம் கொண்டு வர முடியும் என்பதால் பெரும் பரபரப்பும் கிளம்பியுள்ளது. மேலும் சீனிவாசன் உள்ளிட்டோர் மீது அவர் விசாரணையையும் அறிவிக்க முடியும்.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு கூறுகையில், தமிழ்நாடு சங்க பதிவு சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட அமைப்பின் போர்டு உறுப்பினர்களை நீக்கி விட்டு தனி அதிகாரியை நியமித்து நிர்வாகத்தை தன் வசம் கொ்ண்டு வர தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அதில் யாரும் தலையிட முடியாது. மேலும் இந்த வாரியத்தையும் கலைத்து உத்தரவிடவும் முடியும். மேலும் அரசிடம் யாராவது இந்த வாரியத்தின் நிர்வாகம் குறித்து புகார் கொடுத்தால் அதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடவும் மாநில அரசுக்கு முழுமையான அதிகாரம் உள்ளது. புகார் வர வேண்டும் என்று கூட இல்லை, தானாகவே கூட அரசு விசாரணைக்கு உத்தரவிட முடியும் என்றார்.

இதனால் சீனிவாசனுக்கு தமிழக அரசும் தன் பங்குக்கு பெரும் நெருக்கடியைத் தர நிறையவே வாய்ப்புகள் உள்ளது. மேலும், சீனிவாசன், திமுக தரப்புக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற பேச்சும் ஏற்கனவே உள்ளது. எனவே சீனிவாசனுக்கு தமிழக அரசு நெருக்கடி தருமா என்ற பெரும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

English summary 


The BCCI has been registered as a society under the Tamil Nadu Societies Registration Act, under which there is power vested in the state government to supersede the particular society's board of directors and appoint a special officer for better administration. "Under this Act, there is power vested in the state government to supersede the particular society's board of directors and appoint a special officer for better administration. The government can even dissolve the society. The government can initiate action on the basis of a complaint or even do that suo motu," said Justice K. Chandru, former judge of the Madras High Court, who is known for his knowledge of law and personal integrity.

செத்தது யாரு, ராமசாமியா, குப்புசாமியா... ஆயிரம் ரூபாய் பெட்!


செத்தது யாரு, ராமசாமியா, குப்புசாமியா... ஆயிரம் ரூபாய் பெட்!


பேஸ்புக், பீட்சா காலம் போய் இப்போது சூதாட்ட காலம் வந்து விட்டது. எதற்கெடுத்தாலும் பெட்தான்.. கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, வேறு எதுவாக இருந்தாலும் சரி. அந்த வகையில் உ.பி.மாநிலம் வாரணாசியில் செத்த பிணங்களை வைத்து பெட் கட்டி பிரளயம் ஏற்படுத்தி வருகிறார்கள்.

கேட்கவே கொஞ்சம் பீதியாக இருக்கிறதல்லவா, உண்மைதான். சுடுகாட்டையும் விடவில்லை இந்த சூதாட்டக்காரர்கள். செத்தவர்களை வைத்து விதம் விதமாக டிசைன் டிசைனாக பெட் கட்டி கல்லாக் கட்டி வருகிறார்களாம். அதைப் பற்றி அறிய வாங்க சுடுகாட்டுக்கு போய்ட்டு வரலாம்...

மணிகர்னிகா சுடுகாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது 

வாரணாசியில் உள்ள பிரபலமான சுடுகாடுதான் இந்த மணிகர்னிகா சுடுகாடு. எப்பவுமே பிசியாக உள்ள சுடுகாடாம் இது. எப்பப் பார்த்தாலும் யாராவது எரிந்து கொண்டிருப்பார்கள் - அதாவது பிணங்கள் எரிந்தவண்ணம் இருக்குமாம்.


அதிகாலையில் சுப வேளையில்.. 

சூதாட்டம் இந்த சுடுகாட்டில்தான் சூதாட்டக்காரர்களும் குவிகிறார்கள். அதுவும் அதிகாலையில்.


 பாடி வருது.. பெட்டை ஆரம்பி 

அங்கு தகனத்திற்காக கொண்டு வரப்படும் பிணங்கள் குறித்து அறிந்ததும் பெட்டை ஆரம்பிக்கிறார்கள்


இப்ப சொல்லு ராமசாமியா.. ராமாயியா... 

கொண்டு வரப்படும் பிணம் ஆணா, பெண்ணா என்று ஒரு பெட். பிணத்தை எந்த திசையிலிருந்து கொண்டுவருகிறார்கள் என்று இன்னொரு பெட். பிணத்தை எந்த வண்டியில் வைத்துக் கொண்டு வருகிறார்கள் என்று ஒரு பெட். எந்தக் கட்டையை வைத்து பிணத்தை எரிக்கப் போகிறார்கள் என்றும் ஒரு பெட்.


காலங்கார்த்தாலே.. ஒருவேலை இல்லாமே 

அதிகாலை 4 மணிக்கெல்லாம் பெட் ஆரம்பித்து விடுமாம். அடுத்து எந்தப் பிணம் வரப் போகிறது என்று ஆரம்பித்து இந்த பெட் போகுமாம்.


குறைந்தது ரூ.1000 

குறைந்தது ரூ. 1000க்கு பெட் வைக்கிறார்கள். அதிகபட்சம் ஒரு ஆள் ஒரு நாளைக்கு ரூ. 6000 முதல் 10,000 வரை சம்பாதிக்கிறார்களாம் இந்த சூதாட்டம் மூலம்.


போலீஸாரும் உடந்தை 

சில நேரங்களில் விஐபிக்கள் யாராவது மண்டையைப் போட்டு விட்டால் போலீஸாரும் இந்த சூதாட்டக்காரர்களுக்கு உதவுவார்களாம். அதாவது செத்த விஐபி குறித்த முக்கியத் தகவல்களை தங்களுக்கு வேண்டப்பட்ட புக்கிகளுக்கு லீக் செய்து அதை வைத்து பெட்டில் ஈடுபடுத்தி அவர்களும் கமிஷன் வாங்கிக் கொள்வார்களாம்.





வங்கக் கடலின் வடமேற்கில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

வங்கக் கடலின் வடமேற்கில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!




தமிழகத்தில் இருந்து 1000 கி.மீ தொலைவில் வங்கக் கடலின் வடமேற்குப் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

அந்தமான் அருகே சில் வாரங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து மகாசேன் புயலாக மாறியது. இதன் மூலம் தமிழகத்தில் கணிசமான அளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புயல் திசை மாறி வங்கதேசம், மியான்மர் அருகே கரையைக் கடந்தது.

இந்த நிலையில் வங்கக் கடலின் வடமேற்குப் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது தொடக்க நிலையில் உள்ளது. அனேகமாக அடுத்த ஒரிரு நாள்களில் இது வலுப்பெறலாம். வங்கக் கடலில் தற்போது புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில நாட்களுக்காவது மழை பெய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த வானிலை மைய அதிகாரிகள், தற்போதைய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது நகரும் திசையைப் பொருத்தே மழை வாய்ப்பு குறித்து கூற முடியும். ஆனாலும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம் என்கின்றனர்.

Tuesday, May 28, 2013

பெண் தெரிந்து கொள்ள வேண்டிய 9 அழகு இரகசியங்கள்!!!


ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய 9 அழகு இரகசியங்கள்!!!


பெரும்பாலான மக்கள் தமது சருமம், தலைமுடி மற்றும் நகங்களைப் பராமரிப்பது குறித்து அறிந்திருப்பார்கள். ஆனால், அழகுக் கலையுலகத்தைப் பொறுத்தவரையில், அறிந்திருப்பது என்பது, பொதுவான அறிவுரையாகவோ அல்லது, தவறானதொரு அறிவுரையைப் பின்பற்றுதலாகவோ தான் இருக்கும். அதாவது, நமக்கு என்ன செய்வது என்று தெரிந்திருக்கும். ஆனால் எப்படி செய்வது என்று தான் தெரிந்திருக்காது அல்லது எப்படி முறையாக செய்வது என்று தெரிந்திருக்காது.

நீங்கள் இப்போது என்ன செய்வது என்றும், அதனை எப்படி முறையாகச் செய்வது என்றும் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். மேலும், அழகு பற்றிய ரகசியங்களையும், அழகுக்கலை பற்றிய உண்மைகளையும் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். சருமத்தில் எரிச்சல் ஏற்படுத்தும் பொருள்களிலிருந்து, கைக்கால் நகங்களைப் பராமரிப்பது வரை மற்றும் தலைமுடி பராமரிப்பு குறித்து ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய அழகு ரகசியங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சரும க்ளின்சர்கள் பாதிப்பை ஏற்படுத்தலாம் 

சருமத்தை சுத்தப்படுத்தப் பயன்படுத்தும் க்ளின்சர்கள் ஆரோக்கியமான சருமத்தில் கூட எரிச்சலை ஏற்படுத்தலாம். சருமம் மென்மையானதா அல்லது பிரச்சினை ஏற்படுத்தக்கூடியதா என்றெல்லாம் கவலைப்படாதீர்கள். பயன்படுத்தும் க்ளின்சர்கள், சருமத்திற்கு எவ்வித எரிச்சலையோ, இறுக்கத்தையோ தராமல், அழுக்கையும், மிகையான எண்ணெய் பசையையும் கரைத்து, சுத்தம் செய்யுமா என்று மட்டும் பாருங்கள்.


எக்ஸ்ஃபோலியஷனை தவிர்க்க கூடாது 

சருமத்தின் மேற்புறத்தில் உள்ள படலத்தை உரித்து சுத்தம் செய்யும் எக்ஸ்ஃபோலியஷன் (Exfoliation) என்னும் முறையினால், சருமப் பராமரிப்புக் க்ரீம்கள் சருமத்தினுள் ஊடுருவி, தனது வேலையை நன்கு செய்ய ஏதுவாக இருக்கும். மேலும் சருமம் பளிச்சென்று பொலிவுடன் திகழும். சருமம் பளபளப்புடன் திகழ எக்ஸ்ஃபோலியஷன் மிக அவசியம். முகத்தில் பருக்களோ, சிவந்த தடிப்புகளோ உள்ளவர்கள், தோல் மருத்துவரின் அனுமதியுடன் சாலிசிலிக் அமிலம் கொண்டு எக்ஸ்ஃபோலியஷன் செய்யவும்.


ரெடினாய்டுகளைப் பயன்படுத்தவும் 

ரெடினாய்டுகள் அல்லது ரெடினால்கள், வைட்டமின் ஏ சார்ந்த வேதிப்பொருள்கள் ஆகியவை பருக்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுபவை. ஃபேஷியல் செய்வதற்கு மிகவும் உகந்தவை. இவை, சருமத்தின் மேல்பகுதி, உட்பகுதியை தடிமனாக்கி, இறந்து போன சரும செல்களை நீக்கி, கெராட்டினோசைட்டுகளின் அளவைப் பெருக்கி, மூட்டுக்கள், தசைகள், மற்றும் சருமம் ஆகியவற்றுக்கிடையே உயவுப்பொருளாக பயன்படும், உடலில் இயற்கையாகவே காணப்படும் ஒரு கார்போஹைட்ரேட்டான, கொலாஜென் மற்றும் ஹயலுரானிக் அமிலம் ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்க உதவுகின்றன. ஆனால் ரெடினாய்டுகள் நமது சருமத்தினை மிகவும் மென்மையாக்கி, சூரியவெளிச்சம் பட்டாலே மிகவும் கூச்சப்படச் செய்யும். ஆகவே இதனை இரவில் மட்டும் பயன்படுத்தி அதிக பலனைப் பெறுங்கள்.


சர்க்கரையைப் பயன்படுத்தவும் 

ஆரோக்கியமான சருமத்தினைப் பெறவும் பேணவும், முறையாக ஃபேஷியல் செய்து வருவது அவசியம். வீட்டிலேயே ஃபேஷியல் செய்து, தரமான சருமப் பராமரிப்பு நிலையத்தில் பெறத்தக்க காஸ்ட்லியான ஃபேஷியலைப் பெறலாம். இதற்கு எண்ணற்ற வீட்டுப் பராமரிப்பு முறைகள் உள்ளன. முதலில் இயற்கையின் சருமப் பராமரிப்பு கொடையான சர்க்கரையை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை சருமத்தின் மீது சர்க்கரையினால் வட்டமிட்டு தேய்த்து, (ஸ்க்ரப் செய்து) அதன்பின் இளஞ்சூடான வெந்நீரில் சருமத்தைக் கழுவி, மென்மையான துணியைக் கொண்டு ஒற்றியெடுக்கவும். இதனால் சருமம் பளபளக்கும் அதிசயத்தைக் காணலாம். அதே போல், ஒரு பானையில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு வெளிவரும் நீராவியில், சருமம் சில நிமிடங்கள் படும் வண்ணம் காட்டவும். (நீராவிக்குளியல்)


உடலை ஸ்கரப் செய்யவும் 

முகத்தை அடிக்கடி ஸ்கரப் செய்யும் நாம், நமது உடலை ஸ்க்ரப் செய்வது இல்லை. வறண்டு போன பாதங்கள், கால்களிலும், முழங்கைகளிலும் உள்ள வெடித்து உலர்ந்த சருமம், ஆகியவற்றுக்கு ஸ்க்ரப் தேவை. சிறிது தேங்காய் எண்ணெய், கல் உப்பு அல்லது சர்க்கரை மற்றும் துளசி இலைகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு பசை போல அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பசையை சருமத்தின் மீது நன்கு தேய்க்கவும். ஸ்க்ரப் செய்யவும். பின்னர் நீராவிக்குளியல் மேற்கொள்ளவும். அடிக்கடி இதனை செய்வது உறுதியான பலனைத் தரும்.


நகத்தை அடிக்கடி ஈரப்படுத்திக் கொள்ளவும் 

கால் நகங்களையும், கை நகங்களையும் அடிக்கடி ஈரப்படுத்திக் கொள்ள வேண்டும். ஷொவர் ஜெல்லை வெதுவெதுப்பான தண்ணீரில் கரைத்து, அதில் கைகளை ஐந்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதனால் கை நகங்கள் புதிது போலாகும். (மெனிக்யூர் என்றால் கை விரல் மற்றும் நகங்களை அழகு செய்வது என்று பொருள்) மேலும் பெட்ரோலியம் ஜெல்லை பாதங்களில் தடவி அதன்மேல் பிளாஸ்டிக் காகிதம் கொண்டு மூடி வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்துப் பார்த்தால், பாதங்கள் குழந்தையின் பிஞ்சுப் பாதங்கள் போல் ஆகியிருக்கும். (பெடிக்யூர் என்றால் கால் விரல் மற்றும் நகங்களை அழகு செய்வது என்று பொருள்)


தலைமுடியின் ஈரப்பதத்தைப் பேணுங்கள் 

சிக்குப் படிந்த அல்லது வறண்ட கூந்தலை ஈரப்பதத்துடன் பேணுவதற்கு, கண்டிஷனர் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. என்னதான் நிலைநிறுத்தும் கண்டிஷனரைப் பயன்படுத்தினாலும், ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தினாலும், அதனை சரியான முறையில் பயன்படுத்துகிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளவும். கண்டிஷனரையோ, ஆலிவ் எண்ணெயையோ தலைமுடியின் நுனியிலிருந்து தடவத் தொடங்க வேண்டும். அதுவும் தலைமுடியின் நடுப்பகுதி வரை தடவ வேண்டும். மயிர்க் கால்களில் தடவக் கூடாது. ஏனெனில் ஸ்கால்ப் ஆனது மயிர்க்கால்களுக்குப் போதுமான எண்ணெயை இயற்கையாகவே உற்பத்தி செய்து கொள்கிறது. ஆகவே இந்த நிலையில் கண்டிஷனர் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவினால், அது ஸ்கால்பின் பணியைச் செய்யவிடாமல் தடுக்கலாம்.


உண்மையிலேயே பொடுகினைத் தடுக்க முயற்சிக்கவும் 

பொடுகினைத் தடுக்கும், பொடுகிலிருந்து முற்றிலும் விடுதலை அளிக்கும் என்று விளம்பரப்படுத்தப்படும் ஷாம்புக்கள் அனைத்தும் உண்மையிலேயே பொடுகிலிருந்து விடுதலை அளிப்பவை அல்ல. பெரும்பாலான மக்கள் பொடுகு என்பது வறண்ட ஸ்கால்ப்பினால் வருவது என்று நினைக்கிறார்கள். தலைமுடியை நீரில் சரியாக அலசாமல் இருப்பதினாலோ, தவறான ஷாம்புக்களைப் பயன்படுத்தியதன் காரணமாக தலையில் படிவுகள் படிந்ததினாலோ, ஸ்கால்ப் வறண்டு போகலாம். இம்மாதிரியான நிலைமைக்கு பொடுகை போக்கும் ஷாம்புக்கள் பலன் தராது. பொடுகுத் தொல்லை நீங்கவில்லை என்றால், தலைமுடியை இன்னும் அதிக நேரம் நீரில் நன்றாக அலசவும். மேலும், பயன்படுத்தும் ஷாம்புவை நிறுத்திவிட்டு, தரம் உயர்ந்த ஷாம்புவைப் பயன்படுத்திப் பார்க்கவும்



குட்டைக் கூந்தல் வயதை அதிகப்படுத்திக் காட்டும் 

குட்டைக் கூந்தல் வைத்துக் கொள்வது ஃபேஷனாக இருந்தாலும், குட்டைக் கூந்தல் வயதை அதிகப்படுத்திக் காட்டும். ஆகவே இளமையுடன் தோற்றமளிக்க விரும்பினால் குட்டையான கூந்தல் தான் முதல் எதிரி ஆகும். குட்டைக் கூந்தல் இளமையான தோற்றத்தைத் தராது. எனவே கூந்தலை நீளமாகப் பேணுங்கள். காதுக்கு அருகில் சற்று அதிகமாக முடி இருந்தால், அது கழுத்தின் மென்மைத் தன்மையைக் கூட்டி, இளமை எழிலையும் கூட்டிக் காட்டும். .




அப்பிள் நிறுவனத்தின் கணனி ஒன்று ஏல விற்பனையில் சாதனை!

அப்பிள் நிறுவனத்தின் கணனி ஒன்று ஏல விற்பனையில் சாதனை!




அப்பிள் நிறுவனம் தயாரித்த ஆரம்பகால கணனி ஒன்று 3.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டிருக்கிறது.
1976-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் முதன்முதலாக தயாரித்த 200 கணனிகளில் இதுவும் ஒன்று என்பதுதான் இந்த அதிக விலைக்கு காரணம்.

எனினும், இந்த 200 கணனிகளில் வேலை செய்யும் நிலையில் உள்ளவை 6 மட்டுமே. அதில் ஒன்றுதான் மூ்ன்றரை கோடி ரூபாய்க்கு விலை போயுள்ளது.

ஜெர்மனியைச சேர்ந்த ப்ரெகர் (Breker) என்ற நிறுவனம் நடத்திய ஏலத்தில் ஆசிய கண்டத்தை சேர்ந்த அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒருவர் இந்த கணனியை விலைக்கு வாங்கியுள்ளார்.

அப்பிள் கணனி நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்சுடன் இணைந்து தொடங்கிய வாஸ்னியாக் (Wozniak) இதில் கையெழுத்திட்டுள்ளார் என்பது இதன் கூடுதல் சிறப்பு.

இதுபோன்ற பழமையான ஒரு அப்பிள் கணனி கடந்தாண்டு 3 கோடி ரூபாய்க்கு விலை போனமை குறிப்பிடத்தக்கது.

காலநிலை சீர்கேட்டில் சிக்கிய இந்திய நீர்மூழ்கி கப்பலுக்கு எகிப்து ராணுவ உதவி

காலநிலை சீர்கேட்டில் சிக்கிய இந்திய நீர்மூழ்கி கப்பலுக்கு எகிப்து ராணுவ உதவி


இந்திய நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். சிந்துரக்‌ஷாக் 1997-ம் ஆண்டு ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டது.இந்த நீர்மூழ்கி கப்பலை புதுப்பிப்பதற்காக ரஷ்யாவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகர துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து திரும்பிய சிந்துரக்‌ஷாக் நீர்மூழ்கி கப்பல், மத்தியத்தரைக்கடலின் கடல் அலை சீற்றத்தாலும், காலநிலை மிகவும் மோசமாக இருந்ததாலும் தனது பயணத்தை தொடர முடியாமல் மாட்டிக்கொண்டது.

இதனையடுத்து எகிப்து அரசிடம் உதவி கோரப்பட்டது. அதனை ஏற்ற எகிப்திய அரசு, தனது ராணுவ உதவியுடன் இந்திய நீர்மூழ்கி கப்பலை போர்ட் செட் துறைமுகத்திற்கு பத்திரமாக இழுத்து வந்தது.

இந்த நல்ல எண்ண நடவடிக்கையை வரவேற்ற எகிப்திய இந்திய தூதர் நவ்தீப் சூரி, எகிப்து அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.