Tuesday, November 20, 2012

கொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்

கொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்


நாய்களுடன் பண்ணையில் வாழ்கிறார் உருகுவே அதிபர்

ஓட்டுப் போடும் மக்களின் வாழ்க்கைத் தரத்திலிருந்து பெரிதும் விலகிப்போய் அரசியல் தலைவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்ற மக்களின் பொறுமலை சாதாரணமாக பல நாடுகளிலும் கேட்க முடியும்.
ஆனால் உருகுவே நாட்டில் அதுவல்ல நிலைமை.

அந்நாட்டின் அதிபர் திறந்த வெளியில் தகரக் கொட்டகையில் வாழ்கிறார்.
கொட்டகை குடில் கோரைப் புற்களும் களையும் பெரிதாக வளர்ந்து கிடக்கும் திறந்த வெளியில் தன்னந்தனியாக நிற்கிறது தகர மேற்கூரை கொண்ட கொட்டகை போன்ற அந்த சாதாரண வீடு, வெளியே கொடியில் துணி காய்கிறது. வீட்டுக்கு முன்னால் நொண்டி நாய் ஒன்று திரிந்துகொண்டிருக்கிறது. வெறும் இரண்டு பொலிஸ்காரர்கள் அந்த வீட்டுக்கு முன் காவலுக்கு நிற்கிறார்கள். கிணற்றுத் தண்ணீரை விட்டால் அந்த வீட்டுக்கு வேறு தண்ணீர் கிடையாது.

தகர மேற்கூரை கொண்ட கொட்டகை வீட்டில் அதிபர் வாழ்கிறார்.

 நம்பக் கடினமாக இருந்தாலும் இந்த வர்ணனைக்குரிய இடம் உருகுவே அதிபரின் வீடு.உருகுவே அதிபர் ஹோஸே முயீகா வாழும் விதத்தை மற்ற நாட்டின் அதிபர்களுடைய வாழ்க்கைத் தரத்தோடு எந்த விதத்திலும் ஒப்பிட முடியாது.

அதிபருக்கான சொகுசு மாளிகை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தலைநகருக்கு வெளியே கப்பி ரோடு வழியாக மட்டுமே செல்லக்கூடிய தன் மனைவியின் பண்ணை நிலத்தில் ஒரு சிறிய குடில் அமைத்துக்கொண்டு இவர் வாழ்ந்துவருகிறார்.அதிபரும் அவரது மனைவியும் சேர்ந்து வேலைபார்த்து இந்தப் பண்ணையில் மலர்கள் வளர்க்கின்றனர்.

சம்பளத்தில் பெரும்பங்கு நன்கொடை

மாளிகை வேண்டாம், சொகுசு வாழ்க்கை வேண்டாம் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அதிபருக்குரிய மாதச் சம்பளமாக தனக்கு வரும் பனிரெண்டாயிரம் டாலரில் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதத்தையும் பல்வேறு சமூகப் பணிகளுக்காக முயீகா நன்கொடையாக வழங்கிவிடுகிறார்.
அந்த அடிப்படையில் உலகிலேயே வருமானம் மிகவும் குறைவாகக் கொண்ட ஏழை அதிபர் என்றால் அது இவர்தான்.

"என் வாழ்க்கையின் பெரும்பங்கை நான் இப்படித்தான் வாழ்ந்திருக்கிறேன். இதனை வைத்துக்கொண்டே என்னால் நலமாக வாழ்ந்துவிட முடியும்" என்று தனது பழைய நாற்காலியில் அமர்ந்தபடி முயீகா சொன்னார்.

முயீகா வேண்டாம் என்று சொன்ன உருகுவே அதிபர் மாளிகை
உருகுவேயில் பதவியில் இருப்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தமது சொத்து மதிப்பை வெளியிட வேண்டும். 2010ஆம் ஆண்டு தன்னுடைய சொத்து மதிப்பை முயீகா வெளியிட்டபோது, அது வெறுனே $1800 டாலர்களாகத்தான் இருந்தது. அவருக்குச் சொந்தமான 1987ஆம் ஆண்டு வெளிவந்த வொக்ஸ்வாகன் பீடில் காருடைய மதிப்பு இது. இந்த வருடம், தன் மனைவிக்கு சொந்தமான நிலம், டிராக்டர், வீடு என்பனவற்றில் பாதியளவை அவர் தனது சொத்தாக காட்டியுள்ளார். ஆக இந்த வருடம் அவருடைய சொத்துமதிப்பு இரண்டு லட்சத்து பதினையாயிரம் டாலர்களாக உள்ளது.

1960களில் கூபாவில் புரட்சி நடந்த சமயத்தில் உருகுவேயில் கெரில்லா தீவிர இடதுசாரி அமைப்பில் அங்கம் வகித்த முயீகா, ஆறு முறை துப்பாக்கி சூடு வாங்கியுள்ளார், 14 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு முதல் இவர் உருகுவேயில் அதிபராக இருந்துவருகிறார்.
ஏன் இந்த எளிய வாழ்க்கை என்று கேட்கப்போனால், "என்னைப் பார்க்க லூசுக் கிழவனாகத் தெரியும் ஆனால் சுயவிருப்பத்தின் அடிப்படையில் நான் தேர்வுசெய்த வாழ்க்கை முறை இது" என்று அனாயசமாக பதிலளிக்கிறார் அதிபர் முயீகா.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!