Thursday, November 22, 2012

உலக அழிவிலிருந்து தப்பிக்க பிரான்ஸ் கிராமத்திற்கு இடம் பெயரும் மக்கள்

உலக அழிவிலிருந்து தப்பிக்க பிரான்ஸ் கிராமத்திற்கு இடம் பெயரும் மக்கள்





மாயன் காலண்டரின் அடிப்படையில் வரும் டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியப்போகிறது என்ற தகவல் அண்மையில் வெளியானது.
சுமார் 4,600 ஆண்டு பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் மாயன் நாகரீகம் (Mayan civilization) பிரேசில், எல் சால்வடோர், கெளதமாலா பகுதிகளில் தொடங்கி, தென் அமெரிக்கா முழுவதும் பரவியிருந்தது.

இந்த நாகரீகம் 8ம் நூற்றாண்டில் அழியத்தொடங்கி, 9ம் நூற்றாண்டில் காணாமலேயே போய்விட்டது.

உலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு சுமார் 200 ஆண்டுகாலம் நீடித்த வறட்சியால் இந்த நாகரீகமே அழிந்து போனதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த நாகரீகத்து மக்கள் காலண்டர் செய்வதில் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள்.


இந்த நாகரீகத்தின் புராண நம்பிக்கைகளின்படி, கடவுள் இதுவரை 4 முறை பூமியைப் படைத்துள்ளார்.

அதில் மூன்று முறையும் பூமியை முழுமையாக உருவாக்க முடியாமல் கடவுளே தோற்றுவிட்டார்.

4வதாக அவர் உருவாக்கிய 'சக்சஸ்புல்' பூமியில் தான் மனிதர்களும் பிற உயிரினங்களும் வாழ்கின்றன.

ஆனால், மாயா மொழியில் 13 பக்டூன்கள் (தோராயமாக சொன்னால் 5,125 வருடங்கள்) தான் இந்த உலகம் இருக்குமாம்.

அதன் பின்னர் இந்த உலகம் முழுவதும் அழிந்து விடும் (apocalypse).

மாயா காலண்டரின்படி, இந்த பூமி வரும் டிசம்பர் 21ம் திகதியோடு தனது 13 பக்டூன்களைக் கடந்து, காணாமல் போகப் போகிறது.

மாயா காலண்டர்படி இந்தத் திகதி 13.0.0.0.0. ஆகும்.

எனவே இதை வைத்து ஜோதிடர்கள் இந்த உலகம் வரும் டிசம்பர் 21ம் திகதியுடன் அழிந்து விடுமென கூறியுள்ளார்கள்.


இந்த மாயா ஜோதிடத்துடன் தங்களது கற்பனைகளையும் சேர்த்து சில மாடர்ன் ஜோதிடர்கள் ஒரு புதிய கட்டுக்கதையை விட்டுள்ளனர்.

இவர்களின் கூற்றுப்படி பிரான்ஸ் நாட்டின் தென் மேற்கே Bugarach என்ற சிறிய கிராமத்தில் உள்ள ஒரு மலை வரும் டிசம்பர் 21ம் திகதி அப்படியே பிளக்கும்.

அதிலிருந்து ஒரு வேற்று கிரக விண்கலம் வெளியே வரும். அந்த விண்கலத்தில் ஏறிக் கொள்கிறவர்கள் மட்டுமே தப்புவார்கள்.

மற்றவர்கள் எல்லோருமே இந்த பூமியோடு சேர்ந்து மடிந்து போகிறார்கள்.

இது தான் இவர்கள் சொல்லும் ஜோசியம். மலை மீது வேற்று கிரக விண்கலம் வந்திறங்கி, வேற்றுகிரகவாசிகளும் வந்திறங்குவதை ''Close Encounters of the Third Kind'' படத்தில் நமக்குக் காட்டியிருந்தார் ஸ்டீவன் ஸ்பீல்பர்க்.

அதே போல 2012 படத்தில் உலக அழிவிலிருந்து மக்களைக் காக்க மாபெரும் நீர்மூழ்கிகள் ஒரு மலையைக் குடைந்து தான் கட்டப்படும் என கூறியுள்ளார்கள்.

இந்த ஜோதிடத்தையும் நம்பும் ஆட்களும் இருப்பதால், Bugarach பகுதிக்கு வரும் ஆட்களின் எண்ணிக்கை சமீபகாலத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

டிசம்பர் 21ம் திகதி நெருங்க நெருங்க இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து, பெரும் பிரச்சனையாகிவிடலாம் என்று பிரான்ஸ் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதையடுத்து இப்போதே அங்கு பாதுகாப்புப் படையினரை பிரான்ஸ் குவிக்க ஆரம்பித்துள்ளது. மேலும் Bugarach பகுதிக்குள் வெளியாட்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே டிசம்பர் 21ம் திகதி சூரியனிலிருந்து பெரும் கதிர்வீச்சு கிளம்பி பூமியை சுட்டுப் பொசுக்கும், பூமியின் காந்தப் புலமே (magnetic field) வடக்கு-தெற்கு என்பதற்குப் பதிலாக கிழக்கு மேற்கு என்று மாறப் போகிறது என்றெல்லாம் கூட Conspiracy theorists-கள் இந்த 'மாயா கதைக்கு' மசாலா சேர்த்து வருகின்றனர்.

இந்த மாயா நாகரீகத்தை பின்புலமாக வைத்து ஹாலிவுட் இயக்குனர் மெல் கிப்சன் 'Apocalypto' என்ற ஒரு படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!