Tuesday, December 4, 2012

பவர்கட்டால் அரிசி விலை எகிறுது : பருப்பு விலை குறைகிறது

பவர்கட்டால் அரிசி விலை எகிறுது : பருப்பு விலை குறைகிறது


விளைச்சல் அதிகரிப்பு மற்றும் இறக்குமதியால் பருப்பு விலை குறைய தொடங்கியுள்ளது. மின்தடையால் அரிசி விலை உயர்ந்துள்ளது. தமிழகத்துக்கு கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், அரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் பெய்தது. இதனால், விளைச்சல் அமோகமாக உள்ளது. மேலும், பர்மாவில் இருந்து 1 லட்சம் மூட்டை பருப்பு இறக்குமதி செய்ய தயார் நிலையில் உள்ளது. இதன் காரணமாக பருப்பு விலை குறைய தொடங்கியுள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.78க்கு விற்றது தற்போது ரூ.6 குறைந்து ரூ.72க்கு விற்கப்படுகிறது.

இதே போல், தான்சானியா பருப்பு ரூ.75லிருந்து ரூ.62க்கும், உளுந்தம் பருப்பு ரூ.65லிருந்து ரூ.58க்கும், பர்மா உளுந்தம்பருப்பு ரூ.58லிருந்து ரூ.48க்கும், பாசிப்பருப்பு ரூ.80லிருந்து ரூ.75க்கும், பாசிப்பருப்பு (2ம் ரகம்) ரூ.70லிருந்து ரூ.65க்கும், கடலைப் பருப்பு ரூ.72 லிருந்து ரூ.68க்கும், கடலைப்பருப்பு (2ம் ரகம்) ரூ.68லிருந்து ரூ.63க்கும் விற்கப்படுகிறது. இந்தோனேசியா, மலேசியாவில் இருந்து அதிக அளவு இறக்குமதி காரணமாக ஆயில் விலையும் குறைய தொடங்கியுள்ளது. கடந்த வாரம் பாமாயில் (1 லிட்டர் பாக்கெட்) ரூ.58க்கு விற்றது. இது தற்போது ரூ.55க்கும், தேங்காய் எண்ணெய் ரூ.110லிருந்து ரூ.90க்கும், தேங்காய் எண்ணெய்(2ம் ரகம்) ரூ.100 லிருந்து ரூ.90க்கும், அக்மார்க் நல்லெண்ணெய் ரூ.180லிருந்து ரூ.170க்கும், அக்மார்க் நல்லெண்ணெய்(2ம்ரகம்) ரூ.90லிருந்து ரூ.80க்கும், வனஸ்பதி ரூ.85லிருந்து ரூ.75க்கும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதே போல், மின் தடை, வேலை ஆட்கள் பற்றாக்குறை, பருவமழை சரியாக பெய்யாமை, கிணற்றில் தண்ணீர் இல்லாததால் மோட்டார் பம்புகளை இயக்க முடியாத நிலையால் நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரிசி விலை உயர தொடங்கியுள்ளது. கடந்த வாரம் குச்சி ரக அரிசி (75 கிலோ மூட்டை) ரூ.1600க்கு விற்றது ரூ.1800க்கும், ஏடிடி45 ரூ.2000லிருந்து ரூ.2200க்கும், அதிசய பொன்னி ரூ.2200லிருந்து ரூ.2400க்கும், பாபட்லா (புதுசு) ரூ.2300லிருந்து ரூ.2500க்கும், பாபட்லா (பழையது) ரூ.2500லிருந்து ரூ.2700க்கும், இட்லி அரிசி ரூ.2100 லிருந்து ரூ.2300க்கும், வெள்ளை பொன்னி ரூ.2800லிருந்து ரூ.3000 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. ஜனவரி மாதம் நெல் அறுவடை தொடங்கும். அதுவரை அரிசி விலை குறைய வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!