Wednesday, December 5, 2012

செவ்வாய் மண்ணில் 'கார்பன்' .. உயிரினம் இருந்திருக்க வாய்ப்பு?

செவ்வாய் மண்ணில் 'கார்பன்' .. உயிரினம் இருந்திருக்க வாய்ப்பு?





செவ்வாய் கிரக ஆராய்ச்சில் இன்னும் ஒரு முக்கிய திருப்பமாக அந்த கிரகத்தின் மண்ணில் கார்பன் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கை வலுப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பியுள்ள கியூரியாசிட்டி விண்கலத்தின் ஆய்வின் மூலம் இது தெரிய வந்துள்ளது. இருப்பினும் இது ஆரம்ப கட்ட கண்டுபிடிப்புதான். இந்த ஆய்வை வைத்து அங்கு உயிரினங்கள் இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு உறுதியாக வந்து விட முடியாது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கியூரியாசிட்டி விண்கலமே நடத்திய மண் மாதிரி ஆய்வின்போது, மண்ணில் கார்பன் மூலக்கூறுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கார்பன், உயிரினங்களின் உருவாக்கத்தை நிர்ணயிக்கும் கார்பனா அல்லது வேறு ஏதேனுமா என்பது குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டியுள்ளது. மேலும் இந்தக் கார்பன் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டியுள்ளது.

ஒரு வேளை இந்த கார்பன், செவ்வாய் கிரக மண்ணிலேயே இயற்கையாகவே இருந்தது என்றால் நிச்சயம் உயிரினம் இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கைக்கு வர முடியும் என்றும் நாசா கூறுகிறது.

உயிரினம் வாழ மொத்தம் மூன்று விஷயங்கள் அவசியம். முதலில் தண்ணீர், சக்தி ஆதாரம் மற்றும் கார்பன். இது போக சல்பர், ஆக்சிஜன், பாஸ்பரஸ், நைட்ரஜன் ஆகியவையும் கூட தேவை.

கடந்த நான்கு மாதமாக செவ்வாய் கிரகத்தில் நிலை கொண்டுள்ள கியூரியாசிட்டி விண்கலம், பல்வேறு வகையான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது. அதில் முக்கியக் கண்டுபிடிப்பாக தற்போது கியூரியாசிட்டி போய் இறங்கியுள்ள பகுதியில் ஒரு காலத்தில் அபரிமிதமான தண்ணீர் இருந்தது என்பதுதான்.

மேலும் அங்குள்ள நீர்ப்படுகையில், தாதுக்களும் அடங்கியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!