Friday, November 30, 2012

2012 உலகம் அழியுமா? உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு! கட்டாயம் படியுங்கள் - பாகம் 10

2012 உலகம் அழியுமா? உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு! கட்டாயம் படியுங்கள் - பாகம் 10

கடந்த அத்தியாயத்தை படிக்க இங்கே கிளிக் செய்யவும்







மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் இதை ஆராய்ந்து பார்த்தால், பலமான பாதுகாப்புகளுடன் கட்டப்படும் இந்தக் கட்டடங்கள் உலகம் அழியும்போது, பலர் பாதுகாப்பாக வாழும்படி அமைக்கப்படுகிறது எனத் தெரிய வருகிறது. அதாவது ஒரு நட்சத்திர விடுதியின் வசதிகளுடன் கூடிய பல அறைகளுடன் இது அமைக்கப்படுகிறது. இதை யார் அமைக்கிறார்கள்? எதற்கு அமைக்கிறார்கள் என்ற எந்தக் கேள்விக்கும் அங்கு யாரும் பதில் சொல்லத் தயாரில்லை. எல்லாமே மர்மங்களாக இருக்கின்றன.

கட்டடம் கட்டப்படும் இடத்தில், ‘New World Airport Commission’ என்னும் ஸ்தாபனத்தால் கட்டடம் கட்டப்படுகிறது என்று எழுதப்பட்ட கல்வெட்டு இருக்கிறது. ஆனால் இந்த ஸ்தாபனம் பற்றி ஆராய்ந்தால், அப்படி ஒரு ஸ்தாபனம் அமெரிக்காவில் சட்டரீதியாக, எங்குமே பதிவு செய்யப்படவில்லை. அந்தக் கல்வெட்டில் உள்ள சின்னமும், ‘நியூ வேர்ல்ட் ஆர்டர்’ (New World Order) என்னும் பெயரும் எமக்கு முன்னரே பரீட்சயமானதால், பல உண்மைகளையும், பயங்கரங்களையும் அவை சொல்லாமல் சொல்ல ஆரம்பித்திருக்கின்றன.


 
“அட! அவர்களா நீங்கள்?” என்ற ஆச்சரியத்துடன் இதை ஆய்வுக்குட்படுத்தியபோது, கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமானவை. அமெரிக்காவைப் பொறுத்தவரை, இந்த விமான நிலையம் ஒன்றும் மிக முக்கியமான விமான நிலையமோ அல்லது கொலராடோ ஒரு முக்கிய மாநிலமோ கிடையாது. ஆனால் இந்த விமான நிலையத்துக்கு மிக அருகில், சமீபமாகப் பலர் வீடுகளை வாங்கத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் யார் யார் என்று பார்த்தால் ஒட்டு மொத்த தலையே சுற்றும் போல் உள்ளது. உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் என்று நீங்கள் யார் யாரை நினைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் அங்கே வீடுகளை வாங்கியிருக்கின்றனர். யார் யார் வாங்கியுள்ளனர் என்ற பெயர்கள் கூட எனக்குத் தெரிந்திருந்தாலும், நான் அவற்றை இங்கு குறிப்பிட்டுச் சொல்லவில்லை. உலகின் பணக்காரர்கள் எல்லோரும், ஒரு பிரபலமே இல்லாத சாதாரண இடத்தில் வீடுகள் வாங்கியிருக்கிறார்கள். யாருக்கும் தெரியாமல், மிகமிக இரகசியமாக.

சொல்லி வைத்தது போல எல்லாப் பணக்காரர்களும் ஏன் டென்வெர் விமான நிலையத்துக்கு அருகில் வீடுகள் வாங்குகிறார்கள்? ஏன் விமான நிலையத்துக்குக் கீழே, நிலக் கீழ் சுரங்கங்கள் அமைக்கப்படுகின்றன? உலகம் அழியும் நிலை தோன்றினால் அதிலிருந்து காப்பாற்றப்பட ஒரு சிலர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுப் பாதுகாக்கப்படுவார்களா? அந்த ஒரு சிலரில் நானோ, நீங்களோ இல்லாமல் அதிகாரத்தில் உள்ளவர்களும், உலகக் கோடீஸ்வரர்களும் மட்டும்தான் காப்பாற்றப்படுவார்களா?
இந்தக் கேள்விகளின் அடிப்படையிலேயே, சமீபத்தில் வெளிவந்த ’2012′ என்னும் ஆங்கிலத் திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தை ஒரு ‘ஆக்ஷன் த்ரில்லர்’ என்னும் வகையிலேயே நாம் பார்த்தோம். ஆனால், ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிகள் பற்றி விரிவாகப் படத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதைக் கவனிக்கத் தவறிவிட்டோம். அந்தப் படம் எடுக்கப்பட்டதே, உலகம் அழியுமானால், அரசியலில் உள்ள முக்கிய தலைவர்களும்,

கோடீஸ்வரர்களும், அதியுயர் அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் மட்டுமே அந்த அழிவில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்பதை மையமாக வைத்துத்தான். முடிந்தால் அந்தப் படத்தை ஒரு முறை மீண்டும் பாருங்கள்.


உலக அழிவு பற்றிய பயத்தினால், நாம் இப்படி எல்லாம் அவர்களைப் பற்றி அபாண்டமாகச் சந்தேகப்படுகிறோம் என்று நீங்கள் நினைக்கலாம். அது அப்படி இல்லை என்று பதில் சொல்வதற்கு நான், டென்வெர் விமான நிலையத்தில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்களைக் காட்ட மீண்டும் உங்களை அங்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

மனிதனால் செய்யப்படும் தொலைதூரப் பயணங்களில் ஆபத்தானது என்று கருதப்படுவது விமானப் பயணம்தான். பிரயாணிகள் பயணம் செல்லும் விமான நிலையங்கள் உலகெங்குமே அழகானவையாகவும், மனதுக்கு உகந்தவையாகவுமே கட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த டென்வெர் விமான நிலையம் எப்படிக் காட்சியளிக்கிறது தெரியுமா? விமான நிலையச் சுவர்களில் விசித்திரமாக, மிகப் பிரமாண்டமாக சித்திரங்கள் வரையப்பட்டிருக்கின்றன. அந்தச் சித்திரங்கள் அனைத்தும் சொல்வது வேறெதைப் பற்றியுமல்ல, உலக அழிவைப் பற்றித்தான்.

விமான நிலையத்துக்குக் கீழே உலக அழிவில் இருந்து தப்பிக் கொள்ளப் பாதுகாப்பான இடம். மேலே உலக அழிவைச் சொல்லும் சித்திரங்கள். கீழே கட்டப்படுவது வெளியே தெரியவராது என்ற நினைப்பில், குறியீடாக இந்த உலக அழிவு அங்கு சித்திரமாக வையப்பட்டிருக்கின்றது. எந்த ஒரு விமான நிலையத்திலாவது இறந்த உடல்கள், சவப்பெட்டிகள், மனித அவலங்கள் எனச் சித்திரங்கள் வரைவார்களா……..? ஆனால் டென்வெர் விமான நிலையத்தில் வரைந்திருக்கிறார்கள். அந்தச் சித்திரங்களில் சிலவற்றை நீங்களே பாருங்கள்………!









படங்கள் இன்னும் அதிகமாக இருக்கின்றன. எல்லாவற்றையும் இங்கு உங்களுக்குத் தர முடியவில்லை.

அதிகம் எதற்கு? எந்த விமான நிலையத்திலாவது பயணப் பெட்டியினுள் இருந்து சாத்தான் வெளிப்படுவது போல சிலை செய்து வைத்திருப்பர்களா? அதுவும் இருக்கிறது அங்கே!


எல்லாம் சரி, உலகம் அழிவது என்றால் மாயன் இல்லாமல் ஒரு உலக அழிவா…? அதுவும் அங்கே காணப்படுகிறது. மாயன் இனத்துச் சிறுமி ஒருத்தி, மாயன்களின் சுவர் ஓவியத்தின் பகுதியொன்றைத் தன் கைகளில் ஏந்தியபடி இருப்பதும் அந்தச் சித்திரங்களில் காணப்படுகிறது. இது மேலதிக பயத்தை எமக்கு ஏற்படுத்துகிறது. அதையும் பாருங்கள்.



இங்குமா மாயன் என்று ஆச்சரியம் வரவில்லையா…?
இந்தச் சித்திரங்கள் பற்றி நிறையவே விமர்சித்துக் கொண்டு போகலாம். அவ்வளவு உலக அழிவு பற்றிய விபரங்கள் அடங்கிய சித்திரங்கள் அங்கு வரையப்பட்டிருக்கின்றன. ஒரு விமான நிலையத்தில் அப்படிச் சித்திரங்கள் வரையப்பட்டிருப்பது அசாதாரணமானவை. ஆனால் ஏன்…..?

இந்த டென்வெர் விமான நிலையத்தின் நிலத்துக்குக் கீழே அமைக்கப்பட்ட சுரங்க நகரைப் போல, அமெரிக்காவில் மட்டும் மொத்தமாக பதினெட்டு இடங்களில் நிலக் கீழ்ச் சுரங்கங்கள் இராணுவப் பாதுகாப்புகளுடன் இரகசியமாக அமைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் உலகெங்கும் பல இடங்களிலும் மிக இரகசியமாக, பல கட்டடங்கள் இப்படி அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆப்ரிக்காவில் மிகப்பெரிய நிலக் கீழ் நகரம் அமைக்கப்பட்டு வருகிறது. இவையெல்லாம் எதற்கு? இவ்வளவு பணச் செலவுகளுடன் காரணமில்லாமல் யாரும் இவற்றை அமைப்பார்களா..?






மேலே படங்களில் உள்ளவை, அமெரிக்காவின் பல இடங்களில் அமைக்கப்படும் நிலக் கீழ் நகரங்கள். வெளியே எதுவுமே தெரியாத அளவுக்கு அமைதியாகக் காணப்படும் இவை உள்ளே மிகப் பிரமாண்டமானவை.
அமெரிக்கா என்னும் நாட்டில் அநேக இரகசியங்கள் மீடியாக்களினால் வெகு சுலபமாக வெளிவந்து விடுகின்றன. ஆனால் அமெரிக்கா தவிர்த்து சீனா, ரஷ்யா போன்ற பிற நாடுகளில் அப்படி அல்ல. அங்கு என்ன என்ன கட்டடங்கள் அமைக்கப் படுகின்றன என்பது யாருக்குமே தெரியாத இரகசியங்கள். இதனாலேயே நான் முன்னர் சொன்ன ’2012′ என்னும் ஆங்கிலப் படத்தின் இறுதியில் கூட, உலக உயர் சக்திகள் சீனாவில் இணைவதாகக் காட்டியிருந்தார்கள்.

இவை மட்டுமல்ல எம்மை ஆச்சரியப்படுத்துபவை. இதைவிட இன்னுமொன்றும் உண்டு. அதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதுவும் தெரிந்து விட்டால், உலகம் அழியுமா என்னும் சந்தேகம் வருவதற்குப் பதில், அழியும் என்னும் நம்பிக்கையே உங்களுக்கு ஏற்பட்டுவிடும். இதைத் தெரிந்து கொள்ள ஐரோப்பா, ஸ்காண்டினேவியா நோக்கி எம் பார்வையைத் திருப்ப வேண்டும்.

நோர்வே நாட்டுக்குச் சொந்தமாக, வட துருவத்தில் ‘ஸ்வால்பார்ட்’ (Svalbard) எனும் தீவு ஒன்று உண்டு. எங்கு பார்த்தாலும் மலைகளும், அவற்றில் நிறைந்திருக்கும் பனிகளுமாகவே அந்த இடம் எப்போதுமே காட்சியளிக்கும். இந்த இடமும் டென்வெர் விமான நிலையத்தைப் போல மிக முக்கிய இடமாக இப்போது இருக்கிறது. அது என்ன தெரியுமா…?
சொல்கிறேன்……!


உலகில் உள்ள அனைத்து விதமான மரங்கள், செடிகள், கொடிகள் ஆகியவற்றின் விதைகளும் (Seeds), கிழங்குகளும், தண்டுகளும் கோடிக்கணக்கில், டன் டன்னாக அங்கு பாதுகாப்பாக சேர்த்து வைக்கப்படுகிறது. ஒன்பது மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டு, மலைகளைக் குடைந்து, நிலத்தடிச் சுரங்கமாகக் கட்டப்பட்ட கட்டடத்தில் இந்த விதைகள் பாதுகாக்கப்படுகின்றன. உலகம் அழிந்தாலும், இவற்றிற்கு எந்தப் பாதிப்பும் வரமுடியாத அமைப்பில் கட்டடங்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. மாதம் ஒன்றுக்கு ஒன்றரை இலட்சம் செலவு செய்து குளிர்பதனப்படுத்தப்பட்டு இவை பாதுகாக்கப்படுகின்றன.


உலகத்தில் அழிவு ஏற்படும் பட்சத்தில், அதன் பின்னர் உருவாகும் மாற்று உலகத்தில், அழிவிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் மீண்டும் மரம் செடிகளை உற்பத்தி செய்ய இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. உண்ண உணவின்றிப் பல நாடுகளில் மக்கள் உயிர்களை விட்டுக் கொண்டிருக்கும்போது, இல்லாத அழிவு ஒன்றை எதிர்பார்த்து இவ்வளவு செலவில் இப்படி ஒரு பாதுகாப்பு வைப்பகம் எதற்காக?





இப்படிப்பட்ட பாதுகாப்பு ஏன் வட துருவத்தில் செய்யப்பட வேண்டும்? பூமியின் வட, தென் துருவத்திற்கான அச்சு தனது தடத்திலிருந்து இடம் மாறினால் (Pole Shift), தற்சமயம் வெப்ப வலயப் பிரதேசமாக இருக்கும் இடங்கள், குளிர்ப் பிரதேசங்களாகவும், குளிர்ப் பிரதேசங்கள் வெப்ப வலயப் பிரதேசங்களாகவும் மாறும் ஆபத்து உண்டு என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துவது ஏனோ ஞாபகத்திற்கு வரவில்லையா?




உலகம் அழியும் ஒரு நிலை ஏற்படுமாயின், மரங்களைப் பாதுகாக்கும் இடம் வெப்ப வலயப் பிரதேசமாக மாறி அங்கு மரங்களை உற்பத்தி செய்யக் கூடியதாக மாறலாம். அழிவிலிருந்து காப்பாற்றப்படும் சில மனிதர்களால், வெப்ப வலயமாக மாறியிருக்கும் இந்த நோர்வே பகுதியில் மீண்டும் ஒரு மனித நாகரீகத்தை உருவாக்கும் திட்டம் யாராலும் உருவாக்கப்பட்டதா?
மனிதர்கள் அங்கே! மரங்கள் இங்கே! என்ற இந்த புத்திசாலித்தனமான செயல்களை எல்லாம் இவர்களுக்குச் செய்வதற்கு கட்டளையிட்டவர்கள் யார்? இவையெல்லாவற்றையும் யார் அமைக்கிறார்கள்?

உலகப் பணக்காரர்களையும், அரசியல்வாதிகளையும், பெரும் சக்தி வாய்ந்தவர்களையும் எந்த சக்தி ஒன்றிணைக்கிறது? நிச்சயமாக இதை ஒரு பலமான சக்தி இருந்து கொண்டுதான் இணைக்க வேண்டும் அல்லவா?
அவர்கள் யார் என்பதையும், அவர்களால் இன்னும் என்ன என்ன சதிவலைகள் பின்னப்படுகின்றன?

பாகம் 11

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!