Thursday, November 29, 2012

15 ஆயிரம் கோடியில் உருவாகும் ஜாலி நகரம்

15 ஆயிரம் கோடியில் உருவாகும் ஜாலி நகரம்



 உலகிலேயே பிரமாண்ட ஷாப்பிங் மால், 100 ஓட்டல்கள், மாபெரும் பூங்கா என ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பொழுதுபோக்கு நகர் உருவாக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலான திட்டத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: எமிரேட்ஸ் நாட்டின் துபாயின் புறநகர் பகுதியில் ‘துபாய் மால்’ உள்ளது. 2008-ல் தொடங்கப்பட்டது. 6 மாடி கட்டிடமான இது 54 லட்சம் சதுரஅடி பரப்பில் பரந்து விரிந்துள்ளது. 1,200-க்கும் அதிகமான கடைகள் உள்ளன. உலகிலேயே பெரிய ஷாப்பிங் மால் இதுதான். இந்த சாதனையை முறியடிக்கும் விதமாக இதைவிட பெரிய ஷாப்பிங் மால் அமைக்க உள்ளோம். ‘மால் ஆப் தி வேர்ல்டு’ என இது அழைக்கப்படும். தினமும் சராசரியாக 2.20 லட்சம் பேர், அதாவது ஆண்டுக்கு 8 கோடி பேர் வந்து போகும் அளவுக்கு பிரமாண்டமாக இது அமைக்கப்படும். இது தவிர, 100 ஓட்டல்கள், லண்டன் ஹைட் பார்க்கைவிட பெரிதாக, 3.5 கோடி பேர் வரக்கூடிய வகையில் 455 ஏக்கரில் ஒரு பிரமாண்ட பார்க் ஆகியவையும் அமைக்கப்படும்.

அமெரிக்காவின் யுனிவர்சல் ஸ்டுடியோ, இந்திய ரசிகர்களை மகிழ்விக்கும் பாலிவுட் ஸ்டைல் தீம் பார்க், குழந்தைகளுக்கான வாட்டர் பார்க், அருங்காட்சியகங்கள், கலை கண்காட்சிகள் ஆகியவையும் இந்நகரில் அமைய உள்ளன. உலகம் முழுவதும் உள்ள புகழ்பெற்ற சினிமா கேரக்டர்கள், கார்ட்டூன் உருவங்கள், விலங்கு உருவங்களை இங்கு கண்டுகளிக்கலாம்.
நாட்டின் துணை அதிபரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை கவுரவிக்கும் வகையில் ‘முகமது பின் ரஷீத் சிட்டி’ என்றே இந்நகருக்கு பெயர் வைக்கப்படுகிறது. துபாய் புறநகரையொட்டி ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்நகரம் அமைக்கப்படுகிறது. பிரமாண்ட நகரை உருவாக்குவதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. முதல்கட்ட பணிகள் 2014-ல் முடியும் என்று கூறியிருக்கிறது எமிரேட்ஸ் அரசு.







No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!