Tuesday, June 4, 2013

பார்ட்டி, சீயர் கேர்ள்ஸை தடை செய்து டால்மியா அதிரடி

பார்ட்டி, சீயர் கேர்ள்ஸை தடை செய்து டால்மியா அதிரடி


ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சூதாட்டத்தை தடுக்க சீயர் கேர்ள்ஸ் (நடனப் பெண்களுக்கு) தடை, பார்ட்டி ரத்து உள்ளிட்ட பல அதிரடிகளை புகுத்தவுள்ளார் பி.சி.சி.ஐ., தற்காலிக தலைவர் ஜக்மோகன் டால்மியா.
ஆறாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கிளம்பிய சூதாட்ட புகார் காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.,) தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் தற்காலிமாக ஒதுங்கினார். இவருக்குப்பதில் ஜக்மோகன் டால்மியா, இடைக்கால தலைவரானார்.

சூதாட்டத்தை தடுக்கும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட டால்மியா கூறுகையில், கிரிக்கெட் இழந்த நன்மதிப்பை மீண்டும் கொண்டு வருவது தான் எனது முதல் குறிக்கோள். இதற்காக உடனடியாக எவ்வித “மேஜிக்” வேலையிலும் ஈடுபட முடியாது.

ராஜினாமா செய்த செயலர் சஞ்சய் ஜக்டலே, பொருளாளர் அஜய் ஷிர்கே, ஐ.பி.எல் தலைவர் ராஜிவ் சுக்லா உள்ளிட்டோருக்கு 24 மணி நேரம் கால அவகாசம் தரப்பட்டது. இதில், ஜக்டலே, மீண்டும் செயலர் பதவிக்கு திரும்பப் போவதில்லை என்று தெரிவித்தார்.

அஜய் ஷிர்கே, ராஜிவ் சுக்லா முடிவுக்காக காத்திருக்கிறோம். இதுவரை அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.,) கூட்டத்தில் பி.சி.சி.ஐ., சார்பில் நான் பங்கேற்பதா, இல்லையா என்பது விரைவில் முடிவெடுக்கப்படும்.

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் உடனடியாக மாற்றங்களை கொண்டு வரப் போவதில்லை என்றாலும் போட்டிக்கு பின்னர் நடக்கும் “பார்ட்டி”களுக்கு தடை விதிப்பது தான் கிரிக்கெட்டை சுத்தப்படுத்தும் நடவடிக்கைக்கு முதல் தீர்வாக இருக்கும்.

தவிர, பெண்களின் நடனத்துக்கு தடை கொண்டு வரப்படும். இனிமேல், அணி உரிமையாளர்கள் களத்துக்குள் செல்ல முடியாது. போட்டியின் இடையில் (9 ஓவர்களுக்குப் பின்) விளம்பரதார்களுக்காக வழங்கப்பட்ட “ஸ்டிராடெஜிக் டைம்-அவுட்” ரத்தாகிறது. ஏனெனில், இந்நேரத்தில் தான் பெரும்பாலான சூதாட்டம் நடக்கிறது.

அடுத்து, போட்டியை சற்று தாமதமாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இப்படி செய்வதால், மைதானத்தில் உள்ளவர்களுக்கு முடிவு முன்னதாக தெரிந்துவிடும் என்றும் இதனால், “பெட்டிங்” தடுக்கப்படும் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!