Thursday, June 6, 2013

ஓமானில் வீதிகள் முடும் அளவுக்கு வெள்ளப் பெருக்கு! இன்னும் மழை பொழிகிறது!!

ஓமானில் வீதிகள் முடும் அளவுக்கு வெள்ளப் பெருக்கு! இன்னும் மழை பொழிகிறது!!





கடந்த இரு தினங்களாக ஓமான் நாட்டின் சில பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, ஓமானின் வடகிழக்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. நேற்று இரவு முழுவதும் பெய்த மழையால் பல இடங்களில் வீதிகள் முழுமையாக மூடப்பட்டு காணப்படுகின்றன.

ராயல் ஓமான் போலீஸ், வீதிகளில் வாகனம் செலுத்துபவர்களை அதி ஜாக்கிரதையாக வாகனங்களை செலுத்துமாறு அறிவித்துள்ளது. வீதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இரு வாகனங்கள் மோதிக்கொண்டதில், மஸ்கெட் நகரில் இருந்து 220 கி.மீ. தொலைவில் உள்ள அடாம் என்ற இடத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

மழை காரணமாக, மகோத் பகுதியில் இருந்து அல்-அஷ்காரா வரையுள்ள வீதிகள் முழுமையாக தண்ணீரால் மூடப்பட்டு, குளம் போல காட்சியளிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கிழக்கு கரையோரத்தில் உள்ள அல்-குய்மா பகுதியில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்னமும் ஓயவில்லை எனவும், இன்று பகல் கடும் இடி மின்னலுடன் மழை தொடர்ந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஓமான் நாட்டு வானிலை அவதானிப்பு மையம் (Directorate General of Meteorological and Air Navigation of Oman) நாட்டின் கிழக்கு மற்றும், மத்திய பகுதிகளில் இன்றிரவும் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. தென்கிழக்கு பகுதி கடலில், அலைகள் 3 மீட்டர் உயரத்துக்கு எழுவதால், யாரும் அங்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!