Wednesday, October 3, 2012

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ முடியுமா? ஆய்வு செய்கிறது கியூரியாசிட்டி

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ முடியுமா? ஆய்வு செய்கிறது கியூரியாசிட்டி






செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து கியூரியாசிட்டி ரோவர் ஆய்வு செய்ய உள்ளது.
செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலம் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது.

பத்து மாத பயணத்துக்குப் பின் 56 கோடியே 30 லட்சம் கி.மீ தூரம் கடந்து, கடந்த ஆகஸ்டு 6ஆம் திகதி செவ்வாயில் தரையிறங்கியது கியூரியாசிட்டி விண்கலம்.

பிரமாண்ட விண் கற்களால் ஏற்பட்ட காலே பள்ளப் பகுதியில் "ஏலிஸ் பாலஸ்" என்று பெயரிடப்பட்ட இடத்தில் கடந்த ஐந்து வாரமாக பல்வேறு சோதனைகளை மேற்கொண்டது.

அணுசக்தியால் இயங்கும் கியூரியாசிட்டி நாசா விஞ்ஞானிகளின் முக்கிய கட்டளையான, உயிரைத் தேடும் பயணத்தை மேற்கொள்ள தயாராகி வருகிறது.

கடந்த ஒரு வார காலமாக நடந்த பல கட்ட சோதனைகளுக்கு பின், இறுதியாக அதன் ரோபோ கை சோதிக்கப்பட்டு வருகிறது.

இக்கையில் பொருத்தப்பட்ட, அற்புத கமெரா கையின் அடிப்பகுதியில் வாரப்படும் மணலை சோதிக்க வேண்டும்.

எல்லாம் திருப்தி என்றால் உடனடியாக கியூரியாசிட்டி தொடர் பயணத்தை மேற்கொள்ள வேண்டியதுதான்.

அதன் பின் "ஓட்டம்... ஓட்டம்... உயிர் பொருள் தென்படும் வரை ஓட்டம்" என்பதுதான் கியூரியாசிட்டியின் இலக்காக இருக்கும்.

உயிர் மூலக் கூறுகள், உயிர் வாழத் தேவையான விஷயங்களை தேடும் கியூரியாசிட்டி விஞ்ஞானிகள் உத்தரவிடும் இடத்தில், நின்று கிடைக்கும் பாறை அல்லது மணலை ரோபோ கையால் அள்ளி, அதிநவீன கமெரா மூலம் உடனுக்குடன் ஆராய்ச்சி நடத்தும்.

பெறப்படும் தகவல்கள் அவ்வப்போது விஞ்ஞானிகளின் பார்வைக்கு சென்று விடும். செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் நிலவான "போபோஸ்" பற்றிய வீடியோ படங்களையும் பெறவும் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

கியூரியாசிட்டி வாழும் காலம் இரண்டு ஆண்டு. இதற்குள் 7 கி.மீ பயணம். பின், மவுன்ட் ஷார்ப் எனப்படும் மலை பகுதியில் ஏறும் வகையில், சகல அம்சங்களுடன் இதை உருவாக்கி உள்ளனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!