Monday, September 10, 2012

மாபெரும் புயலை சந்திக்க உள்ளது உலகப் பொருளாதாரம்


மாபெரும் புயலை சந்திக்க உள்ளது உலகப் பொருளாதாரம்








உலகப் பொருளாதாரம் ஒரு மாபெரும் புயலை சந்திக்கவுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியின் கோமோ ஏரியின் அருகே உள்ள செர்னோபியோ நகரில் ஆண்டுதோறும் உலகப் பொருளாதார நிபுணர்கள் கூடி விவாதிப்பது வழக்கம்.

Ambrosetti Forum என்று அழைக்கப்படும் இந்த மாநாட்டில் உலகத் தலைவர்களும், சர்வதேச நிதி விவகாரங்களில் முக்கிய பங்கு வகிக்கும் நிபுணர்கள் கலந்து கொள்வர். இந்த ஆண்டுக்கான கூட்டம் நேற்று தொடங்கியது.

இதில் பேசிய பெரும்பாலான சர்வதேச நிபுணர்களும், உலகம் ஒரு மாபெரும் பொருளாதாரப் புயலை சந்திக்கப் போவதாக எச்சரித்துள்ளனர்.

ஐரோப்பாவில் நிலவும் பொருளாதார தேக்கம் தொடரப் போகிறது, அமெரிக்க பொருளாதாரத்தை அந் நாட்டு அரசியல் போட்டி கீழே தள்ளிவிடப் போகிறது, இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைய ஆரம்பித்துவிட்டது, இத்தோடு ஈரானின் அணு ஆயுத விவகாரத்தால் நிலவும் ஆபத்தான சூழல்.. இவை அனைத்தும் சேர்ந்து உலகை ஒரு புரட்டு புரட்டி போடப் போகின்றன என்றனர் இந்த மாநாட்டில் பேசிய பல நிபுணர்களும்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் அதிகரித்து வரும் கடன் சுமையும் அந் நாடுகளின் அரசியல் நிலவரமும் உலகை வாட்டும் முக்கியமான கவலைக்குரிய விஷயங்கள் என்று கூறும் நிபுணர்கள், இதனால் யூரோ நாணயத்தின் மதிப்பு அதிவேகமாக சரிந்து வருவதையும் சுட்டிக் காட்டினர்.

இந் நிலையில் உலகின் பணக்கார நாடுகளின் கூட்டமைப்பு என்று அழைக்கப்படும் OECD(Organisation for Economic Co-operation and Development) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச பொருளாதார வளர்ச்சி சரிய ஆரம்பித்துவிட்டது.

அடுத்த சில காலத்துக்கு உலகின் டாப் 7 பணக்கார நாடுகளின் வளர்ச்சி விகிதம் வெறும் 0.3 சதவீதமாகத் தான் இருக்கும்(கிட்டத்தட்ட பூஜ்யம்!). இதனால் சர்வதேச அளவில் முதலீடுகளும் வர்த்தகமும் ஸ்தம்பிக்கும். இதன் எதிரொலியாக வேலைவாய்ப்புகளும் குறையும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!