Tuesday, September 18, 2012

சர்வதேச விண்வெளி மையத்தின் தலைமை பொறுப்பில் சுனிதா


சாதனைக்கு மேல் சாதனை
சர்வதேச விண்வெளி மையத்தின் தலைமை பொறுப்பில் சுனிதா

 



விண்வெளியில் சாதனைக்கு மேல் சாதனை செய்து கொண்டிருக்கும், அமெரிக்கா வாழ் இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அடுத்த சாதனையாக சர்வதேச விண்வெளி மையத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். அமெரிக்கா வாழ் இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (46). இவர் குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர். தற்போது, விண்ணில்  சுற்றிவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி உள்ளார். விண்வெளியில் நீண்ட நாட்கள் இருந்தவர், அதிக முறை நடந்தவர் என அவர் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்த 3 வீரர்கள் நேற்று வெற்றிகரமாக பூமி திரும்பினர். இவர்கள் வந்த விண்கலம் கஜகஸ்தானின் பாராசூட் மூலம் தரையிறங்கியது. நேற்று முன்தினம் இவர்கள் சோயூஸ் விண்கலம் மூலம் பூமிக்கு புறப்பட்டனர். இந்த விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பிரிந்தவுடன், அதன் தலைமை பொறுப்பை சுனிதா வில்லியம்ஸ் ஏற்றுகொண்டார். இதன் மூலம் சர்வதேச விண்வெளி மையத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த 2வது பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு கடந்த 2007, 2008ம் ஆண்டில் பெக்கி வில்சன் என்ற வீராங்கனை, சர்வதேச விண்வெளி மையத்தின் தலைமை பொறுப்பை ஏற்றிருந்தார்.

தற்போது இந்த மையத்தில் சுனிதா வில்லியம்சுடன், ரஷ்ய விண்வெளி வீரர் யூரி மாலென்சென்கோ, ஜப்பான் வீரர் அகிஹிகோ ஹோசிடே ஆகியோர் தங்கியுள்ளனர். இவர்கள் அடுத்த மாதம் 2 வாரம் வரையில் அங்கேயே இருப்பார்கள். இதைத் தொடர்ந்து, அமெரிக்க விண்வெளி வீரர் கெவின் போர்டு உள்ளிட்ட 3 வீரர்கள் அங்கு அனுப்பப்பட உள்ளனர். இவர்கள் அங்கு போய் சேர்ந்ததும், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் இப்போதுள்ள பிற வீரர்கள் பூமி திரும்புவார்கள்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!