Monday, September 17, 2012

சந்தேகத்துடன் திருமணம் செய்து கொண்டீர்களா?

சந்தேகத்துடன் திருமணம் செய்து கொண்டீர்களா? விவாகரத்தில் முடியும் விபரீதம்



சந்தேகத்துடன் திருமணம் செய்து கொள்வோரே, அதிகளவு விவாகரத்து செய்வதாக சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த “குடும்ப உளவியல் பத்திரிகை” 232 ஜோடிகளிடம் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, மணவாழ்வு குறித்து சர்வே நடத்தியது.

திருமணம் ஆன சில மாதத்தில், பின் ஆறு மாதத்துக்கு ஒரு முறை என தொடர்ச்சியாக அந்த ஜோடிகளின் வாழ்க்கை குறித்து கருத்து அறியப்பட்டது. சர்வே முடிவுகளை சமீபத்திய இதழில், அப்பத்திரிகை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: திருமணத்துக்கு முன் மண வாழ்க்கை பற்றிய சந்தேகத்துடன் இருக்கும் பெண்கள், சில ஆண்டுகளில் அதிகளவு விவாகரத்து பெறுகின்றனர். அவர்களின் தாம்பத்ய உறவும் திருப்திகரமாக இருப்பதில்லை.

மண வாழ்க்கை பற்றி சந்தேகம் இருப்பது எல்லாருக்கும் சகஜமான ஒன்று. அதனால் அது பற்றி கவலைப்பட வேண்டாம் என மக்கள் கருதுகின்றனர். ஆனால் சந்தேகம் இயல்பான ஒன்றாக இருந்தாலும், அதனால் எதிர்காலத்தில் பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

மண வாழ்க்கை பற்றி தெளிவாக எண்ணத்துடன் இருக்கும் பெண்களை ஒப்பிடுகையில், சந்தேகத்துடன் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள், இரண்டரை மடங்கு அதிகளவில் விவாகரத்தில் சிக்குகின்றனர். விவாகரத்து பெறாமல் வாழ்க்கையை தொடர்பவர்கள் திருப்தியாக காலம் தள்ளுவதில்லை.

சர்வேயில் கலந்து கொண்டவர்களிடம், திருமணம் செய்வது பற்றிய சந்தேகம் அல்லது தயக்கம் இருக்கிறதா? என கேட்கப்பட்டது. ஆண்களில் 47 சதவிகிதம், பெண்களில் 38 சதவிகிதம் ஆம் என்றனர். ஆண்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், பெண்களின் சந்தேகம் தான் அதிக பாதிப்புகளில் முடிகிறது.

சந்தேகப் பெண்களில் 19 சதவிகித பேரும், தெளிவான பெண்களில் 8 சதவிகிதம் பேரும், நான்கு ஆண்டுக்கு பின் மண வாழ்க்கையை விவாகரத்தில் முடித்தனர்.

தெளிவான முடிவுடன் திருமணம் செய்து கொண்ட தம்பதியரில், நான்கு ஆண்டுக்கு பின் வெறும் 6 சதவிகிதமே விவகாரத்தை நாடினர்.

கணவன் மட்டும் சந்தேகம் கொண்டு இருக்கும் பட்சத்தில் 10 சதவிகித விவாகரத்து ஏற்பட்டது. மனைவி சந்தேகத்தால் 18 சதவிகித மணமுறிவு நிகழ்ந்தது. இருவரும் சந்தேகத்துடன் வாழ்க்கையை தொடரும் பட்சத்தில், விவாகரத்து எண்ணிக்கை 20 சதவிகிதமாக உயர்ந்தது என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!