Tuesday, August 21, 2012

கிச்சன் சுத்தமா இருக்கணும்!


கிச்சன் சுத்தமா இருக்கணும்!







நமது ஆரோக்கியத்தின் பங்கு நாம் உண்ணும் உணவுக்கு மட்டுமல்ல நம் சமையலறைக்கும் முக்கிய பங்குண்டு. ஏனெனில் சமையல் அறை சுத்தமாக இருந்தால் மட்டுமே அங்கு சமைக்கப்படும் உணவும் சுத்தமாக இருக்கும். சமையலறையில் எப்பொழுதும் தண்ணீர் உபயோகம் செய்யப்படுவதாலும், அழுக்கும் கறையும், நிறைந்த துணிகளும் இருப்பதாலும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் வாழத்தொடங்கிவிடும். இதுவே நாளடைவில் நாம் உண்ணும் உணவோடு கலந்து நமக்கு நோய் தொற்றினை ஏற்படுத்திவிடும். எனவே சமையலறையை சுத்தமாக வைக்க நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.


காய்கறி நறுக்கும் பலகை




காய்கறியை கட் செய்ய உதவும், கத்தி, பலகை போன்றவைகளை தினசரி சுத்தம் செய்யவேண்டும். இல்லையெனில் காய்கறிகளில் உள்ள சாறுகள் வழிந்து அவை கறை பிடித்து விடும் இதில் எளிதாக பாக்டீரியாக்கள் குடியேறிவிடும். மறுபடியும் அதே கறைபிடிந்த பலகையில் காய்கறிகளை நறுக்கும் போது கிருமிகள் நம் வயிற்றுக்குள் சென்றுவிடும்.


சிங்க் சுத்தம்




சமையல் அறையில் பாத்திரங்கள் கழுவும் 'சிங்க்' எப்போதும் தண்ணீர் படும் இடம் என்பதால், பாசியும் அழுக்கும் படிந்திருக்கும். இதனால், ஒருவித நாற்றமும் கிளம்பும். இதைப் போக்க சிங்க் சுவர்களில், கிளீனரை ஊற்றி நன்றாகத் தேய்த்துக் கழுவவும். அதன் பின் ஒரு நாப்தலின் உருண்டையை சிங்கினுள் போட்டு வைத்தால் கரப்பான் போன்ற பூச்சித் தொல்லையை தவிர்க்க முடியும்.



ஸ்பாஞ்ச் பத்திரம்




பாத்திரம் துலக்கப் பயன்படுத்தும் ஸ்பான்ச், கிருமிகள் தங்கும் இடம். அதன் ஒரு சதுர இன்ச் பரப்பிலேயே பல லட்சம் பாக்டீரியாக்கள் குடியிருக்கும். ஸ்பான்ச்சில் உள்ள ஈரப்பதத்தால் வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று வலியை உருவாக்கும் கிருமிகள் அதில் உருவாகலாம். இதைத் தவிர்க்க வாரம் ஒருமுறை இந்த ஸ்பான்ச்சை மாற்றிவிட வேண்டும். அல்லது ப்ளீச்சிங் தூள் கலந்த வெந்நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து அலசி எடுத்தால், கிருமிகள் ஒழிந்துவிடும்.


கைப்பிடித்துணி




நம் சமையலறையின் ஆரோக்கியத்தை பறைசாற்றுவதில் கைப்பிடித்துணிக்கும் பங்குண்டு. அதை அவ்வப்போது கறையாக இருக்கும், சில சமயம் பிசுக்கு பிடித்து கறியாக மாறிவிடும். இதனை நன்கு வெந்நீரில் ஊறவைத்து சுத்தம் செய்யவேண்டும். அப்பொழுதுதான் அதில் வசிக்கும் கிருமிகள் மடியும்.


பாத்திரம் வைக்கும் ஸ்டான்ட்




பாத்திரம் வைக்கும் இடம் எப்பொழுதும் உலர்வாக இருக்கவேண்டும். இதற்கு நாம் பாத்திரத்தை கழுவி அதனை நன்கு வெயிலில் உலர்த்தி பின்னர் ஸ்டான்டில் அடுக்கவேண்டும். இல்லையெனில் ஈரம் படிந்து கிருமிகள் வசிக்கும் கூடாரமாகிவிடும். அவை நாம் உண்ணும் உணவுகளோடு உள்ளே சென்றுவிடும்.


குப்பைக்கூடை




சமையல் அறைக் குப்பைக் கூடையில்தான் அதிக அளவு கிருமிகள் தங்கும். மூடும் வசதியுடைய கூடை நல்லது. இதனை சிங்கிற்கு கீழ் வைக்கலாம். இந்தக் குப்பைக் கூடையில் இருந்து கிளம்பும் நாற்றத்தைத் தடுக்க ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடாவைக் கொட்டி, கூடைக்குப் பக்கத்திலேயே வைப்பது பலன் தரும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பேக்கிங் சோடாவை மாற்றினால் போதும்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!