Monday, December 10, 2012

கமல் எடுத்த விஸ்வரூபம்: பதட்டம் வேண்டாம்! இதுதான் உண்மை, உங்களுக்கு புரியவில்லையா?

கமல் எடுத்த விஸ்வரூபம்: பதட்டம் வேண்டாம்! இதுதான் உண்மை, உங்களுக்கு புரியவில்லையா?


விஸ்வரூபம் படம் பற்றிய சர்ச்சை தீயாக பற்றிக்கொண்டுள்ள இந்த நேரத்தில்,  கமலஹாசனின் காட்டமான அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

என்ன சொல்கிறது அந்த அறிக்கை?

“புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்…அவைகளைக் கண்டனம் செய்வதும் கூட உலக வழக்கம். உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத் துறையினர் வரை இம் மனப்பாங்கு நீடிக்கிறது.

ராஜ்கமல் நிறுவனத்தின் DTH முயற்சியையும் புரிதல் இல்லாததால் ‘புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம்’ என்ற பதற்ற குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம்.

ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம் – பெரும்பான்மை – ‘இது சினிமா வர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி; தமிழ் சினிமாவை, ஏன்…உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளைக் கடக்கவைக்கும் முயற்சி’ என்று என்னைப் பாராட்டுகிறது. இது சந்தோஷமான செய்தி.

DTHற்கு வெகுவான வரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபார கிளை. ஒரு சிறுபான்மை மட்டும் இது நாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.

இந்த DTH என்பது என்ன?

எல்லார் வீட்டிலும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியா என்றால், இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள் அதிகப் பணம் கட்டி, ஒரு கருவியின் மூலம் பல சானல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி.

சினிமா அரங்குக்கே செல்ல மறந்த, மறுத்த, வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம், இந்த DTH.

இப்படி வீட்டோடு தங்கியவர்களையும், சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது. இதை விடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஓட பார்க்கிறார் கமல் என்று புரளிகள் கிளப்புகிறார்கள்.

கிடைத்ததைச் சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு, என் சினிமா வாழ்வும், நான் எடுத்த சினிமாக்களும் சான்று.

என் படம் முடிந்து 7 மாதங்களாகின்றன. இப்பொழுது என் படத்திற்கு விலை கொடுத்து வாங்கப் பலர் பெரிய விலைகளைச் சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழி செய்யவே இந்த முயற்சி.

முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி, படத் தயாரிப்பாளர் கையில் சேர்ந்தால், திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு, நல்லபடி வரி கட்டி, அரசிடம் எடுத்து சொல்லி, கறுப்புப் பண விளையாட்டைக் குறைத்துக் கொண்டால், 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும்.

ஒரே நாளில் விஸ்வரூபத்தின் தமிழ்இசை இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக முதல் இடத்திற்கு விஸ்வரூம் வரும் என்கிறது வியாபார வட்டாரம். இது ஒரு வர்த்தக சாதனை.

ஏற்கனவே உலக வர்த்தகம் இந்திய சினிமாவை நல்ல பொருள் ஈட்டும் களம் என நம்புகிறது. உலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை உள்ளூரிலும் இருக்க வேண்டாமா?

DTH-ல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்ய முடியாது. பிரத்தியேக காட்சி முடியும் போது படம் DTH கருவியில் தங்காது. ஒருமுறை இப் படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம். தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு. காட்சியை வீட்டில் பார்த்த சந்தோஷம் தவிர, சினிமா தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய்க் கிடைக்காது.

விஸ்வரூபத்தில் ஒலி அமைப்பு இதுவரை இந்திய ரசிகர்கள் கேட்டிராத அளவு அற்புதமாக செய்திருக்கிறோம். ஹாலிவுட் படத் தயாரிப்பில், அதுவும் மேல் தட்டு படங்களில் மட்டுமே தென்படும் தரமிது. இத்தனையும் செய்தது TV-ல் காட்டுவதற்கு மட்டும் அல்ல.

DTH வசதி தமிழக ஜனத் தொகையில் 3 விழுக்காடு வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதில் நாங்கள் 1½ விழுக்காடு வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்ட முடியும் என்கிறது கணக்கு. 100 பேர் ஒருவனுக்கு பயப்படுவது ஆச்சரியம்.

7½ கோடியில் ஒரு விழுக்காடு படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50% ஐ கள்ள DVD வியாபாரி கொண்டு போவதைத் தடுப்பதற்கு சிறு முயற்சிகளே செய்கிறார்கள். கள்ள DVDக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து பயிரை மேயும் வேலியை விட்டு விட்டு நேர்மையான வியாபாரத்தைத் தடுப்பது கண்டிக்கத்தக்கது.

திருடனுக்கு 50% கொடுத்தாலும் கொடுப்பேன்; உடையவனுக்கு ஒன்றுகூட சேரக் கூடாது என்பது நியாயமில்லாத வாதம்.

இந்த முயற்சியால் தியேட்டரில் கூட்டம் குறையாது. தொலைக்காட்சியில் இலவசமாய் படம் காட்டினால் வியாபாரம் கெடும் என்று எதிர்த்து தோற்ற இதே வியாபாரிகள் இன்று சுபிட்சமாக வாழும் சான்றே போதுமானது.

நான் பகுத்தறிவாளனாக இருப்பினும், பெரும்பான்மையினர் புரிந்து கொள்ள ஒருபக்தி விளக்கம். வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால், யாரும் திருப்பதிக்குப் போவதைக் குறைத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை. இது, கிட்டதட்ட அந்த நிலைதான்.

சினிமா அரங்க அனுபவத்திற்கும் வீட்டில் மின்விசிறி இருப்பினும், காற்று வாங்க கூட்டம் கடற்கரைக்கு வருகிறது. ரேடியோவில் தன்குரல் கேட்டால் புகழ் குறையும் என்று, நினைத்துப் பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள் போல் இருப்பது உசிதமல்ல. சமையலறையும் நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன?

முடிவாக, இது முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சந்தேகப்படுகிறதாம் ஒரு சில முஸ்லிம் அமைப்புகள்.

இந்த முஸ்லிம்கள் படத்தை பார்த்து, மனம் மாறி, தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் மனதிற்குள் வருந்தினால் மட்டும் போதாது. நான் விடமாட்டேன். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லிம் சகோதரர்கள், அடுத்த பக்ரீத்துக்கு அண்டாஅண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும்.

அத்தனை பிரியாணியையும் நான் ஒரு ஆள் சாப்பிட இயலாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள். எப்போதும் போல அக் குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதை செய்யுங்கள். அப் பெரு விருந்தில் கலந்து கொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்” என்கிறது கமலின் அறிக்கை.

சினிமா உலகில் ஊருக்கே உலை வைக்கும் ஆட்கள் இருக்கையில், ஒரு நல்ல கலைஞனுக்கு, சினிமாவில் நேர்மையாக வியாபாரம் செய்யும் ஒருவரின் இந்த முயற்சிக்கு, வெந்நீர் ஊற்றும் ஆட்களை கண்டிப்பதுடன், கமலஹாசனின் இந்த அறிக்கையை 100 சதவீதம் endorse பண்ணுகிறது அறிவியல்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!