Wednesday, December 12, 2012

அமெரிக்க அரசுக்கு ரூ.10,368 கோடி செலுத்த எச்எஸ்பிசி வங்கி ஒப்புதல்

நிதி முறைகேடு வழக்கில் அமெரிக்க அரசுக்கு ரூ.10,368 கோடி செலுத்த எச்எஸ்பிசி வங்கி ஒப்புதல்


அமெரிக்காவில் நிதி முறைகேடு புகாரில் சிக்கிய எச்எஸ்பிசி, அரசுக்கு இழப்பை சரிகட்ட ரூ.10,368 கோடி செலுத்த முன்வந்துள்ளது. அமெரிக்காவின் நிதிச்சந்தையை எச்எஸ்பிசி வங்கி மூலமாக ஈரானும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் மற்றும் போதை மருந்து கடத்தல்காரர்கள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்க சட்ட விதிகளை மீறி, நிதிமுறைகேடுகளில் இந்த வங்கி ஈடுபட்டதாக அமெரிக்க நிதித்துறை கடந்த ஜூலையில் குற்றம்சாட்டியது.

இதனடிப்படையில் அந்த வங்கியின் கணக்குகள் பற்றி விசாரணை தொடங்கப்பட்டது. இதில், அமெரிக்க நிதி மோசடி தடுப்பு சட்டத்தை இந்த வங்கி பின்பற்றாதது தெரிய வந்தது.
இந்நிலையில், லண்டனை தலைமையிடமாக கொண்டு, ஆசியாவை மையமாக வைத்து செயல்படும் இந்த வங்கி குழுமத்தின் தலைமை நிர்வாகி ஸ்டூவர்ட் கல்லிவர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவில் எங்கள் வங்கியின் வர்த்தக பரிமாற்றத்தில் நடந்த விதிமீறல்கள் வருத்தத்துக்குரியது. இதுபோன்ற செயல்கள் இனி நடக்காமல் பார்த்து கொள்வோம். நிதிமோசடி விவகாரம் தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்துடன் சமரசத்துக்கு வந்துள்ளோம். இதன்படி, அந்நாட்டு அரசுக்கு ஏற்பட்ட இழப்புக்காக ரூ.10,368 கோடியை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!