Thursday, October 10, 2013

சோர்வு நீங்கி உடல் நன்கு பலம் பெற, இளமை மிடுக்காக, ஆண்மை பெருக, ரத்தப்போக்குக் கட்டுப்பட, கால் எரிச்சல் கட்டுப்பட

வேர் உண்டு வினை இல்லை! --- தண்ணீர்விட்டான் ,சதாவரி, சல்லகட்டா, சதாவல்லி




சதாவரி, சல்லகட்டா, சதாவல்லி, சதாவேரி, சதாமூலம், சதமுலை, நீர்வாளி, நாராயணி, சீக்குவை என வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படும் மூலிகைத் தாவரம் தண்ணீர்விட்டான். இயற்கையான சூழ்நிலையில் காடுகளில் கொடிகளாக வளரும் இது அடர்த்தியான பச்சை நிறத்தில் இருக்கும். இதன் வேர்கள் கிழங்குகள் போன்று சதைப்பற்றும் நீர்த்தன்மையும் கொண்டு இருக்கும். இதன் இலைகள் மற்றும் வேர்கள் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. உலர்ந்த நிலையில் தண்ணீர்விட்டான் வேர் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

குளிர்ச்சித் தன்மையும் இனிப்புச் சுவையும்கொண்ட தண்ணீர்விட்டான் வேர்கள், உடலைப் பலமாக்கவும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யவும் உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றவும் ஆண்மையை அதிகரிக்கச் செய்யவும் அருமருந்தாகவும் பயன்படுகிறது.
மருத்துவப் பயன்கள்... 

பசுமையான தண்ணீர்விட்டான் வேர்களை நீரில் நன்றாக அலசிச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். சுத்தம் செய்த வேர்களை நீர்த்தன்மை போக வெயிலில் உலர்த்தி எடுத்து நன்கு இடித்துத் தூளாக்கிக்கொள்ள வேண்டும். தண்ணீர் விட்டான் வேர்த் தூள் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதனைப் பசுவின் நெய்யோடு சேர்த்து நாள் ஒன்றுக்கு காலை, மாலை என இரு வேளைகள் உட்கொண்டு வரவேண்டும். இதனால், சோர்வு நீங்கி உடல் நன்கு பலம் பெறும்.

சுத்தம் செய்து உலர்த்தி இடித்துப் பொடித்த தண்ணீர்விட்டான் வேர்த் தூளை தினமும் காலை, மாலை இரு வேளை ஒரு ஸ்பூன் அளவு உட்கொண்டு ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பால் குடிக்க வேண்டும். 30 நாட்கள் வரை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். இதனால், இளமை மிடுக்கு உண்டாவதோடு ஆண்மை பெருகும்.



பசுமையான தண்ணீர்விட்டான் வேரை நீரில் அலசிச் சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். நான்கு ஸ்பூன் அளவு வேர்ச் சாற்றுடன் இரண்டு ஸ்பூன் அளவு சர்க்கரை கலந்து உட்கொள்ள வேண்டும். இதனை நாள் ஒன்றுக்கு காலை, மதியம், மாலை என மூன்று வேளைகள் ஐந்து நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும். இதனால் பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் அதிகமான ரத்தப்போக்குக் கட்டுப்படும்.

கால்களில் உண்டாகும் எரிச்சலைக் கட்டுப்படுத்த தண்ணீர்விட்டான் வேர்ச்சாறு எடுத்து தினமும் காலையிலும், இரவில் படுக்கைக்குப் போகும் முன்பும், கால்களிலும் பாதங்களிலும் நன்கு பூச வேண்டும். தொடர்ந்து பூசிவந்தால் கால் எரிச்சல் கட்டுப்படும்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!