Friday, August 23, 2013

வண்டலூரில், இனச்சேர்க்கையின் போது மோதல்: ‘செம்பியனை’க் கொன்ற வங்கப்புலி சத்தியா

வண்டலூரில், இனச்சேர்க்கையின் போது மோதல்: ‘செம்பியனை’க் கொன்ற வங்கப்புலி சத்தியா


மிருகக்காட்சி சாலையில், இனச்சேர்க்கைக்காக விடப்பட்ட இரண்டு புலிகளிடையே உண்டான பெரும் மோதலில், ஆண் புலி பரிதாபமாகப் பலியானது. பெண் புலி தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளது. சென்னை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவானது மக்களுக்கு பல அரிய விலங்குகளையும், பறவைகளையும் ஒரே இடத்தில் பார்ப்பதற்கு வழிவகை செய்யும் இடமாக உள்ளது.

சென்னை உட்பட உலகின் பிற பகுதிகளில் இருந்தும் தினந்தோரும் இங்கு பல்லாயிரக்காணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு சிங்கம், புலி, யானை, வெள்ளைப்புலி, கரடி உள்பட பல்வேறு அரிய வகை விலங்குகளும், பறவைகளும் உள்ளன. மிருகக்காட்சி சாலைக்குள்ளாகவே பல இனச்சேர்க்கைகள் நடை பெறுவது வழக்கம். அப்படி சமீபத்தில் நடந்த புலிகள் இனச்சேர்க்கையில் புலிகளுக்கிடையே உண்டான மோதலில் ஆண் புலி பரிதாபமாக இறந்துள்ளது.


இந்தியாவிலேயே முதல்முறையாக... 

கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவிலேயே முதல் முறையாக வெவ்வேறு இனப் புலிகளுக்கிடையே இனச்சேர்க்கை ஈடுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. அதில், சாதாரண வங்கப் புலியுடன், வெள்ளைப்புலியை இனச்சேர்க்கைக்கு விட தீர்மானித்தனர் அதிகாரிகளும், மருத்துவர்களும்.

வாங்க, பழகிப் பார்க்கலாம்.... 

அதன்படி, வங்கப்புலி விஜயுடன், வெள்ளைப் புலி அகன்ஷாவைப் பழக விட்டனர். தோழமையோடு பழகிய புலிகள், பின்னர் இனச்சேர்க்கையில் ஈடுபட்டது. அதனைத் தொடர்ந்து கர்ப்பமான அகன்ஷா அழகிய 3 வெள்ளைப் புலிகளை ஈன்றது. முறையே அவற்றிற்கு வித்யா, ஆர்த்தி, நேத்ரா எனப் பெயரிடப்பட்டது.

முதல் முயற்சியின் வெற்றியைத் தொடர்ந்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மீண்டும் புலிகளின் இனச்சேர்க்கை குறித்து ஆலோசிக்கப் பட்டது. இதற்காக ஆண் வெள்ளைப் புலியான 3 வயது செம்பியனுடன், பெண் வங்கப் புலியான 9 வயது சத்தியாவை இனச்சேர்க்கை செய்ய முடிசெய்யப்பட்டது.

முன்பு போலவே, முதலில் இரண்டு புலிகளும் சகஜமாகப் பழக விடப்பட்டன. இந்நிலையில் கடந்த 7ம் தேதி இது புலிகளுக்கு ஏற்ற இனச்சேர்க்கைகாலம் என்பதால், அதிகாரிகள் இரண்டு புலிகளுக்கும் இனச்சேர்க்கைக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தனர்.

இனச்சேர்க்கைகான முயற்சிகள் நடைபெற்ற போது திடீரென வங்கப்புலியான சத்தியா, ஆண் புலி செம்பியன் மீது கோபத்துடன் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், புலிகளுக்கு இடையே மோதல் உண்டானது. அதிகாரிகள் எவ்வளவோ முயன்று பார்த்தும் சண்டையை தடுக்க இயலவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்தது இந்தச்சண்டை.


செம்பியனைத் தாக்கிய சத்தியா.... 

இதில் பெண் வங்கப்புலி சத்தியா, ஆண் வெள்ளைப்புலி செம்பியனின் தலையில் கடுமையாக தாக்கியதில் செம்பியனின் மூளை செயல் இழந்தது. மயங்கி கீழே விழுந்தது. இந்த சண்டையில் வங்கப்புலி சத்தியாவுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

தொடர் சிகிச்சை... 

பின்னர் ஒரு வழியாகப் போராடி, பூங்கா மருத்துவர்கள் முதலில் பெண் வங்கப்புலி சத்தியாவை அந்த கூண்டில் இருந்து பிரித்து வேறு கூண்டிற்கு மாற்றினர். தற்போது பெண் புலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பரிதாபப்பலி.... 

மூளையில் பலத்த காயம் அடைந்து மயங்கி கீழே விழுந்த வெள்ளைப்புலி செம்பியனுக்கு கடந்த 10 நாட்களாக பூங்கா மருத்துவமனையில் பல்வேறு அறுவை சிகிச்சை செய்து பார்த்தனர். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி வெள்ளைப்புலி செம்பியன் பரிதாபமாக இறந்தது.

நல்லடக்கம் 

இறந்த செம்பியனின் உடலை பிரேதபரிசோதனை செய்த பின்னர் பூங்கா வளாகத்திலேயே பூங்கா ஊழியர்கள் புதைத்தனர்.

இது எதிர்பாராத ஒன்று... 

விபரீதத்தில் முடிந்த் இனச்சேர்க்கை முயற்சி குறித்து வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குனர் ரெட்டி கூரும்போது, ‘வங்கப்புலியுடன் வெள்ளைப்புலியை இனச்சேர்க்கையில் ஈடுபடுத்தி வண்டலூர் உயிரியல் பூங்கா வெற்றி பெற்று மற்ற பூங்காவிற்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது. இரண்டாவது முறை இதே போல் இனச்சேர்க்கையில் ஈடுபடும் போது எதிர்பாராதவிதமாக இந்த சம்பவம் நடந்து உள்ளது. இரண்டு புலிகள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகத்தான் ஆண் புலி இறந்து உள்ளது. வேறு எந்த காரணங்களும் கிடையாது.

குணமடைந்து வரும் சத்தியா... 

தற்போது வங்கப்புலி சத்தியாவிற்கு பூங்கா மருத்துவர்கள் குழு 24 மணி நேரமும் வீடியோ காமிரா மூலம் கண்காணித்து தொடர்ந்து நவீன சிகிச்சை அளித்து வருகிறது. சத்தியாவிற்கு ஏற்பட்ட காயங்கள் சரியாகி வருகின்றன' எனத் தெரிவித்துள்ளார்.

Join with us on Facebook  >>>

              அறிவியல்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!