Monday, May 6, 2013

‘புவர் ஸ்டார்’ சீனியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் முயற்சி!

‘புவர் ஸ்டார்’ சீனியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் முயற்சி!


கடந்த இரண்டு மாதங்களாக எந்த மீடியாவைத் திறந்தாலும் பவர் ஸ்டார் புராணம்தான். பவர் பல்லு விளக்கினாரு, பவர் பால் குடிச்சாரு என ஏகப்பட்ட செய்திகள்.

இன்று அப்படி நிலைமை தலைகீழ். பவர் ஸ்டார் ரொம்ப ரொம்ப புவர் ஸ்டாராகி வேலூர் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். காரணம் அவரைச் சுற்றிச் சுற்றி அடிக்கும் மோசடி வழக்குகள்.

கிட்டத்தட்ட ஒரு டஜன் மோசடி வழக்குகள் அவர் மேல் பாய்ந்துள்ளன. விளைவு, கிட்டத்தட்ட தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பவர் சீனிவாசனை குண்டர் சட்டத்தில் அடைக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளது போலீஸ்.

சமீபத்தில் நீதிமன்ற அனுமதியுடன் அவரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். பவர் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் வரிசையாக போலீசில் புகார் செய்து வருகின்றனர்.

நம்ம சீனி, தொழில் அதிபர்கள், பொதுமக்கள் மட்டுமின்றி வக்கீல்களையும் ஏமாற்றி மோசடி செய்துள்ளார். பெசன்ட் நகரை சேர்ந்த வக்கீல் ஜெகநாதன் தனது கட்டுமான தொழிலை அபிவிருத்தி செய்ய பவர் ஸ்டாரின் உதவியை நாடினார். அப்போது பவர் ஸ்டார் சீனிவாசனிடம் ரூ.2 கோடி கடன் கேட்டுள்ளார். அவர் அதற்கு கமிஷனாக ரூ.70 லட்சத்தை முன் கூட்டியே வாங்கி கொண்டார். ஆனால் கடன் பெற்றுத் தரவில்லை. இதுபற்றி ஜெகநாதன் போலீசில் புகார் செய்துள்ளார்.

சீனிவாசன் கமிஷனாக பெற்ற பணத்தில் அண்ணா நகர் பகுதியில் மட்டும் 5 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வாங்கி குவித்துள்ளார். மொத்தம் ரூ.150 கோடிக்கு மேல் சொத்துக்களை வாங்கி குவித்து பினாமிகள் பெயரில் வைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பவர் ஸ்டார் சீனிவாசன் விரைவில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. திருமங்கலத்தில் உள்ள அவரது மருத்துவனையில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் வழங்காததால் அவர்களே மருத்துவமனையை மூடிவிட்டுச் சென்று விட்டார்கள்.



Part 1


பவர் ஸ்டாரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்! சொத்துக்களை போலீஸ் தேடுகிறது!!


மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் வங்கிக் கணக்கு, சொத்துக்களை முடக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பவரின் புகழ் மாநிலம் கடந்தும் பரவி உள்ளதால், தமிழ்நாடு மட்டுமல்லாமல், ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்தவர்களும் அவர் மீது புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பவர் ஸ்டார் பற்றிய வாழ்க்கைக் குறிப்பே உள்ளது.

“மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த பவர்ஸ்டார் சீனிவாசன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்து, பின்னர் சைனா யூனிவர்சிட்டியில் தபால் முறையில் அக்குபஞ்சர் டாக்டருக்கு படித்துள்ளார். இவர் மதுரையை சேர்ந்த விஜியாவை திருமணம் செய்து தற்போது பிரிந்துள்ளார். 2-வது மனைவி ஜுலியுடன் அண்ணாநகரில் வசித்து வருகிறார்.

இவருக்கு கிளினிக் வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. அதற்காக அக்குபஞ்சர் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் பாபா டிரேடிங் கம்பெனி என்ற பெயரில் கடன் பெற்று தருவதாகவும், கடன் கொடுப்பதாகவும் அதற்காக கமிஷன் பெற்று வந்துள்ளார்.


இவருக்கு பலர் புரோக்கர்கள் இருந்துள்ளனர். அவர்கள் மூலமாக பல ஊர்களில் இருந்தும் தொழில் செய்பவர்கள் இவரிடம் அணுகி கடன் ஏற்பாடு செய்ய அணுகியும் அதற்கு பல லட்சம் பணம் பெற்று எந்தவித கடன் கொடுக்காமலும் பணம் திரும்ப கொடுக்காமலும் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

இவருக்கு சினிமாவில் நடிக்கவேண்டும் என்று ஆசை அதிகரிக்கவே இவர் தன்னை வைத்து சினிமா படம் லத்திகா, இந்திரசேனா, தேசிய நெடுஞ்சாலை, ஆனந்த தொல்லை எடுத்து பல கோடி செலவு செய்துள்ளார். இவர் மேலும் பல கோடி சொத்துக்களை அண்ணாநகரில் வாங்கி உள்ளதாக தெரியவருகிறது.

இவர் பல வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார் அந்த வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் இவர் எங்கெல்லாம் சொத்து வாங்கியுள்ளார் என்ற விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது” என்று போலீசாரின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!