Monday, April 8, 2013

சேது சமுத்திர திட்டத்தால் கடல் உயிரினங்களுக்கு ஆபத்து


சேது சமுத்திர திட்டத்தால் கடல் உயிரினங்களுக்கு ஆபத்து: விஞ்ஞானி பச்செளரி


கொல்கத்தா: சேது சமுத்திர திட்டத்தால் கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானி பச்செளரி கூறியுள்ளார்.





ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக, அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்திற்காக ராமர் சேது பாலத்தை சேதப்படுத்தக்கூடாது என்றும், மாற்றுப்பாதையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வருகிறது.

அதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி இந்த பிரச்சினை குறித்து ஆய்வு செய்வதற்காக விஞ்ஞானி ஆர்.கே.பச்செளரி தலைமையில் குழு ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்து இருந்தார்.

திட்டம் பயனுள்ளது அல்ல: 

பச்செளரிகுழு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில், பொருளாதார ரீதியிலும் கடல் வாழ் உயிரின சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதியும் சேது சமுத்திர திட்டம் பயனுள்ள ஒரு திட்டம் அல்ல என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த விஞ்ஞானி பச்செளரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


திட்டம் சாத்தியமற்றது: 

பேட்டியில் சேது சமுத்திர திட்டம் குறித்து கருத்து தெரிவித்த பச்சோரி, சேது சமுத்திர திட்டம் சாத்தியமற்றது என்ற கருத்தில் தொடர்ந்து உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.


எச்சரிக்கை: 

அந்த திட்டத்தை நிறைவேற்றினால், கடல்வாழ் உயிரினங்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பெரிய அளவில் அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். சேது சமுத்திர திட்டம் தொடர்பான எங்கள் ஆய்வின் முடிவு மிகவும் வலுவானது. ஆனால், இந்த பிரச்சினையில் இனி இறுதி முடிவு எடுக்க வேண்டியது மத்திய அரசுதான் என்றும் அவர் தெரிவித்தார்.


திட்டத்தை தொடர விருப்பம்: 

பச்செளரிஅறிக்கையை தொடர்ந்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், சேது சமுத்திர திட்டத்திற்காக ஏற்கனவே ரூ.829.32 கோடி அளவிற்கு செலவிடப்பட்டுவிட்டதால், திட்டத்தை தொடர விரும்புவதாக கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.


நகரங்களுக்கு பாதிப்பு: 

மற்றொரு கேள்விக்குப் பதில் அளித்த பச்செளரி, தட்ப வெட்ப நிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதாலும், கடல் அரிப்பு காரணமாகவும் கொல்கத்தா, டாக்கா மற்றும் ஷாங்காய் போன்ற கடலோர டெல்டா நகரங்கள் பாதிக்கப்படும் என்று கூறினார்.



சேதம் ஏற்படலாம்: 

அதற்கான அறிவியல் ரீதியான ஆதாரங்கள் தெளிவாக இருப்பதால், நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது என்று குறிப்பிட்ட பச்செளரி, அப்படி ஒரு நிலை வரும்போது அந்த நகரங்களில் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரிய அளவில் சேதம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.









No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!