Thursday, March 28, 2013

ராஜபக்ச சர்வதேச விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிலங்கன் விமானம் மயிரிழையில் தப்பியது!

ராஜபக்ச சர்வதேச விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிலங்கன் விமானம் மயிரிழையில் தப்பியது!


இலங்கையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஒன்று பாரிய விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பியுள்ளது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலேயில் இருந்து இலங்கை வந்த யு.எல்- 114 என்ற விமானம், மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றபோதே, இந்த விபத்து நேரிட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மத்தள விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், பறவைக் கூட்டம் ஒன்று விமானத்தின் முன்புறத்தில் தாக்கியது.

இதனால் விமானத்தின் முன்புறக் கண்ணாடிகள் சேதமடைந்தன.

விமானம் அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதும், ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மூத்த அதிகாரிகளும், விமானிகளும் சேதங்களை ஆய்வு செய்தனர்.  முன்புறக் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன், துப்பாக்கிக் குண்டுத் துளை போன்ற பல துளைகளும் காணப்பட்டதாக மூத்த விமானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமுக்கத்தினால், கண்ணாடி உடைந்திருந்தால், விமானி வெளியே தூக்கி வீசப்பட்டிருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.  சம்பவத்தின் போது அந்த விமானத்தில் சுமார் 40 பயணிகள் இருந்தனர்.

அவர்களில் மத்தளவில் இருந்து கட்டுநாயக்க செல்வதற்காக ஏறிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நான்கு உறவினர்களும் அடங்குவர்.  எனினும் அந்த விமானம் மத்தலவில் பயணிகள் எவரையும் இறக்கி விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பறவைகள், மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியிலேயே மத்தல விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு விமானங்களின் இரைச்சல் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு பெரும் தொந்தரவாக மாறியுள்ளது.

மத்தள விமான நிலையம் திறக்கப்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாகவும் இது போன்றதொரு பாரிய விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

பரீட்சார்த்தமாகத் தரையிறக்கப்பட்ட விமானம் ஒன்றின் மீது பறவைக் கூட்டம் மோதியதால், அந்த விமானத்தை செலுத்திய இளைய விமானி நிலைகுலைந்து போயிருந்தார்.

பின்னர் மூத்த விமானி ஒருவர் விமானத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் தான், அந்த விமானம் விபத்தில் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!