Thursday, March 28, 2013

அண்டங்களை அசைத்தவர்! : மறுபக்கம்

அண்டங்களை அசைத்தவர்! : மறுபக்கம்


விண்கோள்களின் சுற்று விதிகளை கணித்து உலகிற்குச் சொன்னவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த வானியலாளர் ஜொஹானஸ் கெப்ளர்   (Johannes Kepler).   விஞ்ஞானி, கணிதவியலாளர் என்பதோடு ஒரு ஜோதிடராகவும் கூட புகழ்பெற்றவர் இவர்.

1571ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி ஜெர்மனியின் வெய்ல்டெர்ஸ்டாட் நகரில், வாழ்ந்துகெட்ட குடும்பத்தில் பிறந்தார். ராணுவ சிப்பாயாக இருந்த தன் தந்தையை ஐந்து வயதிலேயே இழந்தார். தாத்தாவின் விடுதியில் தாயுடன் வளர்ந்தார். அங்கேயே பணிப் பையனாக மாறிய அவர், 1587ல் ஒரு செல்வந்தர் அளித்த நிதி உதவியால் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணித விஞ்ஞானம், வானியல், இசை முதலியவற்றைப் படித்தார். கிரேக்கம், ஹீப்ரூ மொழிகளையும் மதக் கல்வியையும்கூட கற்றார்.

படிப்பின் இடையிலேயே ஆஸ்திரியா யூதரன் உயர்நிலைப்பள்ளியில் கணிதப் பேராசிரியராக சேர்ந்தார். நட்சத்திரங்களை எண்ண முடியுமா என்பதைத்தான் இருப்பதிலேயே கஷ்டமான கணக்காக நாம் சொல்வோம். ஒரு கணித மேதையாக கெப்ளருக்கு இந்தக் கஷ்டக் கணக்கு பிடித்திருந்தது. வானியல் பற்றியே அவர் எந்நேரமும் சிந்தித்தார். பல வருட அவதானிப்புக்குப் பிறகு, ‘வானில் கோள்கள் அசைகின்றன. ஆனால், அவை ஒரு குறிப்பிட்ட விதியின் படி சீராகவே நகர்கின்றன’ என்பதை கெப்ளர் கண்டுபிடித்தார்.

வானியலை ஓர் விஞ்ஞானத் துறையாய் ஆக்கிய பெருமை இவரையே சாரும். தொலைநோக்கி யில் ஒளி எவ்வாறு ஊடுருவுகிறது என்பதை ஆய்வு செய்து, இவர் உருவாக்கிய மாதிரி தொலைநோக்கியை ஆதாரமாக வைத்துத்தான் கலிலியோ தன் முதல் தொலைநோக்கியைப் படைத்தார்.

கணிதத் துறையிலும் கெப்ளர் சாதிக்காமல் விடவில்லை. மிகச்சிறு எண் கணக்கியலை ஆரம்பித்து கால்குலஸ் எனும் துறையைத் துவக்கியவர் இவரே. அதுவே, பிற்காலத்தில் கால்குலஸ் கணிதத்தை வளர்ச்சி அடையச் செய்ய நியூட்டனுக்கு உதவியது.

சூரியனை கோள்கள் சுற்றி வருகின்றன என்ற ‘பரிதி மையக் கோட்பாட்டை’ ஆதரித்த கெப்ளர், அதற்காக வானவியல் ஆராய்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட ஈடுபட, அவரது பார்வைத்திறன் பாதிக்கப்பட்டது. இருப்பினும் விடாது போராடி, கோள் இயக்க விதிகள் எனப்படும் மூன்று விதிகளை வானியல் துறைக்குத் தந்தார் அவர்.

ஜோதிடத்துக்கும் வானவியல் வளர்ச்சிக்கும் பெரும் இணைப்புப் பாலமாய் வாழ்ந்த கெப்ளர் சில காலம் நோயுற்று 1630ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி தனது 59வது வயதில் காலமானார். 1604ம் ஆண்டில் அவர் கண்டுபிடித்த புதிய விண்மீனுக்கு கெப்ளர் சூப்பர்நோவா என இப்போது பெயரிட்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். இப்படிப்பட்ட மாமனிதர்களின் பெயர்கள் பால்வீதி எங்கும் நிறைந்திருக்கட்டும்!

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!