Thursday, September 27, 2012

2030க்குள் 10 கோடி பேர் உயிரிழக்கும் அபாயம்


உலகம் வெப்பமயமாவதால்

2030க்குள் 10 கோடி பேர் உயிரிழக்கும் அபாயம்




உலக வெப்பமயமாதல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் 2030ம் ஆண்டுக்குள் உலகளவில் 10 கோடிக்கும் அதிக மானவர்கள் இறக்க நேரிடும் என்று தெரியவந்துள்ளது. 2010 மற்றும் 2030ம் ஆண்டில் வானிலை மாற்றத்தால் மனித இனம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து டாரா என்ற மனித இன நலம் சார்ந்த நிறுவனம் ஆய்வு நடத்தியது. அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

சூழலை மாசுப்படுத்தும் வாயுக்கள் அதிகளவில் வெளியிடப்படுவதால் உலகில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக துருவப் பகுதிகளில் பனி உருகுவது அதிகரித்துள்ளது. வெப்பநிலை தாறுமாறாக உயர்ந்து வருவதால், வறட்சி, கடல் நீர்மட்டம் உயர்தல் ஆகிய அபாயங்கள் ஏற்படும். தற்போது காற்று மாசு, பசி, நோய் போன்றவற்றால் 50 லட்சம் பேர் ஆண்டுதோறும் இறக்கின்றனர். பெட்ரோலியப் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் 2030ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 60 லட்சமாக உயரும். இவர்களில் 90% பேர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அடுத்த 10 ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 10 கோடி பேர் உயிரிழக்கக்கூடும்.

இதுமட்டுமின்றி பருவநிலை மாற்றத்தால் உலக அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.6 சதவீதம் குறைந்துள்ளது. 2030ல் இது 3.2 சதவீதம் குறையும். அடுத்த 10 ஆண்டுகளில் காற்று மாசுபாட்டை குறைக்க உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவீத நிதி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

தொழிற்துறைகள் வளர்வதற்கு முன்பு இருந்ததை விட இப்போது 0.8 சதவீதம் அளவுக்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு கேன்கன் சுற்றுச்சூழல் மாநாட்டின்போது உலக வெப்பத்தை 2 சென்டிகிரேட் வரை குறைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்புக்கொண்டன.

ஆனால், மாசு ஏற்படுத்தும் வாயுக்கள் அளவைப் பார்த்தால் 2 சென்டிகிரேட் வெப்பத்தை குறைப்பது கூட போதுமானதாக இருக்காது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, உணவுப் பொருள் உற்பத்தி குறைவு, நோய்கள் ஆகியவற்றால் ஏழை நாடுகள் மேலும் பாதிப்படையும். 2030ல் சராசரியாக 11 சதவீத உள்நாட்டு மொத்த உற்பத்தி குறையும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!