Friday, November 29, 2013

மரத்தால் ஆன புத்த விஹாரை கண்டுபிடிப்பு: புத்தரின் காலம் கி.மு 6ம் நூற்றாண்டு எனத் தகவல்

மரத்தால் ஆன புத்த விஹாரை கண்டுபிடிப்பு: புத்தரின் காலம் கி.மு 6ம் நூற்றாண்டு எனத் தகவல்



நேபாளத்தில் புதிய புத்த விஹாரை ஒன்றை தொல்லியல் துறையினர் கண்டு பிடித்துள்ளனர். அதன் மூலம் புத்தரின் காலம் கி.மு. 6ம் நூற்றாண்டாக இருக்கலாம் என அவர்கள் உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.

இதுவரை புத்தர் வாழ்ந்த காலம் 3அல்லது 4ம் நூற்றாண்டாக இருக்கலாம் என ஆய்வாளார்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், புத்தரின் பிறப்பிடமான நேபாளத்தில் மிகப் பழமையான புத்த விஹாரை ஒன்றை தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.

கி.மு.6ம் நூற்றாண்டு....

விஹாரை என்பது கோவில் ஆகும்,. தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ள இந்த கோவிலில் உள்ள தொல்லியல் படிமங்களை ஆய்வு செய்ததில் புத்தர் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிதுள்ளனர்.

புத்தரின் பிறப்பிடம்....

யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய இடமாக அறிவிக்கப் பட்ட நேபாளம் லும்பினியில் உள்ள மாயாதேவி கோவில் இடம் தான் புத்தரின் பிறந்த இடமாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மர விஹாரை....

அதன் பலனாக, செங்கற்களால் கட்டப்பட்ட தொடர் புத்த விஹாரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் கி.மு. 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மரத்தால் ஆன விஹாரை இருந்ததை, அகழாய்வு செய்து தொல்லியல் துறையினர் வெளிக்கொணர்ந்துள்ளனர்.

பழமையான கோவில்....

இதுவரை கண்டறியப்பட்ட புத்த விஹாரைகளிலேயே இதுதான் மிகப் பழமையான கோவில் என தெரிவித்துள்ள தொல்லியல் துறையினர், புத்தரின் வாழ்வில் நேரடியாகத் தொடர்புடைய பொருள்களில் தொல்லியல் துறைக்குக் கிடைத்த முதல் பொருள், இக்கோவிலே எனத் தெரிவித்துள்ளனர்.

ராணியின் பிரசவம்...

மரத்தாலான இந்த மிகப் பழமையான புத்த விஹாரையின் மையப்பகுதியில் வெற்று இடம் உள்ளது. லும்பினி தோட்டத்தில் மரத்தின் கிளையைப் பிடித்தபடி ராணி மாயாதேவி புத்தரைப் பிரசவித்த கதையுடன் இதற்கு தொடர்பு உள்ளது.

பழமையான மரத்தின் வேர்கள்...

இந்த வெற்றிடத்தின் மையத்தில் மரம் இருந்திருக்க வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மிகப் பழமையான அந்த மரத்தின் வேர்களும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அசோகர் காலத்து சான்றுகள்....

இதன் மூலம், புத்தமதம் இங்குதான் மலர்ந்திருக்க வேண்டும் என்ற கருத்து மேலோங்கியுள்ளது. மேலும், இதுவரை கிடைத்த தொல்லியல் ஆய்வுகளில், அசோகர் காலத்துச் சான்றுகள் தவிர கி.மு. 3- ம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை எதுவும் கிடைக்கவில்லை.

80 வயது வரை வாழ்ந்தாரா..?

பிரிட்டனின் துர்ஹாம் பல்கலைக்கழக பேராசிரியர் ராபின் கன்னிங்ஹம் தலைமையிலான தொல்லியல் குழு மேற்கொண்டது. இந்த ஆய்வு குறித்து பேராசிரியர் கன்னிங்ஹம் கூறுகையில், ‘கல்வெட்டு உள்ளிட்ட எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் மற்றும் கர்ணபரம்பரைக் கதைகள் மூலம் புத்தரின் வாழ்க்கை குறித்து மிகச் சில தகவல்களே தெரியவந்துள்ளன. சில ஆய்வாளர்கள் புத்தர் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பிறந்ததாகக் கூறி வருகின்றனர். இதில் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் உலவுகின்றன. அவர் கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் என்றும் 80 வயது வரை வாழ்ந்தவர் என்றும் கருத்துகள் உள்ளன. தற்போது, முதன்முறையாக, கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட (புத்தர் சார்ந்த) தொல்லியல் படிமங்கள் கிடைத்துள்ளன' எனத் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டு...

ஆனால், நேபாள அரசு இந்த அரிய இடத்தைப் பாதுகாப்பாதில் போதிய முயற்சி எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளது இந்த அறிக்கை.

தொடரும் ஆய்வுகள்....

தொடர்ந்து அந்த இடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், புத்தர் தொடர்புடைய மேலும் பல அரிய தகவல்கள் கிடைக்கப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!