Wednesday, January 9, 2013

அழிந்த சிங்களத் திரைப்படத்தின் பிரதி இந்தியாவில் கிடைத்துள்ளது

அழிந்த சிங்களத் திரைப்படத்தின் பிரதி இந்தியாவில் கிடைத்துள்ளது


இலங்கை திரைப்பட வரலாற்றின் தலைசிறந்த படங்களில் ஒன்றினுடைய அசல் படச்சுருள் அழிந்துவிட்ட நிலையில், அத்திரைப்படச் சுருளின் நகல் ஒன்று புனே திரைப்பட ஆவணக் காப்பகத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
சிறந்த படம்

இலங்கையின் திரைவானில் மின்னிய பெரு நட்சத்திரங்களான காமினி ஃபொன்சேகா, மாலினி ஃபொன்சேகா என்று இருவரும் தோன்ற இலங்கையின் தலைசிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் கைவண்ணத்தில் 1972ல் வெளியான சிங்களத் திரைப்படம் நிதானய.

சிங்களத்தில் நிதானய என்றால் புதையல் என்று பொருள்.

வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவிலும், பிரிட்டிஷ் சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளைப் வென்ற இப்படம், இலங்கை திரையுலகின் முதல் அரைநூற்றாண்டுச் சரித்திரத்தின் மிகச் சிறந்த படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.


வித்தியாசமான கதை


கழுத்தில் நான்கு மச்சங்களைக் கொண்ட கன்னிப் பெண்ணை பலி கொடுத்தால் மலைக் குகையில் பெரும் புதையல் கிடைக்கும் என்று நம்பும் ஒருவன் அப்படி ஒரு பெண்ணைக் கண்டுபிடித்து பழகுகிறான். கல்யாணமும் செய்துகொள்கிறான். அந்தப் பெண்ணை ஏமாற்றி மத சடங்கு எனக்கூறி பலியும் கொடுத்துவிடுகிறான். ஆனாலும் நினைத்திருந்த புதையல் கிடைக்கவில்லை. வெறுத்துப்போனவன் நடந்தது எல்லாவற்றையும் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்கிறான் என்பதாக இந்தப் படம் செல்லும்.


படச்சுருள் காப்பக வசதி


இலங்கையில் திரைப்படங்களைப் பாதுகாக்கும் ஆவணக் காப்பகம் என்று எதுவும் இல்லாத சூழலில், இத்திரைப்படத்தின் அசல் ஃபிலிம் ரோல் கெட்டுப்போய் அழிக்கப்பட்டுவிட்டிருந்தது.
இந்த சிறந்தப் படத்தின் ஒழுங்கான பிரதியும்கூட இலங்கையில் மற்றவர்களிடம் இருந்திருக்கவில்லை.

இந்த சூழ்நிலையில்தான் இந்தியாவின் புனே தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தில் இந்தப் படத்தின் பிரதி ஒன்று நல்ல நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

"இந்திய திரைப்பட தேசிய ஆவணக் காப்பகத்துக்கு இந்தப் படத்தின் பிரதி ஒன்று 1974ல் கிடைத்தது. இலங்கையிடம் ஃபிலிம்களைப் பாதுகாத்து வைப்பதற்கான வசதிகள் இல்லை. ஆனால் இங்கே ஃபிலிம்களைக் கெடாமல் பாதுகாத்து வைப்பதற்கான விசேடப் பெட்டிகள் இருக்கின்றபடியால், பழைய ஃபிலிம் சுருள் எங்களிடம் உள்ளது." என்றார் புனே தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் இயக்குநர் பிரஷாந்த் பதர்பே.

"எங்களிடம் இருக்கின்ற இத்திரைப்படத்தின் ஃபிலிம் சுருள் நல்ல நிலையில் இருக்கிறது. எங்களுக்கு கிடைத்தது இந்தப் படத்தின் திரையிடப்படக்கூடிய பிரிண்ட் அல்ல. ஆனால் டியூப் நெகடிவ் என்று சொல்லக்கூடிய பிரதிதான் எங்களிடம் உள்ளது. இதனை திரையிடுவதற்கு இந்த டியூப் நெகடிவ் பிரதியிலிருந்து சிறப்பு வழிமுறை ஒன்றைப் பயன்படுத்தி பிரிண்ட் போடவேண்டும்."

இலங்கையிலிருந்து உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் வரும் பட்சத்தில் அந்த டியூப் நெகடிவ்விலிருந்து திரையிடக்கூடிய பிரிண்ட் ஒன்றை தங்களால் இலங்கைக்கு உருவாக்கிக் கொடுக்க முடியும் என்றும் புனே தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் இயக்குநர் கூறினார்.

அழிந்துபோய்விட்டதாகக் கருதப்பட்டுவந்த தலைசிறந்த கலைப்படைப்பின் பிரதி ஒன்று யாரும் எதிர்பாராதவகையில் வெளிநாட்டில் இருக்கிறது என்று செய்தி கேட்டு, இலங்கையின் மூத்த திரைப்பட இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் பிபிசியிடம் மகிழ்ச்சி வெளியிட்டார்.

"அசல் அழிந்துபோய்விட்ட என்னுடைய திரைப்படத்தின் பிரதி இருக்கிறது என 94 வயதில் என் காதில் விழுகிறபோது மகிழ்ச்சியாக இருக்கிறது."

நிதானய படத்தின் அசல் படச்சுருளுக்கு இலங்கையில் நேர்ந்த கதி கம்பெரலிய என்ற தன்னுடைய மற்றொரு படைப்புக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக அந்தப் படத்தின் அசலை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திடம் தான் ஒப்படைத்துவிட்டதாக பீரிஸ் கூறினார்.

இத்திரைப்படத்தின் திரையிடக்கூடிய பிரிண்ட் ஒன்றை புனேயிலிருந்து பெற நிதி உதவிகளையும், முயற்சிகளையும் செய்ய இலங்கையில் ஆட்கள் முன்வருவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!