Tuesday, November 5, 2013

இந்தியாவின் செவ்வாய் கிரக முயற்சி சாதனை படைக்குமா?

இந்தியாவின் செவ்வாய் கிரக முயற்சி சாதனை படைக்குமா? 




செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது. இத்திட்டத்துக்காக ரூ450 கோடி செலவிடப்பட்டுள்ளது. 

இந்தியாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சியை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்த விண்கலம் ஏவுவதற்கான கவுண்ட்டவுன் நேற்று முன்தினம் தொடங்கின. 

செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்ய அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் ஏற்கனவே விண்கலத்தை அனுப்பி உள்ளன. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமும் ஒரு விண்கலத்தை அனுப்பி இருக்கிறது. 

4வது நாடு 

இந்த விண்கலம் வெற்றிகரமாக ஏவப்படும் நிலையில் செவ்வாய் கிரகத்தை எட்டிய நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்ததாக இந்தியா இடம்பெறும்.

என்ன ஆராய்ச்சி? 

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் அங்குள்ள கனிம வளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றை ஆராய்வதற்காகவும் இந்த விண்கலம் செலுத்தப்படுகிறது.

என்ன உபகரணங்கள்? 

மங்கள்யான் செவ்வாயின் சுற்றுப்பாதையில் மிதந்தபடி இதுவரை அறியப்படாத செவ்வாய் கிரகத் தகவல்களைச் சேகரிக்கும். 15 கிலோ எடையுள்ள மங்கள்யான், லைமன் ஆல்பா போட்டோமீட்டர் உள்பட 5 உபகரணங்களைக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று மீத்தேன் வாயுவைக் கண்டறியும். மற்றொன்று ஹைட்ரஜன் மூலம் செவ்வாயின் மேல்மண்டல வெளியேற்ற முறைகளை ஆய்வு செய்யும். செவ்வாய் கிரகத்திலுள்ள தாது வளத்தை தெர்மல் இமேஜிங் ஸ்பெக்ட்ரோ மீட்டர் ஆய்வு செய்யும். செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் இருப்பதைக் கண்டறிவதுதான் மங்கள்யானின் முக்கிய நோக்கமாக இருக்கும். ஏனெனில் கரியமில வாயு சார்ந்த மீத்தேனின் இருப்பு, உயிரின இருப்புக்கான ஆதாரம்

1,340 கிலோ எடை 

இந்த மங்கள்யான் விண்கலம் 1,340 கிலோ எடை கொண்டது.

ரூ450 கோடி 

இத்திட்டத்துக்காக மொத்தம் ரூ.450 கோடி செலவிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 1-ல் செவ்வாய் நோக்கி பாயும் 

பூமியின் சுற்றுப்பாதையில் 20 முதல் 25 நாட்களுக்கு சுற்றியபின் டிசம்பர் 1-ந் தேதி நள்ளிரவு செவ்வாய் கிரகத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கும். தொடர்ந்து 280 முதல் 300 நாள்கள் பயணித்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை விண்கலம் அடையும்.

40-ல் 23தான் வெற்றி 

செவ்வாய் கிரகத்தை ஆராயும் எந்த ஒருநாட்டின் முயற்சியும் முதல் கட்டத்திலேயே வெற்றி பெற்றது இல்லை. இதுவரை 40 முறை மேற்கொள்ளப்பட்ட செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பும் முயற்சிகளில் 23 தான் வெற்றி பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!