Thursday, March 14, 2013

சீன ஆற்றில் இறந்த பன்றிகளின் உடல்கள் காரணமாக அச்சம்

சீன ஆற்றில் இறந்த பன்றிகளின் உடல்கள் காரணமாக அச்சம்


இறந்து மிதந்த பன்றிகளை அப்புறப்படுத்தும் பணியாளர்கள்
சீனாவின் ஷாங்காய் நகருக்கருகே உள்ள ஒரு ஆற்றில் ஆயிரக்கணக்கான இறந்து போன பன்றிகள் மிதந்துவந்ததை அடுத்து அந்த நதி நீரைக் குடிப்பது பற்றிய அச்சங்கள் பரவியிருக்கின்றன.

ஷாங்காய் நகர அதிகாரிகள் இந்த பன்றிகள் பிரச்சினையால் நதி நீர் மாசுபடவில்லை என்று நகரவாசிகளுக்கு உறுதியளித்துள்ளனர்.
கடந்த வார இறுதியில் ஷாங்காய் அருகே ஓடும் ஹுவாங்பூ நதியில் சுமார் 6000 பன்றி உடல்கள் மிதந்து வந்த நிலையில், அவற்றை நகர சுத்திகரிப்புப் பணியாளர்கள் அகற்றியுள்ளனர்.

இந்த பன்றிகள் நதியின் மேல் பகுதியில் வசிக்கும் விவசாயிகளால் வீசப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.பன்றிகள் எதுவும் தொற்றுவியாதியால் பாதிக்கப்பட்டு அதன் விளைவாக இறந்தது போல தெரியவில்லை என்று கூறும் அரச ஊடகங்கள், ஆனால் சில பன்றிகளின் உடல்களில் நோய் ஏற்பட்டு இறந்ததன் கூறுகள் காணப்படுவதாகக் கூறின.
இந்தப் பன்றிகள் கடுங்குளிர் காரணமாக இறந்தன என்று ஒரு அதிகாரி கூறினார்.

ஆற்றில் நீரின் தரம், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்ததைப் போலவே ஏறக்குறைய இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

ஆனால் இணையத்தில் எழுதும் சிலர், இந்த விளக்கங்கள் குறித்து அவநம்பிக்கை தெரிவித்ததுடன், இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் இந்தச் சம்பவம் குறித்து முழு விளக்கம் அளிக்கப்படவேண்டும் என்றும் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!