Monday, June 11, 2012

அறிவைத் தூண்டும் நறுமணங்கள்


நறுமணங்களை நுகர்வது நாசிக்கு நலம் தரும் சுகமான அனுபவம். `நறுமணங்கள் அறிவைத்தூண்டி நம்மை அமைதிப்படுத்தும்` என்பது புதிய கண்டுபிடிப்பு.

இயற்கையான நறுமண பொருட்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு விசேஷ சக்தி உள்ளதாக சித்த மருத்துவம் சொல்கிறது. சில நறுமணங்கள் அமைதிப்படுத்தும். சில நறுமணங்கள் அறிவை தூண்டும். சில உடல் இறுக்கத்தை குறைக்கும். மேலும் சில நம்மை கலகலப்பாக்கி, உற்சாகப்படுத்தும். இப்படி இயற்கை நறுமணங்கள் எல்லாமே இயற்கை தந்த வரங்கள்.
பொதுவாகவே நறுமணங்களுக்கு நினைவை புதுப்பிக்கும் ஆற்றல் இருக்கிறது. நினைவுகளை இழந்த பலருக்கு இந்த நறுமண வைத்தியம் மூலம் நினைவாற்றல் கிடைத்திருக்கிறது.
நறுமணத்தை நுகரும்போது உமிழ்நீர் அதிகம் சுரந்து, பசி தூண்டப்படுகிறது. இது இயல்பாக நடைபெறுவதால் உடல் உறுப்புகளின் இயக்க சக்தி அதிகரிக்கிறது. உடல் வலியை மறக்கவைக்கும் ஆற்றலும் இயற்கை நறுமணங்களுக்கு இருக்கிறது. மனதை ஒருநிலைப்படுத்தவும் நறுமணம் பயன்படுகிறது.
இயற்கை நறுமணப் பொருட்களில் இயற்கை சக்தி மிக அதிகமாக இருக்கிறது. சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. அதன் நறுமணம் ஆன்மாவுக்குள் இருக்கும் தேவ குணங்களுக்கு வலிமை அளிக்கிறது. அந்த ஆன்மா, தேவ குணங்களை பெற்று தேவ சக்திகளுடன் நாம் இணைந்து மகிழும் ஆற்றலை சந்தனத்தின் நறுமணம் தருகிறது. அதனால்தான் சந்தனத்தை பூஜைக்கும், சுபகாரியங்களுக்கும் பயன்படுத்துகிறோம்.
சாம்பிராணியின் நறுமணம் மனிதர்களுக் குள் இருக்கும் துர் குணங்களை போக்கும் ஆற்றல்கொண்டது. தீய சக்திகளை அழிக்கும் ஆற்றல்கொண்ட துர்க்கைக்கு பூஜையில் மிக முக்கிய பொருளாக சாம்பிராணி வாசனை பயன்படுத்தப்படுகிறது.
பெண்களுக்கு சாந்த குணங்களை ஏற்படுத்த மலர்களின் நறுமணம் பயன்படுகிறது. பெண்கள் பூச்சூடுவதின் தாத்பார்யமே அதுதான். வாசனை ஒரு ரம்யமான சூழலை உருவாக்கி நம்மை லயிக்கச் செய்து மகிழ வைக்கிறது.
அகில் கட்டையின் நறுமணமும் ஆன்மிகத்தோடு தொடர்புடையது. அதனால்தான் பெரிய யாகங்கள் செய்யும்போது அதில் எரிக்க அகில் கட்டையை பயன்படுத்துவார்கள். இதன் நறுமணம் மனதிற் கும், உடலுக்கும், ஆன்மாவிற்கும் ஏற்புடையது. அரசர்களின் பட்டாபிஷேகம், கோவில் கும்பாபிஷேகம் போன்ற புனித காரியங்களில் அகில் பயன்படுத்தப்படுகிறது.
பழைய காலத்தில் முனிவர்களும், மாகான்களும் காடுகளை தேடி சென்று தவம் புரிவதற்கு மரம், செடி, கொடிகளில் இருந்து கிடைக்கும் நறுமணமே காரணமாக இருந்திருக்கின்றன. அந்த மணம் மனதை சாந்தப்படுத்தி எளிதாக மனதை ஒருநிலைப்படுத்தி தவத்திற்கு வலிமை சேர்க்கும்.
கற்பூரத்தின் நறுமணம் காற்றில் கலந்து வரும்போது ஒரு தெய்வீக ஆற்றல் நமக்குள் உருவாகி, மனதில் இருக்கும் நல் எண்ணங்களை வலிமைப்படுத்தும்.
ஆமணக்கு எண்ணையின் நறுமணத்தில் ஒரு தனித்தன்மை இருக்கிறது. அதில் பஞ்சு திரி போட்டு மண் விளக்கில் ஏற்றினால், அது தூய பிராணவாயுவை புவி மண்டலத்தில் இருந்து ஈர்த்து பரவ விடும். அதை நுகரும்போது மனம் அமைதி பெறும். நரம்புகள் சுறுசுறுப்பாகும். மூளை நன்றாக சிந்திக்கும் திறன் பெறும். அதன் மூலம் நம்மை சுற்றி இருக்கும் சூழலில் இருந்து நன்மை, தீமையை பகுத்தறியும் ஆற்றலை நம் அறிவு பெறும்.
அதனால்தான் அந்த காலத்தில் ஆமணக்கு எண்ணெயை விளக்கேற்ற பயன்படுத்துவார்கள். எனவே அதை விளக்கெண்ணெய் என்று கூறுவார்கள்.
உங்கள் மனம் சமநிலையில்லாமல் தவித்தாலும், தேவையற்ற டென்ஷன் உங்களை பாடாய்படுத்தினாலும் அதற்கு எளிமையான தீர்வு. உங்கள் வீடுகளில் மண் அகல் விளக்கில் விளக்கெண்ணெய் விட்டு பஞ்சு திரி போட்டு விளக்கேற்றுங்கள். அந்த நறுமணமும், அதனால் ஏற்படும் சுத்தமான காற்றும் உங்கள் மனதை அமைதிப்படுத்தி, டென்ஷனை குறைக்கும்.
ஏலக்காயின் நறுமணம் கோபத்தை குறைக்கும். எல்லோரும், எப்போதும் சாந்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக நரசிம்ம பெருமாளுக்கு ஏலக்காய் மாலை சாத்தி பிரார்த்திப்பார்கள்.
துளசியின் நறுமணம் ஆன்மிக மயமானது. துளசி செடி வளர்ந்திருக்கும் வீட்டில் ஆன்மிகமும், ஆரோக்கியமும், அமைதியும் குடியிருக்கும். காற்றில் கலந்து வரும் துளசியின் நறுமணத்தை நுகர்ந்தாலே உடலிலுள்ள நோய் கிருமிகள் கட்டுப்படும். உடலில் நச்சுகளும் தங்காது. அதனால்தான் ஒவ்வொரு வீட்டின் முன்பும் துளசி மாடம் அமைக்கிறார்கள். பன்னீர் ரோஜாவின் நறுமணம் நினைவாற்றலை பெருக்கும். நம் மனதை பக்குவப்படுத்தி மென்மையான குணத்தை வெளிப்படுத்த உதவும்.
மல்லிகை நறுமணம் எல்லோரையும் ஈர்க்கும். அதனால் அதனை வசிய மலர் என்று கூறுவார்கள். வேப்பம் பூவின் நறுமணம் வீர உணர்வை உருவாக்கும்.
எலுமிச்சையின் நறுமணம் உடனடி புத்துணர்ச்சியை தரும். நரம்புகளுக்கு புதிய உற்சாகத்தை வழங்கும். மருதாணியின் வாசம் உடலை குளிர்ச்சியடைய செய்யும். பெண்கள் உடலில் இருக்கும் ஹார்மோன்களை சீராக இயங்க வைக்கும்.
இப்படி இயற்கை நறுமணங்கள் மனிதர்களுக்கு பல நன்மைகளை செய்கிறது. 

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!